சனி, 20 ஜூன், 2020

அப்பா என்றழைக்காத ....

இந்த ஞாயிறு இங்கே தந்தையர் தினம் (Fathers  Day ) என்று அழைக்க படும் நாள். ஒவ்வொரு குடும்பத்தினரும் இந்நாள் அந்த அந்த இல்லத்தில் உள்ள தந்தையர்களை உற்சாகப்படுத்தி பரிசு கொடுத்து அன்பு காட்டி பாராட்டும் நாள்.

நானும் பொதுவாக இந்நாளை மகிழ்ச்சியாக ஏற்று எதிர்பார்த்து கொண்டாடுவேன். இருந்தாலும் இந்த வருடம் மனதில் ஒரு வெற்றிடம்.

மூன்று வாரங்களுக்கு முன் அருமை நண்பன் ஐசக் மனோகரம் (51 ) தமிழகத்தில் இருந்து அழைத்தார்.

மேலே செல்லும் முன் ஐசக் பற்றி சில வார்த்தைகள்.



தன பெற்றோர்களுக்கு அதிசய பிள்ளையாக அவர்களின் இருபத்தி ஐந்தாவது திருமண நாளில் பிறந்தவன். ஒரே பிள்ளை. செல்லமாக வளர்ந்தவன். கல்லூரி படிப்பு முடித்தபின்னர் மேல் படிப்பிற்க்காக அமெரிக்கா வந்து முதுகலை பட்டம்  பெற்று,  பின்னர் இங்கே கிடைத்த வேலை வாய்ப்பு மற்றும் பல சொகுசுகளை ஒதுக்கி விட்டு, மீண்டும் தமிழகம் சென்று ஆதரவற்ற பெண் பிள்ளைகளுக்காக ஒரு இல்லம் நடத்தி வந்தார்.

அருமையான  மனைவி, தமக்கென்று பிள்ளைகள் இல்லாதால் இரண்டு பிள்ளைகளை எடுத்து வளர்த்து வந்தார். இந்த இரண்டு பிள்ளைகள் மட்டும் இல்லாமல் மேலும்பல பிள்ளைகளுக்கான அவசியத்தின் காரணமாக ஆரம்பிக்க பட்டதே இந்த இல்லம்.

சில வருடங்களுக்கு முன், இந்தியா சென்று இருக்கையில் நண்பர் ஒருவர்  முடிந்தால் ஐசக் குடும்பத்தினர் நடத்தி வரும் இல்லத்திற்கு சென்று வா என்று சொல்ல..

நானும் அம்மணியும்  பிள்ளைகளும் சில பரிசுகளோடு அங்கே சென்றோம். ஐசக் மற்றும் மனைவி அலுவலக வேலையில் இருக்க அங்கே அமர்ந்த நாங்கள் அந்த பெண் பிள்ளைகளை சந்தித்தோம்.

கிட்ட தட்ட 15 பிள்ளைகள். அனைவரும் மூன்று வயதில் இருந்து பதிமூன்று வயது போல். அனைத்து  பிள்ளைகளும் பெற்றோர்களை இழந்தோ, அல்லது நிராகரிக்க பட்டோ , அல்லது வன்முறையினால் பாதிக்க பட்டவர்கள் என்று கேள்வி பட்டு கொண்டு இருக்கையில்..

ஐசக் அந்த அறைக்குள் நுழைய அனைவருm,,

அப்பா, அப்பா என்று ஓடி வந்தார்கள். அந்த காட்சி என் மனதில் இன்றும் பசுமரத்தாணி போல் உள்ளது.

இது தான் ஐசக்.

சரி, ஐசக்க்கின் அலை பேசி  அழைப்பிற்கு வரலாம்.

"சொல்லு ஐசக்"

"விசு, எனக்கு கோவிட் பாசிட்டீவ்ன்னு சொல்லிட்டாங்க, இன்னும் ரெண்டு வாரத்துக்கு  தனியா இருக்கனுமாம்.  சரியாகிடும்னு நம்பிக்கை இருக்கு, எனக்காக மற்றும் இல்லத்தில் உள்ள பிள்ளைகளுக்காகவும் ஜெபம் பண்ணிக்கோ.."

"ரொம்ப சாரி ஐசக், கொஞ்சம் கவனமா இருங்க, மனைவி பிள்ளைகள் எப்படி?"

"மனைவிக்கும் பையனுக்கும் இல்லத்தில் இருக்கும் ரெண்டு பிள்ளைகளுக்கும் கூட பாசிட்டிவ் போல இருக்கு"

"ஜாக்கிரதையா  இருங்க"

"ரெண்டு வாரம் தனியா இருக்கணும்.நம்ம பேசமுடியுமா இல்லையோ தெரியல. பிள்ளைகளை, மறந்துடாத ப்ளீஸ்!! "

"டோன்ட் ஒரி, ரெஸ்ட் எடு.. எல்லாம் சரியாகிடும்"

இந்த நேரத்திலும் பிள்ளைகள் பிள்ளைகள் ,  என்ன மனுசனையா இவன், என்று நினைக்கையில்..

அந்த "அப்பா அப்பா" என்று  பிள்ளைகள் ஓடி வந்த காட்சி மீண்டும் மனதில் வந்தது.

அப்பா...

என்ன ஒரு கம்பீர பதவி, பொறுப்பு, பெருமை!

நம்மில் அநேகருக்கு இது ஒரு சாதராண வார்த்தை மட்டுமே..

 அப்பா.. அப்பா..

ஆனால் நம்மில் சில பேருக்கு அப்பா என்பது ஒரு கிடைக்காத வரம்.. சிறு வயதில் தந்தையை இழந்தோர்.. தந்தை யார் என்றே தெரியாமல் வளருபவர்களுக்கு தான் "அப்பா" என்ற அந்த வார்த்தையின் அர்த்தம் புரியும்.

ஓர் குழந்தை வளரும் போது அன்னை எவ்வளவு முக்கியமோ அதற்கு சற்றும் குறையாமல் இன்றியமையாக இருப்பது "அப்பா"!

அந்த அப்பா இல்லாமல் வளருவது ஒரு பிள்ளையின் ஒரு கையை முதுகில் கட்டி வைத்தது போல். வாழ்வில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் பாதியை அன்னையிடமும் மீதியை அப்பாவிடவும் தான் நாம் கற்று கொள்வோம்.

அப்படி அப்பா இல்லாமல் வளர்ந்த இந்த பிள்ளைகளுக்கு நண்பன் ஐசக் தகப்பான இருந்து அவர்களின் வாழ்வை முற்றிலும் மாற்றி அமைத்து இருக்கின்றார்.

சென்ற வார இறுதியில் செய்தி வந்தது.

ஐசக் இறந்து விட்டார்.

அழுதேன்.. அந்த பிள்ளைகளுக்காக!


6 கருத்துகள்:

  1. ஐசக் மனோகரம் அவர்களின் இழப்பு மிகவும் வருத்தத்தை தருகிறது...

    பதிலளிநீக்கு
  2. பதிவை படித்த பின் மனது கனக்கிறது

    பதிலளிநீக்கு
  3. ஐசக் மனோகரம் சாரின் மரணம் பெரிதும் பாதிக்கிறது. சற்றும் எதிர்பாராத திருப்பம். இரண்டு வாரத்துல சரியாகிடும்னு சொன்னதும் நம்பிக்கையா இருந்தது. அந்தப் பிள்ளைகளை நினைக்கும்போது மனது கணக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. மனது மிகவும் கனத்துவிட்டது. மிக மிக வருத்தமான செய்தி

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அந்த இல்லத்துப் பிள்ளைகள் பாவம். அவர் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கும் பாசிட்டிவ் என்று சொல்லியிருக்கிறீர்களே.

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...