புதன், 10 ஜூன், 2020

நட்பிற்கும் நகைச்சுவைக்கும் - கண்ணதாசன் ஒரு இலக்கணம்! (கண்ணதாசன் 2)


இன்னும் சில நாட்களில் கண்ணதாசனின் பிறந்தநாள் வருகின்றது அல்லவா. அதையொட்டி கண்ணதாசனை  பற்றிய நிறைய பதிவுகள் வரும். அதெல்லாம் வருவதற்கு முன்பே நமக்கு தெரிந்த கண்ணதாசனை (மீள் ) பற்றி அடுத்த சில நாட்களில் தருவோம்.

கண்ணதாசன் அவர்கள் ஒரு முறை நண்பர் ஒருவருடன் ஒரு வெளிநாட்டு பயணம் போய் இருந்தார். அங்கே அவருக்கும் அவர் நண்பருக்கும் நடந்த சில நிகழ்ச்சிகள் …. கவுண்டமணியின் பாணியை பல வருடங்களுக்கு முன்பே கண்ணதாசன் பண்ணி விட்டாரே என்ற எண்ணத்தை தருகின்றது.
பயணம் ஆரம்பம் … விமானத்தில்…


"அண்ணே .. கண்ணதாசன் அண்ணே…"
"சொல்லு …"
"என்ன அண்ணே .. விமானத்துல பயணிக்கிரதுக்கு தான் சீட் தருவாங்கன்னு நினைச்சேன் .. இங்கே பார்த்தா ரூமை எல்லாம் வாடகை விடுவாங்க போல இருக்கே .."
"என்ன சொல்ற .. ?”
"அங்கே பாருங்க அண்ணே … “tolet ” போர்ட் போட்டு இருக்கே…!!"
"அது tolet லேட் இல்ல, Toilet , நல்ல கூர்ந்து படித்து பாரு.."
"அண்ணே, இப்ப நம்ம எங்கே அண்ணே போறோம் ..?"
"எங்கே போறோம்ன்னு கூட தெரியாம விமானத்தில ஏறிட்டியா? சமத்து …"
"சொல்லுங்க அண்ணே … இப்ப எங்கே போறோம் …?"
"ஆப்கானிஸ்தான் …!!!"
"அப்படினா …!!?"
"ஆப்கானிஸ்தான் என்பது ஒரு நாடு …"
"சரி அண்ணே .. ஆப்கானிஸ்தானில் எங்கே அண்ணே போறோம்..?"
"காபுல் …"
"அப்படினா …?"
"டேய் … எனக்கு வர கோவத்துக்கு…"
"சொல்லுங்க அண்ணே.."
"காபுல் என்பது ஒரு ஊர் …."
"இந்த ஊரில் என்ன அண்ணே விசேஷம் ,."
"இங்க நல்ல ருசியான திராட்சை பழம் கிடைக்கும், அதுமட்டும் இல்லாமல் பெரிய பெரிய கவிஞர்கள் வாழ்ந்த ஊர் … அதுதான் இந்த ஊர் விசேஷம் …"
விமானம் தரை தட்டியது..
"என்ன அண்ணே.. பொட்டல் காடு போல இருக்கு .. இங்க போய் ருசியான திராட்சை எப்படி ? வேற என்ன அண்ணே விசேஷம்.?""
"இங்க இருந்து தாண்டா கஜினி முஹம்மத் , கோரி முஹம்மது இந்த மாதிரி ராஜாக்கள் நம்ம நாட்டின் மீது படையெடுத்து வந்தார்கள் …"
"யார் அண்ணே அது கஜினி முஹம்மத் ?"
"டேய் … கொஞ்சம் அமைதியா இருக்கியா …

உன் கேள்விக்கு பதில் சொல்லி சொல்லி நான் மட்டும் இல்ல இந்த விமானம் கூட ரொம்ப சோர்ந்து போய் இருக்கும் ?"
ஆப்கானிஸ்தான் பயணம் முடிந்து அங்கு இருந்து தாஷ்கந்த் என்ற நாட்டிர்க்கு பயணம் துவங்கியது …
"அண்ணே , இப்ப எங்க அண்ணே போறோம் …?"
"தாஷ்கந்த்…"
"அப்படினா …?"
"டேய்…!!"
"அங்கே தாஷ்கண்டில் .. தமிழ் படித்த ஒரு அம்மையாரை சந்திக்க வேண்டும் … அந்த அம்மையார் வெளிநாட்டோர் என்றாலும் சுத்தமான இலக்கிய தமிழில் பேச கூடியவர்

அவரிடம் கண்ணதாசன்…பேசும் போது ..
"அம்மா.. உங்கள் கணவர் எங்கே வேலை பார்க்கின்றார் ?"
என்று கேட்க அந்த அம்மையார் ..
"அவர் பொறியியல் துறையில் வேலை பார்க்கின்றார் .."
என்ற பதில் அளித்து விட்டு சமையில் அறைக்கு சென்றார் .. அந்த நேரத்தில்..
"என்ன அண்ணே, கேடு கெட்ட ஊரா இருக்கு .. பொரியல்-கூட்டு – வறுவல் இதுக்கெல்லாமா ஒரு துறை வைப்பாங்க … அதை வேற அந்த அம்மா பெருமையா சொல்றாங்க…?"
"டேய்.. அது பொறியியல் ..!"
"அப்படினா…?"
"இன்ஜினியரிங் ..!!"
"அப்படினா…?"
"நீ சும்மா வா …!!!"
பேசி கொண்டு இருக்கும் பொது அந்த பொறியியல் நிபுணர் அங்கு வந்து ..
"சீக்கிரம் கிளம்புங்க …நம்ம இப்ப லெனின் மசொலியம் ( lenin mausoleum ) பார்க்க போகலாம் .."
மசொலியம் என்ற வார்த்தையை கேட்டவுடன் …
"அண்ணே.."
"என்னடா …?"
முசோலினி இந்த ஊரா அண்ணே .. சொல்லவே இல்லை ..
"முசோலினி .. அவர் இத்தாலி நாட்டவர் .. ஏன் ?"
"இல்ல , இவர் நம்மை லெனினையும் … முசோலினியையும் சந்திக்க போலாம்னு சொல்றாரே .."
"டேய்.. அது முசோலினி இல்ல.. மசொலியம் .."
"அப்படினா ?"
"மசொலியம்னா.. சமாதி .!!"
அங்கு இருந்து …நேராக “செவாஸ்கி” மியூசிக் அரங்கம் சென்றார்கள் . செவாஸ்கி என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த பியானோ ஜாம்பவான் . உலக புகழ் பெற்றவர் …அங்கே சென்றவுடன்.. அந்த பொறியியல் நிபுணர் .. 
"அதுதான் செவாஸ்கி வாசித்த பியானோ.. அதை இதை நாட்கள் கழித்தும் பத்திரமாக வைத்து பாது காத்து வருகின்றார்கள்",
 என்ற ஒரு தகவலை சொன்னார் .
"அண்ணே.. அது என்ன அண்ணே .. பியானோ போல இருக்கு …?"
"டேய்.. கொஞ்சம் அமைதியா இரு.."
"அண்ணே .. அது பியானோ தான் அண்ணே.."
"ஆமாண்டா.. செவாஸ்கி வாசித்த பியானோ..உடனே ..செவாஸ்கி யா .. அப்படின்னா என்னான்னு கேட்டா.. உன்னை இங்கேயே விட்டுட்டு போய்டுவேன் .."
"அண்ணே , அண்ணே, என்ன அண்ணே? சேவாஸ்கியை தெரியாதவங்க கூட இருப்பாங்களா?"
"அவர் யாருன்னு எனக்கு கூட தெரியல … இப்ப இந்த பொரியல்.. சாரி.. பொறியியல் நிபுணர் சொல்லி தான் தெரியும்.."
"அண்ணே .. நான் கொஞ்சம் அந்த பியானோவில் உட்கார்ந்து வாசிக்கலாமா ?"
"வேணாண்டா.."
என்று கண்ணதாசன் சொல்லுமுன்பே …
அந்த பியானோவில் அமர்ந்து விட்டார் .. அடுத்த அரை மணி நேரம்.. செவாஸ்கியின் சங்கீதத்தை ஒரு நோட்ஸ் எதுவுமே இல்லாமல் .. இவர் வாசிக்க அங்கு இருந்த மற்ற ரஷ்ய மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.. யார் இந்த மனிதன்..? நம்ம ஊர் செவாஸ்கியின் இசையை இவ்வளவு அழகாக வாசிக்கின்றாரே …யார் இவர் .. யார் இவர்…என்று கண்ணதாசனை கேட்க.
"இவர் என் நண்பர் தான் .. இசையை தவிர மற்ற எதுவுமே இவருக்கு தெரியாது.. இவர் பெயர் .. MS விஸ்வநாதன் .."

 என்றார்..
நண்பர்களே, இந்த பதிவில் கற்பனை எதுவுமே இல்லை. அனைத்தும் உண்மையில் நடந்ததே. இதை கண்ணதாசன் அவர்கள்  சொல்லி கேட்டுள்ளேன் …இதை சொல்லி முடிக்கையில் கண்ணதாசன் அவர்கள் .. MSV க்கு .. மூச்சு பேச்சு எல்லாமே இசை என்று பெருமையாக குருப்பிட்டார் ..
பின் குறிப்பு :
"அண்ணே.. என்னமோ கலர் கலரா குடிக்கிரிங்களே … எனக்கும் கொஞ்சம் தாங்க அண்ணே.."
"டேய் அது உனக்கு வேணா.."
"ரொம்ப தாகம் அண்ணே.."
"டேய், இது என்னான்னு உனக்கு தெரியுமா ..?"
"கூல் ட்ரிங்க்ஸ் அண்ணே.."
"ட்ரிங்க்ஸ் தான் .. ஆனா இது பெயர் என்ன தெரியுமா ?"
"சொல்லுங்க அண்ணே.."
"வோட்கா.."
"அப்படினா !!!!?"

2 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...