வெள்ளி, 26 ஜூன், 2020

விஸ்வநாதா வேலை வேண்டாம் !

மார்ச் மாதம் போல் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இளைய ராசாத்தி கிட்ட தட்ட அழுதுகொண்டே என்னிடம் வர...!

"ஏன் அழுவுற..?"

"நான் அழுவுல !"

"ஏன் சோகமா இருக்க!!!?"

"ஐ ஹேட் திஸ் கொரோனா, என் வேலையே போச்சி"

ஒப்பாரி வைத்தாள்.

இங்கே பிள்ளைகளுக்கு பதினைந்தரை வயதில் வாகன ஓட்டுரிமை கிடைத்தவுடன் அவர்கள் வேலைக்கு போக ஆரம்பித்து விடுவார்கள். பள்ளி நாட்களில் மாலையிலும் மற்றும் வார  இறுதியிலும் கிட்டத்தட்ட  20  - 30  மணி நேரம் வேலைக்கு செல்வார்கள். குறைந்த பட்ச ஊதியமாக மணிக்கு 13 டாலர்கள் கிடைத்தாலும் வாரத்திற்கு வருமான வரியை பிடித்து மிச்சம் முன்னூறு டாலராவது கிடைக்கும்.



நம்மவளும் அப்படிதான்.  சிறிய வயதில்  இருந்தே கோல்ப் பயிற்சி பெற்று பள்ளிக்கூடத்து அணியில் ஆடி வருவதால் கோல்ப் தொடர்புகள் பல கிட்ட இல்லத்தின் அருகில் உள்ள ஒரு மாலில் அமைந்துள்ள கோல்ப் கடையில் வேலை. இது தான் இவளின் முதல் வேலை. கருமமே கண்ணாயிரம் என்று செய்து வந்தாள்.

கொரோனா தாக்கத்தில் அனைத்து மால்களும் அடைபட ஒரு வாரம் கழித்து நிர்வாகத்திடம் இருந்து,

கொரோனாவினால் நம் கடைகள்  அனைத்தும் தற்காலிகமாக மூட பட்டு இருப்பதால் உங்கள் அனைவரையும் கடை திறக்கும் வரை வேலைக்கு அமர்த்த முடியாது. அதனால் நீக்கம் செய்கிறோம். மீண்டும் எப்போது திறப்போம் என்று தெரியாது,  உங்கள் புரிதலுக்கு நன்றி.

செய்யும் தொழிலே தெய்வம் என்று இருந்தவளுக்கு இது சற்றும் புரியவில்லை.

"நான் ஒழுங்கா தானே வேலை செஞ்சேன்."

 "எனக்கு ஏன் இப்படி..?"

"இப்ப நான் என் செலவிற்கு  என்ன செய்வேன் ?"

உட்கார வைத்து ஆறுதல் சொல்லி,

"கொரோனா முடிந்தவுடன் வேலை கிடைக்கும்,  அதுவரை பொறுமையா இரு. "

"பொறுமை சரி.. என் செலவுக்கு...?"

"அன் எம்பிளாய்மென்ட் அப்பளை பண்ணு. ஆறு மாசத்துக்கு நீ கடைசியா வாங்கன சம்பளம் போல தருவாங்க  "

விண்ணப்பித்தாள்!

ஒரு வாரத்தில்...

"டாடா .. அன் எம்பிளாய்மென்ட்  அப்ரூவ் ஆகிடிச்சி. வாரத்திற்கு என் சம்பளத்தோடு 600 டாலர் கூட தராங்க.. "

கூகிளை தட்டினேன்.

சரிதான். கொரோனா நேரத்தில் வேலை இழந்த  அனைவருக்கும் குறைந்த பட்சம் அவர்கள் கடைசி ஊதியமும் அதற்கு மேல் வாரத்திற்கு 600 டாலரும் என்றது ஒரு புதிய சட்டம்.

அடுத்த சில வாரங்கள் வாயெல்லாம் பல் தான், பிள்ளைக்கு. எங்களுக்கு கூட இருமுறை அஞ்சப்பர் உணவை இல்லத்திற்கு வரவைத்து கொடுத்தாள்.

திடீரென்று வரவு இருமடங்கிற்கும் மேலானதால் சற்று கைகால் புரியாமல் இருந்தவளிடம் அமர வைத்து..

"அம்மாடி.. இந்த பணம் உன் அடிப்படை செலவுக்கு. அரசாங்கம் ஆறு மாதத்திற்கு தான் தரும். இதை நீ அடாவடியாக செலவழித்தால் ஆறு மாதத்திற்கு பின்னர் உனக்கு தான் பிரச்சனை"

 என்று எடுத்து கூற..

"அதுவும் சரிதான்.. தேங்க்ஸ் பார் புரியவைத்ததற்கு"

என்று மிகவும் கவனமாக தான் இருந்தாள், எங்களுக்கும் அஞ்சப்பர் உணவு கிடைக்கவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

போன வாரம்..

"டாடா.. குட் நியூஸ்.."

"சொல்லு"

"என்னை திரும்பவும் வேலைக்கு வர சொல்லிட்டாங்க"

"காங்கிராட்ஸ்.. ரொம்ப மகிழ்ச்சி"

என்று நான் சொல்லும் போதே...

"வாரத்திற்கு 600 டாலர் அங்கே இருந்து, அதுக்கு மேலே என் சம்பளம் "

என்று ஒரு புது கணக்கு போட்டவளிடம் ..

"மகள்.. திரும்பவும் வேலைக்கு போனவுடன் இந்த அன் எம்பிளாய்மென்ட்  பணம் கிடைக்காது.."

அதிர்ந்தாள்.

"அப்படினா, எனக்கு 300 டாலர் கிட்ட தானா? அதுக்கு நான் ஏன் வேலைக்கு போகணும், வீட்டில் இருந்தாலே இரண்டு மடங்கு வருமே..."

எப்போதும் பிள்ளையிடம் விளையாட்டு  தனமாக இருக்கும் நான் பொறுப்பாக மாறும் நேரம் வந்தது என்று எனக்கு நானே சொல்லி கொண்டு..

'ராசத்தி...!!! "

"நீங்க ராசத்தின்னு சொன்னாலே எதோ சோகமான செய்தி தான், சொல்லுங்க"

"அரசாங்கம் நமக்கு இந்த மாதிரி உதவி செய்வதே நம்மை காப்பாத்த தான். சோம்பேறி ஆக்க இல்லை. இப்படி எல்லாரும் வேலைக்கு போகமா சும்மாவே பணம் வேணும்னு ஆசை பட்டா நாட்டு நிலைமை என்ன ஆகும்? நாம தானே பொறுப்பா இருக்கணும். இப்படி நாமே ஊதாரித்தனமா இருந்தா  அரசின் கஜானாவே காலியாகி நாளைக்கு நம்ம எல்லாருக்குமே இதை விட ஒரு மோசமான பொருளாதார நிலைமை வந்தா என்னவாகும்?"

"குட் பாய்ண்ட்"

வேலைக்கு சென்றாள்

இரண்டாம் நாள்...

"டாடா, என் பிரென்ட் ஒருத்தி பக்கத்துல ஐஸ் க்ரீம் கடையில் வேலை செஞ்சா. அவளுக்கு வேலை போயிடிச்சி,  அன் எம்பிளாய்மென்ட்  பணம் வந்துச்சி. இப்ப அவளை வேலைக்கு வர சொன்னா, வேணா, நான் ஆறுமாசம் கழிச்சி  போறேன்னு சொல்லிட்டா..."

"அட பாவத்த..ஏன்.. ?"

"ஆறு மாசம் தான் அன் எம்பிளாய்மென்ட்  பணம் வருமில்ல.. அது இவ சம்பளத்தோடு மூணு மடங்கு.. அதுதான்"!

"அவள கூப்பிட்டு, வர பணத்தை அப்படியே பாங்குல வைச்சிட சொல்லு, செலவே பண்ண வேணாம்னு சொல்லு"

"ஏன்?"

"ராசாத்தி "

"ஐயோ.. திரும்பவும் சோகமா?"

"உனக்கு இல்ல மக, அவளுக்கு "

"ஏன் செலவு பண்ண கூடாது?"

"அன் எம்பிளாய்மென்ட்டில் இன்னொரு ரூல் இருக்கு!!!"

"என்ன!!?"

"ஒருவேளை இந்த ஆறுமாசத்துல கம்பெனியில் இருந்து   இல்ல, வேற எந்த கம்பெனியில்  இருந்தாவது  நம்மளை வேலைக்கு கூப்பிட்டு  நாம போகாட்டி அன்னைக்கு இருந்து இந்த பணத்தை நிறுத்திடுவாங்க "

"அவங்களுக்கு எப்படி தெரிய வரும்?"

"ஒவ்வொரு கம்பெனியும் மாசாமாசம் அன் எம்பிளாய்மென்ட்  ஆபிஸுக்கு  ரிப்போர்ட் அனுப்பனும். அப்படி ஏதாவது ஏமாத்தி வாங்கினா , வட்டியோட திருப்பி தரணும்".

"நல்ல வேளை  நான் தப்பிச்சேன், டாடா.. குட் யு ஆர் அ கணக்கு பிள்ளை "

மனதில்..

என்னடா இது இப்ப தான் குழந்தையா இருந்தா ?  ஜாக் அன்ட் ஜில்  சொல்லி கொடுத்துனு இருந்தேன், அதுக்குள்ள இம்புட்டு வளர்ந்துட்டாளேன்னு நினைத்து கொண்டு இருக்கையில், அலை பேசி அலறியது..மூத்தவளிடம் இருந்து..

"அவ வேலைக்கு  திரும்பவும் போறா தானே"

"ஆமா, ஏன்!!!?"

"அந்த அன் எம்பிளாயின்ட்டில் இரண்டு மடங்கு வருதுன்னு நீங்களே வீட்டுல இருக்க சொல்லி இருப்பீங்களோன்னு ஒரு சந்தேகம் வந்தது"

"சே சே..  நான் நான் போய் அப்படி...!!?"

"நீங்க !! நீங்க தான் அப்படி! ஏன்னா உங்க கணக்கு பிள்ளை புத்திய மாத்த முடியாது"

6 கருத்துகள்:

  1. Moral of the story is very good.

    பதிலளிநீக்கு
  2. அம்மாடி...    இவ்வளவு விவரம் இன்றுதான் அறிந்தேன்.  நல்ல நடைமுறை.

    பதிலளிநீக்கு
  3. படிப்படியாக சொல்லி புரிய வைத்த விதம், மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
  4. நல்ல நடைமுறைகள் அங்கு இருப்பது அறிந்து கொன்டேன். மகளுக்கு உங்கள் புரியவைத்தலும் அருமை.

    துளசிதரன்

    விசு இதெல்லாம் தான் அங்கு ப்ளஸ் பாயின்ட்ஸ். நல்ல விஷயங்களும் கூட.

    முதல் வரிகள் சில படிச்சதும் மீள் பதிவோன்னு நினைச்சுட்டேன். இதே போல உங்க ராசாத்தி அழுதாங்களே கொஞ்ச நாள் முன்ன!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை நடைமுறை சட்ட விளக்கங்களோடு அறிவுரையாக வழங்கியது மற்ற பிள்ளைகளுக்கும் பெரிதும் உதவும் என்று நினைக்கின்றேன்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...