செவ்வாய், 23 ஜூன், 2020

பொங்கும் ஆகாய கங்கை! பொங்கியது மீண்டும்!

வருடங்கள் பல ஆனாலும்  சில நினைவுகள் மனதில் நிரந்தரமாக நின்று விடும்.

80களில் நம் கல்லூரி நாட்கள் இந்நாட்கள் போன்றது அல்லவே. அன்றைய பொழுது போக்கு கிணற்று நீச்சல், நண்பர்களோடு கிரிக்கெட், பாட்டு கச்சேரி, வித விதமான புத்தகங்கள், மாலை நேரத்தில் மட்டும் வரும் தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் .. சினிமா, சினிமா, சினிமா !

எந்த படம் ரிலீஸ் ஆனாலும் அது எப்படி இருக்கோ இல்லையோ போய் உக்கார்ந்துடுவோம். அதுவும் இளையராஜா இசையா இருந்தால் பாடல் கேட்பதற்காகவே ..

இப்படி போய் கொண்டு இருந்த காலத்தில், நண்பன் ஒருவன்..

"விசு, தாஜில் ஆகாய கங்கை பார்த்துட்டீயா?"

"போஸ்டர் பார்த்தேன், கார்த்திக் சுஹாசினி, காம்பினேஷன் சரி இல்லையே"

"யார் நடிச்சி என்ன இழவா இருந்தா என்ன, இசை இளையராஜா.. ஒரு பாட்டு கேட்டேன், சூப்பர், வா போலாம்"



"இளையராஜா?, மறுபரீசீலனையே இல்லை, கிளம்பு"

என்று, கல்லூரியை பார்த்து " இன்று போய் நாளை வரேன்" என்று சொல்லிவிட்டு கல்லூரி வாசலில் இருந்து முப்பது அடி மட்டுமே தள்ளி உள்ள தாஜ் தியேட்டருக்குள் தஞ்சமானோம்.

ஒரிசாவில் நடந்த வெள்ளத்தை பற்றி கருப்பு வெள்ளையில் நியூஸ் ஒன்று வர ஒரு ஏழை விவசாயி புரியாத மொழியில் ஏதோ புலம்பி கொண்டு இருக்க  தமிழ் மொழிபெயர்ப்பாளர் " இவர் கூறுகிறார் " என்று அதை மொழிபெயர்த்து முடிக்க படம் ஆரம்பமானது.

கூட இருந்த நண்பன் இசை இசை இசை இளையராஜா இசை என்று வாழ்பவன்..

'விசு, டைட்டில் மியூசிக்க , அப்படியே மனசுல வைச்சிக்க, அப்புறம் ஒரு விஷயம் சொல்றேன்"

என்று சொல்ல..

டைட்டில் மியூசிக் மேல் கவனத்தை செலுத்தினேன்.எப்போதும் போல் இளையராஜாவின் விளையாட்டு.. பெண்களின் கோரஸ், என்று போனது.

"நல்லா இருக்கு, இதுல என்ன விஷேஷம், ஆர்வக்கோளாறு தாங்க முடியலை "

"இதை வைச்சே ஒரு பாட்டு"

"அதுவும் இளையராஜா பாணி தானே.. படத்துல இருக்க நல்ல ஒரு பாட்டை வைச்சே டைட்டில முடிச்சிடுவாரு"

அந்த பாடலும் வந்தது...

சமையலறையில் சில பாத்திரங்கள் உருட்டும் சப்தத்தோடு ஆரம்பிக்க ...கி போர்டு ஒன்று கிசுகிசுக்க தொடர்ந்து பெண்கள் சிலர் கோரஸ் ஒன்று ஆரம்பிக்க கூடவே பேஸ் கிட்டார் மட்டும்..

நண்பனோ...

"எப்படி..அப்படியே இரு... இப்ப ராஜா டாப் கியரில் போட்டு தூக்குவாரு பாரு!!!"

என்று சொல்கையில் ..

கோரஸ் பாடும் பெண்கள் ராகத்தின் உச்சத்தை  அடைய ...அனைத்து கருவிகளும் மெளனமாக , ஆண் பாடகர் "பொங்கும் ஆகாய கங்கை, கங்கை இளமங்கை " என்று காற்றாறு வேகத்தில் பாட , அதற்கேற்ப டெம்போவில் ட்ரிபிள் பாங்கூஸ் தாளம் போட, அந்த பெண்கள் மீண்டு வந்து கங்கை இள மங்கை என்று எச பாட்டு பாட, நானோ நண்பனை நோக்கி...

"தேங்க்ஸ் மாம்ஸ்.. தேங்க்ஸ்"

என்று சொல்கையில்,அவனோ கண்ணை மூடி கொண்டு அந்த கங்கை வெள்ளத்தின் ஓட்டத்தோடு அடித்து சென்று கொண்டு இருந்தான்.

பாட்டின் நடுவில் இன்டெர்லோட் இசை வர. இளையராஜா  இன்டெர்லோடில் வேற என்ன வரும்.?

வயலின் தான் ...

 நூற்று கணக்கான வயலின் இசையின் சப்தம் கூடி கொண்டே ஸ்வரம் மாறி ஸ்வரம் மாறி இன்னுமொருமுறை உச்சத்தை அடைய, நண்பனோ.. உங்களை ஒருமுறை திறந்து என்னை நோக்கி...

"இக்கட சூடு"

என்று கொக்கரிக்க.. அந்த ஆண் பாடகர்..

"புது ராக ஜாதிகளின் ஊர்வலம், இன்று காலை நானே பார்த்தேனே...."

என்று சல்லாபமிட...

நாங்கள் இருவரும் சலிக்க சலிக்க ரசித்தோம்.

பாடல் முடிந்து படம் தொடர, படத்தின் தரத்தால் நாங்கள் தொடர முடிடியாமல்...

"டேய் ..இந்த பாட்டு மீண்டும் சோகமா இடைவேளைக்கு பிறகு ரிப்பீட் ஆக வாய்ப்பு இருக்கா..?"

"நான் தான் இதை ஏற்கனவே பார்த்துட்டேன், இனிமேல் படம் வேஸ்ட்.."

"சரி கிளம்பு., இப்ப போனா எப்படியும் அட்டெண்டன்ஸ் போட்டுடலாம்"

என்று சொல்லி...மூன்றாவது பீரியட் நடத்தி கொண்டு இருந்த பேராசிரியரிடம் ..

"எக்ஸ்குயூஸ் மீ சார்"

"ஏன்  லேட்டா.. .வொய்  தாமதம்?

"சார்.. பொங்கும் ஆகாய கங்..!!"

"க்ளியரா சொல்லு .. ஏன் ஹெஸிடேசன் ?"

"இல்ல, வர வழியில் பாலாறு பொங்கி இவன் அதுல அடிச்சிட்டு போக இருந்தான்.."

"ரியலி.. டிசம்பர் மாசத்துல வாட்டர் இன் பாலாறு.?"

என்று சிரிக்க..

நானோ..இன்னும் அந்த பாடலிலேயே மூழ்கி இருக்க, பேராசிரியர் மீண்டும் கரும்பலகையை நோக்கி திரும்ப..

புத்தம் புதிதாக பத்து நிமிடத்திற்கு முன்பு வாங்கிய "ஆகாய கங்கை " பாடல் புத்தகத்தை திறந்து...

யார் அந்த ஆண் பாடகர் என்று பார்க்க, அதில் இளையராஜா என்று எழுதி இருந்தது.

"அட பாவத்த ! குரல் கொஞ்சம் இளையராஜாவை போல இருந்தாலும் இந்த பாடும் பாணி வேகம் வேற மாதிரி இருக்கே என்று நினைக்கையில்..."

"டே,  கிருஸ்துமஸ் கிப்ட் உனக்கு என்ன வேனும்!!?"

 என்று    இன்னொரு   நட்பு கேட்க."

பர்மா பஸாரில் "ஆகாய கங்கை " எக்கோ கேஸட் என்று பதில் அனுப்பினேன்.

"அந்த பாசாருக்கு நான் எங்கே போவேன்.. பணத்தை தரேன் நீயே வாங்கிக்கோ"

 என்ற செய்தி மீண்டும் வர.. நானோ...

"அவள் பூக்கள் சுமந்து நிற்கும் வானவில் இனி நானும் வானம் போவேனே"

என்று  கிளம்பினேன்.

நீங்களும் கேளுங்கள்..



10 கருத்துகள்:

  1. பாட்டைக் கேட்டதில்லை. ஆனால் நண்பர்களின் ரசனையும், டீச்சரைச் சமாளித்தவிதமும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. நண்பா,

    என்னய்யா உங்க ரசனை…. தாஜ் ,, முப்பது அடி தூரமில்லை பனிரெண்டடி தூரத்தில் மெயின் கேட் , அதிலிருந்து 4 தூரம் டிக்கெட் கௌண்டர். அங்கிருந்து 8 தூரத்தில் நீங்கள் அமர்ந்த தரை டிக்கெட் இடம். கூட்டி கழித்து பார்த்தால், கல்லூரி வாசலில் இருந்து மொத்தமே 24 அடி தான். கல்லூரி ஆசிரியர்கள் வாடா போடா என்றா விளித்தார்கள்? shame on them!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ.,..

      ஏண்டா என்று பேராசிரியர்கள் அன்றும் இன்றும் என்றுமே அழைத்தது இல்லை. நம்மக்கு வாய்த்த பேராசிரியர்கள் அனைவரும் மேன் மக்களே. சொல் பிழையை சுட்டி காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன்.

      நிற்க..

      கல்லூரி வாசலில் இருந்து தாஜ் வாசல் சரியாக முப்பது அடி தான். ஒரு அங்குலம் கூட அதிகமோ குறைவோ இருக்க முடியாது. தங்கள் கணக்கில் தவறு உள்ளது.

      கடைசியாக..

      உங்கள் பின்னூட்டத்தை பார்த்து இங்கே வரும் நட்ப்புகள், ஒரு வேளை அந்த நண்பர் "கோ" வாக இருக்குமோ என்ற ஐய்யப்பட வாய்ப்புள்ளது.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. படமும் பார்த்ததில்லை. பாட்டும் இதுவரை கேட்டதில்லை விசு.

    பாட்டை விட உங்கள் பதிவைத்தான் ரசித்தேன் விசு. ரொம்பவே விளையாடியிருக்கீங்க!!!! ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இந்தப்பாடலை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தம்பி.
    அட இளையராஜா ரசிகனாக இருந்தும் இந்தப்பாடலை எப்படி மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை .
    பூந்தேன் மலர் சூடி வந்த ஆகாயகங்கையை மட்டும்தான் எனக்குத்தெரியும் .
    இந்தப்படத்தைப்பற்றியும் இதுவரை கேள்விப்படவில்லை .
    ஆஹா முப்பது அடி தூரத்தில் தியேட்டர் இருப்பது எவ்வளவு வசதி .படம் பிடித்தால் முழுவதும் பார்க்கலாம் இல்லையன்றால் வகுப்புக்குத் திரும்பிவிடலாம், கொடுத்து வைத்தவன்தான் நீ .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணே...

      நீங்க அடிக்கடி போடும் பாடல் பதிவை பார்த்து "புலியை பார்த்து பூனை போட்டு கொண்ட சூடு" தான் இது.

      வேலூர் வூரிஸ் கல்லூரி தான் நான் படித்தது. 30 அடியில் தாஜ் சினிமா ஒரு பெரிய விஷயமே இல்ல. 28 அடியில் அதற்கு அடுத்த கட்டிடம் தான் அப்சரா. இதுல மூன்று முகம் அதுல மூன்றாம் பிறைன்னு வாழ்க்கை ஜாம் ஜாம்னு இருந்த காலம்.

      அதுவும் வாழ்வே மாயம் காலை காட்சி வந்துட்டா, மழைக்கால மேகம் ஒன்று பாடலை தினந்தோறும் (தரை டிக்கெட் 80 காசு தான்) ஒருமுறை கேட்டுட்டு தான் அட்டெண்டன்ஸ் போட போவோம்.

      நீக்கு
    2. ஒண்ணே அதிகம் , இதுல இன்னொரு தியேட்டர் வேறயா ?.ரொம்பவே பொறாமையா இருக்கு .
      அதோட இதுல புலி யாரு பூனை யாருங்கிறதற்கு பெரிய டிபேட் வைக்கலாம் தம்பி . நான் யாருங்கறது எனக்கு நல்லாவே தெரியும் ,நீ யாருங்கறது இந்த உலகத்திற்கே தெரியும் .

      நீக்கு
    3. அய்யகோ ...

      இந்த ரெண்டு தியேட்டருக்கே இப்படி கொந்தளிக்குறீங்களே.. அரை கிலோமீட்டர் தள்ளி இருந்த ஆங்கில பட தினகரன் தியேட்டரை மற்றும் , B அண்ட் C தர படத்தை தருகிற ராஜா தியேட்டரை பற்றியும் நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன்.

      நீக்கு
    4. எல்லா தியேட்டரும் கல்லூரியைச்சுற்றி இருப்பதுவும் ஒரு மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜிதான்

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...