திங்கள், 14 ஜூலை, 2014

"பாயா" விற்கு பதிலா "சாயா"!வைச்சிக்க நீ!

தமிழ்மண(ன)ம் வாசகர்களுக்காக ஒரு மறு வெளியீடு.

ஒரு கையிலே ஓசை எழுப்பி, சுவரில்லாமலே சித்திரம் வரைந்து, மௌன கீதங்களால் மாளிகை அமைத்த பாக்யராஜின் இன்று போய் நாளை வா என்று ஆல் இந்திய ரேடியோ விவித்பாரதியில் 9:30 மணிக்கு கேட்ட பின்பும் எனக்கு தூக்கம் வர மறுத்தது. என்ன சொல்வது. வாழக்கையிலே முதல் முறையாக நாளைக்கு ஒரு காரியம் செய்ய போகிறேன்.

விவரமாக சொல்லுகிறேன் கேளுங்கள்! +2 படிக்கும் நான் சென்னையில் விடுதியில் தங்கி இருந்த நேரம். தீபாவளி விடுமுறைக்காக வடபழனியில் உள்ள என் அத்தை வீட்டிற்கு   சென்று இருந்தேன். 4D பேருந்தை அடையாரில் இருந்து பிடித்து தங்க சாலை வந்து சேர்ந்த போது மணி ஒரு 4 இருக்கும் (அந்த வாகன எண்ணை சரியாக தான் சொன்னேன் என்று நினைக்கேறேன், தவறாக இருந்தால் யாராவது தெரிந்தவர்கள் திருத்துமாறு கேட்டு கொள்கிறேன்). தங்கசாலையில் இருந்து பையை தூக்கி தோளில் மேல் போட்டுக்கொண்டு நடந்து செல்லுகையில் ஒரு நினைப்பு.

அடடடா. இங்கே பாபு உணவகத்தில் அருமையான பாயா கிடைக்குமே, ஒரு விளாசல் விளாசி விட்டு போகலாமா என்று. மண்டை வேண்டாம் என்று சொன்னாலும் இதயம் வேண்டும் என்று சொன்னதால், நேராக சென்று, முதலில் விலை என்ன என்று பார்த்தேன். பாயா: 2 கால் 2 ருபீஸ், 4 கால் 3.50 ருபீஸ், கணக்கியல் படிப்பவன் ஆயிற்றே, அதனால் கல்லாவில் அமர்ந்து இருந்தவரிடம் 4 கால் 3.50 என்றால் 2 காலுக்கு 1.75 தானே என்றேன். அவர் வீட்டில் என்ன பிரச்சனையோ உனக்கு பாயா இல்லை என்று கூறிவிட்டார். (இப்படி தான் ஆம்பூர் சலாம் ஹோட்டலில் ஒரு முறை ஆசையாக சென்று மூளை இருக்கிறதா என்றேன், அவர் உங்களுக்கு முன் வந்தவருக்கு கூட இருந்தது ஆனால் உனக்கு இல்லை என்றான், அதை பற்றி விவரமாக இன்னொரு நாள் எழுதுகிறேன்).



"விசு வாயிலாதாண்டா உனக்கு கண்டம், இனிமேல் சாப்பிட தவிர உன் வாயை எதற்கும் திறக்காதே" என்று சொன்ன என் பாட்டியின் நினைவு வந்தது. ஹாயா, "பாயா" சாப்பிடலாம் என்று போன எனக்கு"கைக்கு எட்டிய கால்" என் வாயினால் வாய்க்கு எட்டவில்லையே என்று நொந்து கொண்டே பக்கத்துக்கு கடையில் ஒரு "சாயா" குடித்து விட்டு அத்தை   வீட்டை நோக்கி நடந்தேன். 




சரி, இப்போது தூக்கம் என் வரவில்லை என்று சொல்லுகிறேன்,. அத்தை வீட்டில் நுழைந்த உடனே என் கண்ணில் பட்டது ஒரு போர்வை போர்த்திய விஷயம். "பாயாவை" நினைத்து கொண்டே வந்ததோ என்னோமோ அதை பார்க்க ஒரு ஆட்டிற்கு போர்வை போர்த்தி நிக்க வைத்ததை போல் இருந்தது. அங்கே வந்த என் அத்தை மகன் சத்தியிடம், இது என்ன என்றேன். அவன் வாய்  எல்லாம் பல். "பார்வையை தூக்கினான் போர்வையை நீக்கினான்". அதனுள்ளே பதுங்கி கிடந்தது சிவப்பு நிறத்தில் லூனா என்று அழைக்க படும் அந்த காலத்து இரு சக்கர வாகனம்.

அதற்கு முன்னால் வரை சைக்கிள் மட்டுமே தொட்டு பழகிய எனக்கு கை கால் எல்லாம் வேர்த்து விட்டது. தொட்டு பார்க்கலாமா என்றேன், தொடலாம், ஆனால் தொட்டவுடன் இந்த துணியால் துடைத்து விடு என்று ஒரு துணியை குடுத்தான். அவன் சற்று அயர்ந்த நேரத்தில், தொடுவது மட்டும் என்ன? அந்த வாகனத்து இருக்கையில் அமர்ந்தே பார்த்து விட்டேன். இது உனக்கா என்றேன், இல்லை இது அப்பாவிற்கு, எனக்கு இன்னும் இதை ஓட்ட வயது பற்றாது என்றான். நான் அவனுடன் சிறியவன், அவனுக்கே குறைந்த வயது என்றால், எனக்கு?

இரவு ஒரு 8 மணி இருக்கும், சத்தி என் அருகில் வந்த ஒரு சதி திட்டம் போட்டான். நாளை காலை அப்பா ஊருக்கு போகிறார், நாம் வேண்டும் என்றால் இந்த வண்டியை எடுத்து கொண்டு ஒரு சிறிய ஆட்டம் போடலாம் என்றான். இதை உனக்கு ஓட்ட தெரியுமா என்றேன், நான் நன்றாக ஓட்டுவேன், முடிந்தால் உனக்கும் சொல்லித்தருகிறேன் என்றான். இதனால் போனது தான் என் தூக்கம்.

திரும்பி, திரும்பி படுத்து எப்போது தூங்க போனேன் என்று எனக்கே தெரியாது. காலை ஒரு 5:15 மணிக்கு எழுந்து, குளித்து புது துணி (எங்க மாமா ஒரு தங்கமான மனசுகாருங்க, எப்ப அவர் வீட்டுக்கு போனாலும் புது துணி வாங்கி வைச்சிருப்பாரு) அணிந்து  கொண்டு சத்தியை எழுப்பினேன். நேரம் என்ன என்ற கேட்ட அவனிடம் 5:45 என்று சொன்னவுடன் கத்த  ஆரம்பித்து விட்டான்.அப்பா 8 மணிக்கு மேல தான் போவாரு அதுக்கு முன்னால நீ மீண்டும் என்னை எழுப்பினால் உனக்கு இன்று "லூனா" கிடையாது என்றான். என்ன செய்வது?

 அத்தை போட்ட காப்பியை  குடித்து கொண்டே "லூனா" அருகில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தேன். என் மனதில் இருந்ததை தெரிந்தவர் போல் என் மாமா, இன்னும் கொஞ்ச நாள் பொறு, உனக்கு ஓட்ட சொல்லி தருகிறேன் என்றார். மனதில் ஒரு திகிலான தில். மாமாவும் அத்தையும் 8 மணி போல் பிரபாத் பஸ் ஸ்டாப் சென்று 33 பேருந்தை பிடித்து (மீண்டும் வாகன என்னில் ஒரு சிறு சந்தேகம்) சென்ட்ரல் ரயில் நிலையம் புறப்பட்டனர். அவர்கள் அந்த பஸ்ஸை பிடிக்கும் வரை நான் காத்து இருந்து வீட்டிற்கு ஓடி வந்த நான் தயாரான நிலையில் இருந்த சத்தியை பார்த்தவுடன் பரவசம் அடைந்தேன்.

நீ தயாரா? நான் தயார் என்றான். சரி உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது என்றான்? ஏன் என்று கேட்டேன், பெட்ரோல் போட வேண்டும் என்றான். ஒரு லிட்டர் 7 ருபாய் சொச்சம். என்னிடம் ஒரு 4 அல்லது 5 இருக்கும் என்றேன் (3:50 குறைத்து தான் சொன்னேன், போகும் போது பாபு உணவகத்தில் மீண்டும் ஒரு முறை சென்று வாயை மூடி கொண்டு " பாயா "சாப்பிடலாம் என்ற நப்பாசை). சரி அதை எடுத்துகொள் வரும் போது பெட்ரோல் போட்டு வைக்க வேண்டும், இல்லாவிடில் அவர் "அலைகள் ஓய்வதில்லை தியாகராஜன்" போல மாறி விடுவார் என்றான். புது துணி போடவில்லையா  என்று கேட்டேன், அதற்க்கு அவன் நான் இதை நேற்றே புது துணி போட்டு ஓட்டினேன் வா போகலாம் என்றான்.

எங்கே போவது? நேராக மெரினா பீச் என்று ஒரு பிளான். ப்ரோட்வயில் நேராக சென்று குறளகம் வந்து சேர்ந்தவுடன், அரை லிட்டர் போட்டால் போதும் ஆளுக்கொரு "கோன்ஐஸ்" வாங்கி கொள்ளலாம் என்றான். சரி என்று அதை ருசித்து விட்டு நேராக பீச் பக்கம்   வண்டியை விட்டோம். கோட்டைக்கு  சற்று முன்னே உள்ள பாலத்தின் அடியில் வண்டியை நிறுத்தி என்னை ஓட்ட சொன்னான். அவன் ஓட்டுவதை ஒழுங்காக கவனித்தால் மிகவும் லாவகமாக அதை ஓட்டினேன்.

கோட்டை அருகில் சென்றவுடன் வண்டியை திருப்பி வீட்டிற்கு செல்லலாம் என்று நினைத்த எங்களுக்கு அங்கே காலை ஓட்டம் ஓடி கொண்டு இருந்த நரசிம்மனை பார்த்தவுடன் ஒரு சந்தோசம். வா நரசிம்மா, நீயும் வண்டியில் ஏறு என்று சொல்லி வந்து கொண்டு இருந்த எங்களுக்கு வழியில் ஒரு ஏழரை சனியன் உள்ளது என்று அப்போது தெரியாது.

பாரிஸ் கார்னர் அருகே வந்து இருப்போம், ஒரு போலீஸ் எங்களை நிறுத்தினார். அவர் நிறுத்தியவுடன் சத்தியும் நரசிம்மனும் பேய் அறைந்ததை போல் (பேய் அறைந்த கதையை இன்னோருநாள் சொல்லுகிறேன்) ஆகிவிட்டனர். எனக்கும் பயம் தான் என்ன இருந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ளாததால் அந்த போலீஸ் என்னிடம் பேச்சு கொடுத்தார்.

போலீஸ்: எங்கடா போறீங்க?

நான்:வீட்டுக்கு

போலீஸ்: இது டூ வீலெர் ஆச்சே என் மூணு பேர் போரிங்கோ?

நான் :(அப்ப ஒரு வீலுக்கு ஒருத்தன்தான  போலாம்னா பஜாஜ் செடக் வண்டில மூணு வீல் இருக்கே அப்ப மூணு பேர் போலாமா கேட்கலாம்னு யோசித்தேன், ஆனா என் பாட்டி சொன்ன, "விசு உனக்கு வாயில தான் கண்டம் டைலாக் நினைவுக்கு வந்ததால்) "சாரி சார்"

போலீஸ்: இனிமேல் மூணு பேரு போறதுனா ஒருத்தன் ரிக்சாவில் போங்கோ

நான் :ஓகே சார் (வண்டியை ஸ்டார்ட் பண்ணி கொண்டு)

போலீஸ்: நான் பேசினே இருக்கேன், நீ எங்க கிளம்புற

நான்: வீட்டுக்கு சார் 

போலீஸ்: கேட்ட கேள்விக்கு ஒரு மாதிரி பதில் சொல்லுறியே உனக்கு என்ன "குடும்பம் ஒரு கதம்பம்" விசுன்னு நினைப்பா?

நான்:இல்ல சார்

போலீஸ்:சரி ஒரு அஞ்சு ரூபா இருந்தா குடுத்துட்டு போ

நான்: அஞ்சி ரூபா இருந்தாதான் ஒருத்தன் ரிக்சாவில் போய் இருப்போமே சார்

போலீஸ்: விட்டேனே பார். மீண்டும் டைரக்டர் விசு மாதிரி பேசுறியே

நான் :சாரி சார்

போலீஸ்: சரி, பாக்கெட்டில் கை விட்டு பார் அஞ்சு ரூபா இருக்கும்.

நான்: என் பாக்கெட்டில் அஞ்சு ரூபா இருந்தா அந்த பேண்டே வேற யாருதோ சார்.

போலீஸ் : திரும்பவும் விசு டைலாக்?

நான் : சாரி சார்

போலீஸ்: இப்ப எவ்வளவு காசு தான் கொடுக்க முடியும்?

நான்: இங்கேயே வெயிட் பண்ணுங்கோ நான் வீட்டில போய் எடுத்துட்டு வரேன்.

போலீஸ்: நீ வராட்டி.

நான்: இவங்க ரெண்டு போரையும் விட்டு விட்டு போறேன். இவங்க தான் கரண்டீ

போலீஸ்: நீ வராட்டி இவங்க ரெண்டும் பேருக்கும் தீபாவளி ஒரு நாள் முன்னாலே வரும்

நான்: ஏன் சார்?

போலீஸ்: (என் பேச்சில் மயங்கி விட்டார் போல்), இவ்வளவு நல்லா பேசுறியே உன் பெயர் என்ன தம்பி?

நான் :"விசு" சார்!

போலீஸ் : என்னை விட்டுருன்னு (அவர் லத்திய சைக்கிளில் லாவகமாக சொருவி வண்டிய எடுத்தார்).

அவர் சென்றவுடன் வண்டிய ஸ்டார்ட் பண்ணி ஏறுங்கடான்னு சொன்னேன். ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து " மாப்பு நீ வண்டியை வீட்டுக்கு எடுத்துட்டு போ, நாங்க பின்னாலே நடந்து வரும்னு சொன்னாங்கோ.

வீட்டில் வந்து கதவை திறந்த எனக்கு ஒரே அதிர்ச்சி, மாமாவும் அத்தையும் ரயில மிஸ் பண்ணிட்டு நாளைக்கு போகலாம்னு திரும்பி வந்துட்டாங்க. மாமா என்னிடம் நேராக, வண்டிய எங்க எடுத்துன்னு போனன்னு கேட்டார். ஒன்னும் இல்ல மாமா, பக்கத்து தெரு குழாயில் தண்ணி போட்டு (வண்டிக்குத்தான்) துடைக்கலாம்ன்னு தள்ளிண்டே போனேன்னு சொன்னேன். அப்ப ஏன்  வண்டி இன்னும் அழுக்கா இருக்கு? மாம்ஸ், அங்க தண்ணி வரல. சரி, இந்தா ஒரு பக்கெட்  தண்ணி, அந்த போலீஸ் காரனிடம் சமத்தா பேசின இல்ல? அதே போல் சமத்த கழுவுன்னாரு.

மாம்ஸ், அது நடந்தே அரை மணி நேரம் ஆச்சி, உங்களுக்கு எப்படி தெரியும். அட பாவி, சென்ட்ரலில் இருந்து வரும் 33,  பாரிசில் ஒரு அஞ்சு நிமிஷம் கூடவே நிப்பானே உனக்கு தெரியாதா? என்ன?. அப்ப பார்த்தேன். அது சரி அவங்க ரெண்டு பேரும் ஏன் பேய் அறைஞ்ச மாதிரி ரோட்டில உட்கார்ந்து விட்டார்கள் என்றார் சிரித்துகொண்டே.
நண்பர்களே, Jokes apart, நாம் அனைவரும் வாழ்கையில் பல நல்ல மனிதர்களை சந்தித்து இருப்போம். என் வாழ்வின் எனக்கு கிடைத்த இந்த மாமா மனிதர்களிலே மாணிக்கம். யாருக்கும்,எப்போதும் தீங்கு நினைக்காதவர். அவரிடம் நான் கற்று கொண்டது எவ்வளவோ நல்ல விஷயங்கள். நன்றி மாம்ஸ்.

http://www.visuawesome.com/

3 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...