திங்கள், 7 ஜூலை, 2014

(400-350-5)/3=15 தானே எடு அந்த 15 ரூபாய....

என் "முத்து குளிக்க வாரீகளா' பதிவை படித்து விட்டு இங்கே வந்த நண்பர்களுக்கு , அந்த "நுப்பது' கலாய்த்தல் கதை இரண்டு பாகம், இந்த முதல் பகுதியை படித்து கடைசி வரியில் உள்ள தொடர்ச்சி அடுத்த பாகம்" சென்றால் தான் சுவராசியமே. தங்கள் பொறுமைக்கும் வரவிற்கும் நன்றி!


பங்களூர் வாழ்கையின் மற்றொரு நாள். சனியும் அதுவும் எந்த சனியனின் சச்சரவும் இல்லாமல் மதியம் ஒரு 11 மணி போல் ஒரு பூனை தூக்கம் போட்டு கொண்டு, இடையில் இளையராஜாவின் "வர வர காதல், கசக்குதையா' என்ற பாடலை உணர்சிகரமாகே கேட்டு பாடி கொண்டு இருந்த வேளை.



விசு... உன்னை தேடி பக்கத்து வீட்டு சேகர் வந்து இருக்கான்...

ஐயோ, இவங்க யாருக்கும் நான் வீட்டிலே இருப்பது தெரிய கூடாதுன்னு தானே வண்டிய பக்கத்து தெருவில் பார்க் பண்ணிட்டு வந்தேன். நான் இங்க தான் இருக்கேன்னு எப்படி கண்டுபிடிச்சான்னு யோசிக்கும்போதே சேகர் வாயில் பல்லுமாக என் அறையில் நுழைந்தான்.

என்ன சேகர், சனியும் அதுவுமா இங்க...

இல்ல விசு, உன் வண்டிய பக்கத்து தெருவில பார்த்தேன், நீ இங்க இருப்பது தெரிய கூடாதுன்னு என்ற வேளையில் தானே நீ அங்க வண்டிய விடுவ, என்ன பிரச்னை, யார அவாய்ட் பண்ற ...

 (அட பாவி, நம்ப பிளான் எல்லாம் நம்மை விட இவன் நல்லா தெரிஞ்சு வைச்சி இருக்கானே) ஒன்னும் இல்ல சேகர்.. கொஞ்சம் நேரம் தூங்கலாம்னு தான்...

சரி விசு...கைமாத்தா சம்பளம் வர வரைக்கும் ஒரு 50 ருபாய் கொடேன்..

அப்படியா...சம்பளம் எப்ப வருது சேகர்..

எனக்கு எப்படி தெரியும்... நீ தானே வேலைக்கு போற...

அதுக்கு ஏன்டா சம்பளம் வர வரைக்கும்னு கேட்ட..

அது ஒன்னும் இல்ல விசு.. உண்மைய சொல்ல போனா எனக்கு 100 ருபாய் தான் வேண்டும், மாச கடைசி பார், நீ எங்க போவ? அதுனால இப்ப 50 குடு, மீதி 50 உனக்கு சம்பளம் வந்தவுடன் வாங்கிக்கிறேன்.

உனக்கு தான் எவ்வளவு பெரிய மனசு சேகர், மத்தவன் கஷ்டத்தை புரிஞ்சு உன் வாழ்க்கைய நடத்துற, சரி இன்னைக்கு வங்கி லீவே. திங்கள் கிழமை தரேன்..
சரி அப்புறம் சந்திப்போம்...

அவன் கிளம்பினவுடன் இவனை யோசித்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் மீண்டும் இளையராஜாவிடம் தஞ்சம் புகுந்தேன்.

ஒரு சில நிமிடங்கள் கழித்து சேகர் மீண்டும் வந்தான்.

விசு..மதியம் என்ன பிளான்?

(இப்ப இவன் கையில் காசு இல்லை என்பதை நான் ஏற்கனவே அறிந்து இருந்ததால்,) ஒன்னும் இல்ல, வீட்டில்தான் இருப்பேன்..

சரி.. என்கூட கிளம்பிவா.. கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் அதிஷ்டலக்ஷ்மி என்னை தேடி வந்து இருக்காங்கோ.

என்னடா சொல்லுற.. விவரமா சொல்லு.

நீ வந்து வண்டிய எடு, போற வழியில் சொல்லுறன்

இருவரும் கிளம்பி அடுத்த தெருவில் நிற்கும் என் வண்டியை நோக்கி நடந்தோம்.

சொல்லு சேகர், என்ன விஷயம்?

ஒன்னும் இல்ல, எங்க அம்மா உடனே ஒரு மூட்டை அரிசி வாங்கி வர சொன்னாங்கோ.

அது சரி அதுக்கும், அதிஷ்ட லக்ஷ்மிக்கும் என்ன சம்மந்தம்?



புரியாத மாதிரி பேசாத விசு.. ஒரு கிலோ அரிசிக்கே 1 ருபாய் பண்ற ஆள் நான்.

ஒரு மூட்டையில்..நம்ம வீக்கெண்ட் சூப்பரா  இருக்க போது..

பாத்து செய் சேகர், "கெடுவான் கேடு நினைப்பான்"..

நீ எப்ப பார் .. நெகடிவ் தான் பேசுவ.. என்னோடு சேர்ந்து "என்சாய் மாடி"..

வண்டியை எடுத்து கொண்டு நேராக அரிசி கடைக்கு விட்டோம்.

செட்டி, மூட்டை அரிசி எவ்வளவு?

எந்த அரிசி..சேகர்?

சாப்பிடற அரிசி தான் செட்டி... நீ என்னமோ வாய்க்கரிசி போல கேக்குற...

350 ருபாய் சேகர்.

விஷயம் தெரியாதவன்னு நினைத்து பழைய அரிசியா கொடுத்து ஏம்மாதிராத செட்டி..நல்ல புது அரிசியா கொடு.

நீங்க படிச்ச புள்ளைகள் ஆச்சே, உங்கள ஏம்மாத்த முடியுமா? இந்த மூட்டையை எடுத்துக்க, புது அரிசி..

அந்த மூட்டையை வண்டியில் போட்டு கொண்டு அவன் வீட்டை நோக்கி செல்கையில்..

சரி சேகர்.. இப்ப என்ன பிளான்?

வீட்டில் போய் அம்மாவிடம் அரிசியை கொடுத்து விட்டு, மீதம்னு சொல்லி ஒரு 5 ரூபாயும் கொடுத்து விட்டு ,, மீதி 45ல் நம்ம ரெண்டு பெரும் என்சாய் தான்..

அவனை வீட்டில் இறக்கி விட்டு நான் என் வீட்டை அடைந்தேன். சில நிமிடங்களில் எங்கள் பக்கத்து வீடு டேவிட் வந்து கடவை தட்டினான்.

என்ன டேவிட் சனியும் அதுவுமா?

இல்ல சேகரும் நீயும் ஒரு மூட்டை அரிசி வாங்கினு போனத பாத்தேன்.
நானும் உங்களோடு என்சாய் மாடலாம்னு வந்தேன்.

என்ன சொல்ல வர டேவிட்.

விசு,  அவன் சேகர் ஒரு கிலோ அரிசியிலே ஒரு ருபாய் எடுப்பான். இது ஒரு மூட்டை. குறைந்த பட்சம் ஒரு 45 ரூபாயாவது எடுத்து இருப்பான்.

(எப்படிடா இவ்வளவு அழகா அடுத்தவன் கணக்க நீங்க போடுறிங்கோ என்று நினைத்து கொண்டே) சரி...என்ன பிளான் தெரிய வில்லை. சேகர் வந்தவுடன் பார்த்து கொள்ளலாம்.

ஒரு அரை மணி நேரத்தில் சேகர் வந்தான்..மூவரும் சேர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் எங்களுக்கு பிடித்த சில காரியங்களை அந்த 45 செலவிட்டு செய்துவிட்டு அவனவன் வீட்டிற்கு திரும்பினோம்.

மாலை ஒரு 6 மணி போல் இருக்கும்...சேகர் மீண்டும் வந்தான்..

விசு... அவசரமா ஒரு 15 ருபாய் எடு..

ஏன் சேகர்..

யோ...(400-350-5)/3=15 தானே எடு அந்த 15 ரூபாய....

புரியல.

ஒன்னும் இல்ல விசு.. அரிசி எப்பவுமே பழையதா தான் வாங்க வேண்டுமாம். செட்டி நம்மை நல்லா ஏம்மாத்திட்டான்..

டேய்,அவன திட்டாத.. நீ தான புதுசா வேணும்னு கேட்டு வாங்கின..

எனக்கு என்ன தெரியும்.. எப்ப பார் வீட்டில் மளிகை சாமான் வாங்கும் போது கவனமா வாங்கு, பழையது வாங்கி ஏமாறதன்னு சொல்லுவாங்கோ, அது தான் அப்படி கேட்டேன்.

அது சரி பா.. இப்ப ஏன் உனக்கு 15 ருபாய் ?

அம்மா அரிசி வேணான்னு சொல்லிட்டு திருப்பி கொடுத்துட்டு 395 வாங்கி வர சொல்லி சத்தம் போடுராங்கோ.

45 மூணால வகுத்தா 15தான, அது தான் உன் பங்கை திருப்பி கொடு..

சரி மீதி 30க்கு என்னடா பண்ணுவ.

நேரா டேவிட் வீட்டுக்கு போய் அவனிடம் கேட்கலாம்.

சரி என்று டேவிட் வீட்டிற்கு போகையில், மீண்டும் கும்பிட போன தெய்வம் குறுக்கில் போனது போல டேவிட் வாயெல்லாம் பல்லாக வெளியே வந்தான்.

என்ன டேவிட்.. இவ்வளவு சந்தோசம்..

ஒன்னும் இல்ல. உடனே வண்டிய எடு, எங்க அம்மா உடனே ஒரு மூட்டை அரிசி வாங்கி வர சொன்னாங்கோ.. இதோ பார் 400 ருபாய்.

சேகரு.. உன் பிரச்னை தீர்ந்தது.. இதோட உன்னை திங்கள் பார்க்கின்றேன். என் பங்கு 15ஜை டேவிட் கிட்ட இருந்து வாங்கிக்க
என்று நான் கிளம்ப...சேகரும்,... டேவிட்டும் வண்டியை கிளப்பினார்கள்.

டேய்.. போகும் போது ஒரே ஒரு அறிவுரை.. திருப்பியும் போய் அந்த செட்டியிடம் புதுசா அரிசி வாங்கி வந்து விடாதிங்க என்று சொன்ன என்னை டேவிட் ஒரு விதமாக பார்த்தான்.

இந்த கதையின் தொடர்ச்சி இங்கே... 'நுப்பது " கலாய்த்தல்! (எனக்கே கணக்கா.. அனுமாருக்கே ஹை ஜம்ப்பா?)

9 கருத்துகள்:

  1. புது அரிசி னு கேட்டு வாங்கும்போதே நினைத்தேன்:))
    அண்ணா ரொம்ப நல்லவர் போலவே அட்ரெஸ் தெரிஞ்சா அப்பபோ கைமாத்து வாங்கிக்கலாம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னத்த சொல்லுவன் மைதிலி. கைமாத்தா கொடுத்து கொடுத்து கை ரேகை கூட காணாம போச்சு...வருகைக்கு நன்றி.!

      நீக்கு
  2. அடச்சே இந்த ஐடியா எல்லாம் தெரியாம அப்பாவியா வளந்திட்டேனே.
    ஆமாம் உங்களுக்கு பிடிச்ச காரியம் செஞ்சோம்ன்னு
    சொன்னியே தம்பி , அது என்னான்னு கொஞ்சம் விலாவரியா சொல்லு .

    பதிலளிநீக்கு
  3. ஹஹாஹஹஹஹ்ஹ் ஐயோ! செம பிட்டுப்பா! உங்கள் அனுபவங்களை வைத்து நல்ல ஒரு காமெடி ட்ராக் இல்ல குறும்படமே எடுக்கலாம் போல.....!!! ஓ மை காட் சிரிச்சு சிரிச்சு தாங்கலை நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன துளசி ஐயா.. எங்க வாலிப நாட்களின் கஷ்டங்கள் தமக்கு சிரிப்பாக உள்ளதா? நன்றி.. நன்றி..

      நீக்கு
  4. ரொம்ப ஹ்யூமர் சென்ஸ் உங்களுக்கு.......ரொம்ம்ம்ம்ம்ம்ம்பவே ரசிக்கின்றோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஹுமர் சென்ஸ் இருக்கோ இல்லையோ, உம்மக்கு தாராள மனசு. பாராட்டை அள்ளி விடுகின்றீர்கள் .. நன்றி, நன்றி!

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...