புதன், 15 ஜூலை, 2020

நல்ல வே(லை)ளை நான் பிழைத்து கொண்டேன்.

கொரோனா வந்தாலும் வந்தது அதின் கொடுமைகள் தலைவிரித்து ஆடி கொண்டு இருந்தாலும் சில, மிகவும் சில நல்ல காரியங்களை இந்த கொரோனா நமக்கு கற்று தந்து கொண்டு   இருக்கின்றது.

அதில் முக்கியமான சில..

ஆடம்பர திருமணம் முற்றிலுமாக தவிர்க்க படுகின்றது.

ஊரடங்கின் மூலம் இல்லத்திலேயே பணி. சிறு குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் இது ஒரு மிக பெரிய உதவி.

சுகாதாரம். அனைவரும் தங்களை தாமே சுத்தமாக வைத்து கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

இம்மாதிரியான சில பயன்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த அட்டவணையில் இன்னொன்றையும் சேர்த்து கொள்ளலாம்.

கடந்த நான்கு மாதங்களாக அமெரிக்க தமிழ் சங்கங்கள் எதிலும் இருந்து .. 

"வாங்க கொண்டாடலாம்"

என்ற தலைப்போடு ..

ஓய்வு பெற்ற நடிகர்கள் , இயக்குனர்கள், பட்டிமன்ற தமிழ் வளர்ப்பாளர்கள், ஸ்டென்ட் அப் காமெடியன்கள் , அக்காலத்து வார இதழ்களில் வந்த  நகைசுவை துணுக்குகளை  "இப்படி தான் எங்க ஊரில் ஒருத்தன் " என்று ஆரம்பித்து ஜோக் சொல்லும் நபர்கள், இவர்கள் தவிர இன்னொரு கூட்டம் இருக்கின்றது. நாடகம் போடுகிறோம் என்று  கும்பலோடு வந்து அமர்ந்து விட்டால் அந்த தமிழ் சங்கத்திற்கு ஐயோ!

அதற்கு டிக்கெட் போட்டு குடும்பத்தோடு வாருங்கள் என்று ஒரு வரவேற்பு. 

இந்த நிகழ்ச்சிகள் அறவே ரத்து செய்ய பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சி. அமெரிக்காவில் தமிழ் வளர்க்கிறேன் என்று சொல்லி கொண்டு வரும் இந்த பிரபலங்களுக்கு 

முதல் வகுப்பு விமான டிக்கட்.

வசதியான ஐந்து நட்சத்திர ஹோட்டல் தங்கும் வசதி

8000 ல் இருந்து 15000 வரை ( ரூபாய் இல்லீங்கோ.. டாலர்! அன்பளிப்பு)

உணவு மற்றும் உல்லாச பயணங்கள் 

என்று அள்ளி தர வேண்டும்.

இந்த பணம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் தான். அனைத்தும் தமிழ் வளர்க்க உதவுகின்றது இல்லையோ, இந்த ஓய்வு பெற்ற தமிழ் வளர்ப்பாளர்களுக்கு மிகவும் உதவுகின்றது.


இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலமாக நிறைய விடயங்கள் தொடருகின்றது. இனிமேல் அமெரிக்காவில் தமிழ் வளர்க்க விரும்பும் ஆர்வலர்கள் இந்தியாவில் இருந்து அமர்ந்து கொண்டே ஆன்லைன் மூலமாக தமிழ் வளர்ப்பார்கள் என்று நினைக்கையில், ஆனந்தம் ...ஒரே ஆனந்தம்.

அது மட்டுமல்லாமல் .. இங்கே அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்கள் மத்தியில் உள்ள  அருமையான பேச்சாளர்கள், கலைஞர்கள், இசை வல்லுநர்கள் போன்றோர் இந்த கொரோன காலத்தில் ஆன் லைனில் வெளி வந்து அவர் தம் திறமைகளை காட்டுவதும் ஆறுதலே.

இது ஒரு விஷயமா .. ? என்று நினைப்போருக்கு.. ஒரு உதாரணம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழ் சங்கத்தின் நிர்வாகத்தில் இருக்கும் ஒரு நண்பர் ஒரு ஓய்வு பெற்ற சினிமா பிரபலத்தை பட்டிமன்ற  நடுவராக அழைத்து வந்தார். அவர் மட்டும் அல்ல, கூடவே அவரின் துணைவியாரும் தான்.

மனுஷன் வந்த நாளில் இருந்து ஒரே குடி. என்னங்க, இப்படி பன்றாரே என்று அம்மணியிடம் முறையிட்டால், 

"ஐயோ, தயவு செய்து வாங்கி கொடுத்துடுங்கோ. இல்லாட்டி ஏதாவது பிரச்சனை, சத்தம் போட்டுனே இருப்பார்" 

என்று அம்மணியின் ஒப்பாரி.

சரி, என்று அவருக்கு வாங்கி தந்து நிகழ்ச்சி நாளும் வர..

"வாங்க, இன்னைக்கு நீங்க தான் தலைமை, வந்து ஏதாவது பேசுங்க என்று சொல்ல"

"எனக்கு பேச எல்லாம் முடியாது. அங்கே வந்து உக்காருவேன். அமெரிக்க வாழ் தமிழர்கள் என்னோடு போட்டோ மட்டும் எடுத்துக்கலாம்"

என்று சொல்ல.. 

தமிழ் சங்க நிர்வாகி நொந்தே போனார்.

இனிமேல் தமிழை வளர்க்க இவ்வளவு பணத்தை வீணடிக்க வேண்டாம். தம் தம் ஊரிலே உள்ள திறமையானவர்களை அழைத்து தமிழை சுவையுங்கள்.  இந்த இந்திய வாழ் பிரபலங்களை தவிர்ப்பதன் மூலம் மிச்சமாகும் பணத்தை வைத்து நாலு பேருக்கு படிப்பை சொல்லி தர உதவுங்கள்.

கொரோனவினால் நல்ல காரியம்..

இம்மாதிரியான அழைப்புகள் இல்லாதால், நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன். 

4 கருத்துகள்:

  1. அந்தப் பிரபலம் யார் என்று கிசுகிசு பாணியிலாவது சொல்லக்கூடாதா?  மண்டைக்குள் குடைகிறதே!!!

    பதிலளிநீக்கு
  2. //இங்கே அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்கள் மத்தியில் உள்ள அருமையான பேச்சாளர்கள், கலைஞர்கள், இசை வல்லுநர்கள் போன்றோர் இந்த கொரோன காலத்தில் ஆன் லைனில் வெளி வந்து அவர் தம் திறமைகளை காட்டுவதும் ஆறுதலே.// உண்மை!

    ஆமாம், கேள்விப்பட்டிருக்கிறேன் இப்படிப்பட்ட அலம்பல்களை! தாங்கறவன் இருக்கும்வரை ஆடுறவன் ஆடுவான்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...