புதன், 6 மே, 2020

தலைமையும் "தறுதலை"மையும்!

இந்த கொடூரமான கொரோனா காலத்தில் ஆளும் கட்சி  அதிமுக வின் அமைச்சர்கள் மற்றும் பேச்சாளர்களை பார்த்தாலே கொரோனாவின் அறிகுறி எல்லாம் நமக்கு வந்துவிடும் போல் இருக்கின்றது!

ஊரடங்கு -  சமூக விலகல் -  விழித்திரு தனித்திரு -  என்று கிட்ட தட்ட இரண்டு மாதம் இருக்கையிலே,  இந்த கொரோனாவின் தாக்கம் மற்றும் பரவல் குறையாத நேரத்தில் அரசாங்கம் மதுக்கடைகளை திறக்க போகிறார்களாம்!

இதை கேட்டவுடனேயே மனது பதறியது। அட பாவத்த! நம்ம ஊரில் தான் மக்கள்தொகை பிரச்சனை எப்பவுமே இருக்கே। காய்கறிக்கே  அவ்வளவு கூட்டம் இருக்குமே! இந்த மாதிரி மது கடைய தற்போது திறக்க நேர்ந்தால்!

நான் இங்கே சொல்ல வருவது பூரண மதுவிலக்கு அல்ல! மதுக்கடைகளை இன்னும் சில வாரங்கள் பூட்டி வைப்பதே!



கடையை திறப்போம் என்று சொல்லிவிட்டு அதை ஏன் திறக்கின்றோம் என்று ஆளுங்கட்சியார் சொல்லும் காரணங்கள் அருவருப்பாக இருக்கின்றது!

ஒரு பாமரனுக்கு கூட தெரியும் இந்த மதுக்கடையை திறப்பதற்கான ஒரே காரணம் அரசாங்கத்தின் கஜானா காலி! தமிழக அரசாங்கத்தின் பொருளாதாரத்தில் இந்த மது வருமானம் ஒரு முக்கிய அங்கம் வாய்க்கிறது।

எங்களிடம் பணம் இல்லை , மத்திய அரசாங்கம் எங்களுக்கு கை விரித்துவிட்டது। மதுக்கடையை திறந்தால் தான் கொஞ்சமாவது பணம் வரும் அதனால் தான் திறக்கிறோம் என்று சொன்னாலாவது மக்கள் புரிந்து  கொள்வார்கள்।

என்றைக்கு "குடிகாரன்" என்ற அவமரியாதையான சொல்லை "மதுபிரியர்கள்"  என்று நீங்கள் மாற்றினீர்களோ, அன்றே தெரியும் இது புலி வாலை பிடித்த கதை என்று.
ஆனால் இவர்கள் சொல்லும் காரணங்கள்।

கள்ள சாராயம் அதிகரித்துவிடும்।

அட முட்டாள்களே, மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதை தான்!
ஏன்? கிரிக்கெட் ஆடுறவங்களையும் கேரம் ஆடுறவங்களையும் கடலை போட்ரவாங்களையும் பிடிக்க தெரிந்த ட்ரொன் கேமராவுக்கு கள்ளச்சாராயம் அலர்ஜியா?

அடுத்த மாநிலத்திற்கு சென்று குடிப்பார்களாம்!

அட முட்டாள்களே, அவனவன் அடுத்த வேலை சோற்றுக்கு அழுதுனு இருக்கான்। இதுல அடுத்த மாநிலத்துல போய்  குடிக்கிறானாம்!

டமஸ்டிக் வயலன்ஸ் - இல்லத்தரத்தில் வன்முறை அதிகரிக்குமாம்!

என்ன ஒரு முட்டாள் தனமான விளக்கம். சரக்கு இல்லாத போதே இந்த வன்முறை அதிகரித்துள்ளது என்று அறிந்த இந்த அறிவு ஜீவிகள் சரக்கு உள்ளே போனால் குறையும் என்று சொல்ல வருகிறார்களா?

பூச்சி கொல்லி மற்ற மருந்தை குடிக்கிறார்களாம்!

அப்படியே உண்மையா இருந்தாலும் அதுல வர பிரச்சனை சிரியது தான்।லட்சத்தில்  ரெண்டு பேர் பூச்சி கொல்லி குடிச்சு சாவது  பரவாயில்லையா।। அல்லது லட்சத்தில் 50 சதவீதம் உங்க கடையில் வாங்கி அவன் அவன் குடும்பம் அழிவது பரவாயில்லையா?


படி படியா தான்  குறைக்கணும் ।

ஆமா, இது மலை மேலே போய் சாமியை பாத்துட்டு இறங்குறது மாதிரி தானே, படி படியா தான் குறைக்கணும்।

குடிக்காதவங்க மட்டும் தான் பேசணுமாம்!

டே, குடிக்காதவங்க மட்டும் தான் பேசணும்னா எந்த ஊரிலும் எந்த காரியமும் நடக்காது।

கடைசியாக , திமுக தலைவர் கருணாநிதி "கற்பூரம் நெருப்புனு"! இதுக்கு கூட உங்களுக்கு கருணாநிதி தான் தேவை படுறார்।

நிதிக்காக மட்டுமே இந்த மதுக்கடைகள் திறக்கப்படுகின்றது.  அதை  நேராக சொல்லிவிட்டு போங்கள்.

காய் கறி கடைகள் திறக்கவேண்டும்  ,இறைச்சி கடை திறக்க வேண்டும் இன்னும் சில அத்தியவாசிய பொருட்களை திறக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் போராட்டங்களை பார்த்த நாம் எங்கேயும் மதுக்கடைகளை திறக்கவேண்டும் என்ற போராட்டத்தை பார்க்கவில்லை.  பிறகு எதற்கு இந்த திறப்பு விழா!

நிதிக்காக இந்த மதுக்கடைகளை திறப்பது ஒரு அதிர்ச்சியான பயங்கரமான வருங்காலத்திற்கான முன்னோடி।

தமிழக அரசாங்கத்தின் கஜானா சுத்தம்। அவர்களிடம் அடுத்த மாதத்து செலவுக்கான நிதி கூட இல்லை । மத்திய அரசாங்கத்திடம் இருந்து ஒரு பைசா வரப்போவதில்லை என்று தமிழக அரசாங்கத்திற்கு  நன்றாக புரிந்து விட்டது

அதனால் தான் இந்த மதுக்கடை திறப்பு

மத்திய அரசாங்கத்தை பொறுத்தவரை அந்த கஜானா எப்போதோ காலி । சென்ற வருடம் ரிசர்வ் வங்கியின் இருப்பானா ௧௭௬௦௦௦ கோடியை எடுத்தாங்களே, அப்பவே நம்ம சொன்னது।। "கிழிஞ்சது போ ! என்று நினைக்க வைத்தது।

கூடி கழித்து பார்த்தால் மக்களுக்காக இந்த கடையை திறக்கின்றோம் என்பது ।।

நாய் வாலை அறுத்து நாய்க்கு சூப் வைச்ச கதை தான்!

தயவுசெய்து தற்போதைய நிலைமையில் இக்கடைகளை திறக்காதீர்கள். இதன் விளைவுகள் பயங்கரமாய் இருக்கும்.  நிதியை மட்டுமே நினைத்து செய்தாலும், இதன் பலன்

வரவு எட்டணா.. செலவு பத்தணா தான்.

மத்திய அரசிடம் உங்கள் தேவைக்காக  உரிமையோடு போராடுங்கள். இன்னும் நீங்கள் குனிந்து தவழ்ந்து மண்புழுவை போல் நகர்ந்தால் கூடிய சீக்கிரம் ஒரு மக்கள் போராட்டம் நடக்கும். அப்படி நிற்க நடந்தால் That would be a genocide.

இங்கே தெலுங்கானா முதல்வர் மத்திய அரசிடம் வாய்த்த கோரிக்கைகளை சுட்டி காட்ட வேண்டும்.

"தெலங்கானா அரசின் மாத வருவாய் ரூ.17 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.1,600 கோடியாக சரிந்துவிட்டது. பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்சிங்கின் போது, பல்வேறு விஷயங்களை தெளிவாக எடுத்துரைத்தேன். மத்திய அரசிடம் பரந்த நிதிக்கொள்கை இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது. எனவே, மாநிலங்களுக்கு நிதியை வழங்கிடுங்கள், அல்லது அதிகாரத்தை வழங்கிடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றேன்.

உலகமய கொள்கையுடன் இருப்பதால், மாநிலங்கள் சுயமாக நிதியை பெருக்கிக் கொள்வதற்கான வழிகளையும் தெரிவித்தேன். ஆனால், எந்தவிதமான பதிலும் பிரதமரிடம் இருந்து வரவில்லை. மாநிலங்களுக்கான நிதிப்பொறுப்பு பட்ஜெட் மேலாண்மை மீது கடன் பெறும் அளவை உயர்த்துங்கள், மத்திய அரசு எதையும் பொறுப்பேற்க வேண்டாம் என்றேன். எங்களுக்கு கடன் இருக்கிறது அதை செலுத்தும் காலத்தை ஒத்திவையுங்கள் என்றேன். அதற்கும் பதில் இல்லை. மாநிலங்களுக்கு இருக்கும் கடனால் மத்திய அரசுக்கு என்ன சுமை வந்துவிடப்போகிறது என்பது எனக்குப்புரியவில்லை. மத்திய அரசின் கொள்கை என்ன என்பது எனக்கு புரியவில்லை.

இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருப்பேன், அப்போதும் எதுவும் நடக்காவிட்டால், தெலுங்கானா சார்பில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல அவர்களை கட்டணம் செலுத்த மத்திய அரசு சொல்கிறது. வேலையில்லாத, வறுமையில் வாடும் தொழிலாளர்களிடம் பயணக்கட்டணம் கேட்டால் எவ்வாறு கொடுப்பார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு சந்திரசேகர் ராவ் பேசினார்".




இது தலைமை. நீங்கள் செய்வதோ "தறுதலைமை"




1 கருத்து:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...