வெள்ளி, 1 மே, 2020

சண்முகம் சார் க்ரிஸ்டியனா?



பள்ளிக்கூடம்!

என்ன ஒரு புனிதமான இடம்.

LMC in early 1900's
ஒவ்வொரு மனிதனையும் அவனுக்காக நாளைய நாளை செதுக்கும் இடம் அல்லவா இந்த பள்ளி கூடங்கள்.

இங்கே கற்றவை தான் எத்தனை?

சில நாட்களில் இளையவள் ..

"நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலை.. ரொம்ப போர்"

என்று சொல்கையில்..

"அட பாவத்த... பள்ளிக்கூடம் ரொம்ப போரா?, எங்க காலத்தில் எல்லாம் பள்ளிக்கூடம் தான் ரொம்ப ஜாலி"



"உங்க காலத்துலன்னு சொல்லாதீங்க, உங்களுக்குனு சொல்லுங்க"

"அதுவும் சரி தான்"

பள்ளி நாட்களிலும் சரி கல்லூரி நாட்களிலும் சரி, வீட்டில் இருப்பது தான் ரொம்ப போர் . காலையில் எழுந்து நேராக பள்ளி சென்றால் ஆசிரியர்கள், தோழிகள்,  நட்புகள், தோழிகள், பாடங்கள்,தோழிகள்,  சினிமா கதைகள், தோழிகள், முறுக்கு, தோழிகள், கமர்கட், தோழிகள், ஐஸ் கிரீம், தோழிகள் , சமோசா , தோழிகள் என்று நாள் போவதே தெரியாது.

பல பள்ளிகளில் நான் படித்து இருந்தாலும் சீர்காழியில் ஒரு பள்ளியில் சில நாட்களை கடக்க நேர்ந்திட்டது.

ஆங்கிலம் சொல்லி கொடுத்த ஐடா டீச்சர்.
கணக்கு வாத்தியார் ரபேல்.
வகுப்பு வாத்தியார் இளங்கோ.
தமிழ் ஆசிரியர் சண்முகம்
பிடி வாத்தியார் பீட்டர்
NCC மாஸ்டர் தாமஸ்.
கொயர் மாஸ்டர் தாஸ்..

என்று சொல்லி கொண்டே போகலாம். இவர்களிடம் தான் கற்று கொண்டது எத்தனை?

கிறிஸ்துவ பள்ளி அது. அதில் காலை வழிபாடு நடக்கையில் அடியேன் தான் பாடுவேன் (நமக்கு கொஞ்சம் பாட வருங்கோ).

ஒரு நாள் தமிழ் ஆசிரியர் சண்முகம் என்னை அழைத்து..

"நல்லா பாடுற.. சாயங்காலம் வீட்டுக்கு வா, ஒரு உதவி தேவை.."

சாயங்காலம் அவர் இல்லத்திற்கு சென்றேன்.

நிறைய ஆண் பெண்கள்  சுற்றி அமர்ந்து இருக்க..

"வா விசு, இவர் எங்க அண்ணன் சுந்தரம், இவருக்காகத்தான் உன்னை வர சொன்னேன்"

என்னவாய் இருக்கும் என்று நான் குழம்புகையில்...

சுந்தரம்..

"விசு, இந்த இந்த பேப்பரில் இருக்கும் பாடலை நான் பாடுற மாதிரியே தொடர்ந்து பாடு.."

ஓ.. பாட தான் கூப்பிட்டு இருக்காங்க.. சீர்காழியில் வாழ்பவர்களே என்னை பாட அழைத்து இருப்பதால் இன்று முதல் நான் சீர்காழி விசு என்று அழைக்க படுவேன் என்று நினைக்கையில்.. சுந்தரம் ஆரம்பித்தார்..

"அப்பர் , சுந்தரர், சம்பந்தர் அருள்மிகுவாகிய   மாணிக்க வாசகர் "

"சார், இவங்க எல்லாம் யாரு?"

"புண்ணியவானுங்க.. பாடு"

தொடர் பாட்டு பாடினேன்..

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்..

எல்லாம் முடிந்து கிளம்புகையில், சண்முகம் வாத்தியார் ஒரு பொட்டலம் சுண்டல் மற்றும் முறுக்கோடு வழி அனுப்ப..

"ரொம்ப தேங்க்ஸ் சார்"

"சந்தோசம்.. வார வாரம் வந்து பாடு "

"சார், ஒரு விஷயம், நான் க்ரிஸ்டியன்னு உங்களுக்கு தெரியும் தானே"

"நல்லா தெரியும்"

"அங்கே இருந்தவங்களுக்கெல்லாம் அது தெரிஞ்சா கோவிச்சிக்க மாட்டாங்களா? "

"டே, நான் கூட தான் கிறிஸ்டியன்"

"சார், பேர் சண்முகம்.. எப்படி கிறிஸ்டியன்,"

"உன் பேரு கூட தான் விசு, நீ எப்படி கிறிஸ்டியன்?"

"அது, முழு பெயர்...!!!?"

"ரொம்ப முக்கியம்! நான் ஒரு ஹிந்து தான்,  இருந்தாலும் கிறிஸ்துவின் போதனையை படிச்சி இருக்கேன் . "தன்னை போல் பிறரை நேசி " ன்னு அவர் சொன்னது எனக்கு பிடிச்சி இருக்கு. அதை போலோவ் பண்றேன். அப்ப நானும் கிறிஸ்டியன் தானே"

"சார்"

"சரி, கிளம்பி ஹாஸ்டலுக்கு போ. உனக்கு பிடிச்சி இருந்தா அடுத்த வாரம் வந்து பாடு"

ஹாஸ்டல் வந்து சுண்டலை பிரித்தால்..

அடேங்கப்பா..

ரொம்பவும் குழையாமலும் கெட்டியாக இல்லாமல் பதமாக வேக வைத்த  நிலை. அதில் சில பச்சை மிளகாய். கருவேப்பிலை, வெங்காய நறுக்கல்கள், சீரகம், அளவான உப்பு,  நடு நடுவே வேர்க்கடலை.

அந்த சுவை இன்னும் வாயை விட்டு போகவில்லை.. அந்த பாடலும் ராகமும் கூட தான்.



பின் குறிப்பு :

இந்த பதிவை படித்த நல்ல நண்பர் டி என் முரளிதரன், அடுத்த வாரம் போனீர்களா? சுண்டல் கிடைத்ததா என்று பின்னூட்டத்தில் கேட்டார். அடுத்தவாரம் என்ன நடந்தது என்பதை அறிய இங்கே சொடுக்கவும்.

6 கருத்துகள்:


  1. எனக்கும் பள்ளிக் கூடம் போவெதன்றால் ரொம்ப பிடிக்கும் 5 ஆம் வகுப்புக்கு அப்புறம் காலேஜ் வரை தோழிகள் இல்லாதா இடத்தில்தான் படித்தேன்

    பதிலளிநீக்கு
  2. மதுர...

    அஞ்சாவது படிக்கும் போனதே நீ என்ன குசும்பு பண்ணியோ.. ஆல் பாய்ஸ் ஸ்கூலில் உன்னை சேர்த்து விட்டுட்டு இருக்காங்க.

    பதிலளிநீக்கு
  3. அடுத்த வாரம் போனீங்களா? சுண்டல் கிடைச்சதா?
    அப்புறம்//பள்ளி நாட்களிலும் சரி கல்லூரி நாட்களிலும் சரி, வீட்டில் இருப்பது தான் ரொம்ப போர் . காலையில் எழுந்து நேராக பள்ளி சென்றால் ஆசிரியர்கள், தோழிகள், நட்புகள், தோழிகள், பாடங்கள்,தோழிகள், சினிமா கதைகள், தோழிகள், முறுக்கு, தோழிகள், கமர்கட், தோழிகள், ஐஸ் கிரீம், தோழிகள் , சமோசா , தோழிகள் என்று நாள் போவதே தெரியாது.// இப்படித்தான் இருக்கனும்னு நினைச்சாலும் என்னையும் மதுரைத் தமிழனையும் ரொம்ப ந்ல்லவங்கன்னு சொல்லிட்டாங்களே! என்ன பண்றது

    பதிலளிநீக்கு
  4. உங்களின் புத்தக விழா கொண்டாட்டம் ஞாபகம் வந்தது...

    பதிலளிநீக்கு
  5. டி என் முரளிதரன்..

    அடுத்தவாரம் போனீங்களா ? சுண்டல் கிடைத்ததா?

    நல்ல கேள்வி நண்பரே.. அதை அடுத்த பதிவில் ( இன்னாது!!! தாமஸ் வாத்தியார் இந்துவா!!!?) எழுதி இருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா எத்தனை தோழிகள் ! தம்பி , அப்படியே தோழிகள் எல்லாம் பாட்டைக்கேட்டு ரசிகைகள் ஆன கதையையும் கொஞ்சம் சொல்லிரு . எங்களுக்கு சுண்டல் கிடைக்காவிட்டாலும் கொஞ்சம் கிண்டல் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...