சனி, 16 மே, 2020

பாலாஜி உன்னை பாக்காத நெஞ்சு !

பாலாஜியை யாராவது பார்த்தீங்களா?  ரெண்டு நாளா ஆளே காணோமே ?

என்று எங்கள் மார்க்கெட்டிங் ப்ரோபஸ்ஸர் அருளப்பன் கேட்கையிலே, வகுப்பில் இருந்த  அனைவரின் பார்வையும் அடியேன் பக்கம் திரும்ப..

"அட பாவத்த, இவனுங்க  எந்த தியேட்டரில் ரெண்டு  நாளா மார்னிங் ஷோ மேட்னி பர்ஸ்ட் ஷோ செகண்ட் ஷோவ்ன்னு தொடர்ந்து பார்த்துன்னு இருக்காங்களோ.. அதுக்கு அம்புட்டு பேர் பார்வையும் என் மேல ஏன் விழுது என்று யோசிக்கையில்..

பின் வரிசையில் அமர்ந்து இருந்த "அமைதிக்கு பெயர் தான் ஷாந்தி" அந்த அமைதியை கலைத்து , பாலாஜி டவுன்ஷிப் தான் .. என்று என்னை பார்க்க..

அருளப்பன்...

"ஆமா இல்ல.. !, விசு பாலாஜி எங்க?!" 

"எந்த பாலாஜி சார்?அய்யரா!! செட்டியா!?"

என்று நான் பதில் கேள்வி கேக்க..

அருளப்பன் முகத்தில் கடுகு வெடித்தது.


"எத்தனை முறை உங்களுக்கு சொல்லி இருக்கேன். இந்த ஜாதி மதம் நிறம் இனம்ன்னு என் வகுப்பில் பேச  கூடாதுன்னு.. செ சாரி விசு!"



"சாரி சார்!"

மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்..

"விசு, அந்த ரெண்டு பேரும் எங்க?"

"எந்த ரெண்டு பேரும்?!"

என்று அடியேன் கேட்க..

"அட பாவி.. இன்னைக்கும் உடல் மட்டும் தான் இங்கே மனசெல்லாம் வேற  எங்கேயோவா"

"சாரி சார்.. "மார்க் கட்டிங்" பத்தியே மனசுல எப்போதும் நினைப்பு .. அதனால தான்.."

"அது மார்க்கெட்டிங்.. கட்டிங் இல்ல"

"பாலாஜி எங்க"?

"சார்.. எந்த பாலாஜின்னு இடஞ்சூட்டி பொருள் விளக்குனா அதுக்கு வேற திட்டுறீங்க, எந்த பாலாஜி?"

"விசு, ஒருத்தரை பத்தி விசாரிக்கும் போது அவங்க ஜாதியை வைச்சி விசாரிக்க கூடாது, நீ இப்படி கேக்குறதுக்கு பதிலா. அவங்க இனிஷியல் வைச்சி கேக்கலாம் தானே.."

"வேணா சார்.. இந்த விளையாட்டே வேணாம்"

"ஏன்"?

"போன மாசம் ஹெட் ஆப் தி டிபார்ட்மென்ட் அருணாச்சலம் சார், இதே கேள்வியை தான் கேட்டார்"

"அதுக்கு? "

"இவனுங்க ஒருத்தர் அப்பா பேர் பரமேஸ்வர் இன்னோருத்தர் பரந்தராமன்"

"சொல்லு"

"நானும் ... பீ பாலாஜியா ன்னு கேக்க.. அவரு ஒரு வாரம் என்னை தள்ளி வச்சிட்டாரு.!"

"ஓ, நீ அதுக்கு பதிலா வேற ஏதாவது சொல்லி இருக்கலாமே..."

"ஓ.. இந்த கிரிக்கட் கரிக்கட்டுன்னு சுத்தின்னு இருப்பானே .. அந்த பாலாஜியா, இல்லாட்டி கமலஹாசனை குவி லென்ஸில் பார்த்ததை  போல இருப்பானே அந்த பாலாஜியா?"

"ரெண்டாவது.."

" அவன் ..!!! வாழ்வே மாயம் ரிலீஸ் ஆகி இருக்கு சார். அதுல மழைக்கால மேகம் ஒன்று பாட்டுல கமலஹாசன் போட்டுனு   இருக்க  துணி போல வாங்கணும்னு மெட்றாஸ் பர்மா பஸார்  போய் இருக்கானு கேள்வி பட்டேன் "

"கிரிக்கெட் பாலாஜி"?

"வாழ்வே மாயம் படத்துல..."

"இவனுக்கும் அதே துணியா "?

"சே சே.. போன வாரம்  இம்ரான் பந்தில் கவாஸ்கர் டக் அவுட் ஆனார் தானே.. அதுல இருந்து இவன் வாழ்வே மாயம் இடைவேளைக்கு பின்னால வந்த கமல்ஹாசன் மாதிரி சுத்தின்னு  இருக்கானு கேள்வி பட்டேன்!"


இரண்டு பாலாஜிகளும் நமக்கு நல்ல நண்பர்கள். ஆட்டம் பாட்டம் படிப்பு என்று இளங்கலை படிப்பின் போது இவர்களின் அன்பு தொல்லை தான்  எவ்வளவு. ஒரு பாலாஜி படித்து முடித்து இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்தான், கூடவே கிரிக்கெட் வேறு. இன்னொரு பாலாஜி கமல் ஹாசன் போன்ற தோற்றம் உடையவன், அனால் ரொம்ப குள்ளமாவனன். படிப்பு முடிந்த பின் தகப்பனார் நடத்தி வந்த டூ வீலர் டீலர்ஷிப் எடுத்து நடத்தி வந்தான் என்று கேள்வி பட்டேன்   . கிரிக்கட் பாலாஜி கொஞ்சம் சாது.. ஆனால் கமல் பாலாஜிக்கு குசும்பு அதிகம்.

பல வருடங்கள் கழித்து நண்பர்கள் சிலரை சந்திக்கையில், இந்த "எங்கடா பாலாஜி " நிகழ்ச்சி நினைவுக்கு வர ...நானே 

"எங்கடா பாலாஜி" என்றேன்"?

"விசு, ரெண்டு பேரும் கல்யாணமாகி செட்டில் ஆகிட்டாங்க.. நம்ம கமல்  பாலாஜி கல்யாண கதை கேள்வி பட்டியா?"

"தீர்க்க சுமங்கலி பவ தானே.. கொஞ்சம் குசும்பு .. என்ன பண்ணான்"?

"கல்யாணத்துக்கு முந்தின நாள் பேச்சிலர் பார்ட்டி வைக்குரன்னு இவனுங்க சித்தூர் போய் பாரின் சரக்கு வாங்கினு வந்து, புங்க மரத்து   கிணத்துக்கு பக்கத்துல உக்காந்து ஒரே அட்டகாசம்..அது என்னமோ கை  கலப்பில் முடிய.. !!"

"அம்புட்டு பெரும் ராத்திரி ரெண்டு மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில்."

"அட பாவி, காலையில் கல்யாணம் என்ன ஆச்சி"

"ஏழு மணிக்கு முகுர்த்தம்.. காலையில் ஆறு வரை இவனை காணோமே.. ஒரு வேளை   பொண்ணு பிடிக்கலைன்னு எங்கேயாவது  ஓடிட்டானான்னு, விசாரிக்க.."

"விசாரிக்க?!"

"அப்படியே ஓடி இருந்தாலும் இவனை பிடிக்கலைன்னு பொண்ணுதானே ஓடி இருக்கணும் என்ற உண்மையா யாரோ சொல்ல.. ஆறு மணி போல ஸ்டேஷனில் இருந்து ஒரு போன் கால்."

 அடிச்சி பிடிச்சி அங்கே போக...

"சார். என்ன சார் பிரச்சனை.. ..?"

"என்ன திமிரு இவனுக்கு .. இதுல வாய துறந்தா பொய் வேற?"

"என்ன பண்ணான் சார்..?"

"ராத்திரி ரெண்டு மணிக்கு ஏறி பக்கம் ரோந்து போன போலீசை "

"போலீசை..."

"இவன் கூப்பிட்டு .. கையில் இருபது ரூவா கொடுத்து, கடிச்சிக்க ஏதாவது வாங்கியானு சொல்லி இருக்கான்."

"பாலாஜி.. உண்மையாவா!!!? "

"அவரு தொப்பி கூட போடாம இருந்தாரு. இருட்டுல கூர்க்கான்னு நினைச்சிட்ட்டேன்,சாரி"

"போலீஸ் காரும் ., நான் போலிஸ்ன்னு சத்தம் போட,  அவரோட லத்தியை பிடுங்கி  வைச்சுக்கிட்டு.. ஊறுகாயோடு வந்து லத்தியை வாங்கிக்குனு போன்னு கிண்டல் வேற.."

"சாரி சார். "

"இங்கே ஸ்டேஷன் வந்தவுடன், பொய் வேற.."

"என்ன சொன்னான் ?"

"இன்னைக்கு ஏழு மணிக்கு கல்யாணமாம்.. இவனுக்கு.. ஸ்டேஷனில் இருக்க அம்புட்டு பேரும் வந்து முதல் பந்திக்கு பரிமாறிட்டு ரெண்டாவது பந்தியில் வயிறு நிறைய சாப்பிட்டு போங்க, மொய் கூட எழுத வேண்டாம்னு கிண்டல்"

"சார்.. உண்மையாவே இவனுக்கு இன்னைக்கு கல்யாணம் சார்.."

"நிஜமாவா?"

"அய்யர் , தாலி பொண்ணு எல்லாம் ரெடி சார்., கிடா கூட வெட்டியாச்சி சார் !ஒரு அரை மணிநேரம் அனுப்புங்க.. தாலி கட்டியவுடன் நானே இவனை  கூட்டீனு வந்து உங்கள்ட்ட ஒப்படைக்குறன் சார்"

"உண்மையாவே கல்யாணமா? சொல்ல வேண்டியது தானே.. "

"அவன் தான் சொன்னானே சார்.. , ப்ளீஸ்.. சார், அரை மணி நேரம் மட்டும் சார்.."

"இவன் கல்யாணத்துக்கு நீ  ஏன் இவ்வளவு பதறுற..?"

"சார் இவன் என் கூட புறந்த அண்ணன், வாயில சனி, கொஞ்சம்  குள்ளம் வேற. எத்தனையோ வருசமா பொண்ணு தேடி கடைசியா  ஒன்னு செட் ஆச்சி சார், இந்த கல்யாணம் நின்னு போனா.. இவன் தம்பி நான்.. எனக்கு எப்ப சார் கல்யாணம் ஆகும்? "

இன்னும் பல வருடங்கள் கழிந்தது இன்னொரு நாள்

"பாலாஜி எங்கடா?"

"ஓ, சாரி விசு, அவன் இறந்துட்டான்"

"அட பாவி... எந்த பாலாஜி "

"ரெண்டு பேருமே இறந்துட்டானுங்க விசு.."?

இளங்கலையில் என்னோடு படித்த இரண்டு பாலாஜியும் இறந்து விட்டார்கள் என்று இன்று நினைக்கையிழும் நெஞ்சு கனக்கிறது.

அருமையான நண்பர்கள். RIP Guys !

ரெண்டு பேரும் சேர்ந்து அங்கேயும் அமர்க்களமா இருப்பீங்கன்னு  தெரியும்.  Till we meet'!

2 கருத்துகள்:

  1. டக்குனு மரணம் எனச் சொன்னது...உண்மையில் திக் என ஆனது....ஆனாலும் முடித்தவிதம் இயல்நிலைக்கு திருப்பி விட்டது..

    பதிலளிநீக்கு
  2. விசு, ஸ்வாரஸ்யமாக வாசித்துக் கொண்டே வரும் போது கடைசியில் இருவரும் இல்லை என்றதும் மனம் வருந்திவிட்டது.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...