வியாழன், 23 ஏப்ரல், 2020

அந்த அரேபிய நாட்கள்...

திரை கடல் ஓடி திரவியம் தேடு என்பதற்கு   ஏற்றார் போல்.. வாலிபவயதில் அடியேனுக்கும் வளைகுடா பகுதியில் பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் 4500  ருபாய் சம்பளம் வாங்கி கொண்டு இருந்த எனக்கு கத்தார் நாட்டில் முதல் சம்பளமே 75000  ருபாய். முதல் சம்பளம் வாங்கிய போது கை நடுங்கியது இன்றும் நினைவில் உள்ளது.

வளைகுடாவில் அனைத்து இந்தியர்களுக்கும் இம்மாதிரியாக அமைவது இல்லை.  என் ஆத்தா செஞ்ச புண்ணியம்!  எனக்கு மிகவும் அருமையான வாழ்க்கை அமைந்தது.

அருமையான வீடு.. பின்னர் மனைவி பின்னர் ராசாத்திக்கள்
 நல்லதோர் வீடு.. வீட்டிலே துணைக்கு இந்தியாவில் வந்த உதவி அம்மணி.

அங்கே வேலை சேர்ந்த முதல் வாரத்தில், கூட பணிய புரியும் தமிழரிடம், இங்கே கோயில் எங்கே இருக்கு என்று கேட்க அவரும் அந்த விலாசத்தை கொடுக்க, ஒரு ஞாயிறு மாலை அவர் தந்த விலாசத்திற்கு சென்றேன்.



அங்கே சென்றால் அது கிருஷ்ணா டெம்பிள். நண்பரை அழைத்து..

"நீங்க சொன்ன இடத்துக்கு வந்தேன், அது கிருஷ்ணா டெம்பெல், நான் கிறிஸ்டியன் .. எங்க கோயிலை கேட்டேன்"

"அட பாவி.. கிறிஸ்டியானா? பின்ன பேரு விசுன்னு சொன்ன !!?"

"பேரு விசு தான்.. அப்படி தான் எங்க அம்மா கூப்பிடுவாங்க .. சரி எங்க கோயில் எங்கே இருக்கு? "

"உங்க ஆலயம்னு கேளு... கோயிலன்னா அது எங்களது.."

"நாங்களும் கோயிலுன்னு தான் சொல்லுவோம்.. சரி விலாசத்தை கொடுங்க!!!"

"நீ  போன வழியில் 200 மீட்டர் திரும்பி வா இடது பக்கம் பாரு, பெரிய கம்பஸ்  அதுக்குள்ள தான் உங்க ஆலயம்"

அவர் சொன்ன இடத்திற்கு வந்தேன்..

பெரிய இடம்.. கத்தோலிக் , பெந்தேகோஸ்த், சி எஸ் ஐ என்று அனைவருக்கும் தனி தனியாக இடத்தை ஒதுக்கி அவரவர்கள் தம் தம் வழிப்பாடு  செய்ய!

ஆச்சரிய பட்டேன்..! அடுத்த நாள்..

"என்ன!!!?. நம்ம ஊரை போலவே உங்க கோயில் எங்க கோயில்லுனு, இதெல்லாம் இங்கே இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை."

"நான் முதல் முதலா வரும்போதும் ஷாக்  ஆயிட்டேன், அப்புறம் ரொம்ப சந்தோஷமாயிட்டேன்.. வார வாரம் வெள்ளி கிழமை மற்றும் பண்டிகைக்கு இங்கே தான்.."

"இங்கே எப்படி நம்ம கோயில் எல்லாம் வந்தது"?

"இந்த ஊர் சுல்தான் ரொம்ப நல்லவர் விசு! இங்கே வாழற எல்லாருக்கும் எல்லா உரிமையும் இருக்கணும்னு அனுமதி கொடுத்து இருக்கார்"

சில மாதங்களுக்கு பின் அந்த கோயிலுக்கு அருகில் உள்ள அபார்ட்மெண்டில் நான் குடியேற அங்கே கோயிலுக்கு போற அம்புட்டு பேருக்கும் எங்க வீடு தான் பார்க்கிங் லாட்.

நிம்மதியான வாழ்க்கை. எங்கள் அலுவலகத்தை எடுத்து கொள்ளுங்கள். பத்து ஐரோப்பியர்கள், இரண்டு அல்ல மூன்று ஓமானியர்கள், பத்து சிங்களவர்கள். ஆறு மலையாளி , ஒரு குஜராத்தி, சேரன் சோழ பாண்டியன் போல மூன்று தமிழர்கள்.

இங்கே பணி புரியும் போது ஒரு முறை கூட ஜாதி மத மொழி நிற வெறுப்பு என்ற பிரச்சனை வந்தது அல்ல.

அடியேனின் மனைவி யாழ்பாணத்து தமிழ். அங்கே நடந்த போராட்டத்தில் பெற்றோரை வன்முறைக்கு இழந்தவர்கள். அம்மணியிடம் ஒரு நாள்..

"ஆபிசில் பிரெண்ட்ஸ் எல்லாரையும் ஒரு முறை வீட்டுக்கு சாப்பாட்டுக்கு கூப்பிடலாமா? "

"கூப்பிடுங்க.. எத்தனை பேர்!!?"

"இருவத்தஞ்சி முப்பது போல.."

"உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே.."

"கூட மாட நீங்க உதவி செய்வீங்க தானே, அப்புறம் என்ன பிரச்சனை.."

"ஐயோ அது இல்ல.. அவங்க சில பேர்   சிங்களவர்!"

"அதுக்கென்ன கூப்பிடுங்க.. அவங்களுக்கு மத்தி மீன், மாசி பருப்பு ரொம்ப பிடிக்கும்"

"இல்ல அங்கே நடந்த சண்டை.. பழைய நினைவுகள்!!!"

""பரவாயில்லை கூப்பிடுங்க, ஐயோ, எங்களுக்கும் சிங்களவருக்கும் பிரச்சனைன்னு கதை கட்டி விட்டுட்டானுங்க. மொத்தமும் அரசியல் ... அது வேற கதை, நீங்க வர சொல்லுங்க.. "

என்று தன் வேலையை தொடர, மனதில் இந்த அரசியல் .மற்றும் அரசியல் வாதிகள் தானே மனிதர்களை எப்படி பிளந்து வைத்து இருக்கின்றார்கள் என்ற எண்ணம் வருத்தத்தை அளித்தது.

என் ஒட்டு  மொத்த அரபு நாட்களும் , வாழ்க்கையும்..

"இஸ்லாமியரின் ரம்ஜான் பிரியாணி
இந்துக்களின் தீபாவளி அதிரசம்
இல்லத்தின் கிருஸ்துமஸ் கேக்
அரேபியரின் பேரிச்சை
ஐரோப்பியரின் சோமபானம் "

என்று தான் போய் கொண்டு இருந்தது.

ஐந்தாம் எட்டில் சேர்க்கவேண்டியதை எல்லாம் நான்காம் எட்டில் கொடுத்த என் வளைகுடா நாட்கள் நான்காம் எட்டில் பெத்துக்க வேண்டிய குழந்தைகளை செவ்வெனே ஐந்தாம் எட்டில் பெற்று தந்தது.

அவ்வளவு அருமையான நாட்கள்  - நாடுகள் - நினைவுகள்!

ஆனால் கடந்த சில வருடங்களாக சில விஷ கிருமிகளின் தேவையில்லாத வெறுப்பூட்டும் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவப்பட்டு வருவதால் நிலைமை மாறி வருகின்றது என்று கேள்வி பட்டேன்!

தற்போது நான் முகநூல் மற்றும் ட்விட்டரில் இல்லை. அதில் நடக்கும் வெறுப்பு சூழ்நிலையை கண்டு விலகி வருடமாயிற்று!  நான் அங்கே இருந்த நாட்களில் வளைகுடாவில் வசிக்கும் சிலர் இஸ்லாமியரை மிகவும் காழ்புணர்ச்சியோடு சுட்டி பதிவிடுகையில்..

அட பாவத்தை, இந்த சனி ஏ  சி அறையில் அமர்ந்து கொண்டு லட்ச கணக்கில் சம்பளத்தை வாங்கி கொண்டு இப்படி செய்து கொண்டு இருக்கின்றதே. வெளியே அந்த வெயிலில் அஞ்சுக்கும் பத்துக்கும் அக்காவின் கல்யாணம் அம்மாவின் மருத்துவ செலவுன்னு ஆயிர கணக்கில் இருக்கும் மற்ற இந்தியர்களுக்கு இது பிரச்சனையாக வர நேருமே என்று நினைத்ததுண்டு.

தற்போது வளைகுடாவில் இம்மாதிரியான விஷ கிருமிகளை களையெடுத்து  சிறையில் ஐந்து ஆருடம் சிறையில் அடைத்து பின்னர் இந்தியாவிற்கு அனுப்ப படுகின்றார்கள் என்று கேள்விபடுகிறேன்.

களை எடுப்பது நல்லது தான். ஆனால் இந்த களை எடுப்பின் போது சில நல்ல பயிர்களும் நாசமாக போக கூடாது என்று பிரார்த்திக்கலாம்.

பின்குறிப்பு:

கொரோனாவிற்கு ஜாதி மதம் இனம் மொழி என்று தெரியாது! ஆனால் இந்த சில சனியங்களுக்கு அது ஒன்று மட்டும் தானே தெரிகின்றது.

3 கருத்துகள்:

  1. //4500 ருபாய் சம்பளம் வாங்கி கொண்டு இருந்த எனக்கு கத்தார் நாட்டில் முதல் சம்பளமே 75000 //
    வெஸ்ட் கோஸ்ட்டில் மில்லியனராக இப்போ இருக்கும் போது ம்னைவியை பார்த்தால் மட்டுமே நடுக்கம் வருகிறதாமே

    பதிலளிநீக்கு
  2. மதுர..

    நேர கிச்சான்னு ஓடி போய் வாயில ரெண்டு ஸ்பூன் சக்கரை போட்டுக்கோ. உன் திருவார்த்தை பலிக்கனும்!

    சரி அதை விடு..

    சமூக ஒற்றுமைக்க.. மூளையை தேச்சி தேச்சி எதோ என் அறிவுக்கு எட்டிய பதிவு ஒன்ன போட்டா அதுல இருந்த அம்புட்டு விஷயத்தையும் விட்டுட்டு.. எம்புட்டு சம்பளம் வாங்கினனேனு ஒரு பதில் போட்டு இருக்கியே ... கிர்ர்ர்

    அந்த சம்பளத்தை சொன்னதே.. வளைகுடா நாடு என் வாழ்க்கையில் எம்புட்டு பெரிய பங்கேற்றது என்பதற்கே !

    பதிலளிநீக்கு
  3. // களை எடுப்பது நல்லது தான். ஆனால் இந்த களை எடுப்பின் போது சில நல்ல பயிர்களும் நாசமாக போக கூடாது... //

    அதை கூட தெரியாத சுயநலமிகள் அந்த கயவர்கள்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...