புதன், 30 டிசம்பர், 2015

தயவு செய்து பெண்கள் இதை படிக்க வேண்டாம்.

சில மாதங்களாகவே பல சமூக வலைதளங்களில் நம் தமிழக அரசியவாதிகளின் நடவடிக்கைகளை பார்த்து கொண்டு வருகின்றேன். இதில் நம் அரசியல்வாதிகள் செய்யும் கேவலமான காரியகளை நம் சமூக வலைதளத்தில் கலாய்த்து  வரும்  பதிவுகள் நம் அனைவரையும் சிரிக்க  வைக்கும் என்பதும்  உண்மையே. உதாரணதிற்கு..



20016ல் அன்புமணி ஆட்சி என்று ஒரு படம் போட்டு ஒரு விளம்பரம் ..

அதைமுக நூலில் தன் சுவற்றில் போட்ட நண்பர் ஒருவர்..

ஒரு விளம்பரத்தையே சரியாக தர முடியவில்லையே, இவர் எப்படி ஆட்சியை பிடிப்பார் என்று கலாய்த்து  எழுதி இருந்தார்.

நாம் தான் வெறும் வாயை மெல்லும் ஆளாச்சே ... இது அவல் அல்லவா.. சும்மா இருக்க முடியுமா? அதனால்..

இதில் என்ன தவறு, சரியாக தானே சொல்லி இருகின்றார்கள்?

என்று ஒரு கருத்தை வைத்தேன்.

அதற்கு பதிலாக அந்த நண்பர்

20016ல் அன்புமணி எப்படி முதல்வார முடியும்  - அது தான் தவறு என்று ஒரு பதில் வைத்தார்.

எல்லாமே வஞ்ச புகழ்ச்சியில் வந்த கலாய்த்தல் தான். அனைத்தும் ரசிக்கும் வகையில் இருந்தது.

சரி.. இந்த பதிவிற்கும் இந்த கலாய்ப்பிற்க்கும்  என்ன சம்மந்தம். இந்த மாதிரி சமூக வலைதளத்தில் நம்மூர் அரசியல்வாதிகளின் கேடு கெட்ட வேலைகளை நிறைய படிக்க தெரிந்து கொள்ள முடிந்தது. அதனால் வந்த பாதிப்பு தான் இப்பதிவு.

சரி, இந்த பதிவை ஏன் பெண்களை படிக்க வேண்டாம் என்று சொன்னேன். பொறுமை ப்ளீஸ்.

ஒரு மகனாக - ஒரு கணவனாக ஒரு தகப்பனாக ஒரு சகோதரனாக பிறந்த ஒவ்வொரு ஆணுக்கும் பிறப்பிலேயே  வர வேண்டியது ஒரு வைராக்கியம், சுய மரியாதை - சுய கௌரவம்.

சிறு வயதில்  நாளை வரும் உறவினருக்காக செய்து வைத்த  இனிப்பு  உருண்டையை திருடும் போது கூட "அன்னைக்கு தெரிந்தால்" என்ற ஒரு பயம் வரும்.  அப்படி இருக்கையிலும் பல தவறுகள் தொடர்ந்து செய்கையில் என் அன்னை என்னை மூங்கில் குச்சி கொண்டு திருத்தி உள்ளார்கள். ஆனாலும் அந்த தண்டனையை அடுத்த நாளே மறந்துவிட்டு அதே தவறை மீண்டும் செய்வேன், அடுத்த நாளும் அதே தண்டனை.

எனக்கு 16 வயது இருக்கும் சமயத்தில் ஒரு திருட்டு வேலை செய்கையில்,

ஏன் மகன்.. உன் மேல எவ்வளவு நம்பிக்கை வைச்சி இருக்கேன், நீ இப்படி செய்யலாமா?  இது என்னை ரொம்ப விசனமாகி விட்டது என்று ஒரு "வடு" இட்டார்களே. அந்த "வடு" அவர்கள் வருடக்கணக்கில் கொடுத்த பிரம்பு பூஜைகளை தவிடு பொடியாக்கியது.

இனியும் இவர்களை நாம் தவறு செய்து தலை குனிய வைக்க கூடாது என்ற வைராக்கியம், கௌரவம், சுய மரியாதை.

அப்படியே வளருகையில், நாம் செய்யும் எந்த தவறும் நம் உடன் பிறந்த சகோதரிகளை எந்த விதத்திலும் பாதித்து விட கூடாது என்ற ஒரு குறிக்கோள்.  அவர்களை பார்த்து யாரும், நீ அந்த "தறுதலை"யின் சகோதரி தானே என்று யாரும் சொல்லி விட கூடாது என்று நடந்து கொள்ள முயலுவதும் ஒரு வைராக்கியம், கௌரவம் மற்றும் சுய மரியாதை தான்.

அது முடிந்ததும் திருமணவாழ்க்கை. இங்கே தான் ஒருவன் ஒரு பெண்ணிடம் தன் ஆண்மையை நிரூபிக்க வேண்டி உள்ளது. தவறாக நினைக்க வேண்டாம். நான் இங்கே சொல்ல வருவது ஒரு ஆணின் கௌரவத்தை.

எந்த ஒரு விஷயத்திலேயும் ஒரு பெண், தன் கணவன் அடிமாடு போல் வாழ்வதை விரும்ப மாட்டாள். தனக்கு அமைந்த கணவன் எல்லா நேரத்திலேயும் ஒரு ஆண் மகனாக வீரத்தோடு வாழவேண்டும் என்று எதிர்பார்ப்பவள் தான் ஒரு பெண்.

மனைவிக்கு மல்லிகை பூ வாங்கி தர முயலும் கணவன் அங்கே கடையில்  பூ இல்லை என்றவுடன் தயங்கி கொண்டே வரும் போது..

இல்லைங்க.. இன்னைக்கு எனக்கு காலையில்  இருந்தே தலை வலி.. நீங்க வாங்கி கொண்டு வந்து இருந்தாலும் என்னால வைத்து கொண்டு இருக்க முடியாது என்று சமாளிக்கும் மனைவியும் தன் கணவன் வேறு ஒரு இடத்தில் அடி மாடாக இருப்பதை பொருத்து கொள்ள மாட்டாள்.

ஒரு பொது இடத்தில் அநியாயம் ஒன்னு நடக்கும் போது உன் புருஷன் அதை பார்த்து கொண்டு சும்மா இருந்தார் என்று ஒரு மனைவி கேள்வி பட்டால்..அது அந்த ஆணுக்கு ஐயோ.

சுயநலதிர்க்காக உன் புருஷன் தன்மானம் ,ரோசம் எல்லாத்தையும் காற்றில் பறக்க விட்டு விட்டார் என்று ஒரு மனைவி கேட்க நேர்ந்தால் அந்த மனைவியை மீண்டும் சந்திப்பதற்கு முன் தூக்கு மாட்டி கொண்டு சாவது தான் ஒரு ஆணுக்கு அழகு.

அது சரி.. இந்த பதிவை பெண்கள் படிக்க வேண்டாம் என்று சொன்னேன் அல்லவா.. அப்படி சொல்லியும் படித்து கொண்டு இருக்கும் பெண்களுக்கு .. ரொம்ப தைரியசாலிகள் நீங்கள். சரி, இவ்வளவு படிச்சிட்டீங்க. கடைசி வரை வாங்க.

கடைசியாக அந்த ஆண் மகன் தகப்பன் ஆகும் போது.. அதுவும் பெண் பிள்ளைகளுக்கு தகப்பன் ஆகும் போது.. இந்த வைராக்கியம், கௌரவம் மரியாதையை என்பது ஒரு பொக்கிஷமாக கவனிக்க படவேண்டிய காரணம்.

பிள்ளைக்கு 10 வயது இருக்கையில், நண்பன் ஒருவரோடு "கோல்ப்" ஆட்டம் நான் ஆடி தோற்கையில், அனைவர் எதிரிலேயும் அமைதி காத்து வந்த இளையவள்.. வண்டியில் ஏறியதும் .. ஒப்பாரி வைத்தாள்!

எப்படி டாடி தோத்தீங்க..

அட விடு  ராசாத்தி.... இது ஒரு விஷயமா?

இல்ல டாடி.. திங்கள் கிழமை  அவர் பொண்ணு பள்ளி கூடத்தில்.. அவங்க அப்பா உங்களை தோக்க  அடிச்சார்னு..

ஐயோ.. அப்படி எல்லாம் ஆகாது மகள்..

இல்ல டாடி.. நீங்க ஜாக்கிரதையா ஆடி இருக்கணும். சில இடங்களில் கவன குறைவா இருந்தீங்க..

ராசாத்தி.. இது ரெண்டு நண்பர்களுக்குள் நடந்த ஒரு சாதாரண விளையாட்டு.

என்ன.. சாதாரண விளையாட்டா..நானும் அவர் பொண்ணும் இந்த போட்டிய  பத்தி ஒரு வருசமா பேசின்னு இருக்கோம். எப்படி டாடி?

ஐயோ ..எனக்கு இது தெரியாதே .. நீ சொல்ல வேண்டியது தானே.

இல்ல நீங்க.. இப்பவே அவரை திரும்பவும் கூப்பிடுங்க. நாளைக்கே இன்னொரு போட்டி. அவரை தோக்க அடிக்கணும்..

சரி முயற்சி பண்றேன்.ஆனால் இதை நீ இவ்வளவு சீரியஸா எடுத்து கொள்ள கூடாது..

இல்ல டாடி. .உங்க தோல்வி என் தோல்வி.. எங்க அப்பா யாரிடமும் எந்த நேரத்திலேயும் தோத்து போக மாட்டார்னு எல்லாருக்கும்  தெரியனும்.

சரி ராசாத்தி.

ஒரு சாதாரண விளையாட்டு அதுவும் நண்பனிடம் தோற்றதே தலை குனிவு என்று வாழும் மகள்.. என் சகோதரன் இருக்கும் போது எனக்கு என்ன குறைச்சல் என்று என்னும் உடன் பிறந்த சகோதரிகள், தன் கணவன் யாரிடமும் அடிமாடாகி விட கூடாது என்று விடாபிடியாக இருக்கும் மனைவி,  "என் மகன் அவன்" அவ்வாறு செய்யமாட்டான் என்று என்னும் தாய்...இவர்கள் எல்லாம் ஒவ்வொரு ஆண் மகனிற்கும் தானே இருகின்றார்கள்..

அப்போது ஒரு ஆணுக்கு எவ்வளவு வைராக்கியம், கௌரவம், சுய மரியாதை தேவை.

அது சரி, இந்த பதிவை ஏன் பெண்கள் படிக்க வேண்டாம்னு சொன்னேனா ? ஒரே நிமிஷம்..

இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் ...

பதவி ஆசைக்காக மானம் ரோசம் வெட்கம் சூடு சொரனை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாக காற்றில் பறக்க விட்டு  சாஷ்டாங்கமா மற்றவர்கள் காலில் விழுந்தும், முதுகு எலும்பு உடையும் அளவிற்கு வளைந்தும், அவர்கள் பயணம் செய்யும் வாகனத்தின் சக்கரங்களுக்கு பூக்கள் போட்டும், வானத்தில் பறப்பவர்களுக்கு கும்பிடு போட்டு கொண்டும் இருக்கார்களே.

இந்த கேடு கெட்ட மானிடரின் தாய்-சகோதரி- மனைவி- மகள்கள், எப்படி இந்த ஆட்களை தங்கள் இல்லத்தில் வைத்து கொண்டு இருகின்றார்கள். இந்த வெட்கம் கெட்டவர்களோடு வாழ்வதை விட

நாக்கை பிடுங்கி கொண்டு ...

சரி.. இவ்வளவு சொல்லியும் படிச்சு முடித்த பெண்கள் .. தங்கள் பக்கத்துக்கு நியாயத்தை பின்னூட்டத்தில் கருத்தாக கூறவும்.


பின் குறிப்பு :

வாத்தியாரே..

சொல்லு, தண்டம்.

கொஞ்சம் தனியா பேசணும் ..

சொல்லு..

ஆட்டம் முடிஞ்சு வர வழியில் என் பொண்ணு பேச ஆரம்பிச்சா..

இங்கேயும் அது தான்.

இவளுக ரெண்டு பேரும் ஒரு மூன்றாம் உலக போருக்கு தயாரானத போல் வந்து இருக்காங்க.

ஆமா.. தண்டம்.. இங்க ஒரே ஒப்பாரி..

இங்கே ஒரு கொண்டாட்டம்,வாத்தியாரே..

சரி, இப்ப அதுக்கு என்ன..தண்டம்

வாத்தியாரே.. நாளைக்கு மீண்டும் ஆடுற.. நீ என்னை ஜெயிக்கிற..

பாணி.. நீ என்னோட  நல்லா ஆடுவியே..உன்னை எப்படி நான் தோக்க அடிக்கிறது?

அதை நான் பாத்துக்குறேன். நாளைக்கு காலையில் 10 மணிக்கு போட்டி.. நீ வர.. ஜெயிக்கிற.. அப்புறம் ரெண்டு பேரும் சமம்.. இவளுங்க ரெண்டு பேரும் இந்த போட்டிய பத்தி வாயை திறக்க மாட்டாளுங்க .

நன்றி தண்டம்..நானே உன்னை கூப்பிடனும்னு இருந்தேன்.

சரி விடு.. நாளைக்கு ஒரு நாள் தான் நான் தோப்பேன். எனக்கே தெரியாம வீடியோ ஏதாவது எடுத்து "யு டுயுபில்" போட்டு.. "தண்டம் தோற்ற கதை"ன்னு ஒரு தலைப்பும் போட்டு ஒரு பதிவையும் எழுதிடாதே..

ச்சே .ச்சே .. என்ன தண்டம்.. நான் போய்.. அப்படியெல்லாம் பண்ணுவேன்னா..

வேற எவனும்  பண்ண மாட்டான். நீ மட்டும் தான் அப்படியெல்லாம் பண்ணுவ.. அதுதான்..

தண்டம்.......பாணி.. தண்டபாணி...

என்று  நான் சொல்லும் போதே அலை பேசி துண்டிக்கபட்டது.


11 கருத்துகள்:

  1. பெண்கள் படிக்க கூடாத பதிவா அப்பா சுவராஸ்யமாக இருக்காதே......அதனால நான் முழுவது படிக்கல நீங்க தோற்றது கூட எனக்கு தெரியாது தண்டம் போட்டிக்கு மீண்டும் வர சொன்னது எல்லாம் தெரியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ தமிழா!!!!..ஹஹ நான் படிச்சுட்டேனாக்கும்...பெண்கள் படிக்கக் கூடாதுனு சொல்லி விசு னைசா எங்கேயோ குத்தியிருக்காரே!!!! இடையில...கண்டிப்பா பெண்கள் இதைப் படிப்பாங்கப்பா தலைப்போட அர்த்தமே அதுதானே...ஹிஹி விசுவிற்குத் தெரியாதா என்ன??!!!!!!

      நீக்கு
  2. கோல்ப்" ஆட்டம் எல்லாம் மில்லியனர்ஸ்கள்தான் ஆடுவாங்க என்று கேள்வி பட்டு இருக்கிறேன் எங்க வீட்டுல எல்லாம் பூரிக்கட்டை விளையாட்டுதான் நடக்கும் அதுலயேயும் எனக்கு பூரிக்கட்டையை ஏறிவதற்கு வாய்ப்பு கிடையாது ஹும்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது எல்லாம் நம்ம ஊரில தமிழா ... இங்கே சாதாரண கணக்கு பிள்ளை கூட ஆடலாம்.

      நீக்கு
    2. ஓ இந்த ஊருல சாதாரண கணக்கு புள்ளைங்க கூட மில்லியனரி விட பெரியவங்களா ?

      நீக்கு
  3. இதை ஏன் பெண்கள் படிக்கக் கூடாது என்று சொன்னீர்கள் விசு?!!! சரியாகத்தானே சொல்லி இருக்கின்றீர்கள்! தவறு ஏதும் இல்லையே. மிக மிகச் சரியான கருத்துகள். எங்க குத்திருக்கீங்கனு தெரியாம இல்லை...ஹஹஹ்...இந்தக் குனிந்து, கீழ விழுந்து, நிமிரும் மானம் கெட்ட உடற் பயிற்சியிலிருந்து...தமிழகமே மீள வேண்டும்...

    இத்தனை வெள்ள பாதிப்புகள் நடந்து ஒரு மாதம் தான் ஆகின்றது ஆனால் இங்கு என்ன நடக்குது தெரியுமா....வெட்கக் கேடு...வெளியிலேயே வராதவர்களின் பொன்னான கால்கள் தரையில் படப்போகின்றது!!!

    இன்று என் பதிவிலும் அப்படி சில குத்துகள் மறைமுகமாக காரம் கம்மியாக வரும்.....

    ஹும் என்ன பண்ண நான் என்ன மதுரைத் தமிழனா பகிரங்கமாகத் தாக்கிச் சொல்ல..இல்லை விசுவா மறைமுகமாக வாழப்பழத்தில் ஊசி இறக்க!!!!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ ஹலோ நான் அப்பாவிங்க.. என்னைப் போய் நான் பகிரங்கமாக தாக்குகிறவன் என்று சொல்லுறீங்களே அது உங்களுக்கே நியாமாக இருக்குதா? நான் மனைவியின் அடிக்கு பயந்து பாதி நாள் பெட்டுக்கு அடியில் தூங்குகிறவன் அப்படிப்பட்ட என்னை போய் இப்படி சொல்லி பழி போடலாமா என்ன?

      நீக்கு
  4. வணக்கம்
    கதை அற்புதமாக உள்ளது தொடக்கிய விதமும் முடித்த விதமும் சிறப்பு
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. ஆஹா அருமை ஐயா.நம்மளோட பழக தோசமே இது செய்யாதே,இது கேட்காதே அது பாக்காதே என்று சொன்னாலே அதை செய்ய தான் தூண்டும் அது போல் தாங்கள் பெண்களே படிக்காதீர் என்று கூறினீர் ஆனாலும் நான் படித்துவிட்டேன் ஐயா.அருமையான கருத்துக்களை தான் தாங்கள் கூறியுள்ளீர் ஐயா.

    வாழ்த்துகள் தொடருங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...