சனி, 5 டிசம்பர், 2015

வெள்ளத்து நட்டம்.. எங்கே போவார்கள் நடுத்தர மக்கள்.

சென்னையில் வந்த வெள்ளம் நம் அனைவரையும் மிகவும் பாதித்தது அனைவரும் அறிந்ததே. என்னை போல் வெளிநாட்டில் வாழ்பவர்களும் சரி, மற்றும் வெளியூரில் இருப்பவர்கள் மனதளவில் பாதிக்க பட்டு இருந்தாலும், சென்னையிலே குடி இருப்பவர்கள் மனதளவு மட்டும் அல்லாமல் நிறைய பொருள்களையும் இழந்து தத்தளித்து நிற்கின்றார்கள்.




சென்னையில் இருந்து ஒளிபரப்பப்படும் காணோளிகளை பார்க்கையில் மனது நோகின்றது. தண்ணீரில் மூழ்கிய இல்லங்கள் - வாகனங்கள் - பொருட்கள்- உயிர்கள். 
இதில் இழந்த உயிர்களை பரி கொடுத்தது தான். அது மீண்டும் வராது.  இந்த இல்லங்கள் நீர் வடிந்தவுடன் சில குடி ஏறும் நிலைமைக்கு வரலாம். வராமலும் போகலாம்.

இந்த வெள்ள நீர் வடிந்தவுடன் மிகவும் அவதிப்பட போவது நடுத்தர மக்கள் தான்.
குடிசையில் வாழ்ந்த ஏழைகள் அனைத்தையும் இழந்தார்கள் என்பது உண்மை தான். ஆனால் இந்த வெள்ளம் வருமுன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையே ஒரு வசதி இல்லாத வாழ்வு தான். அவர்கள் எதுவும் இல்லாமல் வாழ பழகிவிட்டதால், இதுவும் கடந்து போகும் என்று வாழ்க்கையை மீண்டும் வேறொரு குடிசையில் ஆரம்பித்து விடுவார்கள். 
பணக்கார்கள் ... அவர்களை பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை. 

இப்போது நடுத்தர வர்க்கத்திற்கு வருவோம்.

மாதத்திற்கு 5-15 ஆயிரம்ருபாய் சம்பளம் வாங்கி கொண்டு அதில் குடும்பத்தையும் நடத்தி கொண்டு ... தன்னால் முடிந்த ஒரு இரண்டு சக்கர வாகனமோ அல்லது ஒருகாரோ கடனில் வாங்கி கொண்டு ஒவ்வொரு மாதத்திலும் வரும் சம்பளத்தை நம்பி வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் நிலைமை தான் மோசம்.

குருவி போல் சேர்த்துவைத்த பணம் சில லட்சங்கலாகியவுடன் அதற்கும் மேல் ஒரு வங்கி கடனை போட்டு முன் பணம் கொடுத்து மாத தவணையோடு வாங்கிய 15 லட்ச இல்லம் .. தண்ணீரில் மூழ்கிவிட்டது.

அதில் குடும்பத்தோடு சேர்ந்து பயணிக்க கடனில் வாங்கிய காரும் மூழ்கியது.
மழை நீர் அடுத்த மாதம் வடிந்து விடும். ஆனால் காணாமல் போன வாகனம் மற்றும் இல்லத்து கடன் காணாமல் போகாதே. இல்லாத சொத்துக்கு தவணை கட்ட வேண்டிய நிலைமை.

என்னுடைய இந்த பதிவே.. இதை பற்றியது தான். 

இவர்கள் யாரும் இந்த கடனை அடைக்க கூடாது. பல்லாயிர கணக்கான  கோடிகள் மத்திய அரசிடம் இருந்து வந்து இருகின்றது அல்லாவா? அதில் இருந்து இந்த கடன்கள் சமாளிக்க படவேண்டும். இந்த கோடிகளை இப்படி செலவளித்தால் தான் சரி. இல்லாவிடில் இதுவும் மறைந்து போகும். 

வங்கிகள் கொடுத்துள்ள அனைத்து கடன்களும் வார கடனாக எழுத பட வேண்டும். 


து பானங்கள் தயாரித்து கோடி கணக்கில் கல்லா கட்டும்.. கிரிக்கட் அணி வாங்கி லட்ச கணக்கில் அள்ளி செல்லும், அழகிகளோடு செல்பி எடுத்து கொண்டு சுற்றி வரும் "விஜய் மாலியா " அவர்களுக்கு கொடுத்த நூற்று கணக்கான கோடிகள் வாரா கடனாக மாறும் போது.. இந்த வெள்ளத்தில் மக்கள் அடைந்த நஷ்டத்தையும் வரா கடனாக மாற்ற பட வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் நலிந்த நிலையில் இருக்கும் சுரங்கத்தை மீட்க்க அதானிக்கு லட்சகணக்கான கோடிகள் கடனாக (அதுவும் வார கடனாக போகும், அதை பற்றி இன்னும் இரண்டு வருடத்தில் ஒரு பதிவு எழுதுகிறேன்) கொடுக்க பணம் இருகின்றது தானே.. அதே போல் இதற்கும் கொடுக்க வேண்டும்.


ஏன் .. நம்ம ஊர் மாறன் நடத்தும் ஸ்பைஸ் விமானத்தின் நஷ்டம் எப்படி சமாளிக்க பட்டது என்று கண்டறிந்து, அந்த வங்கிகள் அதே கணக்கில் இந்த நஷ்டத்தையும் காட்ட வேண்டும்.

செய்வீங்களா .. வங்கிகளே.. செய்வீங்களா ..?

அப்படி செய்யாமல் எந்த ஒரு வங்கியாவது கடனை திருப்பி கேட்டால்.. அவர்களிடம்.. 
இந்த கடனையும் விஜய் மலியா-  அதானி - மாறன் கணக்கில் சேத்து கொள்ளுமாறு அன்புடன் சொல்லி அனுப்பவும்.

13 கருத்துகள்:

  1. நடுத்தர வர்க்கம் எப்படி சமாளிக்க போகிறது... வழியே இல்லை என்றே தோன்றுகிறது... நீங்கள் சொன்ன யோசனை நடந்தால் சரி...

    பதிலளிநீக்கு
  2. என்ன சிந்தனை...
    எல்லா வசதிகளுடன் எம்க்கோ உலகின் ஒரு மூலையில் இருந்தாலும் எல்லா நொடிகளிலும் தமிழின் பால் தாங்கள் கொண்டுள்ள நேசம் அன்னையின் பாலினும் சுத்தமானது..
    யார் என்ன சொன்னாலும், நீங்கள் நேர்மறை மனிதர்....
    உங்கள் கனவுகளும் ,எதிர்பார்ப்புகளும் நிறைவேற முன்னெடுப்போம்....

    பதிலளிநீக்கு
  3. அருமையான யோசனை. குறைந்த வருமானம் உள்ளவர் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்து கோடீஸ்வர கடனாளிகளின் பேரில் எழுதி விடலாம். எப்படியும் அவர்கள் சட்டபோவது நாமமே.

    பதிலளிநீக்கு
  4. இந்தக் கடன் ஏற்பட்டதற்குக் காரணமே ஆள்பவர்களும், முன்பு ஆண்டவர்களும் தானே விசு. இதை எங்கே போய் சொல்லுவது? கண்டிப்பாக நீங்கள் சொல்லியிருப்பதை அரசு செய்யுமா? ஹஹஹ் இதிலிருந்தும் எவ்வளவு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். மக்களும் இதை எல்லாம் இன்னும் 10 நாட்களில் மறந்துவிடுவார்கள். இதுவும் கடந்து போகும் என்று...இரு பதிவுகள் தயாராகிவருகின்றன. கீதாவிடமிருந்து.

    பதிலளிநீக்கு
  5. னீங்கள் சொல்லுவது எல்லாமே பெரிய தலைகள்...நாங்கள் எல்லாம் சின்ன தலைகள்....வால்கள். தலைகள் இருக்க வால் ஆடினால்....என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன...

    பதிலளிநீக்கு
  6. முடியுமா?, இந்த துணிச்சல் எம் மக்களுக்கு வருமா? வந்தால் அடக்க இருக்கவே இருக்கு காவல் துறை,,,,,,

    அவர்கள் வேற்று கிரகவாசிகள் காவல் துறையினர்,,,,

    நல்ல பகிர்வு,,

    பதிலளிநீக்கு
  7. செய்வீங்களா .. வங்கிகளே.. செய்வீங்களா ..?
    இந்தக் கேள்விமாதிரிக் கேள்விகளைத் தமிழ்நாட்டு தேர்தல் பிரச்சார மேடையில் கேட்டமாதிரி இருக்கே? (தனுஷ் பாணியில் அவங்களும் “செஞ்சு“ட்டாங்கல்ல..?)

    பதிலளிநீக்கு
  8. தொண்டர்களை
    கடவுளின் பிள்ளைகளாக
    வணங்குகின்றேன்

    வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

    கடவுளே! கண் திறந்து பாராயோ!
    http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html

    பதிலளிநீக்கு
  9. வீடுகள், வாகனங்கள் வங்கிக்கடலின் வாங்கி இருந்தாலும் வங்கியும் வீட்டு உரிமையாளர்களும் அதற்கு காப்புறுதி செய்திருந்தால் இத்தனை தூரம் இழப்புக்கள் வராதே! இயற்கை அனர்த்தம், நெருப்பு, விபத்து என காப்புறுதிகள் பல உண்டல்லவா? அனைவருக்கும் வங்கிக்கடன் இரத்தாக்கணும் என சொல்வதும் இலவசங்களை எதிர்பார்க்கும் மனதில் ஏக்கம் தானேங்க!


    இப்போதெல்லாம் குண்டுசி வாங்கினாலும் அதற்கு இன்சுரன்ஸ் செய்ய சொல்லும் போது அதை செய்திருந்தால் இத்தனை இழப்புகள் வருமா? ஒரு வேளை எனக்கு இந்திய இன்ஸ்சுரன்ஸ் குறித்து தெரியாமலும் இருக்கலாம்.என் கருத்தில் தவறெனில் மன்னிகவும்.

    பதிலளிநீக்கு
  10. மிக அருமையான யோசனை, விசு. நடுத்தர மக்களை கவனிப்பவர்கள் யாருமே இல்லை. அவர்களுக்கு ஒருங்கிணைத்து உதவி செய்யவும் எந்த அமைப்பும் இல்லை. எல்லோருக்கும் கிடைக்கும் உதவிகளும், உணவு, போர்வை, ஸ்டவ் என்று இருக்கிறது. நீங்கள் சொல்வது போல், கடன் தள்ளுபடி என்பது மிக சரியான நடவடிக்கை. 2014-2015 வருடத்தின் மொத்த வாராக் கடன் கிட்ட தட்ட 25000 கோடி ரூபாய்கள். இதில் ஒரு சிறிய பகுதியே நீங்கள் தள்ளுபடி செய்ய சொல்வது. கண்டிப்பாக செய்ய வேண்டும்.

    செய்பவர்களுக்கே எங்கள் ஓட்டு என்று சொன்னால் செய்வார்கள்!

    பதிலளிநீக்கு
  11. யோசனை நன்றாகத்தான் இருக்கிறது. அவிங்க செய்யணுமே!

    பதிலளிநீக்கு
  12. நல்ல கட்டுரை விஜய் மாலியா ,விஜய் மலியா,விஜய் மல்லையா
    இவற்றில் எது சரி ?

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...