ஞாயிறு, 12 அக்டோபர், 2014

ஞாயிறு காலையும், உழவர் சந்தையும்...

ரிங் ரிங் ...தொலைபேசி ரிங்கியது...

சனிகிழமை மாலையும் அதுவுமாய்... யாராய் இருக்கும் என்று நினைத்து  கொண்டே எடுத்தால்...

வாத்தியாரே.. தண்டம் பேசுறேன்...

தண்டபாணி... நான் உன்ன தண்டம்னூ கூப்பிட்டாலே, கோவித்து கொள்வாயே, இப்ப எல்லாம் நீயே உன்னை தண்டம்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டியே.. எப்படி இந்த மாற்றம்?.

வாத்தியாரே... கல்யாணம் ஆன ஒவ்வொரு ஆணும் ஒரு வருஷத்திற்குள்
"தான் ஒரு தண்டம்" என்பதை புரிந்து கொள்கிறான், இதில் நீ கூப்பிட்டா என்ன? இல்ல நான் கூப்பிட்டா என்ன?

பேஷா சொன்ன பாணி? வீட்டிலே ஆத்துக்காரி -பிள்ளைகுட்டிகள் சுகமா?

அவங்க சுகமா இருந்தா தானே வாத்தியரே, நான் உனக்கு போன் போட  முடியும். உங்க வீட்டிலேயும் எல்லாரும் நல்லா இருக்காங்கன்னு நினைக்கும் போதே சந்தோசம்.

பாணி, நீ இன்னும் என்னை வீட்டிலே எப்படி இருக்காங்கனே கேட்கவில்லையே, அப்புறம் எப்படி இங்க நல்லா இருக்காங்கன்னு  நீயே முடிவு பண்ண?

வாத்தியாரே, அங்கே நல்லா இருந்தாதானே நீ என் போனையே எடுப்ப, இல்லாட்டி "வாய்ஸ் மெசேஜ்" தானே.

சரி, கூப்பிட்ட விஷயம் சொல்லு பாணி,

ஒன்னும் இல்ல வாத்தியாரே,

சரி அப்புறம் பார்க்கலாம்.

வாத்தியாரே, ஒரு நிமிஷம் இரு, என்னமோ காலில் சுடு தண்ணி ஊத்தின  மாதிரி ஓடுறியே, ஒரு விஷயம் சொல்லணும்.

சொல்லு, பாணி.

வாத்தியாரே, போனவாரம் "ஆப்பிள்-பேரிக்காய் பிடுங்க", பக்கத்தில் எங்கேயோ குடும்பம் நண்பர்களோடு போனீயாமே?..

ஆமா தண்டம்.. சூப்பரா இருந்தது. சாரி, தீடிரென்று பிளான் பண்ணதால் உன்னையும் சுந்தரியையும் அழைக்க முடியவில்லை.

நீ கூப்பிட்டு இருந்தாலும் நான் வந்து இருக்க மாட்டேன் வாத்தியாரே, நமக்கு அவ்வளவு பொறுமை இல்லை.

தண்டம் நானும் அப்படி தான் யோசித்தேன், ஆனா அங்கே போய் அந்த பழத்தை பறிச்சு சாப்பிட்டு பார்த்தவுடன் தான், அடே டே, இவ்வளவு ருசியா இருக்கே... இம்புட்டு நாள் இதை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்று. சரி,தண்டம், அதை பத்தி நீ ஏன் கேக்குற?

வாத்தியாரே, நீ சந்தோசமா போன, ருசித்து சாப்பிட்ட, அதோட விட
வேண்டியது தானே, இந்த விஷயத்தை ஏன் உன் பதிவில்  (Blog) போட்ட?
(அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்)  

பாணி, "நான் பெற்ற இன்பம்"... என்ற லாஜிக் தான், நீயும் படிச்சியா? நல்லா இருந்ததா?

வாத்தியாரே, நான் படிச்சானோ இல்லையோ, இங்கே சுந்தரி படிச்சிட்டா, படிச்ச உடனே .. "வேதாளம் முரங்கை மரத்தில் ஏறிடிச்சு", உடனே தானும் போக வேண்டும் என்று அடம் பிடிக்கிறா?

சாரி தண்டம், ஆனாலும் போய் பாரு தண்டம். அந்த இடம் -பழம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,

வாத்தியாரே... அந்த வகை பழம் எல்லாம் இங்கே பக்கத்திலேயே கிடைக்குது.அதுக்கு ஏன் 100 கிலோ மீட்டர் மேலே வண்டிய ஒட்டிக்கொண்டு..

பாணி, இங்கே பக்கத்தில் கிடைத்தாலும்  அந்த மாதிரி ப்ரெஷ் இல்ல!

என்ன வாத்தியாரே, விசயம் தெரியாமல் பேசுற... இங்கே உங்க வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டரில் ஒவ்வொரு ஞாயிறும் "உழவர் சந்தை" இருக்கே, அங்கே இந்த மாதிரி பழம் எல்லாம் இருக்கும், இங்கே போய் வாங்குறத விட்டு விட்டு, அவ்வளவு தூரம் போக சொல்லுறியே.. இப்ப உன் பேச்சை கேட்டு விட்டு, இங்கே என் வீட்டில் இவ கொடுமை தாங்கல.

என்ன பாணி, ஆச்சிரியமா இருக்கே, இங்கேயும் "உழவர் சந்தையா"?  நாளைக்கு காலையில் முதல் வேலையா அங்க போய்  நல்ல ப்ரெஷ் பழம்- காய் கறிகள் வாங்கி மனைவியை அசத்த போறேன்.

ஆல் தி பெஸ்ட் .. வாத்தியாரே. எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா.

என்ன?, சுந்தரிக்கு போன் போட்டு அந்த நல்ல ப்ரெஷ் பழம் சீசன் முடிந்து விட்டது, இதோடு அடுத்த வருஷம் தான்னு சொல்லணும், அவ்வளவு தானே..

என்ன வாத்தியாரே, என் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிட்ட?..எப்படி கண்டு பிடிச்ச?.

இது எல்லாம் நானும் பண்ண வேலை தானே தண்டம். நாளைக்கு அந்த சந்தைக்கு போறேன், நீயும் வரியா?.
.
இல்ல வாத்தியரே, இந்த உழவர் சந்தை ஊருக்கு ஊர் இருக்கு, இங்க எங்க வீட்டிற்க்கும் பக்கத்தில் கூட இருக்கு, நான் அங்கே போவேன்.
சரி, அப்புறம் பார்க்கலாம்.

அடுத்த நாள் ஞாயிறு காலையில், உழவர் சந்தையில் நான், ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி... ஆச்சரியப்பட்டேன். இதோ பாருங்கள் சில புகைப்படங்களை..


 ஒரு பெரிய சூப்பர் மார்கெட்டின் பார்க்கில் பகுதியில் இந்த சந்தையை அமைத்து இருந்தார்கள்.


 காலையில் முளைத்த  காளான்கள்

 பூங்கொத்துக்கள்

தமிழனுக்கு   பிடித்த "எழந்த பழம்.. எழந்த பழம்"
சுரைக்காய் 


 சக்கரை வெள்ளி (வள்ளி அல்ல) கிழங்கு
மக்காசோளம் மற்றும் காலி ப்ளவர்

 பீர்க்கங்காய் (இதை இறால் போட்டு எப்படி சமைப்பது என்பதை மற்றொரு நாள் எழுதுகின்றேன்)
கத்திரிக்காய் மற்றும் பல...


 கீரை வகைகள்.



 பழவகைகள்

வேறு சில பழவகைகள்

சிறிய சிறிய பூசணிகாய்களால் செய்ய பட்ட பூங்கொத்துக்கள்!


எனக்கு தேவையான சிலவற்றை வாங்கி கொண்டு வீட்டிற்கு  வந்து அவைகளை மேசையின் மேல் அடுக்கி வைத்து விட்டு, வெளியே சென்று இருந்த மனைவி மற்றும் ராசாதிக்களுக்காக காத்து கொண்டு இருந்தேன்.

அவர்கள் வந்தவுடன்..

இது எல்லாம் எங்கே இருந்து வந்தது?

இங்கேதான் பக்கத்தில்... உழவர் சந்தையில் இருந்து, இவ்வளவு அருகில் இருந்து உள்ளது, இத்தனை நாள் நமக்கு தெரியவில்லை பார்.

இப்படி நான் சொன்னவுடன் மனைவி ஒரு புன்முறுவல் விட்டார்கள். இந்த புன்னகையின் அர்த்தம் "கிண்டல்" ஆயிற்றே... என்னவாய் இருக்கும் என்று நினைத்து கொண்டே, மதிய உணவு என்ன என்று சிந்திக்க ஆரம்பித்தோம்.

பின் குறிப்பு;

ஏன் சிரித்தார்கள் என்று மனம் குழம்பி போனதால், என் இளைய ராசாத்தியிடம்:

காலையில் அப்பா அந்த பழம் - காய் வகையறாக்களை வாங்கி வந்து மேசையில் பார்த்தவுடன் அம்மா ஏன்சிரித்தார்கள் ".

டாடி.. இந்த கடை பற்றி உங்களுக்கு இன்று தான் தெரிந்து இருகின்றது. அம்மா பல வருடங்களாக ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் நாம் மூவரும் எழும் முன்பே இங்கே சென்று இந்த வகையறாக்களை வாங்கி வந்து கொண்டு இருகின்றார்கள்...

என்று போட்டாளே ஒரு போடு...


www.visuawesome.com

9 கருத்துகள்:

  1. அங்கும் உழவர் சந்தையா
    வியப்பாக இருக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் வியப்பாக தான் இருந்தது. அங்கே வாங்கி வந்த காய்கறிகள் அபாரம். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. namma nattula pola angaiyuma . puthiya thakaval+viyappaakavum irunthathu sir. thodarnthu avvappothu america la irukkum vishayangalai pathi post podunga sir. nanga padichu therinjukkurom:-)

    பதிலளிநீக்கு
  3. jujubees என்ற பலம் இலந்தை பழம் போல இருந்தாலும், ருசி முற்றிலும் வேறு பட்டது. கொஞ்சம் இனிப்பாக இருக்கும்.. புளிப்பே இருக்காது.

    நாங்களும் பல வருடங்களாக சென்று வருகிறோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பழத்தை நானும் உண்ணும் பொது அதே தான் நினைத்தேன். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. வணக்கம்
    அண்ணா.

    அழகிய படத்துடன்அருமையான கருத்தையும் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. அமெரிக்க உழவர் சந்தைக் காட்சிகள் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அனைத்தையும் பார்க்கும்போதே தெரிகிறது ரொம்ப ப்ரஷ்ஷான காய்கறிகள் என்று.. சூப்பர் சார்..

    பதிலளிநீக்கு
  7. கணவனுக்குத் தெரியாமல் மனைவிகள் பல காரியங்கள் செய்வார்கள் , ஆனால் மனைவிக்குத்தெரியாமல் நாம் ஒன்று கூட செய்யவே முடியாது .அது சரி நம்மூர் கத்திரிக்காய் போலவே தெரியும் அவற்றில் ஒரு 2 பவுண்ட் நியூயார்க்குக்கு பார்சல் ப்ளீஸ்!!!!!!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...