திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மனைவியிடமே.... " I Love you" வா? பிச்சி புடுவேன் பிச்சி...

சில வாரங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. "திருமணமான இந்திய தம்பதியருக்கான அறிவுரை" நிகழ்ச்சி. இந்த அறிவுரையை வழங்கியவர் நன்கு படித்த ஓர் பேச்சாளார்.
வெளி நாட்டு ஆட்களை பற்றி தெரியும். கொழம்பில் உப்பு இல்லாவிட்டால் கூட மனைவியும் - புருஷனும், வக்கீல், கௌன்செலர் என்று செல்வார்கள். ஆனால் நாம் இந்தியன் ஆயிற்றே. அதிலும் தமிழன் ஆயிற்றே. நம் வீட்டில் நடப்பது நாலு சுவற்றில் தான் நடக்க வேண்டும் அது வெளியே தெரிய கூடாது என்று நினைப்பவர்கள் ஆயிற்றே.



இந்த அழைப்பு வந்தவுடன், நான் சற்றும் யோசிக்காமல் எங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக போய் கொண்டு இருக்கிறது. இந்த அறிவுரை எல்லாம் எனக்கு தேவை இல்லை என்று சொன்னேன். இருந்தாலும், அது சாத்தியமாகது என்று அவர்கள் சில கேள்வி கேட்க்க ஆரம்பித்தனர். அதில் சில கேள்விகள்.

கடைசியாக எப்போது மனைவியிடம் " I love you " என்று சொன்னாய்?

அட பாவிங்களா! எங்கள் தலைமுறையில் ... நாங்கள் அன்பை செயலில் காட்டுவோம் ஆனால் வார்த்தைகளில் சொல்ல மாட்டோம், அதனால் நான் என் மனைவியிடம் இதுவரை... " I love you" என்று சொன்னது இல்லை.

ஒரு மனைவியிடம் " I love you" என்று சொல்லாத நீ எல்லாம் ஒரு மனிதனா?
இப்படி வாழும் உனக்கு தான் இந்த அறிவுரை தேவை.

நான் சொல்றத கொஞ்சம் கவனிங்க. இது வரை அவர்களும் என்னிடம் " I love you" என்று சொன்னது இல்லை. ஆனாலும், அவர்கள் என் மேல் உயிரே வைத்து உள்ளார்கள் என்று எனக்கு தெரியும் என்றேன்.

இருக்கவே முடியாது .. எங்கே உன் மனைவியை எங்கள் எதிரில் தொலை பேசியில் அழைத்து (ஸ்பிகரில்) அவர்களிடம்  " I love you" என்று சொல்.

வேண்டாங்க, அவர்களுக்கு இது எல்லாம் பிடிக்காது.

அது எப்படி அவங்களுக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்?

அட பாவிங்களே, அவங்களோடு 15 வருஷம் குப்பை கொட்டுறனே, இது கூடவா தெரியாது.

இல்லை, எங்களுக்காக ஒரு முறை சொல்லு.




 ரிங்.. ரிங் .. .ரிங்கியது..


ஹலோ..

ஹலோ மா! எங்க இருக்க?

எதனா அவசரமா பேசணுமா? நான் கொஞ்சம் பிசியா இருக்கேன்.

அது ஒன்னும் இல்ல...உன்னிடம் " I love you" சொல்லாம்னு தான் போன் பண்ணேன்.

போன் கீழே விழுந்த சத்தம் கேட்டது.

என்ன சொன்னீங்க..

ஒன்னும் இல்ல, நீ பிசிதானே, நான் அப்புறமா கூப்பிடுறன்.

பிசியும் இல்ல, ஒரு இழவும் இல்ல...நீங்க என்ன சொன்னீங்க. எனக்கு சரியா புரியில.

ஒன்னும் இல்ல மா... " I love you" சொல்லாம்னு கூப்பிட்டான்.

நானும் அதை தான் சொன்னீங்கனு நினைச்சேன். என்ன ஆச்சிங்க உங்களுக்கு, எந்த தப்பா இருந்தாலும் சொல்லுங்க நான் மன்னிச்சிடுறேன். ஆனால், உண்மையை மட்டும் சொல்லீடுங்க.

ஐயோ, நான் எந்த தப்பும் பண்ணுல.. சும்மா உன்னிடம் " I love you" சொல்லி என் அன்பை காட்டலாம்னு யோசித்தேன். தயவு செய்து என்னை நம்பு. நான் எந்த தப்பும் பண்ணல.

இல்லங்க. போன வருஷம் நம்ம பக்கத்து தெரு வாசகம் இல்ல... திருவாசகம், இந்த மாதிரி தான் அவர் மனைவிகிட்ட மூணு நாள் தொடர்ந்து " I love you"னு சொல்லி வந்தாராம். நாலாவது நாள் தான் அவருக்கும் அவர் கூட வேலை செய்யற இடத்தில இருக்க யாரோ ஒரு அம்மணிக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லி அதை மறைக்க தான் இந்த மாதிரி " I love you" னு சொன்னாருன்னு தெரிய வந்தது.

நான் போய் அப்படி எல்லாம் செய்வேனா? சும்மா தான் தெரியாம சொல்லிட்டேன்.

அது எல்லாம் எனக்கு தெரியாது, இன்னிக்கு எனக்கு இந்த உண்மை தெரிஞ்சே ஆகணும். ஏன் என்னை பார்த்து "I love you"னு சொன்னீங்க.

ஐயோ.. நீ என் மனைவி தானே, அது தான் சொன்னேன். தயவு செய்து என்னை மன்னிச்சிடு. இனிமேல் அந்த மாதிரி சொல்ல மாட்டேன்.

நானும் அதே தான் சொல்லுறேன்..நான் உங்க மனைவி தானே, எந்த ஒரு தமிழன் மனைவியிடம் " I love you" ன்னு சொன்னான். உண்மைய சொல்லுங்க.. எவ அவ?

அய்யோ.. சத்தியமா அந்த மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல.

எனக்கு உண்மை தெரியனும். இல்லாட்டி, பிள்ளைகளிடம் சொல்லிடுவேன்.

ஐயோ.. இதில் பிள்ளைகளை என் சேக்குற..நான் உண்மையை இப்பவே சொல்றேன். இங்க 2-3 பேர் வந்து நம்ப ரெண்டு பேரையும் "திருமணமான தம்பதிகளுக்கான அறிவுரை நிகழ்ச்சிக்கு" கூப்பிடாங்க. நான் அவர்களிடம் எனக்கு இது எல்லாம் தேவை இல்லை, வாழ்க்கை நல்லா ஓடுதுன்னு சொன்னேன். அதற்க்கு, நீ எப்ப கடைசியா உன் மனைவியிடம் " I love you" சொன்னாய் என்றார்கள். நான் இதுவரை இல்லை என்றேன், அதற்க்கு என்னை ரொம்ப "போர்ஸ்" பண்ணி உன்னிடம் சொல்ல வச்சிடாங்க. என்ன மன்னிச்சிடு.

அந்த 2-3 பேர் தமிழர்களா?

ஆமா.என் கேக்குற..?

அவங்க மூணு பேரை அவனவன் எப்ப அவனவன் மனைவியிடம் ' I love you" ன்னு சொன்னான்னு கேளுங்க...

நீயே ஸ்பீக்கரில் தான் இருக்க... நீயே கேளு.

வணக்கம்.. நீங்க தான் என் வீட்டுகாரை என்னிடம் "  I love you " சொல்ல சொன்னீங்களா?

ஆமா மேடம். நீங்க ரொம்ப சந்தோஷ படுவிங்கன்னு நினைத்தோம்.

"சும்மா கிடக்கிற சங்கை ஊதி" ஏன்யா கெடுக்குரீங்க. குடும்பத்தில் குழப்பத்த உண்டு பண்றிங்களே.

சாரி மேடம், எல்லாம் உங்க குடும்ப வாழ்க்கை நல்ல இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான்.

அது சரி, இப்படி ஊரானிடம் எல்லாம் போய் மனைவியிடம் " I love you" சொல்லுனு சொல்றிங்களே... நீங்க எப்ப உங்க மனைவியிடம் கடைசியா " I love you" ன்னு சொன்னீங்க..

அது வந்து.. வந்து.. வந்து...

அது வராது...ஏன்னா, உங்க ஊர் கலாச்சாரம், பழக்கம்... அன்பை செயலில் காட்டும், வார்த்தையில் சொல்லாது.

இல்ல மேடம், நாலு பேருக்கு எதிரில் கணவன் மனைவி "கை கோர்த்து கொண்டு அன்பாக இந்த மாதிரி " I love you" ன்னு சொன்னா வாழ்க்கை இனிக்கும் இல்லையா?

அட பாவிங்களா... அது வேண்டும் என்றால் வெள்ளைகாரர்கள் கலாச்சாரமாக இருக்கலாம். நம்ம ஆளுங்க.. குறிப்பா, தமிழர்கள்.. பொது இடத்தில கை கோர்த்து கொண்டு .. அன்பை அனைவருக்கு எதிரில் பகிர்ந்தார்கள் என்றால்.. அங்கே அவர்கள் வீட்டில் 4 சுவர்களின் உள்ளே செம சண்டைன்னு அர்த்தம். அவங்க போடுற சண்டை வெளியே தெரிய கூடாதுன்னு, வெளியே வரும் பொது மட்டும் கை கோர்த்து கொண்டு.. டார்லிங் டார்லிங்.. டார்லிங்.... " I love you ....னு பாடுவாங்க..உள்ள பிரச்சனை தான்.

நீங்க சரியா சொல்றீங்க மேடம். இவ்வளவு புத்திசாலிதனமா பேசுறிங்களே... இந்த "திருமணமான தம்பதிகளுக்கான அறிவுரை" நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டா நாங்க ரொம்ப பெருமை அடைவோம்.

அப்படியா? இந்த நிகழ்ச்சியினால், மனைவிகளுக்கு என்ன பயன்?

மேடம், நீங்க வந்து பாருங்க புரியும்.. போன மீடிங்கில் கூட..முரட்டு காளை மாதிரி உள்ள வந்த ஆளை பசு மாடு மாதிரி மாத்தி அனுப்பி வைச்சோம்.

அப்படியா... அப்பா கண்டிப்பா வரோம்..

பின் குறிப்பு : அங்கே என்ன நடந்தது என்பதை இங்கே படியுங்கள்.

http://www.visuawesome.com/

4 கருத்துகள்:

  1. yes sir indian culture is always great comparing with western countries, especially tamil culture is very great sir, nice post....

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    தொடக்கமே நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. நீங்க இதெல்லாம் சொல்லவே வேணாம் உங்க நகைசுவையே போதும் :) வாழ்க்கை கலகலப்பா போகும்

    நாலுபேர் முன்னாலே அதான் அந்தநிகழ்ச்சி கூட்டத்தினர் முன்னாலே நீங்க போனை போட்டு சொல்லும்போது எப்படி சொல்லியிருப்பீங்க :) என்பது தெளிவா தெரியுது நண்பா அதனால்தான் உங்க வீட்டம்மா பயந்து போயிருப்பாங்க ..

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் ஓகே தான், ஆனா இப்போ இருக்கற பெண்கள் இதெல்லாம் எதிர்பார்க்கறாங்களே!!! எங்க வீட்டில ஓகே தான்..

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...