திங்கள், 28 டிசம்பர், 2015

மல்லிகா - தண்டபாணி - சுமதி...

மணியை அழுத்தினேன்.. டிங் டாங்…

வா வாத்தியாரே… என்ன சொல்லாம கொள்ளாம இந்த பக்கம்?


ஒன்னும் இல்ல தண்டம்… அம்மணி சுந்தரியிடம் …மல்லிகாவை கொடுத்துவிட்டு வர சொன்னாங்க …

என்ன வாத்தியாரே.. மல்லிகான்னு சொல்லிட்டு எதோ டிபன் டப்பாவில் எடுத்துன்னு வந்து இருக்க?

பாணி.உனக்கு கல்யாணம் ஆகி 10 வருஷத்திற்கும் மேலே ஆச்சிதானே …?

அந்த விபத்து நடந்து தான் 15 வருஷம் கிட்ட ஆக போதே .. அதுக்கு என்ன இப்ப?

மனைவி எதையாவது எதிலாவது போட்டு எப்பவாது எங்கேயாவது கொடுன்னு சொன்னாங்கனா … கேள்வி எதுவும் கேட்க கூடாது … அமைதியா
செய்யணும் ..

அதுவும் சரிதான் ..


பேசிக்கொண்டே இருக்கும் போது … சுந்தரி வந்தார்கள் …

அண்ணே, வாங்க அண்ணே… அக்கா மலிதா கொடுத்தேன்னு போன் பண்ணாங்க … எத்தனை வருஷம் ஆச்சி அண்ணே, மலிதாவை சாப்பிட்டு … அக்காக்கு ரொம்ப நன்றி …

சுந்தரி… ஒ …இது மலிதாவா .. வாத்தியார்… மலிதாவை மல்லிகைன்னு சொல்றாரு..

தண்டம்… இவ்வளவு பேசுறியே..மலிதானா என்னா ?

இது கூடவா தெரியாது… சுந்தரி.. நீயே வாத்தியாருக்கு சொல்லு…

டேய், உனக்கு தெரியிலன்னு சொல்லு ..

என்ன அண்ணே .. உங்க வீட்டில் செஞ்ச மலிதா உங்களுக்கே தெரியாதா ?

சுந்தரி…இந்த மலிதா இனிப்பு வகையா?

ஆமா அண்ணே .. மைதாவை சப்பாத்திக்கு திரட்டுற மாதிரி திரட்டி துண்டு துண்டா வெட்டி பால் சக்கரை மற்றும் தேங்காய் துருவி போட்டு.. கொஞ்சம் லவங்கம் போட்டு எடுத்தா … மலிதா.

இந்த இனிப்பு – பால் – தேங்காய் .. இது மூனும் தான் எனக்கு ஆகாதுன்னு எங்க வீட்டில் இதை செஞ்சாலும் எனக்கு தரமாட்டாங்க …

ஏன் அண்ணா ..உங்க டாக்டர் அப்படி சொன்னாரா ?

இல்லை..

பின்ன ஏன் அக்கா தர மாட்றாங்க ..?

இதை எல்லாம் சாப்பிட்டால் கூடிய சீக்கிரம் டாக்டர் அந்த மாதிரி சொல்லுவாருன்னு .. வரும்முன் காப்போம் பாலிசி.

அப்ப, காலையில் என்னதான் நாஸ்டா?

சுமதி தான்..

வாத்தியாரே … அது யார் சுமதி ?

சுமதி … அது வந்து …வீட்டில் கெட்டு போற நிலைமையில் இருக்கிற எல்லா பழத்தையும் மிக்ஸியில் போட்டு கூழ் மாதிரி பண்ணி கொடுப்பாங்க …

வாத்தியாரே .. அது சுமதி இல்ல … ஸ்மூதி ..

என்ன எழவோ .

என்ன வாத்தியாரே… மலிதாவ மல்லிகான்னு சொல்ற .. ஸ்மூதிய சுமதின்னு சொல்ற .. எல்லா ஐட்டத்துக்கும் ஒரு பொம்பளை பேரை வச்சி இருக்கியே…காலையில் எழுந்தவுடன் சுமதின்னு நீ சொன்னவுடன் நான் ரொம்ப பொறா… பயந்துட்டன்.

சரி… அப்புறம் பார்க்கலாம் தண்டம்..

என்ன வாத்தியாரே .. சீக்கிரம் கிளம்பிட்ட..

கொஞ்சம் வேலை இருக்கு தண்டம்..அப்புறம் பார்க்கலாம்..

அப்படி என்ன வேலை..

கொஞ்சம் குடும்பத்தோட வெளியே போகணும்..

அப்ப லஞ்ச் என்ன பிளான்?

வெளிய தான்…உன் பிளான் என்ன ?

ஒன்னும் இல்ல வாத்தியாரே.. இங்கேயும் அப்படி தான் எதோ பிளான் .. சரி பார்க்கலாம் ..

தண்டபாணியிடம் விடை பெற்று கொண்டு வண்டியை வீட்டை நோக்கி விட்டேன் .. மனதில் ஒரு குற்ற உணர்ச்சி .. மதியம் லஞ்ச் என்ன பிளான் என்று தண்டபாணி அழைத்தவுடன் எதையோ சொல்லி சமாளித்தேன் .. உண்மை என்னவென்றால் … பக்கத்துக்கு ஊரில் உள்ள எங்கள் நண்பன் சந்தானம் தன்னுடைய 15வது திருமணநாளை இன்று கொண்டாடுகிறான் . அந்த விழாவிற்கு என்னை குடும்பத்தோடு வர சொன்னான். அழைக்கும் போதே .. விசு… ரொம்ப நெருங்கிய நண்பர்களை தான் அழைத்து இருக்கேன் .. நீ தயவு பண்ணி யாரிடமும் சொல்லிவிடாதே என்று ஒரு வேண்டுகோள் வேறு. அதனால் தான் தண்டமிடம் எதோ சொல்லிவிட்டு தப்பித்து வந்தேன்..

இல்லத்தில் வந்தவுடன்..

ஏம்மா .. எதோ மல்லிகா கொடுத்தியே.. அது கொஞ்சம் இருந்தா தாயேன்..

வேண்டாங்க, அது உங்களுக்கு நல்லது இல்லை.. இந்தாங்க “ப்ரெஷ் ஸ்மூதி” .
தேங்க்ஸ்..

சரி, நம்ம சந்தானம் வீட்டுக்கு லஞ்சுக்கு போறது சுந்தரியிடம் சொன்னீங்களா ?

இல்ல.. ஒருவேளை அவங்க தண்டபாணி குடும்பத்தை “இன்வைட்” பண்ணி இல்லாட்டி நல்லா இருக்காதே.. அதனால் வேறோ எதோ வேலை இருக்கு, மதியம் வெளிய தான் லஞ்ச்ன்னு சொல்லிட்டேன் …

கல்யாணம் ஆனதில் இருந்து நீங்க ரொம்ப சமத்து ஆகிடீங்க …

சரி கிளம்பு..

ஒரு மணிநேரம் கழித்து .. சந்தானம் வீட்டில் ..

மணியை அழுத்தினேன்…டிங் டாங்..

வா வாத்தியாரே..  சொல்லாம கொள்ளமா இந்த பக்கம்?

தண்டம், நீ இங்க என்ன பண்ற?

சந்தானத்திற்கு ஆயுள் தண்டனை கிடைத்து இன்றோட 15 வருஷம். வந்து
நீயாவது வந்து சந்தோசமா இருந்துட்டு போன்னு கூப்பிட்டான்..

குடும்பத்தோட வந்துட்டேன் . நீ எங்கேயோ வெளிய போறன்னு சொன்ன ?
இங்க எப்படி?

இங்க போறத தான் வெளியேன்னு சொன்னேன்.. நீ மட்டும் என்னவாம் ?

வெளிய எதோ லஞ்ச் பிளான் இருக்குன்னு சொன்னேன் .. ஆனால் இங்க இருக்க ..

வாத்தியாரே.. சந்தானம் கூப்பிடும் போதே ரொம்ப நெருங்கிய நண்பர்களை மட்டும் தான் கூப்பிட்டு இருக்கேன் .. நீ யாரிடமும் சொல்லாதேன்னு ஒரு வேண்டுகோள் போட்டான் .. அதுதான். அது மட்டும் இல்லாமல் என்னை கூப்பிட்டிட்டு உன்னை கூப்பிடாவிடில் நீ அவனை தவறா நினைக்க கூடாது பாரு … அது தான், பொதுவா எதோ வெளிய பிளான் இருக்குனு சொன்னேன் .. ஆமா வாத்தியாரே.. நீ ஏன் இங்க வருவதை பத்தி எனக்கு சொல்லாமல் மறைச்சிட்ட …

நீ சொன்ன அதே காரணம் தான் தண்டம்.. அதே காரணம்…

என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே …

என்னங்க … உங்கள் கையில் என்ன ?

கையில் விரல்…. அதுக்கு என்ன …?

விரல் தெரியுது .. ஒரு அளவு வேணாம் ..மொத்தம் எத்தனை ..?

ரெண்டு கையும் சேர்த்தா .. பத்து விரல் …

நான் சொல்றது… உங்கள் விரல் பிடித்து கொண்டு இருக்கிற .. குலாப் ஜாமூன ? ஒரு அஞ்சு நிமிஷம் யாரிடமாவது பேசலாம்னு போனா கையில் அரை டசன்
குலோப் ஜாமூன் வந்துடுது..

ஏன் வாத்தியாரே..நீ இனிப்பு சாப்பிட கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரா ?

அப்படி இல்ல தண்டம்.. ஒருபோதும் டாக்டர் அப்படி சொல்லகூடாதுன்னு ஒரு வருமுன் காப்போம் பாலிசி…

மீள் பதிவு தான்.. புது பதிவுகளை அடுத்த வருடத்தில் பார்க்கலாம். 

5 கருத்துகள்:

  1. தங்களுடய பதிவுகள் அற்புதம் தொடர்ந்து சிரிக்க வையுங்கள்

    பதிலளிநீக்கு
  2. ஹஹாஹ் விசு ஏற்கனவே சிரித்திருந்தாலும் இப்போதும் சிரித்தோம்...கொஞ்சம் மாற்றம் செய்திருக்கிறீர்கள் இல்லையா!!

    பதிலளிநீக்கு
  3. அண்ணா! சொல்ற டிப்ஸ் சை ஒழுங்கா சொல்லுங்க. மைதா, பால்,சக்கரை, தேங்காய் துருவல் இதை வேக வைக்கணுமா? பொறிக்கனுமா? பேசமா அண்ணியை ஒரு blog எழுத சொல்லுங்க!
    அப்புறம் பதிவு எப்பவும் போல லகலக!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனுங்க ... அதுதான் உடம்புக்கு ஆவாதுன்னு சொல்லிபூட்டோமுள்ள? புரவு என்னத்த பொரிக்கிறது... அவிய தான் வைக்கணும்.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...