செவ்வாய், 2 செப்டம்பர், 2014

துப்பாக்கி கையில் எடுத்து....

என்னங்க, கொஞ்சம் வங்கி வரைக்கும் போயிட்டு வரமுடியுமா?

வங்கியா. எதுக்கு, எல்லாத்தையும் தான் ஆன் லைனில் செய்யலாமே, இதுக்கு எதுக்கு அங்கே போக வேண்டும்.

அய்யோ, அது அங்கே, இது பெங்களூர். கொஞ்சம் போய் அந்த பாஸ் புக்கில் எல்லா என்ட்ரியும் போட்டுட்டு கொஞ்சம் ரூபாயும் எடுத்துட்டு வாங்க.

சரி, வரேன்.

நேராக பெங்களூர் மாஸ்க் ரோட்டில் உள்ள வங்கியில் நுழைந்த எனக்கு "மலரும் நினைவுகள்"! பல வருடங்களுக்கு முன் அருகே இருந்த கல்லூரியில் வேலை கிடைக்க, முதல் சம்பளமே எல்லா பிடிப்பும் போக 1800 ருபாய். முதல் சம்பளம் வாங்கிய பின் ஆரம்பித்த வங்கி கணக்கு. இன்னும் ஓடி கொண்டு இருக்கிறது.



உள்ளே நுழையும் போது முதலில் தென்பட்ட ஆள், அந்த வாட்ச்மன், பெயர் தெரிந்தாலும், இங்கே சொல்ல விரும்பவில்லை. முதுகில் ஒரு நாட்டு துப்பாக்கி போல் நீளமான துப்பாக்கி, வயிற்றை சுத்தி தோட்டாக்கள். பார்க்கவே சிரிப்பு வந்தது. என்னடா, சமூக விரோதிகள் எல்லாம் எ கே 47 வைத்து கொண்டு ஜாலியாக இருக்கும் போது இவருக்கு மட்டும் ஏன் இந்த பழைய துப்பாக்கி.

 கடைசியாக எப்ப சுட்டு இருப்பார் என்று யோசித்தேன். மற்றும், சரி, இது ஆபத்தில் சுடுமா என்றாவது அவருக்கு தெரியுமா என்று நினைத்தேன். அதற்கும் என் அறிவிற்கு எட்டவில்லை.

அங்கே எதிரில்  "Information" என்று எழுதி இருந்தது. அந்த இடத்தில் அந்த வரிசையில் நின்றேன். எனக்கு முன்னால் ஒரு மஞ்சள் கோடு. "Please dont cross this line, before being called" உங்களை அழைப்பதற்கு முன்னால் இந்த கோட்டினை கடக்க வேண்டாம் ( தமிழாக்கம் தான், மொழிபெயர்ப்புக்காக சொன்னேன்) என்று போட்டு இருந்தது. அடடே, நமக்கு நல்ல ராசி தான் இன்று, மஞ்சள் கோட்டுக்கும் பின்னால் நான் ஒருவன் தான் இருக்கின்றேன், அடுத்த ஆள் நான் தான் என்று மகிழ்ந்து, எனக்கும் முன்னால் இருப்பவர்களை கண்டேன்.

(I dont own this picture, thought it is appropriate and got if off google.)
அங்கே அந்த அதிகாரியிடம் ஒரு6-7 பேர் முற்றுகை இட்டு மாறி மாறி பேசி கொண்டு இருந்தனர். ஒ, ஒரே   குடும்பதினர் இல்லாவிடில்அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் போல இருக்கு என்று நினைத்து கொண்டு அவர்கள் வேலை முடிந்தவுடன் என் முறை என்று மீண்டும் வங்கியை ஒரு நோட்டமிட்டேன்.

20-30 அதிகாரிகள் வேலை செய்யும் வங்கி. அந்த ஊழியர்கள் எல்லாரையும் விட அந்த வாட்ச்மன் தான் மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றி கொண்டு இருந்தார். வெளியே இருந்து உள்ளே வரும் அனைவரும் முதலில் அவரிடம் சென்று கேள்வி கேட்க்க அவர் அவர்களை வழி நடத்தி உதவி செய்து கொண்டு இருந்தார்.

டெபொசிட் ஸ்லிப் எங்கே... அங்கே போ.
சேவிங்க்ஸ் எங்கே, இங்க போ.
ருபாய் எங்கேஎடுப்பது, மேலே போ
புது கணக்கு எங்கே, ரெண்டாவது மாடி..

என்று எல்லா வாடிக்கையாளர்களையும் அனுப்பி வைத்து கொண்டு இருந்தார்.
தீடீரென்று உள்ளே இருந்த ஒரு அதிகாரி இவர் பெயரை சொல்லி கூப்பிட, நேராக அவரிடம் சென்று பிறகு மற்றொரு அறைக்கு சென்று ஒரு காட்ரிட்ஜ் எடுத்து வந்து அந்த பிரிண்டரை சரி செய்தார். அங்கு இருந்து நேராக வெளியே சென்று 5 நிமிடத்தில் சில அதிகாரிகளுக்கு டீ வாங்கி வந்தார்.
இப்படி ஓடி ஆடி வேலை செய்து   கொண்டு இருந்த இவரை பார்த்தவுடன் மனதில் ஒரு கேள்வி.

 இத்தனை சுறுசுறுப்பாக மற்றவர்கள் வேலையை செய்து கொண்டு இருக்கின்றாரே, ஒரு வேளை, ஒரு சமூக விரோதி வங்கி கொள்ளையடிக்க வருகின்றான் என்று வைத்து கொள்வோம், இவர் தன் முதன்மை பணியான வாட்ச்மன் வேலை செய்ய  முடியாதே என்று நினைத்து கொண்டு என் வரிசையில் நின்று  கொண்டு இருந்தேன்.

பல நிமிடங்கள் கழிந்தது. எனக்கு எதிரில் இருந்த அந்த 6-7 பேர் அங்கே பேசி கொண்டே இருக்கையில், என்னை தாண்டி ஒரு நபர் அவர்களோடு சேர்ந்து பேச ஆரம்பித்தார். அப்போது தான் எனக்கு புரிந்தது, நான் இங்கே நிற்பது வேஸ்ட், நானும் இந்த கோட்டை கடந்து அவர்களிடம் "கும்பலில் கோவிந்தா" போடவேண்டும் என்று.

அந்த நேரத்தில், என் ராசி, அந்த வாட்ச்மன் என் அருகில் வந்தார்.

இந்த பாஸ் புக் என்ட்ரி?

அந்த டோக்கன் ஒன்று எடுத்து கொண்டு அங்கே அமருங்கள், உங்கள் எண் வந்தவுடன் செல்லலாம் என்றார்.

டோக்கன் எடுத்து கொண்டு அமர்ந்தேன். எனக்கும் சற்று முன்னால் இருந்த டோக்கன் எண் போய் கொண்டு இருந்தது. சில நிமிடங்கள் கழித்து மற்றொரு நபர் டோக்கன் எடுப்பதை பார்த்தேன். அவர் அதை எடுத்து கொண்டு நேராக ஒரு அதிகாரியின் மேசைக்கு சென்று அங்கே இருந்த ஒன்பதில் ஒன்றாக ஐக்கியம் ஆனார்.

சரி, இங்கே இருந்தால், வேலைக்கு ஆகாது என்று நினைத்து கொண்டு நானும் அங்கே 11வது ஆளாக சேர்ந்தேன். பாவம் அந்த அதிகாரி, அங்கே இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வி, அவர் பதில் சொல்லிக்கொண்டு தன்னால் முடிந்ததை செய்து கொண்டு இருந்தார். இவர்கள் ஒவ்வொருவராக குறைய, இப்போது அந்த அதிகாரியின் எதிரில் நான், ஆனாலும் என்னை சுற்றி ஒரு 7-8 பேர்.

சார், இந்த பாஸ் புக்கில் என்ட்ரி.

பாஸ் புக் கொடுங்க.

அதுக்கும் முன்னே, ரெண்டு நாளைக்கு முன்னே என் மனைவி ஒரு காசோலை டெபொசிட் பண்ணி இருந்தாங்க,அது வந்துடிச்சா பாருங்க.

ரெண்டு நாளைக்கு முன்னால் நீங்க சொன்ன அந்த என்ட்ரி இல்லையே என்று அவர் சொல்லி முடிக்கும் முன், என்னை சுற்றி இருந்தவர்களில் ஒருவர்,
"சார், அங்கே இருக்கு பாருங்க. அந்த டெபாசிட் கூட வங்கி கட்டிணம் (பேங்க் Charges)  கூட்டி பாருங்க, இவர் சொன்ன தொகை வரும் என்று சொல்ல, அந்த அதிகாரியும் அவருக்கு நன்றி சொல்ல நான் பேய் அறைந்தவன் போல் ஆனேன் (பேய் அறைந்த கதையை மற்றொரு நாள் சொல்கிறேன்).

இது நமக்கு வேலைக்கு ஆகாது என்று நினைத்து அவரிடம் என் பாஸ் புக்கை வாங்கி கொண்டு, மனைவியிடமே கொடுத்து விடலாம் என்று நினைத்து வெளியே கிளம்புகையில், வாட்ச்மேன் எதிரில் வந்தார்.

என்ன, வேலை முடிந்ததா?

"இல்லை, நான் வேறொரு நாள் பார்த்து கொள்கிறேன்"  என்று சொல்லி முடிக்கும் முன், அந்த புத்தக்கத்தை என் கையில் இருந்த வாங்கி கொண்டு போய் அந்த அதிகாரியின் காதை கடித்தார். அவரும் தலையை ஆட்ட, இவர் நேராக என் புத்தகத்தை எடுத்து கொண்டு அருகில் இருந்த பிரிண்டரில் சொருக, வந்த வேலை முடிந்தது.

ரொம்ப நன்றி ஐயா, என்று கிளம்புகையில், அய்யய்யோ, கொஞ்சம் பணம் எடுத்து வர சொன்னார்களே,

மீண்டும் அவரிடம், ஐயா "கேஷ் வித்டிராவல்" எப்படி..

வெளியே ATM  இருக்கு, அங்கே போய் எடுத்து கொள்ளுங்கள்.

ரொம்ப நன்றி.

அங்கே வெளியே... ATM ன் கதவின் மேலே... "Only one at a time" என்று எழுதி இருக்க, உள்ளே எட்டி பார்த்தேன்,.அங்கேயும்  7-8 பேர் நின்று கொண்டு இருக்க, நமக்கு இது ஒத்து வராது என்று சொல்லி கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன்.

என்னங்க, போன வேலை முடிந்ததா?

என்ட்ரி போட்டு விட்டேன், ஆனால் ATM  தான் (பொய் தான்) ரிப்பேர் போல இருக்கு.

சரி அந்த புக்க  கொடுங்க.

இந்தா.

எங்க.. என்னங்க. இதுல இருக்கிற எண் எல்லாம் ரொம்ப பெரிசா இருக்கு.  போற வழியில் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

என்ன சொல்லுற!

கொஞ்சம் இங்கே பாருங்க... என்று மனைவி சொல்ல, அந்த எண்களை பார்த்து மயங்கியே விட்டேன்.

போங்க, வேற யாருடைய என்ட்ரி நம்ம புத்தகத்தில் போட்டுடாங்கோ..மீண்டும் போய் அதை மாத்தி எழுதி வாங்கி வாங்க.

ஏம்மா, பார்க்க நல்லாதானே இருக்கு, இப்படியே இருக்கட்டுமே..

நீங்க எல்லாம் ஒரு கணக்கு பிள்ளை.போங்க...

மீண்டும் வங்கியில் நான் நுழைய...வாட்ச்மான் அருகே வந்து, என்ன சார், திரும்பவும்..இங்கே..

இல்லை, அந்த என்ட்ரி என்னோடது இல்லை. நமக்கு ராசியே ஆயிரம் தான், இங்கே கோடி கணக்கு இல்ல இருக்கு.

அப்படியா, ஒரு நிமிடம் கொடுங்க என்று அவர் பிடுங்கி கொண்டு நேராக மற்றொரு அறைக்கு சென்றார்.

மீண்டும் சுற்றும் முற்றும் ஒரு நோட்டமிட்டேன். எனக்கும் முன்னால் இருந்தவர், அங்கே இருந்த அதிகாரியிடம் சண்டை போட்டு கொண்டு இருந்தார்.

நேத்து கூட ரெண்டு   C  டெபொசிட் பண்ணேன், ஆனா மொத்தமே 2832 ருபாய் தான் பாலன்ஸ் காட்டுது என்று சொல்ல.. அடடே... அது நம்ம பாலன்ஸ் போல இருக்கே என்று நகைத்து கொண்டே நின்றேன்.

http://www.visuawesome.com/

6 கருத்துகள்:

  1. ம்ம் நல்ல அனுபவம் தான். சில நேரங்களில் இது போன்ற தவறுகள் நடப்பது மிகவும் கோபமாக வரும் சார். அந்த வாட்ச் மேன் மட்டுமில்லை எல்லா வாட்ச் மேன்களுமே அப்படித்தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வாட்ச்மன் விஷயத்த யாரிடம் சொன்னாலும் இதே பதில் தான். எல்லா வங்கி காவலாளிகளும் இந்த மாதிரி தான் என்று ஒரு பொது கருத்து. அவனவன் வேலைய அவனவன் செய்தால் நல்லா இருக்கும். வருகைக்கு நன்றி ஜெயசீலன் அவர்களே.

      நீக்கு
  2. சில நேரங்களில்..சில மனிதர்கள்...!!!

    பதிலளிநீக்கு
  3. இந்தியாவில் வங்கிக்கு சென்றால் எனக்கும் இதே மாதிரி அனுபவம்தான். எல்லார் முன்னாடியும் ஒரு கம்ப்யூடர் மானிட்டர் இருக்கிறது. இந்தியாதான் உலகத்தில் இருக்கும் எல்லா பெரிய வங்கிகளுக்கும் ஸாஃப்ட்‌வேர் தயாரித்து தருகிறது. ஆனால் இந்த வங்கி ஊழியர்கள் எல்லாம் எதற்கு இன்னும் பாஸ் புக் என்ட்ரி போட்டு லெத்ஜரில் என்ட்ரி போட்டு இரண்டு பேர் கையெழுத்து போட்டு ஒரு விசயத்தை முடிப்பதற்குள் போதும் என்றாகி விடுகிறது. வரிசாயில் நின்று முதல் ஆளாக டோக்கனை நீட்டினாலும் கேஷியர் அவருக்கு தெரிந்தவர்களுக்கு முதலில் பணம் கொடுக்கிறார். ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசினால் சுத்தம். உங்களை ஏதோ வெற்று கிரகத்தில் இருந்து வந்தவ்ர் போல பார்க்கிறார்கள். -கிரிஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்திய வங்கியில் ஒரு வேலை செய்து முடிப்பது மிகவும் ஒரு சிரமமான காரியம். என்ன செய்வது. வருகைக்கு நன்றி.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...