செவ்வாய், 7 நவம்பர், 2017

புகையில் வந்த பகை....


பல வருடங்களுக்கு முன்...

(பிளாஷ் பேக்  ரௌண்டு ரெண்டு முறை சுற்றவிட்டு வாங்க).

"மாப்பிளை வந்துட்டாரு" என்று... அடியேன் வண்டியை விட்டு இறங்கும் போது  பெண்ணின் உறவின சிறுவன் ஓட..

நானோ.. பஜ்ஜி - வடை சாப்பிட  போகின்றோம் என்ற ஒரு எண்ணத்தில் தயாரானேன்.

உள்ள நுழையும் போதே .. அடியேனின் இல்லத்தை சார்ந்த அம்மணியிடம் ... நான் சொன்ன விஷயத்தை மறந்துடாதீங்க.. அப்புறம் அது பிரச்சனையாகி விடும் என்று நினைவு படுத்த.. அவர்களும் தலையாட்ட..

இல்லத்தின்  உள்ளே நுழைந்தோம்.



காலையில் தான் வருகின்றோம் என்று சொன்னதாலோ என்னவோ.. ஒரு வேளை, வடைக்கு நேரத்திற்கு பருப்பை அரைத்து வைத்திருப்பார்களோ என்று எண்ணி கொண்டே...

அமர்ந்து இருக்க..

அம்மணி உள்ளே வர.. நானோ.. குதித்து எழுந்து கை குலுக்க செல்ல.. அனைவரும் அதிர.. நானும் மிரள...

மாப்பிள விட்டா கெட்டி மேளம்ன்னு சொல்லிடுவாரு போல இருக்கே என்று அங்கு இருந்த அழையா விருந்தாளி (அப்புறம் தான் தெரிய வந்தது, அவர் அழையா விருந்தாளி  என்று)  ஒருவர் சொல்ல...

பஜ்ஜி  - வடைக்கு பதிலாக .. அருகில் இருந்த தாமஸ் கஃபே சிக்கன் பஃப்ஸும் , கூடவே ஒரு பிரூட் கேக்கும் வந்தது.

இரண்டையும் இது ஒரு கடி அது ஒரு கடி என்று கலந்து ஸ்வாஹா செய்து கொண்டு , தேத்தண்ணி.. (அதுதாங்க நம்ம ஊர் டீ ) வர.. அதையும் குடித்து விட்டு...

"காபி சூப்பர் .. நரசுசா" என்று நான் உளர, அழையா விருந்தாளி, மாப்பிளை ஜோக் அடிப்பாரோ.. அது ரிக்கரி.. என்று சொல்ல..

நானோ...

"என்ன கரி"

 என்று  கேட்க.. அம்மணியின் முகத்தில் சிரிப்பு வந்தது.  ஓகே.. நம்ம அடிக்கும் கடி ஜோக்கை கேக்க வாழ்க்கை முழுக்க ஒருத்தவங்க மாட்டுனாங்கன்னு நான் மகிழ்ச்சியாக...

சில  நிம்டங்களிலே, அம்மணியும், அக்காவும் உள்ளே சென்று சில நிமிடத்தில் வந்து.. எங்களுக்கு பூரண சம்பந்தம்.. மாப்பிளை என்ன சொல்றாரு  ..

நானோ, எங்கள் இல்லத்து  அம்மணியிடம், விஷயத்தை சொல்லுங்க.. சொல்லுங்க என்று சொல்ல..

அவர்களோ.. வேணாம் விடு.. அது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்ல..

நானோ.. இல்ல நீங்க சொல்லாட்டி, நானே சொல்லிடுவேன் என்று சத்தமாக சொல்ல..

அழையா விருந்தாளி.. மாப்பிளை என்னமோ சொல்ல சொல்றாரே, பரவாயில்ல, சொல்லுங்க .. என்று எடுத்து கொடுக்க..

எங்க பையன் சோம்பேறி மா... அதுதான்..

இந்த காலத்து பசங்க...

இல்ல.. இல்ல.. இவனை மாதிரி சோம்பேறி நீங்க பார்த்தே இருக்க மாட்டிங்க  ..
நாளைக்கு காலையில் திரும்பவும் எதுக்கு குனிஞ்சி நிமிந்து மாத்தணும்.. அது அப்படியே இருந்துன்னு   போகட்டும்ன்னு சொல்லி சில நாட்களில் சாக்ஸ் கூட கழட்ட மாட்டான்.. அம்புட்டு சோம்பேறி.. வீட்டுல கடைசிகுட்டி, அப்பா இல்லாம வளந்தான்.., அம்புட்டு பெரும் சேர்த்து கெடுத்து வைச்சிட்டோம் ..

அது பரவாயில்லை... விடுங்க..

நானோ..சித்தி...மேலே போங்க..

தம்பி, எப்பவாது சிகரெட் பிடிப்பான்...

அப்படியா.. எப்ப?

என்னைக்காவது ஆபிஸ் பார்ட்டியில் ட்ரிங்க்ஸ் எடுத்தா தான்.. இல்லாட்டி.. பிடிக்க மாட்டான்..

பரவாயில்லை விடுங்க..

என்ன சித்தி ... எது எடுத்தாலும் பரவாயில்லை விடுங்கன்னு சொல்றாங்களே.. என்னை வச்சி... (காமடி கீமடி டயலாக் அந்த காலத்தில் இல்ல) ..

அவங்களே பரவாயில்லைன்னு சொல்லிட்டாங்களே.. நீ ஏன் தொன தொனன்னு.. அமைதியா இன்னொரு கேக் சாப்பிடு.. மீதியை நான் பாத்துக்குறேன்..

பெண் பார்க்கும் படலம் முடிந்தது.

சரி.. அவங்க வேலைக்கு ஹாஸ்பிடல் போகணும்.. நைட் டூட்டி.. ஆட்டோ வரும்ன்னு, அழையா விருந்தாளி மீண்டும் சொல்ல..

ஆட்டோ எதுக்கு... வெளியே கைனெடிக் இருக்கே.. ஓட்ட மாட்டாங்களா..?

ஓட்டுவாங்க.. ஆனா இன்னைக்கு  வேணாம்..

வேணும்னா நான் போய் ட்ரோப் பண்ணிட்டு வரட்டா?

அனைவரும் பேய் அறைந்ததை  (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்) முழிக்க.. அந்த அன்பான விருந்தாளி (இனிமேல் அவரை அழையா விருந்தாளி என்று அழைக்க மாட்டேன்) .. அதுல என்ன தப்பு.. ரெண்டு பேரும் பேசினே போங்க என்று சொல்ல, அவர் முகத்தில் மட்டும் கைனெடிக் ஹோண்டா திரும்பவும் வருமா என்று பயம் தெரிந்தது.

வண்டியை.. சுவிட்ச் செய்து நான் ஓட்ட தடுமாற..

கடைசியா எப்ப வண்டி ஒட்டுனீங்க...

ரொம்ப வருஷம் ஆச்சி..

இவங்க எல்லாம் பாக்குறாங்க.. தெரு  ஓரம் வரைக்கும் நீங்க ஓட்டுங்க  அங்கே இருந்து நான் மெயின் ரோட்டில் ஓட்டுறேன், நீங்க பின்னால உக்காந்துக்குங்க..

மனதில்.. ஆயிரம் வயலின்.. அடியேனுக்கு வாழ்க்கையில் பிடிக்காத ஒரு விஷயம்.. பைக் - கார் போன்றவற்றை ஓட்டுவது. யாரவது ஓட்டுங்க.. நான் பின்னால சீட்டுல உக்காந்துக்குறேன்ன்னு சொல்லி வாழ்க்கையை ஓட்டுபவன்.

அந்த தெரு மறைய..

வண்டியை விட்டு இறங்கி...  அம்மணி ஓட்ட தயாராக.. ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைக்க..

இன்னைக்கு ஆபிசில் இருந்தா வரீங்க?

ஆபிஸா? எங்க ஆபிஸ் வெளி நாடு.. இப்ப லீவில் இருக்கேன்..

ஆபிஸ் பார்ட்டியில் ட்ரிங்க்ஸ்  எடுத்தாதான் சிகரெட் பிடிப்பீங்கன்னு  அங்கே சொன்னாங்க..

சற்றே அதிர்ந்து.. ஆமா.. ஆமா..  எங்க பாஸ் இங்கே லீவுக்கு வந்து இருக்காரு,,,,, அவரு வீட்டில் ...

முகத்தை துடையுங்க.. அசடு வழியுது. பொய் கதை கதைக்காதீங்க..

கதையா...

தெரியாதா.. நான் யாழ்ப்பாணம்..

ஓ.. மறந்துட்டேன்... வண்டி கிளம்பியது.

திருமணமாகி ஒரு வாரம் கழித்து...

என்னங்க..

சொல்லு..

எனக்கு ஒரு உதவி..

வானவில்லை...

அதெல்லாம் வேணாம். இந்த சிகரெட்..

வேணாம்... இந்த பழக்கத்தை பழகிட்டா அப்புறம் விடவே முடியாது. நானே கஷ்ட படுறேன்.. அந்த ஆசையை விட்டுடு..

ம்க்கும், நினைப்பு தான்..

சிகரெட்டுக்கு என்ன ?

இனிமேல் நீங்க பிடிக்க கூடாது.. பிடிக்க மாட்டீங்க..

நான் தான் பொண்ணு பாக்க வரும் போதே..

அப்ப பொண்ணு பாக்க தான் வந்தீங்க.. பரவாயில்லை.. இப்பவும் அப்படியே இருந்தா எப்படி? இது உடம்புக்கு நல்லது இல்ல.. ஒரே நாத்தம்... காசு வேற கரியாகுது.

கொஞ்சம் கொஞ்சமா விட்டுடுடா .. ப்ளீஸ்... ஆபிசில் ஆடிட் நேரத்தில் இரா முழுக்க வேலை இருக்கும்... அப்ப இது தான்..

இனிமேல் அந்த மாதிரி வேலை எல்லாம் வேண்டாம்.. காலையில் போயிட்டு  சாயங்காலம் வரமாதிரி வேலைக்கு நம்ம மாத்திக்கலாம்.

ஒரு மாசம் டைம்..

பி எ மென்.. ஒரேடியா விட்டுடுங்க.. என்று அதட்ட

அடுத்த சில   மாதங்கள் அம்மணி என்னை திட்ட.. என்னை அம்மணி திட்ட..
 கிட்ட தட்ட பதினைந்து வருடம் என் விரலிடுக்கில் இருந்த  சிகரெட் என்னை விட்டு ஒரேடியாக விலகியது.

சரி தலைப்பிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

வருடங்கள் போக.. மூத்த ராசாத்தி 7  வயதில் பியானோ வகுப்பிற்கு சென்ற காலம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை  பெற்றோரைகளை அழைத்து  பிள்ளையின்  நிறை குறைகளை சொல்லுவார்கள்..

அம்மணி தான் நேராக அங்கே வந்து விடுவதாக சொல்ல, வண்டியை எடுத்து கொண்டு அடித்து பிடித்து..

இனிமேல் இந்த அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும் போது எனக்கு முன்னாலே சொல்லு.. இப்படி திடு திப்புனு .. நான் வரமுடியாது.. இன்னும் அரை மணி நேரத்தில் ஆபிசில் ஒரு மீட்டிங்.. எங்க அந்த வாத்தியார்?

அவசர படாதீங்க.. இப்ப வந்துடுவார்..

ஐந்து நிமிடம் ஆக...

நான் அங்கே போய் அவரு இருக்காரான்னு பாக்குறேன்.. எனக்கு நேரமாகுது..

ஏங்க.. அவர் இங்கே தான் இருக்கார்.. பாவம் காலையில் இருந்து திருப்பி திருப்பி பெற்றோர்களை பார்த்து பேசுற டென்ஷனில் இருந்தார்..

இப்ப எங்க?

நான் தான் அவரை பத்து நிமிஷம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வான்னு சொல்லி அனுப்பினேன்.

எங்க... போனார்?

இல்லைங்க.. அவர் ஷர்ட் பாக்கெட்டில் சிகரெட் பார்த்தேன்.. அதுதான்.. "கோ அண்ட் ஹேவ் எ சிக்ரெட்ன்னு" சொல்லி அனுப்பினேன்.. பாவம் அவரை அந்த டென்ஷனில் நீங்க பாத்து இருக்கணும்..

அட பாவி..

மயங்கி விழ இருந்த என்னை அம்மணி தாங்கி பிடிக்க.. அந்த பியானோ வாத்தியாரே.. ரிலாக்ஸாக எங்களை நோக்கி வந்து கொண்டு இருந்தார். 

6 கருத்துகள்:

  1. சொல்லிச் சென்ற விதமும் முடித்த விதமும் அருமை (அடைப்புக்குறியில் அழைத்த விருந்தாளி என இருந்திருக்க வேண்டுமோ)

    பதிலளிநீக்கு
  2. அழகான நடை... நான் கதைய சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  3. எப்ப எல்லாம் ட்ரிங்கஸ் அடிப்பீங்களோ அப்ப எல்லாம் சிகரெட் அடிப்பீங்க. அது சரி ஆனால் எப்ப ட்ரிங்க்ஸ் அப்டிப்பிங்க என்றால் ஷோசியல் கெட்டுகெதர் டைம்ல அதுவும் சரி ஆனால் ஷோசியல் கெட்டுகெதரில் யார் கூட என்பதை சொல்ல மறந்துவீட்டீர்களா அல்லது மறைத்துவிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க அந்த கேள்வி கேக்கல ? அது சரி.. நீ நல்லவனா கெட்டவனா?

      நீக்கு
  4. கல்யாணத்திற்கு அப்புறம் எல்லா வீட்டு அம்மணிகளின் வேளை அவங்க கணவர்களை திருத்த முயற்சி செய்வதுதான்....

    பதிலளிநீக்கு
  5. ஹாஹாஹாஹா.....நல்லா மாட்டிக்கிட்டீங்களா விசு!!!??

    கரெக்ட்டுதான் புகையும், டிரிங்க்ஸும் உடல் நலனுக்குக் கேடு என்றாலும், அந்தப் பழக்கம் உள்ளவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்று இந்த சமுதாயம் சொல்லிடும்...ஆனா இவர்களில் நல்ல குண நலன் உடையவர்கள் பலரை நான் பார்த்திருக்கேன்..அதில் ..ஆனா இந்தப் பழக்கம் எதுவுமே இல்லாதவங்க மோசமான குண நலன் உடையவர்களையும் பார்க்கிறேன்...ஸோ கமல் பாணில இருந்தா தப்புனு சொல்லலை இல்லாம இருந்தா நல்லது..ஹிஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...