வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

பரதேசியின் காதலிகள்....



சென்றவாரம்..சக பதிவர் பரதேசி அவர்கள்...

"கிளாஸ்மேட்டை லவ் பண்ணாதீங்க !!!!!!!!!!!!!!!"


என்ற பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் தெரிந்தோ தெரியாமலோ தன் பழைய காதலிகளின் பெயர்களை குருப்பிட்டும் இருந்தார். அதை வைத்து எழுத படும் தொடர் பதிவின் முதல் அத்தியாயம் தான் இது.


 கதிஜாவும்   "சதி"ஜாவும்

ராசா.. வா.. வந்து சாப்பிடு...


இதோ வரேன்..


என்று சொன்ன பரதேசி ... அரை மணி நேரம் கழித்தும் சாப்பாடிற்கு வரவில்லை.


வா ராசா..



தாய் மீண்டும் மீண்டும் அழைக்க, தன் வீட்டு பாடத்தை முடித்த "ராசா என்னும் பரதேசி", அந்த பாடத்தை மீண்டும் ஒரு முறை எழுதி கொண்டு இருந்தான்.


என்னது ..? ஒரே வீட்டு பாடத்தை ஏன் இருமுறை எழுதினாரா? பொறுமையாக கேளுங்கள்.


நான்காம் வகுப்பு வரை தான் உண்டு தன்"கதி"யே உண்டு என்று இருந்த ராசாவிற்கு, ஐந்தாம் வகுப்பு ஆரம்பித்ததில் இருந்தே கவனம் சிதறியது.


"கதி"யே என்று இருந்தவனின் கவனம் சிதற காரணம், ஐந்தாம் வகுப்பில் வந்து சேர்ந்த "கதிஜா" என்ற மாணவி தான்.


அவள் வந்து சேர்ந்ததில் இருந்து ராசாவிற்கு கமர்க்கட்டும் கசக்கியது. பம்பர ஆட்டத்தில்  பம்பரத்தை தரையில் படாமல் அந்தரத்திலேயே சுழற்றி அடித்து "அபிட்" சொல்வதில் இருந்து பம்பரமாய் சுழன்று சுழன்று எல்லாவற்றிலேயும் முதல் மாணவனாக வந்த ராசாவின் வாழ்வே "கதிஜாவே கதியே" என்று மாறியது.


ஏன் இந்த மாற்றம்? அவனுக்கு புரியும் வயது அல்ல. ஏதோ ஒரு ஈர்ப்பு. அதனால் தான் அடுத்த நாளுக்கான வீட்டு பாடத்தை தனக்கு மட்டும் எழுதாமால் அதை கதிஜாவிர்க்கும் எழுதி முடித்து சாப்பிட சென்றான்.



புதனும் அதுவுமாய், புளிசோறு.. வேக வைத்த முட்டை.


அம்மா .. நான் ஊறுகாய் வச்சி சாப்பிட்டு கொள்கிறேன். முட்டைய நாளைக்கு மதிய உணவிற்கு வைத்து கொள்கிறேன் என்று ராசா சொல்ல, அவன் தாய்க்கோ.. வேக வைத்த முட்டையை அரை வேக்காடிலே சாப்பிடும் இவனுக்கு நாளைக்கு சாப்பிடலாம் என்ற விவேகம் எப்படி வந்தது என்று வியப்பு.


ராசாவோ, அடுத்த நாள் அந்த முட்டையை கதிஜாவிர்க்கு கொடுத்துவிட வேண்டும் என்று இருந்தான்.


அடுத்த நாள்....வகுப்பில் வந்த ஆசிரியை ..


இன்றைக்கு நம்ம வகுப்பிற்கு "லீடர்" தேர்வு செய்ய போகின்றோம். இதில் ஒரு மாணவன் - மற்றும் ஒரு மாணவி நிற்கலாம். யாருக்கு அதிக ஓட்டோ அவர்களே "லீடர்" என்று அறிவிக்க.


நான்காவது வரை தேர்தலே இல்லாத லீடராகி (நடிகர்சங்கம் போல தான் ) பழகிவிட்ட ராசா, மாணவிகள் சார்பாக"கதிஜா" நிற்கின்றாள் என்று அறிந்தவுடன் பேய் அறைந்தது போலாகிவிட்டான் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக இன்னொரு நாள் சொல்கிறேன்).


உங்கள் எல்லாருக்கும் ஒரு அஞ்சு நிமிஷம் தரேன். அதுக்குள்ள ஒருதருகொருத்தர் பேசி யாருக்கு ஒட்டு போடறதுன்னு முடிவு பண்ணி கொள்ளுங்கள் என்று டீச்சர் சொல்ல, கதிஜா நேராக ராசாவிடம் வந்தாள்.


மத்த மாணவிகள் எல்லாரும் தான் என்னை போட்டி போட சொன்னாங்க.. எனக்கு இதுல விருப்பமே இல்ல.


எனக்கும் விருப்பமே இல்ல, இருந்தாலும் நாலு வருசமா லீடரா பழகிட்டேன். அதனால் தான்.


ராசா, நான்உன்னை எதிர்த்து நின்றாலும் என் ஓட்டும் உங்களுக்கு தான்.


ரொம்ப நன்றி, இதை நான் எதிர் பார்க்கவே இல்லை. தேர்தல் முடிந்ததும் மதிய உணவிற்கு என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு "சர்ப்ரைஸ்" வச்சி இருக்கேன்.


சரி.. அப்புறம் பாக்கலாம். நான் திரும்பியும் சொல்றேன். என் ஓட்டும் உங்களுக்கு தான்.


ராசாவிற்கு தலை கால் புரியவில்லை. எனக்கு எதிராக நானே போட்டியா என்று நொந்து கொண்டே.. பதவியா  பாசமா என்ற அக்னி பரீட்சையோடு .. எப்படியும் நான் தான் லீடர். கதிஜாவின் ஓட்டையும் சேர்த்து அனைத்து மாணவர்களின் ஓட்டும் தனக்கே வரும் என்று நினைத்து, கதிஜாவிர்க்கு ஒரு ஒட்டு கூட கிடைக்காவிட்டால் நன்றாக இருக்காது என்று தனக்கு தானே கூறி கொண்டு, தன் ஓட்டை கதிஜாவிர்க்கு போட்டான்.


முடிவுகள் வந்தது.


கதிஜா :45


ராசா (என்னும் பரதேசி) : 0


என்ன ராசா? தேர்தலில் நிற்க ஆசை இல்லாட்டி,  வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே. உன் வாக்கையும் கதிஜாவிர்க்கு போட்டு இருகின்றாயே .. என்று டீச்சர் சொல்ல ..


ராசாவோ.. இல்ல டீச்சர், ஆமா டீச்சர் என்று உளருகையில் மதிய உணவிற்கான மணியடிக்க மற்ற மாணவர்கள் அவனவன் நேற்று இரவு சாப்பிடாமல்,  கதிஜாவுடன் பகிர்ந்து சாப்பிட எடுத்து வந்த முட்டை - மட்டன் - மீன் - உருளை கிழங்கு (அக்ரகாரத்தில் இருந்தும் சில மாணவர்கள் இருந்தார்கள்) "கதிஜா" "கதிஜா" என்று கூவி அழைக்க .. ராசா என்னும் பரதேசி தன் வீட்டை நோக்கி நடந்தான்.


அதுவரை அவன் செவியில் தேன் போல ஒலித்த "கதிஜா" என்ற பெயர் இப்போது விஷம் போல் "சதி"ஜா" என்று ஒலித்தது. 


வீட்டை அடைந்தவுடன், அவன் தந்தை..


என்ன ராசா? இன்றைக்கு தேர்தலில் முட்டை வாங்கினாயாமே (அதே பள்ளியில் அவர் ஆசிரியர்).. என்று சொல்ல..


அவன் அம்மாவோ..


என்ன ராசா, மதியம் சாப்பிட எடுத்துனு போன முட்டையை கூட சாப்பிடாமல் திரும்ப எடுத்துன்னு வந்து இருக்கியே.. என்று சொல்ல..


அன்று முட்டையை வெறுக்க ஆரம்பித்தவன் அதற்க்கு பின் வாழ்க்கையில் சில வருடங்கள் முட்டையே சாப்பிடவில்லை.




இதில் யார் இந்த "ராசா என்ற பரதேசி"..


அடுத்த சில நாட்களில்..


அப்பா.. எனக்கு இந்த பள்ளி கூடம் பிடிக்கவில்லை. இங்கே எல்லாரும் பணக்கார பசங்களா இருக்காங்க.. என்னை பஞ்சாயத்து பள்ளிக்கு அனுப்பு, அங்கே தான் கிராமத்து பசங்க. இளகிய சுத்தமான மனசு. என்று கெஞ்ச..


அப்பாவும் மனமிரங்கி ராசாவை பஞ்சாயத்து பள்ளி கூடத்தில் சேர்க்க சென்றார்.


ஆறாவது.. ஏழாவது என்று இரண்டு வருடம், அனைவரும் கிராமத்து இளகிய மனசுகாரர்கள் என்பதை புரிந்து கொண்டு இங்கேயும் தேர்தல் இல்லாமலே வகுப்பின் "லீடர்" ஆகி "தனி காட்டு ராசா" வாக இருந்த பரதேசியின் வாழ்வில் எட்டாவது படிக்கும் போது அவன் தகுதிக்கு எட்டாத ஒரு காரியம் நடந்தது.


புதிதாக வந்த தமிழ் ஆசிரியர் உன்னை அவசரமா கூப்பிடுறாரு, என்று யாரோ சொல்ல.


வணக்கம் சார்?


வா தம்பி.. நீ தான் ராசாவா.?


ஆமா சார்...


சார் வேண்டாம்.. ஐயானே கூப்பிடு.


ஆமா ஐயா.


உன்னை பத்தி நிறைய கேள்வி பட்டேன். நீ தான் எட்டாம்ப்பு லீடராமே ..


ஆமா.. சார்.. மன்னிக்கவும்.. ஐய்யா, பேசி கொண்டே இருக்கும் போது அந்த அறையில் ஒரு கிராமத்து மின்னல் பளிச்சென்று அடிக்க... .திரும்பி பார்த்த ராசா .. மீண்டும் பேய் அறைந்தவன்  போலானான்.


அவனுக்கு எதிரில் ஒரு தேவதை.


அப்பா.. எல்லா வகுப்பிற்கும் போய் பார்த்துட்டேன். எட்டாம்ப்பு எங்கேன்னு தெரியல.


அடே டே.. காக்காய் அமர பனம் பழம் கதை தான். ராசா,  இதுதான் என் பொண்ணு. "பொன்னுதாயி" இந்த வருஷம் எட்டாம்ப்பு. அவளை பத்திரமா உன்னோட கூட்டினு போ..


சரி மாமா..


டேய், சாருன்னு கூப்பிட்டா கூட பரவாயில்லை.. ஐயான்னு கூப்பிடாட்டி கூட பரவாயில்லை, மாமான்னு கூப்பிடாதே..


சரி மா.. சா...ஐயா.


பை ரொம்ப கனம் போல இருக்கே, நான் வேண்டுமானால் தூக்கிகிட்டா என்று அசடு வழிந்த ராசாவிடம் பொன்னுதாய் தன் பையை கொடுக்க.. ராசாவோ ..


என்னமோ..


சீர்வரிசையை தூக்கிக்கிட்டு தனி குடித்தனம் போறது போல பொன்னுதாயோடு நடந்தான்.


பாவம்.. அவன், இந்த சுபமான ஆரம்பம் எப்படி முடிய போகின்றது என்று அவனுக்கு இப்போது தெரிய வாய்ப்பிலையே.


பல வருடங்கள் கழித்து தான் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் "சிங்களத்து  சின்ன குயில் ரேகாவோடு" லூட்டி அடிக்கும் போது இந்த நாள் தன்னை பாதிக்க போகின்றது என்பது பாவம் அவனுக்கு எப்படி தெரியும் ...?


தொடரும் ...


தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்கவும் .



பரதேசியின் காதலிகள் - பகுதி 2 (பரதேசியும் பரட்டையும் )


1 கருத்து:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...