ஞாயிறு, 30 நவம்பர், 2014

கேக் வேணுமா? கேக்கவே வேண்டாம்!

அமெரிக்க நாட்டில் எனக்கு பிடித்த விஷயங்கள் பல இருப்பினும் இங்கே பிடிக்காத விஷயங்களும் சில உள்ளன. அதில் ஒன்று தான், இந்த பிறந்த நாள் கொண்டாட்டம்.

பிறந்த நாள் கொண்டாடுவதை எதிர்ப்பவன் அல்ல நான், அதலால் என்னை தவறாக நினைக்க வேண்டாம். இங்கே இந்த பிறந்தநாளை கொண்டாடும் போது வாங்கி வருகின்றார்களே ஒரு கேக், அதன் மேல் தான் எனக்கு வெறுப்பு.



ஒவ்வொரு முறையும் யாருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்றால் அங்கே இருக்கும் கேக்கை பார்த்தால் சில எண்ணங்கள்.

இங்கே கிடைக்கும் இந்த "கேக்', மிகவும் பெரிதாக இருக்கும். 5 வயது பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாட 50 பேர் கொண்ட கூட்டம் இருக்கும், அதில் 200 பேருக்கு சாப்பிட கூடிய பெரிய கேக்கை வாங்கி வந்து விடுவார்கள்.

இந்த கேக் ஒரு புகைபடத்திற்கு மட்டும்தான் உதவும். பாடி, மெழுகு வர்த்தியை ஊதி அணைத்தவுடன், அனைவரும் இந்த கேக் அருகே நின்று ஒரு போட்டோ. அத்தோடு சரி..

பிரியாணி- கபாப்- குருமா என்ற ஐட்டங்கள் வெளியே வந்ததும் இந்த கேக் சுத்தமாக மறக்கப்படும். இந்த காரமான உணவு முடிந்தவுடன் பாயாசம் மற்றும் குலாப் ஜாமூன் வர, இந்த கேக் தன்னை தொட ஆள் இல்லாமால் அருகே இருக்கும்.

முழு கொண்டாட்டமும் முடியும் தருவாயில், அனைவரும் கிளம்புகையில்  யாராவது ஒருவர்..

"அய்யய்யோ,.. இந்த கேக் அப்படியே இருக்கே, யாருக்காவது வேண்டுமா "
என்று கேட்க்க.. அனைவரும் தப்பித்து ஓடுவார்கள். கடைசியில் இந்த பிறந்த நாள் கேக் அங்கேயே குப்பையில் தள்ளப்படும்.

இந்த விஷயத்தை நான் பேச்சுக்காகவோ அல்ல நகைச்சுவைக்கோ சொல்லவில்லை. இங்கே அமெரிக்காவில் வாழும் நண்பர்கள் இந்த காரியத்தை கண்கூட கண்டு இருப்பார்கள்.  இதை குப்பையில் போடும் போது வயிர் எரியும்.  சிறு வயதில் 35 காசு கொடுத்து ஒரு" க்ரீம் பன்" அல்ல 50 காசு கொடுத்து ஒரு "கப் கேக்" வாங்கி சாப்பிட நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்.

காசு கொடுத்து ஒரு புகை படத்தை எடுத்து கொண்டு அதை அப்படியே குப்பையில் கொட்டுவது... என்ன கொடுமை?

இத்தனைக்கும் இந்த கேக் மிகவும் ருசியாக இருக்கும். விலையும் குறைவு இல்லை. எங்கே போய் சொல்வது இந்த அநியாயத்தை.

சரி.. திடீரென்று ஏன் இந்த கேக் பதிவா? நல்ல கேள்வி.

ஏற்கனவே சொல்லியது போல் இந்த வாரம் "நன்றி திரு நாள்" வாரம் ஆனதால், குடும்பத்தோடு வெளியே கிளம்பிவிட்டோம்.

"லாஸ் அஞ்சல்ஸ்" நகரில் ..சுற்றி கொண்டு திரிகையில்... என் மூத்த மகள்,

டாடி... இங்கே இருந்து "பீவேர்லி ஹில்ஸ்" (Beverly Hills) எவ்வளவு தூரம் என்றாள்.

"பீவர்லி ஹில்ஸ்" நமக்கு எதற்கு மகள் என்றேன்? (ஹாலிவுட் ஜாம்பவான்கள் அநேகர் வாழும் இடம் அது, அதை ஏன் நம் மகள் கேட்கின்றாள் என்ற ஒரு கேள்வி குறி)

இல்ல டாடி.. அங்கே ஒரு கேக் கடை இருக்கின்றது. மிகவும் பிரபலமான கடை அது. அந்த கேக் உலகிலேயே மிகவும் பெயர் பெற்ற கேக் என்றாள்.

இருக்கலாம் மகள், ஆனாலும் இன்று விடுமுறை ஆயிற்றே, அதனால் அந்த கடை மூடி இருக்கலாம்.

டாடி, இந்த கடையின் விசேஷமே.... இது வருடத்தின் 365 நாட்களும் திறந்து இருக்கும் அது மட்டும் அல்லாமல் 24 மணி நேரமும் திறந்து இருக்கும்.

என்ன மகள், ஒரு கேக் கடை இவ்வளவு பிரபலமா?

ஆமா டாடி.. அங்கே வாங்க, இந்த கடையின் இன்னொரு முக்கியமான விஷயத்தை செல்கின்றேன்

 என்று என் ஆர்வத்தை தூண்டினாள்.

மகள், அந்த இடம் இங்கே இருந்து ஒரு 40 கிலோமீட்டர்.. ஒரு  கேக் சாப்பிட இவ்வளவு தூரம் செல்ல வேண்டும்மா என்று (மனதில் நினைத்து கொண்டே, அவளிடம் கேட்காமல் .. வண்டியை விட்டேன்)

"பெவெர்லி ஹில்ஸ்" ஒரு பணக்கார இடம். விலாசத்தை வண்டியில் போட்டு அந்த இடத்தை சேர்ந்தோம். அருகே பார்கிங்கில் இடம் இல்லை. 5 நிமிடம் கழித்து அங்கே இருப்பவர்  ஒருவர் வண்டியை எடுக்க அந்த இடத்தில நான் நிறுத்த..என் இளைய மகள்

அப்பா .. உங்கள் க்ரெடிட் கார்ட் ஒரு நிமிடம் தாருங்கள் ....

ஏன் மகள்?

இங்கே பார்கிங் பண்ண காசு கட்ட வேண்டும் ...

அட பாவி... ஒரு கேக் வாங்க 40 கிலோ மீட்டர் அதற்க்கு பார்கிங் கட்டணம் வேற .. என்று அலுத்து கொண்டே கடை நோக்கி .. இந்த கடையின் அதிசயம் என்று மூத்தவள் சொன்னாலே என்று அது என்னாவாய் இருக்கும் என்று நினைத்து கொண்டே கடை கதவை திறக்க முயன்றேன்.

டாடி.. அந்த கதவு திறக்காது...

ஏன் மகள்.. பிறகு எப்படி மற்றும் எங்கே கேக் வாங்குவது?

இந்த ATM போல இருக்கே.. இங்கே தான் வாங்க வேண்டும்.

என்ன  ? கேக் வாங்க ATM ...மா ?

ஆமா டாடி ,

என்று மூத்தவள் சொல்ல இளையவள் தனக்கு வேண்டியவைகளை அதில் டைப் செய்து கொண்டு இருந்தாள்.

எங்கள் நால்வருக்கும் ஆளுக்கொரு கேக் என்று எழுத ஒவ்வொன்றாக அந்த சிறிய பெட்டியில் வந்து விழ, மூத்தவள் ரெண்டு கேக் மற்றும் இளையவள் ரெண்டு கேக் விகிதம் எடுத்து கொண்டு காரை நோக்கி நடந்தனர். நான் காரின் மறுபக்கம் சென்று ஓட்டுனர் இடுக்கையில் அமர்ந்து வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.


5 நிமிடம் கழித்து தாய் மற்றும் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து தம் தம் கேக்கை ரசித்து உண்ண ஆரம்பிக்க, எனக்கும் நாக்கில் ஜொள் தட்டியது.

மகள் ... என் கேக் எங்கே...

சாரி டாடி.. உங்களுக்கு இல்லை..

நாலு தானே வாங்கினோம்..

ஆமா ...

இங்கே மூணு இருக்கு , அந்த நாலாவது எங்கே..

ஒ, அதுவா.. அந்த கடையில் இருந்து காருக்கு வரும் வழியில் உங்களுடைய கேக் கை தவறி கீழே விழுந்து விட்டது.

என்னாது... என்னுடைய கேக் கீழே விழுந்து விட்டதா?

ஆமா டாடி.. அவள் கையில் ரெண்டு என் கையில் ரெண்டு எடுத்து கொண்டு வந்தோம் அல்லவா.. அவளிடம் அம்மாவின் கேக்கும் அவளின் கேக்கும் இருந்தது. என்னிடம் என் கேக்கும் மற்றும் உங்கள் கேக்கும் இருந்தது.
உங்களின் கேக் என் கை தவறி கீழே விழுந்து விட்டது.

கீழே விழுந்தது என் கேக் எப்படி என்று முடிவு செய்தீர்கள்?

டாடி..? இந்த கையில் என் கேக் இருந்தது அல்லவா.. அதை நான் மிகவும் கவனமாக வைத்து கொண்டு இருந்தேன். கவனக்குறைவாக இருக்கும் போது கீழே விழுந்தது தான் உங்கள் கேக்.

அது சரி மகள்.. கவனகுறைவா இருக்கும் போது விழுந்தது ஒத்து கொள்கிறேன். ஆனால் அது தான் என் கேக் என்று எப்படி முடிவு செய்தாய்?

அய்யோ... டாடி.. யாரவது தன்னுடைய சொந்த பொருளை பாதுகாத்து கொள்வதில் கவன குறையாக இருப்பார்களா? அதினால் தான். என் பொருளை நான் பத்திரமாக பாத்து காத்தேன். உங்கள் கேக் கீழே விழுந்து விட்டது.

சரி மகள்.. என்ஜாய் யுவர் கேக்..

என்று நான் மனதில் அழ மூவரும் சிரிக்க.. இளையவள்..

டாடி.. தே ஆர் கிட்டிங் யு. இதோ உங்கள் கேக் என்று எடுத்து கொடுத்தாள்

சும்மா சொல்ல கூடாது... ரொம்ப பேஷா தான் இருந்தது அந்த கேக்...


16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. உங்க ஊரில் இந்த மாதிரி இருக்கா ? துளசி அவர்களே.

      நீக்கு
  2. //கீழே விழுந்தது என் கேக் எப்படி என்று முடிவு செய்தீர்கள்?//
    கலக்கலோ கலக்கல் போங்க.
    அருமையான நரேஷன்
    உங்கள் குழந்தைகள் உங்களை விட புத்திசாலிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நியாயம் ஐயா இது. மொத்தம் வாங்கியது நாலு கப் கேக். அதில் கீழே விழுந்தது என் கேக்... கேக்குறவன் கேனையானா இருந்தா... கெட்ட கேக் நம்ம கேக்...

      நீக்கு
    2. அப்பாக்கள் என்றாலே mostly அந்த category தான்.. அதுவும் சுவை தான் ஒரு காலகட்டம் வரை.
      சரிதானே.. :)

      நீக்கு
    3. வாங்க நண்பா..ஒரு சுவையான கால கட்டம் தான். சரியாக சொன்னீர்கள்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. நிஜமாகவே அந்த கேக் மிகவும் நன்றாக இருந்தது ஐய்யா...

      நீக்கு
  4. வாங்க தனபாலன். இந்த கேக் முட்டையோடு செய்தது ஆயிற்றே... நீங்கள் எப்படி இதை ரசித்து...

    பதிலளிநீக்கு
  5. Mcrennet சாக்லேட் கேக் சாப்பிடுவது மாதிரியான சுவையான பதிவு. உணவுப்பண்டங்களை வீணாக்குவதைப் பார்க்கும் போது உங்களைப் போன்றே எனக்கும் வருத்தம் தோன்றுவதுண்டு.

    பதிலளிநீக்கு
  6. என்னைப் போலவே நீங்களும் ஒரு அப்பாவியான அப்பாவா? அப்பாக்கள் எப்போது இளிச்சவாயர்களாக இருப்பது ஏன்? இதைப் பற்றி நீங்கள் பதிவு போடலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழா ... வருகைக்கு நன்றி. "இளிச்ச வாய் அப்பாக்கள் " நல்ல தலைப்பு தான். இந்த தலைப்பில் பதிவுலக ஜாம்பவான் நீங்கள் ஒரு பதிவு போடுவதே சரி.
      தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது என்று சும்மாவா சொன்னார்கள் .

      நீக்கு
  7. எனக்கு பிறந்தநாள் என்றாலே அலர்ஜி. நாங்கள் பிறந்த நாளை விழாவாக கொண்டாடுவதில்லை. இந்த முறை என் மகள் அவளின் நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து கொண்டாட வேண்டும் என்று விரும்பினாள்.அதற்காக கேக் வாங்கியடில் கால் பங்கு கேக் மட்டும் உபயோமாகியது மேலும் கால்பங்கு கேக்கை 2 நாள் வைத்து சாப்பிட்டோம். மீதி குப்பையில்தான் போய் சேர்ந்தது. அதுமட்டுமல்லாமல் உணவும் அப்படிதான் போய் சேர்ந்தது. வழக்கமாக மிஞ்சும் உணவை மற்றவர்கள் எடுத்து செல்லுவார்கள் ஆனால் இந்த தடவை தேங்க்ஸ் கிவ்விங்க் டேய் வந்ததால் எடுத்து செல்லவில்லை.

    பதிலளிநீக்கு
  8. வாங்கிய உணவு வேஸ்ட் ஆகுவது மிகவும் வருத்தம். எத்தனை பேர் உணவே இல்லாமல் இருக்கின்றார்கள்! உங்களைப் போலத்தான் நாங்களும்...இங்கெல்லாம் வேஸ்ட் செய்வதில்லை. பிறந்தநாள் கொண்டாடுவதும் இல்லை....

    பரவாயில்லை மகள்களிடம் கலாய்ச்சல் வாங்குவதும் ஒரு சந்தோஷமே இல்லையா நண்பரே! சரி அடுத்த பதிவுகளை நாளை வந்து வாசிக்கின்றோம்...ஒரு வாரம் வலைப்பக்கம் வர இயலாததால் நிறைய சேர்ந்துவிட்டன....

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...