வியாழன், 29 ஜனவரி, 2015

"அவளுக்கென்ன அழகிய முகம்"

இந்த வருடம் துவக்கத்தில் இருந்து நான் இங்கே பதிவகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டேன் . 

இப்போது என் பதிவுகள் என் மற்ற வலைத்தளமான 

www .visuawesome .com 

என்ற இடத்தில் வருகின்றது. தாங்கள் தொடர்ந்து அங்கே வந்து படித்து கருத்து கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.  





சிறு வயதில் இருந்து என்னை கவர்ந்த ஒரு பாடல். அவளுக்கென அழகிய முகம். இந்த பாடலை முதல் முதலாக கேட்கும் போது எனக்கு ஒரு 14-15 வயது இருந்து இருக்கும்.  என்றாவது ஒரு நாள் வானொலியில் வரும். இந்த காலத்தில் எப்போது எந்த பாடல் வேண்டும் என்றாலும் நொடிபொழுதில் கேட்டு - பார்த்து விடலாம், ஆனால் அந்த காலத்தில் ஒரு பாடலை பார்க்கவேண்டும் என்றால் சினிமா தியட்டர் போனால் தான் உண்டு.

இந்த பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தி அமைப்பில் சௌந்தராஜன் பாடிய பாடல்.  இந்த பாடலை பற்றி பேசும் முன் இந்த படம் வந்த கதையை பற்றி சில வரிகள்.



ரயில்வேசில் வேலை செய்து கொண்டே மாலை நேரங்களில் நாடகங்களில் நடித்து வந்த குண்டு ராவ் (நாகேஷ்) அவர்கள், பாலச்சந்தரிடம் அவர் இயக்கம் நாடகங்களில் தனக்கு வாய்ப்பு தரும் படி தொலை கொடுத்து கொண்டே இருந்தார்.  நாகேஷின் ஆர்வத்தையும் திறமையையும் கண்ட பாலச்சந்தர் அவர்கள், நாகேஷிற்கு பொருத்தமாக  "சர்வர் சுந்தரம்" என்ற புது நாடகத்தையே எழுதி விட்டார். நாடகம் மிகவும் அபார வெற்றி பெற, அதை பற்றி கேள்வி பட்ட A.V மெய்யப்பன் செட்டியார் , அந்த நாடகத்தின் உரிமையை வாங்கி கொண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படத்தை தயாரிக்க ஆரம்பித்து விட்டார். இந்த கதை பாலச்சந்தர் அவர்கள் கதை ஆயிற்றே? அதனால் அவர் திரைகதையை அவர் எழுதினால் தான் நன்றாக இருக்கும் என்று எல்லாரும் கூற, பாலச்சந்தர் திரை கதை வசனத்தில் நாகேஷ், முத்துராமன் மற்றும் விஜயா, மனோரமா  அவர்கள் நடிப்பில்  படம் உருவாகியது.

இந்த படம் நான் பிறக்கும் முன் வெளிவந்த படம். நான் இந்த படத்தை பார்க்கும் முன் இந்த "அவளுக்கென அழகிய முகம்" பாடலை நிறைய முறை கேட்டு இருந்தேன். ஒவ்வொரு முறை கேட்கும் போதும், இது MGR பாடலா? சிவாஜி கணேசன் பாடலா? என்று என்னை நானே கேட்டு கொள்வேன்.

பின்னர் ஒரு நாள் அருகில் இருந்த கடையில் "சர்வர் சுந்தரம் " பாடல் புத்தகத்தை புரட்டி கொண்டு இருக்கையில் இந்த பாடலின் வார்த்தைகள் கண்ணுக்கு எதிரில் வந்தன .

அடே டே, இந்த பாடல் முத்து ராமன் -  KR விஜயாவிற்கு எழுதியதா என்று வியந்தாலும், இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் இந்த பாடல் நன்றாக பொருந்தும் என்று நினைத்து வந்தேன். அன்றில் இருந்து இந்த பாடலை எங்கே கேட்டாலும் முத்துராமனும் விஜயாவும் இதற்கு நடனம் ஆடுவது போல் ஒரு காட்சியை நானே எனக்குள் உருவாக்கி கொள்வேன்.

வருடங்கள் கழிந்தது. பின்னர் ஓர் நாள் அருகில் இருந்த சினிமா கொட்டகையில்  இந்த படம் வெளிவர , இந்த பாடலை பார்க்க ஆவலோடு ஓடினேன்.

படம் ஆரம்பித்தது.. கதை ஓடியது.. இந்த பாடல் ஆரம்பிக்கையில் ஆச்சரிய பட்டுவிட்டேன். பாடலை எடுத்த விதம். அன்றைய நாட்களில் இருந்த இசை கலைஞ்சர்களை எல்லாம் அழைத்து விஸ்வநாதன் அவர்கள் எடுத்த பாடல். அதில் இசை கருவிகளை மீட்டுபவர்கள் எல்லாரும் அந்த காலத்து ஜாம்பவான்கள்.
அருமை, அருமை. பாடல் ஆரம்பிக்கையில் விஸ்வநாதன் அவர்கள் கை அசைத்து ஆரம்பிக்க சங்கர் - கணேஷ் (சங்கர் என்று நினைக்கின்றேன், காரிகன் அவர்கள் பார்த்து சொன்னால் நன்றி) பாங்கோசை தட்ட ஆரம்பிக்கும் பாட்டு.

TMS  பாட ஆரம்பிக்க  காட்சி நாயகனை நோக்கி நகரும். முத்துராமன் வருவார் என்று காத்து கொண்டு இருந்த நான் நாகேஷ் அவர்களை பார்த்தவுடன் ஆச்சரிய பட்டுவிட்டேன் .

என்னே ஒரு அற்புதம். நான் பார்த்த தமிழ் பாடல்களிலே இவ்வளவு சாதாரணாமாக எந்த ஒரு நடிகனும் இவ்வளவு அழகாக நடித்து இருக்க முடியாது. முக அசைவு, உடல் அசைவு , கண் அசைவு .. நடனம் என்று நாகேஷ் அவர்கள், ஒரு அற்புதமான விருந்து அல்லவா படைத்தார்.
எத்தனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம். அவ்வளவு அருமை.
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் - கேட்கும் போதும் ஒரு புதிய விஷயம் கிடைக்கும்.

இந்த பாடலை ஒரு முறை இங்கே பார்த்து விட்டு தொடரலாமே...


இதில் கூர்ந்து கவனியுங்கள். 1:30 ல் ""வா வா என்பதை விழியில் சொன்னாள், மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள் " என்று பாடிய பின் அவருக்கே உரிய பாணியில் ஒரு சிறு நடை நடந்து  1.42ல் மீண்டும் "அவளுக்கென்ன" என்று ஆரம்பிப்பாரே.. அட்டேங்கப்பா ... அந்த ஒரு நொடி  என்னே ஒரு டைமிங். இவர் தமிழ் திரை உலகத்திற்கு கிடைத்தது நாம் செய்த பாக்கியம் தான் .
நாகேஷ் அவர்கள் அசத்தி விட்டார். என்னை பொறுத்தவரை இந்த பாடலை வேறு எந்த ஒரு நடிகனாலும் இவ்வளவு அருமையாக செய்து இருக்க முடியாது என்று சொல்வேன்.

இது போல் எத்தனை பாடல்கள் ..  நன்றி நாகேஷ் அவர்களே.. அருமையான நினைவுகளுக்கு ... நன்றி.

www.visuawesome.com

நண்பர்களே,
என்னுடைய பதிவுகளும் மற்ற படைப்புகளும் www.visuawesome.com  என்ற தளத்திற்கு மாற்ற பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த  Blog Spot  ல் அடியேன் இருக்க மாட்டேன்.என்எழுத்துக்கள் தங்களுக்கு பிடித்து இருந்தால் www.visuawesome.com  என்ற தளத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர் பார்த்து..

4 கருத்துகள்:

  1. விசு,

    அவளுக்கென்ன அழகிய முகம். என்னவொரு அருமையான அற்புதத் தேன்துளி? என்னுடைய பின்னூட்டம் நீண்டால் சற்று பொறுத்துக்கொள்ளவும். ஏனென்றால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல் இரண்டு வரிகளில் விவரிக்க முடியாதது.

    இந்த மாதிரியான சட்டனெ நம்மை மனதை கொள்ளையிடும் பாடல்கள் எழுபதுகளோடு முடிந்துபோய்விட்டன. அதிலும் இந்தப் பாடல் ஒரு திடீர் சொர்க்கம் என்றே சொல்வேன். எனக்குத் தெரியாது எத்தனை முறை இந்தப் பாடலை நான் கேட்டிருப்பேன் என்று. முதலில் இந்தப் பாடலை நான் எம் ஜி ஆர் பாடல் என்றே நினைத்திருந்தேன். நாகேஷுக்கான பாடல் என்பதையே பிறகுதான் அறிந்தேன். ஆனால் நீங்கள் சொன்னதுபோல நாகேஷ் இந்தப் பாடலுக்கு மிகப் பொருத்தமானவர்தான் என்பதை இந்தப் பாடலை பார்த்த போதுதான் தெரிந்துகொள்ள முடிந்தது. அதுவும் 2;14 இல் அவர் செய்யும் அந்த சேஷ்டை நம்மை மெய்மறக்கச் செய்யும். (மைக்கல் ஜாக்சன் வருவதற்கு முன்பே நம் நாகேஷ் மேற்கத்திய நடனத்தின் புதிய வடிவத்தை கொண்டுவந்துவிட்டார்.)

    இந்தப் பாடல் மற்றொரு அற்புத தகவல் கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக பாடலின் வடிவம் அதன் இசை அமைப்பிலிருந்து இசை அமைப்பாளர், அவர்களின் இணைப்பு , பின்னர் பாடகர் என்று பரிமாணம் அடைந்து இறுதியில் நாகேஷ் என்று முடியும். இதைப் போன்ற இன்னொரு பாடல் அமைப்பு தமிழ்த் திரையில் இதன்பின் வந்ததேயில்லை. இன்றைக்கும் கிறக்கம் கொடுக்கும் இசை என்ற போதையின் நவீன வடிவம்.

    விசு, மிக்க நன்றி. இந்தப் பாடலைப் பற்றி என்னை எழுத வைத்தற்கு. கூடுதல் தகவல்; விஸ்வநாதன் மட்டுமே இந்தப் பாடலில் தோன்றுவார். ராமமூர்த்தி இருக்கமாட்டார். அவர் வருவதற்குள் இந்தப் படப்பிடிப்பு நடைபெற்றதால் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இடையே முதல் விரிசல் தோன்றியது என்று கூட சொல்வார்கள்.

    விஸ்வநாதனுக்காகவே இந்தப் பாடலை அப்போது பலர் இந்தப் படத்தைப் பார்த்ததாக இன்னொரு தகவல் உண்டு.

    பதிவில் என் பெயரை குறிப்பிட்டு சங்கர் (கணேஷ்) என்று சொல்லியிருந்தீர்கள். அதற்கு நன்றி. அப்போது சங்கர்-கணேஷ் விஸ்வநாதன் ராமமூர்த்தி யிடம்தான் இருந்தார்கள். நீங்கள் சொன்னது சரியாகவே இருக்கலாம். காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ்-சச்சு பாடலின்(மலரென்ற முகமொன்று சிரிக்கட்டும்) முன் சங்கர் கணேஷ் தோன்றுவார்கள் என்பது மட்டும் தெரியும்.

    பதிலளிநீக்கு
  2. //இந்த மாதிரியான சட்டனெ நம்மை மனதை கொள்ளையிடும் பாடல்கள் எழுபதுகளோடு முடிந்துபோய்விட்டன. அதிலும் இந்தப் பாடல் ஒரு திடீர் சொர்க்கம் என்றே சொல்வேன்//

    தவறு காரிகன். சொர்க்கம் எண்பதுகளிலும் நீண்டிருந்த து. நீங்கள் அறிந்திருக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  3. "அவளுக்கென்ன" பாடலில் நாகேஷ் ஜோடியாக நடித்த நடிகையின் பெயா் என்ன நண்பர்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கேள்வியை கண்டவுடன் சர்வர் சுந்தரம் படத்தில் டைட்டில் பார்த்தேன். நடிகைகள் வரிசையில் KR விஜயா , SN லட்சுமி, மனோரமா, VR திலகம், L காஞ்சனா, சாந்தா, ரமாதேவி என்ற பெயர்கள் வந்தது.

      இதில் KR விஜயா , மனோரமா , காஞ்சனா நாம் அறிந்தவர்கள். மற்ற பெயர் கொண்டவர் யாராவதாக தான் இருக்க வேண்டும்.

      அந்த நடிகையும் இந்த பாடலுக்கு மிகவும் சிறப்பாகவே ஆடி நடித்தார்கள்.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...