திங்கள், 28 செப்டம்பர், 2020

பரீட்சையினாலும் விடமாட்டேன்..

80 களின் ஆரம்பத்தில்..

ஹிந்தியில் எந்த படம் வந்து ஹிட் ஆனாலும் அதை K R பாலாஜியின் புண்ணியத்தில் தமிழில் ரஜினி அல்லது கமல்ஹாசனை வைத்து பார்த்துவிடுவோம்.


இப்படி அடித்து பிடித்து ஹிந்தி படத்து காப்பி ரைட்டை வாங்கும் பாலாஜியை முந்தி கொண்டு மலையாள இயக்குனர் IV சசி எதோ ஒரு தயாரிப்பாளரை வைத்து ஹிந்தியில் தர்மேந்திரா நாயகனாக நடித்து வந்த Jugnu படத்தை குரு என்ற டைட்டிலோடு கமல் ஹாசனை வைத்து எடுத்தார். நாயகி ஸ்ரீதேவி.

படம் என்னமோ ஹிந்தியில் போடு போடு என்று போடடாலும் தமிழில் அவ்வாறான வெற்றியை பெறவில்லை.

இசை இளையராஜா..

ஆடுங்கள் பாடுங்கள்..

பறந்தாலும் விடமாட்டேன்

பேரை சொல்லவா..

எந்தன் கண்ணில் ..

இப்படி பட்ட சூப்பர் ஹிட் பாடல்களும் மற்றும், 

தயாரிப்பாளர் சொன்ன பணத்தை தரவில்லையே என்னமோ 

மாமனுக்கு பரமக்குடி

நான் வணங்குகிறேன் 

என்று 

"இது இளையராஜாவா கம்போஸ் பண்ணாரு!!!?"

 என்று கேட்கும்  படியான இரண்டு பாடல்களும் நிறைந்த படம்.

சரி .. தலைப்பிற்கு வருவோம்.

B .Com  இறுதி ஆண்டு.

எப்படியும் அரியர்ஸ் எதுவும் இல்லாமல் பாஸ் பண்ணவேண்டும் என்ற ஒரு நிலைமை. இறுதி செமெஸ்டரில் " Income Law - Practicals"என்ற ஒரு பாடம்.  இந்த பாடம் மிகவும் கடினமாக ஒன்றாக இருந்தாலும் ஒழுங்காக கவனித்து படித்தால் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறலாம். 

ஒழுங்காக படிப்பதற்கு நாம் எங்கே போவோம்? அதனால்.. என்னால் முடிந்தவரை படித்து விட்டு, இனிமேலும் முடியவில்லை என்று கடைசி தஞ்சமாக பிரைவேட் டுயூஷன் எடுக்க ஆபத்வாந்தவான் "எழில்" வாத்தியாரிடம் செல்ல..

"என்ன விசு, இன்னும் ரெண்டு மாசம் தானே இருக்கு ? ஆறு மாச சிலபஸை எப்படி கவர் பண்ண போறோம்"?

"சாரி, எப்டியாவது ஹெல்ப் பண்ணுங்க, எழில்! நான் பாஸ் பண்ணியே ஆகணும், இது வாழ்க்கை பிரச்னை"

"உனக்குன்னு தனியா எடுக்க முடியாதே, விசு! இன்னும் ரெண்டு மூணு பேர் பேர் இருந்தா!!?"

"பிரச்சனையே இல்ல"

வகுப்பில்..

"யாருக்காவது income Tax - Practicals பாடத்தில் உதவி தேவையா?"

ஏற குறைய அனைத்து நட்புகளும்..

"அந்த பாடத்தில் தேறுவது கஷ்டம்ன்னு தெரிஞ்சி அதை அரியர்சில் வைச்சிட்டோம், அதை நிதானமா அடுத்த வருஷம் பாத்துக்கலாம்"

"எழில் இரெண்டே மாதத்தில் முழு சிலபஸ் எடுக்குறேன்னு சொல்லி இருக்காரு. வாரத்துக்கு அஞ்சி க்ளாஸ், எனிஒன் இன்டெரெஸ்டட்?"

ஆறு பேர் அடித்து பிடித்து ஒத்துக்கொள்ள.. ஏப்ரல் மாதம் நடுவில் வர இருக்கும் இறுதி தேர்விற்க்கான புத்தகத்தை பிப்ரவரி இரண்டாம் வாரத்தில்  வாங்கினோம்.

"டே, எப்படியாவது பாஸ் ஆகிடு, பைல் ஆனா என் மூஞ்சிலே முழிக்காதேன்னு"

என்ற அசரீரோ ஒலிக்க..

சும்மா சொல்ல கூடாது. எழிலின் உதவியால் வருமான வரி நன்றாகத்தான் போனது. வாரம் ஐந்து நாட்கள் காலை ஐந்தில் இருந்து ஏழு வரை. அடுத்த இரண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை.

இன்னும் பத்து நாட்களில் பரீட்சை.

எழில்," இந்த சனி கிழமை காலை பத்து டு ஒரு மணி எல்லாரும் இங்கே வந்துடுங்க. ஒரு பைனல் ரிவியூ பண்ணலாம். பரீட்சையில் எப்படி  கேப்பாங்க, A B C செக்ஸனில்  என்ன என்ன கேள்வி வரும், எப்படி எப்படி பதில் எழுதணும்னு பார்க்கலாம்.  இத மிஸ் பண்ணிடாதீங்க! இரண்டு மாசம் படிச்சது வேஸ்ட்  ஆகிடும்"

என்று சொல்ல..

அனைவரும் தலையாட்டிவிட்டு விடை பெற, வெள்ளி மாலை வந்தது..

எனக்கும் ஒரு வருடம் முன்னால் B  Com  முடித்து CA படித்து கொண்டு இருக்கும் நண்பன் குரு,  காலிங் பெல்லை அடிக்க ..

"வாத்தியாரே.. !!!"

(நல்ல கேள்வி, உனக்கும் முன்னால B .Com  முடிச்சவன் உன்னை எதுக்கு வாத்தியாரென்னு கூப்பிட்றான் என்று நீங்கள் கேட்பது, அதை குருவிடம் தான் கேட்கவேண்டும்)

"நாளை காலை பத்தில் இருந்து ஒரு மணி வரை எந்த பிளானும் வைச்சிக்காத.. "

"என் வாழ்க்கையில் தான் உனக்கு என்ன அக்கறை குரு!!!"

"இருக்காதா பின்ன, இளையராஜாவை எனக்கு அறிமுகடுத்தியதே நீ தானே.. அதுக்கு நன்றி கடன்"

"புரியல!"

"நாளைக்கு காலையில் பத்து மணிக்கு, குரு"

"சுத்தமா புரியல, குரு"

"வாத்தியாரே, காலை பத்து மணிக்கு குரு"

"ஓ.. எழிலை நீ குருன்னு கூப்புடுவியா  குரு ?

"இப்ப எனக்கு புரியல!!! "

"பத்து மணிக்கு குரு குரு ன்னு என்ன சொல்ல வர குரு?":

"இப்ப தான் ஆபிசில் இருந்து வரேன், வாத்யாரே"

"வா, தப்பே இல்ல !!"

"எங்க ஆபிசில் பக்கத்துல என்ன இருக்கு"

"சொல்லு"

"ராஜா தியேட்டர்"

"அதுக்கு என்ன இப்ப!!!?"

"வாத்தியாரே, நாளைக்கு ஒரு நாள் மட்டும் காலை காட்சி.. IV சசி இயக்கத்தில்  கமல் ஹாசன் நடிப்பில் இளையராஜா இசையில்,  படத்து... பேரை சொல்லவா? அது நியாயமாகுமா ?"

"குரு!!!! "

"அதே தான், பத்து மணிக்கு ஆரம்பிச்சிடும்.. நான் ஒரு ஒன்பதரைக்கெல்லாம்  இங்கே வந்துடுறேன், பகல்காட்சியினாலும் விடமாட்டோம்" பாடினான்.

"ஓகே, குரு.. "

"ஓகே வாத்தியாரே.."

நினைவு வந்தது..

"குரு, நாசமா போச்சி..."

"ஆடுங்கள் பாடுங்கள்ன்னு இருக்குற நேரத்தில், இது என்ன நாசமா போச்சி?:

"நாளைக்கு காலை எழில்ட்ட பத்துமணிக்கு பைனல் ரிவிசன்".

"எதுக்கு!!!?"

"Income Tax - Practicals"

"ரொம்ப அவசியம்! அதை வேற ஒரு நாள் பாத்துக்கலாம்"

"ஐயோ, முடியாது குரு.. "

"வாத்தியாரே.. ஆறுமாசத்துக்கு ஒரு முறை பரீட்சை வரும், ஆனா இந்த பகல் காட்சி குறிஞ்சி பூ போல, பனிரெண்டு வருசத்துக்கு ஒரு முறை தான் வரும், வண்டியில் ஏறு, நேரா போய் எழில்ட்ட பேசிடலாம்"

வண்டியை கிளப்பி எழில் இல்லம் செல்ல ..

"எழில், நாளைக்கு கிளாசை ஞாயிறு திங்கள் போல வைச்சிக்கலாமா "

"இல்ல விசு, நாளைக்கு மதியம் மூணு போல திருவள்ளுவர் பஸ்ஸில் திருப்பதி போக போறோம், வர ஒரு வாரமாகும்.  குடும்பத்தோடு திருப்பதி போறோம்".

"இல்ல, அவசரமா ஒரு விஷயம், காலையில் கண்டிப்பா போகணும்.."

"உனக்கு என்ன பிரச்சனை? அம்மா எல்லாம் OK தானே.. "

"இல்ல, அது வந்து, காலை பத்து மணிக்கு குரு.."

"புரியல.. என்ன குரு.. ?"

குரு, "நீயே சொல்லு"

எழில் "குரு, நீ இவனுக்கு எடுத்து சொல்லு, போன வருஷம் நீ கூட இந்த ரிவிசன் எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிச்சினு என்கிட்டே மணிக்கணக்கில் சொன்ன தானே, இவனுக்கு சொல்லு"

குரு,"இல்ல எழில், ராஜா  தியேட்டரில், நாளைக்கு ஒரு நாளுக்கு மட்டும் காலை காட்சி   IV சசி இயக்கத்தில்  கமல்ஹாசன் நடிப்பில் இளையராஜா இசையில்..

"குரு!!!"

"அதே தான்"

என்னை விட எழில் அதிகமாய் உணர்ச்சிவசப்பட்டு..

"இப்ப என்ன பண்றது விசு, ஒரே ஒரு நாள் காலை காட்சியா, நல்லா தெரியுமா?"

குரு, "நாளை ஒரு நாள் மட்டும்ன்னு போஸ்டர் போட்டு இருக்கு..

"இப்ப என்ன பண்றது.." 

என்று மூவரும் மூளையை பிசக்க .. எழில் ஒரு பிரமாத பிளான் சொல்ல.. 

அடுத்த நாள் காலை ஒன்பதே முக்காலிற்கு எழிலின் இல்லத்தின் எதிரே என்னை தவிர மற்ற நட்புகள் இருக்க, அங்கே ஒரு நோட்டிஸ்..

'எல்லாரும் , பத்துமணிக்கு ராஜா தியேட்டருக்கு வந்து அங்கே காலை காட்சிக்கு ஒரு டிக்கட் வாங்கி உள்ளே வந்துடுங்க. விசுவும் நானும் அங்கே இருப்போம். மத்த விஷயங்களை அங்கே பேசிக்கலாம்"

எழிலும் இளையராஜா வெறியர் என்று அன்று தான் அறிந்தேன்.

பத்து மணிக்கு, ராஜா தியேட்டரில் டிக்கட் வாங்கி நானும் எழில் மற்றும் குரு அங்கே இருந்த கான்டீன் பெஞ்சில் அமர, மற்ற மாணவர்களும் வந்து சேர..

எழில், "இன்னைக்கு இங்க தான் டுயூஷன்!" 

என்று சொல்லி அங்கே இருந்த பெஞ்சில் அனைவரும் அமர..

" குரு, நீ உள்ள போ, பாட்டு வரும் போது மட்டும் வந்து எங்களை கூப்பிடு"

எழில் ஆணையிட குரு அடிபணிய, பைனல் ரிவிசன் தீர்க்க சுமங்களிப்பவ என்று முடிந்தது.



5 கருத்துகள்:

  1. பாடல்களுக்காக பல படங்கள் 'ஓடி' இருக்கலாம்...!

    பதிலளிநீக்கு
  2. பரவாயில்லை, நல்ல யோசனையா இருக்கே .பாட்டும் பார்த்தாச்சு , படிப்பையும் பார்த்தாச்சு .அப்புறம் என்ன இன்கம் டாக்ஸில் முதல் வகுப்பில் பாஸ் ஆகி இன்கம் கூடிப்போச்சு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசை என்னமோ தாசில் பண்ணத்தான் அமைஞ்சதேன்னவோ எருமை மேய்க்க தான் கதை போல..

      இன்கம் டாக்ஸ் தான் குடிச்சி, இன்கம் கூடல!

      நீக்கு
  3. அருமை! குரு எனக்கு பிடித்த ஒரு படம் ❤️

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...