புதன், 27 செப்டம்பர், 2017

மனைவி அறியா ரகசியமா?

"ஏங்க..!"

"சொல்லு..."

"அடுப்புல டீ வைச்சி இருக்கேன்.. அஞ்சி நிமிஷம் பக்கத்துல கடை வரை போயிட்டு வரேன்... சரியா எடுத்துடுங்க..."

"ஓகே ..!!!"

"திரும்பவும் சொல்றேன்.. கவனமா எடுத்துடுங்க..."

"எனக்கு ஒரு முறை சொன்னா நூறு முறை சொன்ன மாதிரி.. கவலையை விடு..."

"ஜாக்கிரதை.. மறந்துடாந்திங்க..!!"

"அம்மா தாயே.. !நீ கிளம்பு.. நான் அடுத்த அடுப்புல ஏறி உக்கார்ந்து எப்ப கொதிக்குதன்னு பார்த்துனே இருக்கேன்!

"இல்லைங்க.. அது கொதிச்சி கீழே  ஊத்துனா..?!"

"ஊத்துனா.. ?"

"அடுப்பு முழுக்க போயிடும். அதை சுத்தம் பண்றது ரொம்ப கஷ்டம். அப்புறம் வீடு முழுக்க தீஞ்ச வாசனை.."

"வேற..!"

"பாத்திரம் வெளியே எல்லாம் டீ தூள். கொஞ்ச எக்ஸ்டரா நேரம் விட்டீங்கனா
.. மொத்த பாத்திரமும் டேமேஜ்."



"அப்புறம்..?!"

"அந்த பாத்திரத்தை கழுவுறது ரொம்ப கஷ்டம்..அதுதான்."

"கவலைய விடு.. நீ கிளம்பு.."

இறுதியாக கிளம்பினார்கள். அடுப்பின் அருகே தான் நின்று கொண்டு இருந்தேன்....அலை பேசி அலறியது...

"வாத்தியாரே!?"

"சொல்லு பாணி.."

"யாரோ ஒரு பக்தா உன் முகநூல் ஸ்டேட்டஸ்க்கு  கேள்வி அனுப்பி இருக்கான்.."

"அவன் பக்தானு எப்படி தெரியும்?"

"இது ஒரு விஷயமா? இந்திய பொருளாதாரம் இன்னைக்கு போல எப்பவுமே
 இம்புட்டு  நல்லா இருந்தது  இல்லைனு எழுதி இருக்கான்."

"சரி, ஒரு அஞ்சி நிமிசத்தில் பதில் போடுறேன். இதை சொல்ல இந்தியாவில் இருந்து கூப்பிட்டியே.. நன்றி.."

"என்ன வாத்தியாரே..? இந்தியாவில் இருந்து அடிச்சி பிடிச்சி கூப்பிடுறேன்.. அஞ்சி நிமிசம்ன்னு சொல்றீயே..உடனே பதில் போடு..  இல்லாட்டி நீ பயந்துட்டேன்னு இன்னொரு கம்மெண்ட் போட்டுடுவான்."

"சரி... இக்கட சூடு.."

டீ  இன்னும் கொதிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டு...அருகே  இருந்த டைனிங் மேசையில் அமர்ந்து முகநூலை தட்டி... அந்த  M Sc  Botany  படித்து   பொருளாதாரத்தை பற்றி பேசிய அப்ரெண்டிஸ்க்கு பதில் தட்டி கொண்டு இருக்கையில்..மொத்த வீடே அலறியது..பயர்   அலாரம்...

ஓடி சென்று ஒரு டவலை எடுத்து ஒவ்வொரு அலாரமாக விசிறி விசிறி அணைத்து விட்டு, சமையலறை வர...சமையலறை முழுக்க புகை.. . அம்மணி சொன்ன அனைத்தும்..

அடுப்பை அணைத்து விட்டு.பாத்திரத்தை எடுக்கையில் கையில் சூடு பட பாத்திரம் கீழே விழ  மீதம் இருந்த டீ  தரை முழுக்க.. பாத்திரத்தை நீரில் வைத்து விட்டு .. ஐயோ அம்மா என்று அடுத்து என்ன செய்வது என்று அலறிக்கொண்டு இருக்கையில்..

"ஏங்க..?"

"சொல்லு.."

"டீ..!!?"

"நீ ஏலக்காய் போடலையா?"

"ஐயோ மறந்துட்டேங்க..."

"இஞ்சி தட்டி போட்டியா?"

"இல்ல.. சரியான நேரத்தில் அடுப்பை அணைச்சிங்களா?"

"அணைச்சேன், நீ எங்கே  இருக்க.. ?"

"இப்ப தான் பில் பே  பண்ணினு இருக்கேன்."

"எனக்கு ஒரு உதவி பண்ணேன்.."

"சொல்லுங்க.."

"ஒரே ஒரு "ஹெட் அண்ட் ஷோல்டர்" ஷாம்பு.. வாங்கின்னு வா."

"ஐயோ.. இன்னொரு  நாள் பார்த்துக்கலாம்.. இப்ப என்ன அவசரம்?"

"ஐயோ ப்ளீஸ் வேணுமே..."

"சரி திரும்பவும் உள்ளே போறேன்."

"அங்கே வாங்காத.  நேரா ரெண்டு மைல் போய் "ஆல்பர்ட்சன்" கடையில் வாங்கு."

"இங்கேயே இருக்கு வாங்கிக்கிறேன்."

"ஐயோ.. அங்கே ஒன்னு வாங்குனா இன்னொன்னு இலவசம்."

"வீட்டுல வந்து டீ குடிச்சிட்டு  போட்டா?"

"இப்பா தான் இஞ்சி ஏலக்காய் போட்டு இருக்கேன்.. நீ  போய் வாங்கினு வா.. டைம் சரியா இருக்கும்."

"சரி..அடுப்பு பக்கத்துலே இருங்க.. இஞ்சி ஏலக்காய் போட்டு கொதிச்சி அடுப்பு மேலே விழுந்தா.. சொத சொதன்னு .. அப்புறம் சுத்தம் பண்றது ரொம்ப கஷ்டம்.."


முதலில் அடுப்பு.. சுத்தம் செய்தேன்..

அடுத்து பாத்திரத்தை சுத்தம் செய்து மீண்டும் அதில் பாலை வைத்து டீ - இஞ்சி - ஏலக்காய்  போட்டு கொதிக்க வைத்து , ஜன்னல் மற்றும் கதவு அனைத்தையும்  திறந்து  விட்டு வீட்டில் உள்ள அம்புட்டு AC - FAN  - டவல் எல்லாவற்றையும் வீசி புகையை வெளியேற்றி ...தரையை சுத்தமாக துடைத்து , பிறகு பெருக்கி , மீண்டும் துடைத்து கொண்டு இருக்கையில்...

"ஏங்க..?"

"சொல்லு.."

"டீ.."


"குறைந்த சூட்டில் வைச்சி இருக்கேன்.. நீ வந்தவுடன் குடிக்க சரியா இருக்கும்."

"தேங்க்ஸ்... இங்கே ஒன்னு வாங்கினா இன்னொன்னு இலவசம் இல்லையாம்?"

"அப்படியா!!?"

"உங்களுக்கு யார் சொன்னா?"

"தண்டம் தான்."

"அவரு தான் இந்திய போய் ஒரு வருஷம் ஆக போதே..."

"போன வருஷம் சொன்னான்.."

"எனக்குன்னு வந்து வாச்சி  இருக்கீங்க பாருங்க.."

"ஏன்..?!"

"ஒன்னும் இல்லை.. சரி நான் வரேன்."

அடித்து பிடித்து பாத்ரூம் சென்று அங்கு இருந்து ஷாம்பு பாட்டிலை எடுத்து கொண்டு போய் காரில் மறைத்து வைத்து விட்டு மீண்டும் வந்து முழு வீட்டையும் ஒரு நோட்டமிட்டேன்... அனைத்தும் சரியாக இருந்தது..கொஞ்சம் வாசனை மட்டும்.

வாசனையை போக்க.. அம்மணி தயார் செய்து வைத்து இருந்த மீனை எடுத்து அடுப்பில் போட்டு பொறிக்க.. மீன் வறுவல் வாசனை இல்லத்தை சூழ...

நுழைந்தார்கள்..

"இந்தாங்க ஷாம்பு.. போன வருஷம் இலவசம்ன்னு இப்ப சொல்றீங்களே.."

"சாரி.."

"என்ன வாசனை.. ?"

"மீன் வறுவல்.."

"அதை ஏன்.. இப்ப... ?"

"நீ பசியா வருவேன்னு தான்."

"டீ..?"

"இதோ.."

என்று சொல்லி பரிமாற..

"ஏங்க,  இங்கே சமையலறையில் டவல்...?"

"குளிக்க போனேன்.. ஷாம்பு இல்லை.. அது தான் மறந்து டவலோட வந்துட்டேன்."

அனைத்தும் சுபமாக முடிய..இரவு..

"ஏங்க...?"

"சொல்லு.."

"நீங்க இனிமேல் டீய கொதிக்கவிட்டா பரவாயில்லை.."

"என்ன சொல்ற? நான் எப்ப? ஏன் அப்படி சொல்ற?"

இல்லீங்க.. டீ கொஞ்சம் கொதிச்சா போதும்.. முழு சமையலறை .. ஏன் வீடே சுத்தமாயிடுது.. அது மட்டும் இல்ல சமையல் எல்லாம் கூட ரெடி. "


எங்கே தவறினேன்..?

8 கருத்துகள்:

  1. ஹாஹாஹாஹாஹா...ஹலோ விசு நீங்களே உங்க புக்ல வீட்டம்மா லென்ஸ் வைச்சு எல்லாத்தையும் துப்பறிவாங்கனு சொல்லிட்டு பட்டம் வேற கொடுத்திட்டு..இப்ப எங்கே தவறினேன்னு கேட்டா?!!!ஹாஹாஹா..தெரிஞ்சும் இப்ப ஏமாந்துட்டீங்களே!!! ஐயகோ!!! ஹாஹாஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  2. நீங்க எங்க தவறவிட்டீங்கன்னு உங்களால கண்டே பிடிக்கமுடியாது. ஆனா, அம்மிணிக்கு தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது உங்க வீட்டில் நடந்து இருந்தா எப்படி கண்டு பிடிச்சி இருப்பீங்க?

      நீக்கு
  3. விசு நீங்க ரொம்ப நல்லா டீ போடுவீங்க என்று கேள்வி பட்டேன் நம்ம வீட்டிற்கு வந்து ஒரு டீ போட்டு தாங்கள்

    பதிலளிநீக்கு
  4. இந்த வம்புக்குத்தான் இதெல்லாம் எனக்குத்தெரியாதுன்னு பொய் சொல்லி வச்சிருக்கேன்

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கு மோடி மேல ஏன் இவ்வளவு கோபம்னு இப்ப புரியுது?

    பதிலளிநீக்கு
  6. மோடி மேலே கோவ படுறதுக்கு காரணம் வேணுமா? இது மோடி மேலே பொறாமை!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...