செவ்வாய், 24 ஜூலை, 2018

ஆணியை பிடுங்கும் VIPகள்

ஓகே..

கீழே குறிப்பிடபட்டுள்ள  இந்த வசதியெல்லாம் உங்களுக்கு வாழ்நாள் வரை மட்டும் இல்லாமல், நீங்கள் இறந்த பின்பும் தங்களின் அடுத்த பரம்பரைக்கும் இருக்கும் என்பதை நினைத்து கொண்டு இதை படியுங்கள்.

இலவச மின்சாரம்..
இலவச குடிநீர்..
இலவச ரயில் பேருந்து..
இலவச வெளிநாட்டு விடுமுறை..
இலவச விமான டிக்கட்..
இலவச வீடு..
இலவச அலுவலகம்..
காவலுக்கு குறைந்த பட்சமாக மூன்று போலீஸ் (தற்போதைய நிலை படி நம் நாட்டில் 736 குடிமகன்களுக்கு ஒரு போலீஸ் தான் வாய்த்துள்ளது. இதில் இந்த தேச தியாகிகளுக்கு 24  மணி நேரமும் மூன்று பேர்!)...
சாலையில் செல்லுகையில் போலீஸ் பந்தோபஸ்து..
அரசு நடத்தும் உணவகத்தில் குறைந்த விலையில் உணவு...
சாகும் வரை மற்றும் செத்தபின்பும் பென்ஷன் ( இது எப்படி என்று ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். மறைந்த நடிகர் SS சந்திரன் MP  யாக சில வருடங்கள் இருந்ததால் இன்று வரை அவர் குடும்பத்திற்கு கிட்டத்தட்ட மாதத்திற்கு  ஒரு லட்சம் பென்ஷன். நம்ம மானஸ்தன் கூட போன வருஷம் வரை அவர் நாட்டிற்காக செய்த தியாகத்திற்காக பென்ஷன், இந்த பென்ஷன் வகையில் மல்லையா. நடிகை ரேகா, அமிதாப் பச்சன்,டெண்டுல்கர் போன்றோர்கள் சேர்ந்து இருக்கவும் சேட்டை போகும் வாய்ப்பு இருப்பதும் கசப்பான உண்மை)

இவை மற்றும் இல்லாமல்..
எங்கேயும் எப்போதும் ஒரு வரிசையில் நம்மோடு நிற்க தேவை இல்லை.
இவர்களின் பிள்ளைகளுக்கு எந்த கல்லூரியிலும் இடம்.
இன்னும் பல பல லொட்டு லொசுக்கு.

மயங்கி விட்டீர்களா? முகத்தில் சற்று சில்லென்று தண்ணியை வீசி தொடர்ந்து படியுங்கள்.

யார் இவர்கள்?

ஒவ்வொரு நாட்டிலும் மிகவும் முக்கியமான நபர்கள் என்று சிலரை காட்டி அவர்களை VIP என்று அழைப்பார்கள். அவர்கள் அந்த அந்த நாட்டில் தற்போது வகிக்கும் பதவியை வைத்தும் , அவர்களின் சேவையை பொருத்தும், அவர்கள் அந்த நாட்டிற்கு இன்னும் செய்ய வேண்டிய விடயங்களை பொருத்தும் இந்த VIP பதவி அவர்களுக்கு தரப்படும். அந்த பதவியின் கூடவே சில சலுகைகளும் உண்டு.

இவ்வாறான VIP கள் எந்த எந்த நாட்டிற்கு எத்தனை  பேர் இருக்கின்றார்கள்   என்று சற்று பார்ப்போம்.

அமெரிக்க : 252
ஜெர்மனி : 142
இங்கிலாந்து : 84
பிரான்ஸ் : 109
ரஷியா  : 312
ஜப்பான்  : 125

இந்த வல்லரசு நாடுகளையும்  VIP எண்ணிக்கையையும் படித்து விட்டீர்களா? சந்தோசம்.
இந்த மாதிரி வளர்ந்த நாடுகள் எத்தனை எத்தனை VIP கள் வைத்து உள்ளார்கள் என்பதை இங்கே ஏன் சொல்கிறேன் என்று கேட்கின்றீர்கள். நல்ல கேள்வி.

இந்தியா : 579,092  (அதாவது ஐந்து லட்சத்து எழுபத்தி ஒன்பதாயிரத்து தொன்னூத்தி ரெண்டு)

அது சரி.. மற்ற நாடுகளுக்கு ஒப்பிடுகையில் நம் நாட்டில் ஜனத்தொகை அதிகமாயிற்றே அதனால் இந்த கணக்கு சரி தான் என்று நினைப்பவர்களுக்கு கூடுதல் தகவல்.

இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீன தேசத்து VIP 435 .

என்ன ஒரு அநியாயம்?

அவனவன் வாயை கட்டி வயிற்றை கட்டி வரி பணத்தை கட்டினால் இந்த நாட்டின் சாபக்கேடான அரசியல்வாதிகள் செய்யும் அநியாயம் தான் இது.

இந்த விஷ(ய)த்தை பொறுத்த  வரை  காங்கிரஸ் - பி ஜெ பி  - மாநில கட்சி என்று இல்லை.. அனைத்து கட்சிக்காரர்களும் கூட்டு களவாணியாக இந்நாட்டை சுரண்டும் கலாச்சாரம் தான் இது.

இந்தியாவின் இன்றைய VIP எந்த எந்த கட்சி என்று விசாரித்தால் காங் மற்றும் BJP சரி சமமாக இருக்கின்றது என்றே கேள்வி. என் முதுகை நீ சொறி உன் முதுகை நான் சொறிகிறேன் என்று தங்களுக்குள் ஒரு திட்டம் வைத்து மக்களின் வரிப்பணத்தை சுருட்டும் யுக்தி.

இன்னும் ஒரு படி மேல் போனால்.. நமக்கு வாய்த்த இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் கட்சி தாண்ட எதுவும் தயங்காதவர்கள்.  2014  ல் காங்கிரஸ் கட்சி சந்தித்த பெரிய தோல்வியை அடுத்து அந்த கட்சியை சார்ந்த கிட்ட தட்ட 50 % MLA கள் கடந்த சில வருடங்களில் BJP யை தழுவி அதிலும் MLA களாக  வலம் வருகின்றார்கள்.

சோற்றில் உப்பு போட்டு தின்றால் தானே மானம் ரோசம் இருக்கும். நம்ம ஊர் கவர்னர் பன்வாரி லாலை எடுத்து கொள்ளுங்கள். கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் - பி ஜெ பி என்று நாட்டில் எந்த கட்சி பிரபலமாக உள்ளதோ அதில் சேர்ந்து கொள்வார். அதன் மூலம் VIP தகுதி. ஆய்வு செய்ய போகிறேன் என்று ஆய் போகும் இடத்தில் எட்டி பார்ப்பார்.


இந்த ஐந்து  லட்சம் சொச்சம் இந்த வருட இறுதியில் ஆறு லட்சமாக மாற வாய்ப்புள்ளது. ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறும் போதும் சரி அடுத்த தேர்தல் வரும் போதும் சரி இந்த எண்ணிக்கை கூடும்.

இந்த VIP வரிசையில்  அரசியல் வாதிகள் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் சூதாடிகள் மற்றும் சினிமா கூத்தாடிகள் வேறு. இந்த சனியங்களுக்கு நம் பணத்தை வாரி வாரி கொடுப்பது மட்டும் இல்லாமல் இலவசமாக அழுது வைக்க   வேண்டி இருக்கின்றது.

என்ன ஆணியை புடுங்கினார்கள் என்று இவர்களுக்கு VIP பதவி.  இந்த VIP  கலாச்சாரம் கண்டிப்பாக ஒழிய வேண்டும். அதுவரை நமக்கு விமோசனம் இல்லை.


நெஞ்சு பொறுக்குதில்லையே ...

2 கருத்துகள்:

  1. சாட்டையடி கேள்வி தான்..

    ஒண்ணுமே செய்யாமல் சுகமாக வாழும் ...தி தி தி தியாகிகள்

    பதிலளிநீக்கு
  2. இப்படியெல்லாம் நடந்து விடக்கூடாது...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...