சனி, 21 ஜூலை, 2018

50+லும் ஆசை வரும்!

ஜூலை 20 . ஆம். "That's one small step for man, one giant leap for mankind,"  என்று  நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலை பதித்து விட்டு சொன்னாரே அந்த நாள் தான். அடியேனின் பிறந்த நாளும்.

ஒரு மாதத்திற்கு முன்னே ராசாத்திக்கள் இருவரும் என்ன பரிசு வேண்டும் என்று கேட்க, மனமோ என்னத்த பிறந்த நாளோ.. என்னமோ.. 53  ஆக போகின்றது. இனிமேல் என்ன பிறந்த நாள் என்று சொல்ல..

அவர்களோ.. "Age is just a number" என்ற அப்பட்டமான பொய்யை சொல்லிவிட்டு ... யோசித்து சொல்லுங்கள் என்றார்.

பிறந்த நாள் பரிசு...

வயது ஒன்றில் இருந்து ஆறு வரை என்ன விருப்பட்டேன் என்று நினைவில்லை.

ஆறில் இருந்து 13  வரை வெவ்வேரு பள்ளிகள் - விடுதிகள். பிறந்த நாள் என்பது எப்போது வரும் போகும் என்று தெரியாது. Nobody Cares! வாழ்த்துவதற்கே ஆள் இல்லை என்னும் போது, பரிசாவது கரிசாவது...
12  வது பிறந்தநாள் என்று நினைக்கின்றேன். பிறந்த நாள் வந்து போனதையே மறந்துவிட்டு மூன்று நாள் கழித்து பள்ளியில் எதோ ஒரு விண்ணப்பத்திற்க்காக பிறந்த தேதியை எழுதும் போதுதான் நினைவிற்கே  வந்தது. அவ்வளவு கொண்டாட்டம்.


14  இருக்கும் என்று நினைக்கின்றேன். இன்னொரு பள்ளி, இன்னொரு விடுதி. பள்ளியின் சீருடை வெள்ளை - வெள்ளை. பிறந்த நாளுக்கு மட்டும் வண்ண உடைகள் அணியலாம் என்ற எழுதப்படாத விதி.

என்ன விசு, பிறந்த நாளும் அதுவும் வெள்ளை - வெள்ளை?, இன்னைக்கு நீ கலர் கலரா போடலாம் என்று நண்பன் ராதா கிருஷ்ணன் சொல்ல, பிறந்த நாளும் நினைவுக்கு வர, வண்ண உடைகளை அணிந்து  கொண்டு பள்ளி சென்றேன்.

பள்ளியில் காலை அசெம்பிளி நடந்து கொண்டு இருக்கும் போது, PT மாஸ்டரிடம் இருந்து சிறிய நோட் வந்தது. அசெம்பிளி முடிந்தவுடன் நேராக  PT ரூமிற்க்கு வரவேண்டும் என்று.

அடே டே.. பிறந்தநாள் அன்று நமக்கு எதோ ஸ்பெஷல் ட்ரீட் போல் இருக்கு என்று சிரித்து கொண்டே சென்றேன். உள்ளே நுழைந்தவுடன்..

"பளார்" என்று ஓங்கி ஒரு அறை விட்டார். மயக்கமே வந்துவிட்டது!  ஏன் அடித்தார் என்று சுதாரிக்கும் முன்பு கையில் இருந்த மூங்கில் கம்பை வைத்து MGR நம்பியாரை அடிப்பதை போல் அடித்து விட்டார்.

சரியான வலி இருந்தாலும் அவர் ஏன் அடிக்கிறார் என்றே கேள்வி?  சென்ற வாரம் முழுக்க பள்ளியில் என்ன என்ன தவறு செய்தேன் என்று யோசித்து ..OMG ஒரு வேளை அந்த விஷயத்தை கண்டு பிடித்து இருப்பாரோ (அந்த விஷத்தை பற்றி பின்னர் எழுதுகிறேன்).

ஏன்டா .. சீருடை அணியவில்லை..

அலறியே விட்டேன், வார்த்தை வரவில்லை...

இன்னொரு முறை மூங்கில் கம்பு முதுகில் பட ..

கேக்குறேன் இல்லை... ஏன்டா சீருடை அணியவில்லை..

சாரி சார்.. துவைக்க மறந்துட்டேன். அவரிடம் பிறந்த நாள் என்று சொல்ல கூட மனம் வரவில்லை.

"இன்னொருமுறை இப்படி வந்த நடப்பதே வேறு, மைதானத்துக்கு போய் நாலு ரவுண்டு ஓடிட்டு வகுப்புக்கு போ"   என்று அதட்டிவிட்டு, வழியனுப்ப, நாலு ரவுண்டு ஓடி விட்டு வகுப்பை அடைந்தேன்.

நண்பன் ராதா கிருஷ்ணன், என் வலியை கண்ணீராலும் கையில் இருந்த தழும்பினாலும் கண்டு கொண்டான்.

என்ன ஆச்சி விசு?

ஒன்னும் இல்ல!

PT ஏன் கூப்பிட்டாரு?

ஒன்னும் இல்ல..

டே .. அழாம சொல்லு. என்ன ஆச்சி?

PT  ரொம்ப அடிச்சிட்டாரு ராதா!

என்ன தப்பு பண்ண...

யூனிபார்ம் ...

அட பாவி... இன்னைக்கு பிறந்த நாளுன்னு சொன்னீயா?

அவரு கேக்கவே இல்லை ராதா.. உள்ளே போனவுடனே அடிக்க ஆரம்பிச்சிட்டாரு..

நீ சொல்ல வேண்டியது தானே..

டே... அவரு எதுக்கு அடிக்குறாருன்னு தெரியலையே...

எப்படி யூனிபார்முக்கு ன்னு கண்டு பிடிச்ச?

அடிச்சி முடிச்சவுடன்.. அவரே சொன்னார்..

அப்பவாது சொன்னீயா...

என்னாது..?

உன் பிறந்த நாளுன்னு..

இல்லை..

ஏன்..

போ ராதா.. பிறந்தநாளாவது, மண்ணாங்கட்டியாவது.. வேணா விடு. எல்லா துணியும் அழுக்குன்னு சொல்லிட்டேன்.

சாரி விசு... நான் தான் உன்னை கலர் துணி போட சொன்னேன் .. ரொம்ப சாரி..

நீ என்ன பண்ணுவ விடு..

முதல் இரண்டு வகுப்பு முடிய இடைவேளை வந்தது. நேராக விடுதிக்கு சென்று வண்ணத்தை கழட்டி வைத்து வெள்ளைக்கு மாறி மீண்டும் வகுப்பில் நுழைந்தேன்..

வகுப்பில் PT ..

அவரை கண்டவுடனே.. மீண்டும் பயந்து.. (அழுக்கு என்று பொய் சொன்னேனே..  இப்போது சுத்தமான சீருடையோடு .. பொய் என்று போட்டு தள்ளுவாரோ என்ற பயத்தோடு நடுங்க..)

இங்கே வாடா...

சார்..

அவர் முகமே கலங்கி இருந்தது...

மனதில்..

அட பாவி.. அடி வாங்கியது நான் தானே.. இவரு ஏன் அழுது இருக்காரு? என்று நினைக்கையில்..

I am  Sorry .....

எனக்கோ..மேலும் பயம்..

முதல் வரிசையில் இருந்த ராதாவை உதவிக்காக பார்க்க ..அவனோ ஒரு புன்முறுவலை வீசினான்.

ஏன்டா சொல்லல?

எது சார்?

உன் பிறந்தநாளுன்னு...

மீண்டும் அழுதேன்..

நீங்க கேக்கலையே...

நான் கைய ஓங்கும் போதே..

சார்.. நீங்க ஏன் அடிக்க போறீங்கன்னு தெரியல...

என்னை மன்னிச்சுடு..

சார்..( என்ன தான் சொல்லு PT மாஸ்டர் செல்வராஜ் ஒரு ஜென்டில்மேன். தான் பண்ணது தவறு என்று தெரிந்ததும்  அனைத்து மாணவர்களின் எதிரிலும் கொஞ்சம் கூட தயங்காமல் மன்னிப்பு கேட்டார்)

என்னை மன்னிச்சுடு..

பரவாயில்லை .. வலி இல்லை சார்.

ராதா குறுக்கிட்டு..

சார்.. ரொம்ப வலின்னு சொல்லி அழுதான்.. அதனால தான் மனசு தாங்காம   உங்கள்ட்ட உண்மைய சொன்னேன்.

சாரி விசு...

பரவாயில்லை சார்..

இந்தா பணம்.. மதியம் முனியாண்டி விலாஸுக்கு போய் பிடிச்சதை வாங்கி சாப்பிடு...

வேணாம் சார்..

ராதாவிடம் பணத்தை கொடுக்க.. ராதாவும் பணத்தை பெற்று கொள்ள...

ராதா..

அந்த காசை பத்திரமா வை.. ஹோட்டல் வேணாம்..

என்ன சொல்ற?

ஒரு நல்ல பிளான் இருக்கு, என்று கிசுகிசுக்க..

வேணா விசு... மாட்டுனா PT பிச்சிப்புடுவாரு.

டே.. புரியாம பேசாத.. மாட்டினாலும் அடிக்க மாட்டார்.

எப்படி சொல்ற..

காலையில் வாங்கிய அடிய அதுல கழிச்சிக்குவாரு..

சத்தியமா சொல்றேன் விசு.. நீ எதிர்காலத்துல கணக்கு பிள்ளை தான்.

14  வயதில் வாங்கிய அந்த பிறந்தநாள் அடி மிகவும் பாதித்தால்.. அடுத்த சில பிறந்தநாளை கொண்டாடவில்லை.

அதோடு 23 வது பிறந்த நாள் தான்.. அந்த கதை வேற கதை. இன்னொரு நாள் சொல்கிறேன்.

பின் குறிப்பு :

டாடா.. பிறந்த நாளுக்கு என்ன வேணும்.

ஒரு குட்டி விமானம்..

பி பிரெக்டிகல் டாடா .. என்ன வேணும்.

ஒரு குட்டி விமானத்தில் கோ பைலட்டா லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி மேலே ஓட்டினு வரணும்.

ஓகே.. அம்மாட்ட கேட்டு வாங்கி தரேன்.

Still Waiting on an approval from Mumma. I might fly next weekend! Wish me luck!

11 கருத்துகள்:

  1. இரண்டு ராசத்திகள் கூட இருந்தாலே லாஸ் ஏஞ்சல் என்ன உலகத்தையே வானில் பறந்தமாதிரிதான் அதைவிட வேறு என்ன வேண்டும் உங்களுக்கு. அந்த ராசித்திகள்தான் உங்கள் வாழ்நாள் முழுவதற்கும் உங்கள் மனைவி உங்களுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு எஞ்சாய்

    பதிலளிநீக்கு
  2. ஆசிரியர் gentleman என்பதை காரணம் கேட்டுப் பிறகு அடிப்பதில் காட்டியிருக்கலாம்.
    பிறந்த நாளுக்கு வண்ணத்துணி அணியலாம் என்ற விதியை மறந்திருப்பாரோ?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக சக்தி .. கண்டிப்பாக அவர் மறந்து இருக்கலாம். மிகவும் நல்ல மனிதர் சக்தி. இன்றும் நான் ஒரு மனிதனாக நடந்துக்கொட்னு இருக்க இவர்கள் போல ஆசிரியர்களின் மூங்கில் கம்பும் ஒன்று.


      நீக்கு
  3. வாழ்த்துகள்...

    // (அந்த விஷத்தை பற்றி பின்னர் எழுதுகிறேன்).//

    அது என்ன...?

    பதிலளிநீக்கு
  4. பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  5. Dear Visu , Vishu a happy Birthday.. belated wishes ! !

    how are you getting those cartoons featuring you ? do you draw ??

    thappu pannal muttu pendhudum appadinnu irundhadhala thaan people from our generation were able to be righteous

    And by this time hope you had your wish of flying granted and succeeded ! !
    enjoy

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks Sarav. I dont draw, wish I could though. Its drawn by a good friend of mine. Thanks for dropping by.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...