திங்கள், 18 ஜூன், 2018

நூதன திருடர்கள் - சாக்கிரதை! (இறுதி பாகம்)

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

முந்தைய பதிவை  படிக்க இங்கே சொடுக்கவும்.

செக் எங்கிருந்து அனுப்ப பட்டு என்று பார்த்தால் சிக்காகோ நகரில் ஒரு ஹோட்டல் விலாசத்தில் இருந்து. அனுப்பியவர் பெயர் அறை எண்  என்று எந்த விவரமும் இல்லை.

சரி.. செக் தான் வந்து இருக்குதே.. அதுவும் கம்பெனி செக். வங்கியில் போட்டு வேலைய பார் என்று பொதுவாக நினைக்க தோன்றினாலும்... கொஞ்சம் அலசினேன்.

இவர்களின்  திட்டம்.

வீடு வாடகைக்கு என்று ஏதாவது ஒரு விளம்பரம் வந்தால், அதற்கு உடனடியாக தொடர்பு கொண்டு நாம் விரும்பும் படி பேசுவது. பிறகு ஏதாவது ஒரு கள்ள செக் அனுப்பி அதில் கேட்பதற்கும் அதிகமாக பணம்  அனுப்புவது. அனுப்பிய செக்கை நம் வங்கியில் போட சொல்லிவிட்டு அதில் இருந்து அதிகமாக அனுப்பிய பகுதியை இன்னொரு வங்கிக்கு மாற்றி விட சொல்வது.

நாமும் வங்கியில் செக்கை போட்டவுடன் அந்த பணம் நம் கணக்கில் க்ரெடிட் செய்யபடும். உடனே அவர்கள் சொன்னது போல் இந்த பணத்தை நாம் எடுத்து அவர்களுக்கு அனுப்பிவிடுவோம். பிறகு நான்கு நாட்களுக்கு பிறகு  அந்த செக் பௌண்ஸ் ஆகிவிடும். நம் கையில் உள்ள பணம் ஸ்வாஹா.



என்னாடா இது? இந்த சனியங்களோடு காத்து இருந்து ஒரு  வாரத்தை வீணடித்தோமே, என்று நினைக்கையில் ஒரு டெக்ஸ்ட்..

செக் வந்ததா?

You Freaking Morons, you are a Scamster. Shame that I have wasted a week on you. I am blocking you.

என்று ஒரு டெக்ஸ்ட் அனுப்பிவிட்டு..

காவல் நிலையத்தை அழைத்தேன்.

அவர்களிடம் பேசும் போது...

ஆபிசர்.. வீடு வாடகை என்று விளம்பரம் கொடுத்தேன்..

என்று ஆரம்பிக்க..

ஐயோ.. அவர்கள் அனுப்பிய செக்கில் இருந்து அவர்களுக்கு எவ்வவளவு அனுப்பி வைத்தீர்கள் என்று கேட்க..

நானோ.. அனுப்பவில்லை ஆபிசர். அதற்கு முன்பே சுதாரித்துவிட்டேன்..

என்று சொல்ல..

நீங்கள் சமத்து.  நிறைய பேர் இவர்கள் போன்ற ஆட்களிடம் ஏமாந்து உள்ளனர் என்று கூறி மற்ற சில விவரங்களை வாங்கி கொண்டு   அழைப்பை துண்டித்தனர்.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சேன்னு நினைக்கையில் அடுத்த டெக்ஸ்ட்.

அந்த வாடகை வீடு உங்களுடையதா ? நான் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 20  வயது பெண். தற்போது ஹவாய் தீவில் ஒரு ஆராய்ச்சி சம்பந்தமாக படிக்கிறேன். விலாசத்தை தாருங்கள். என் அப்பா உங்களுக்கு உடனே பணத்தை அனுப்புவார்...

என்று வர..

நானோ..

அவர் எதற்கு பணத்தை எனக்கு அனுப்பவேண்டும். பின்னர் அதை நான் உனக்கு அனுப்பவேண்டும். நேராக உனக்கே அனுப்பிவிட சொல் ..

என்று பதில் அனுப்பிவிட்டு ...

நான் ஒரு முட்டாளுங்கன்னு பாடி கொண்டே இருக்கும் போது..

அம்மணி..

ஏங்க ..

சொல்லு..

அந்த வீடு வாடகை விஷயம் பத்தி எங்க ஆபிசில் கொஞ்சம் விசாரிச்சேன்.

சொல்லு.

அதுல ரொம்ப ஏமாத்துறாங்களாம்..

அப்படியா?

அதனாலா..!

அதனால..?

அந்த விஷயத்தை நானே பார்த்துக்கிறேன், நீங்க இன்வால்வ் ஆகாதீங்க..

ஏன்..?

உங்களை நம்பி வாடகை சைக்கிள் கடையே வைக்க முடியாது.. வீடு எல்லாம் டூ மச். ஈஸியா ஏமாந்துடுவீங்க ...

எப்படி...ஒண்ணுமே விசாரிக்காம உன் கழுத்துல தாலிய கட்டினேனே, அந்த மாதிரியா?

அப்படி என்னை  கட்டி இல்லாட்டி.. இன்னேரம் நீங்களும் வாடகை வீடு தேடித்தான் அலைஞ்சினு இருந்து இருப்பீங்க.

என்று நக்கல் அடிக்க..

நானோ..

அதுவும் சரிதான் என்று ஆமோதிக்க..

பின் குறிப்பு:

அப்படியே இவர்களின் வார்த்தைக்கு மயங்கி நான் வங்கிக்கு சென்று அந்த 1600  டாலர்கள் எடுத்து  அனுப்பி வைக்கலாம் என்று நினைத்து இருந்தாலும் அது நடந்து இருக்காது.

ஏன்?

நம்ம வீட்டு அம்மணி தான் நம் வங்கியிடம் எங்க வூட்டுக்கார் 20  டாலருக்கு மேல் எடுக்க முயன்றால் தன்னை அழைத்து அனுமதி பெற வேண்டும் என்று  விதி என்ற சதி ஒன்றை வைத்துள்ளார்களே..

3 கருத்துகள்:

  1. அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய
    ஒரு விஷயத்தை சுவாரஸ்யமானப் பதிவுகளாகத்
    தந்தது அருமை.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் மனைவி 20 டாலருக்கு மேல எடுக்க அனுமதி இல்லை என்று சொல்லிய நீங்கள் "நொடிக்கு 20 டாலர் என்ற விஷயத்தை "வெளியே சொல்லாமல் வீட்டுட்டீங்களே என்னா சாமர்த்தியமப்பா....

    பதிலளிநீக்கு
  3. பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக இடம் கொடுக்க கூடாது

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...