திங்கள், 18 பிப்ரவரி, 2019

பள்ளிக்கூடம் போகாமலே...

"வாழ்த்துக்கள் மாலதி.. இந்த வருடம் பள்ளிக்கூடத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றாய். இதே   போல் தொடர்ந்து கடினமாக முயற்சி செய். வாழ்வில் நிறைய சாதிப்பாய்".

வாய் முழுக்க பல்லாய்  இருந்த மாலதியிடம் அவளின் ஆசிரியை தமிழரசி கூறினார்கள்.



"நன்றி டீச்சர். இது என் வெற்றி அல்ல. உங்களின் வெற்றி. நீங்கள் மட்டும் எனக்கு ஆசிரியையாக அமையாடிவில் என்னால் இதை சாதித்து இருக்க முடியாது. உங்களின் தியாகம். தன்னலமற்ற செயல். ஊக்குவிக்கும் வார்த்தைகள். உங்களை ஆசிரியையாக பெற நான் என்ன தவம் செய்தேனோ. நீங்கள் இன்னும் 100 வருடம் ஆசிரியையாக பணிபுரிந்து என்னை போல் பல்லாயிரம்  மாணவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்".

மாலதியும் பதிலுக்கு சொன்னாள்.

"சிறு வயதில் இருந்தே பெரிய மருத்துவராகவேண்டும் என்று உறுதியாய் இருந்தாய். நீ அவ்வாறே வெற்றி பெற வேண்டும் என்று நான் தொடர்ந்து பிரார்த்திப்பேன்".

பிரிந்தார்கள்.

பத்து வருடம் கழித்து , முன்னால் மாணவர்களை கௌரவிக்கும் நிகழிச்சியில் பங்கு பெற வந்த மாலதி, மீண்டும் ஆசிரியை தமிழரசியை சந்தித்தாள்.

"என்ன டீச்சர்.. எப்படி  இருக்கீங்க? இன்னுமா டீச்சரா இருக்கீங்க? இந்த வேலையில் தான் சம்பளம் ரொம்ப குறைவாச்சே, நான் கூட நீங்க வேற ஏதாவது கம்ப்யூட்டர், மேல் படிப்புன்னு படிச்சிட்டு வேற வேலைக்கு போய் இருப்பீங்கன்னு நினைச்சேன், இப்ப கூட லேட் இல்லை டீச்சர், முயற்சி பண்ணுங்க"

மிகவும் வெற்றிகரமான மாணவி என்ற விருதை பெற்று கொண்டு வெளியேறினாள் மாலதி.

"என்ன அரசி? நாம தப்பு பண்ணிட்டோமா? நம்ம கிட்ட படிச்ச பசங்க கூட நம்மை பார்த்து இப்படி பேசுறாங்களே"

சக ஆசிரியை சாந்தி கேட்ட கேள்வியை புன்னகையோடு  புறந்தள்ளினார்கள் தமிழரசி.

மீண்டும் ஐந்து வருடம் கழித்து,பேருந்திற்காக தமிழரசியும், சாந்தியும் காத்து  கொண்டு இருக்கையில் ஒரு சொகுசு வண்டி அருகில் வந்து நின்று அதன் கண்ணாடி இறங்க... உள்ளே மாலதி..

"டீச்சர், வண்டியில் ஏறுங்க.. நான் உங்களை டிராப் பண்றேன்"!"

"நீ ரொம்ப பிஸியான ஆளு,பராவாயில்லை.. .. "

"ஐயோ வாங்க டீச்சர்..ப்ளீஸ்".

வண்டியில் ஏறினார்கள்.

மாலதி," டீச்சர் உங்களை மீண்டும் பார்த்ததில் தான் எவ்வளவு மகிழ்ச்சி. இத்தனை வருடமா நீங்க டீச்சரா இருப்பது என்னை போன்றவர்கள் பண்ண பாக்கியம். நீங்க எப்பவுமே டீச்சரா இருக்கணும்".

இறங்க வேண்டிய இடம் வந்தது. விடை பெற்றார்கள்.

"என்ன அரசி? போன முறை பாக்கும் போது இன்னும் டீச்சரா இருக்கியா"  கம்ப்யூட்டர் ஏதாவது படிச்சிட்டு வேற பிழைப்பை தேடி போகலையானு கேட்டா.. இப்ப திடீர்னு டீச்சரா இருப்பது தான் செஞ்ச புண்ணியம்ன்னு சொல்றா? இவ எப்படி மாறினா"?

"மாறலை சாந்தி, அப்படியே தான் இருக்கா"!

"ரியலி !,  அப்புறம் எதுக்கு நம்மை பாராட்டினா"?

"அவளோட குழந்தைக்கு பள்ளிக்கூடம் போற வயசு வந்து இருக்கும், அதுக்கு தான்"!

6 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா ஹா...கடைசி பஞ்ச்!! சூப்பர் விசு.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அது எப்படிங்க. உரையாடலில் குடும்ப விவரங்கள் தானே முதலில் பரிமாறப்படும். பலநாள் கழித்து சந்திப்பவர்கள் குடும்பம் கணவன், மனைவி, குழந்தைகள் பற்றி தான் முதலில் பேசுவார்கள்.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...