வியாழன், 10 டிசம்பர், 2020

Dr. அன்டர்சன் அமலன் குமார் (1971 -2020)

 "வரும் போது மறக்காம சமையலுக்கு காய்கறி ஏதாவது வாங்கின்னு   வந்துடுங்க!!"

அலை பேசியில் கணவனிடம் கூறினார் அம்மணி.

அம்மணி மருத்துவர் தானே, கண்டிப்பாக கணவனும் மருத்துவராக தான் இருப்பார் என்று நினைத்தால் தவறே இல்லை.

அருமையான குடும்பம். அம்மணி திருச்சியில் ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணி புரிந்து கொண்டு இருக்கின்றார்கள்.. ஆஸ்தி, ஆசை இரண்டிற்கும் சேர்த்து ஒரே ஒரு செல்ல மகன்.


Anderson Amalan Kumar
கணவன் மருத்துவர் அல்ல, மருத்துவ துறைக்கு தேர்ச்சி பெரும் அறிவும் ஆற்றலும் இருந்தாலும் விவசாய துறையில் படித்து முனைவர் பட்டம் பெற்று பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து வந்தார்.

பத்தாவது படிக்கையில் கணக்கில் நூற்றுக்கு நூறு மட்டும் எடுத்து அல்லாமல்  பள்ளியிலும் முதல் மாணவனாக வந்தவர், மருத்துவர் , பொறியாளர் , தணிக்கையாளர் என்று எந்த துறைக்கும் சென்று வென்று இருக்கலாம். 

அவை எல்லாவற்றையும் தவிர்த்து தன் தகப்பனை போல் விவசாய துறையை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்று வந்தார். 

குருவி கூட்டை போல் ஒரு அழகான குடும்பம். தேவைக்கேற்ற கடனில்லா குடும்ப வாழ்க்கை. இருந்தாலும் ஒரே ஒரு பிரச்சனை. 

அரசாங்க பணி என்பதால் அடிக்கடி வேலை மாற்றம்.  சக பணியாளர்கள் எல்லாம் இரண்டே வருடத்தில் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஊரில் நிரந்தரகமாக குடிபெயர நம்மவருக்கோ நாடோடி வாழ்க்கை.

"ஏன், யாரு கை காலையாவது பிடிச்சி, ஏதாவது சிபாரிசு வாங்கி ஒரு ஊரில் செட்டில் ஆவது தானே"

"கை, கால் பிடிக்க நான் என்ன மஸ்ஸாஜ் பார்லரா நடத்துறேன் "  

சில வார்த்தைகளே பேசினாலும் அதிலும் ஒரு குறும்பு.

"சிபாரிசில் வர எந்த உதவியும் எனக்கு வேணாம். எந்த ஊருக்கு எப்ப அனுப்புனாலும் நான் போக தயார். எல்லாம் ஆண்டவன் சித்தம், சும்மா பிரியா விடு"

பல வருடங்களாக அதே பதில்.

அம்மணி மருத்துவ துறையில் இருப்பதால் வேலை நேரம் தாறுமாறாக இருக்கும். 

"ஏங்க பையனை பாத்துக்குங்க.."

"ஏங்க , பையன் குளிச்சானா"?

"ஏங்க, பையன் ஹோம் ஒர்க்!?"

அனைத்திற்கும், ஆம் என்றும் ஆமென் என்றும் ஒரே பதில். பொறுப்பான மகன், சகோதரன், கணவன், தகப்பன்.

அம்மணி ஒரு சிநேகிதியோடு இல்லத்தில் இருக்கையில், காய் கறியோடு இல்லம் திரும்ப ...

தோழி, " பரவாயில்லையே, உன் வீட்டுகாரர், வெண்டிக்காய் எல்லாம் ஒன்னு ஒன்னா உடைச்சி பாத்து வாங்கி இருக்காரே, எனக்கும் வாச்சி இருக்கே"

அம்மணி சிரித்தார்கள்..

"வெண்டை காய் எல்லாம் உடைச்சி தான் இருக்கும், இருந்தாலும் அம்புட்டும் முத்தினது தான்"

"ஏன், உடைச்சி பாக்குறவருக்கு முத்தினது எதுன்னு தெரியாதா? அப்புறம் எப்படி விவசாய பல்கலை கழகத்தில் பேராசிரியர் வேலை?" சிரித்தார்கள்.

"அதெல்லாம் தெரியும், அந்த வெண்டைக்காய் எல்லாம் இவரு உடைச்சது இல்ல. கடையில் போய், மத்தவங்க எல்லாம் உடைச்சி பாத்து முத்திடிச்சின்னு  வேணாம்னு போட்ட அம்புட்டு வெண்டைக்காயையும் ஒன்னு ஒன்னா பொருக்கி எடுத்துன்னு வந்துடுவார்"

"அட பாவத்தை, ஏன்"

பேசி கொண்டு இருக்கையில் அவர் வர,

அம்மணி, " நீயே கேள்"

"ஏன் அண்ணா.. வெறும் முத்தினதா வாங்கின்னு  வந்து இருக்கீங்க?"

சிரித்தார்..

"சொல்லுங்க"

" உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க"?

"இரண்டு  பொண்ணு ஒரு பையன்"

"அவங்க மூணு பேருல உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும்"?

"அண்ணா, மூணு பேரும் என்  பசங்க தான், அதுல எப்படி வித்தியாசம் பார்க்க முடியும்"

"அதே தான், அதே காரணத்துக்கு தான் இதை வாங்கின்னு வந்தேன்"

"புரியல"

"நான் ஒரு விவசாயியாக மாறாமல் அந்த பல்கலை கழகத்தில் ஒரு பேராசிரியராக இருக்க முடியாது" 

"ஹ்ம்ம் ..."

"இது எல்லாமே ஒரு விவசாயியின் பிள்ளைகள் . முத்தினதோ இளசோ இந்த ஒவ்வொரு வெண்டைக்காயும் ஒரு விவசாயியின் வேர்வை. இதை ஒருத்தர் யாராவது உடைச்சி போட்டுட்டு போய்ட்டா வேற யாரும் வாங்க மாட்டாங்க, ஒரு விவசாயியின் வேர்வை வீணா போக கூடாது. கொஞ்சம் முத்தி போய் இருந்தா என்ன? கைப்பட சமைச்சா டேஸ்ட்டா வர போது!"

சிரித்தார்கள்.

"அது மட்டும் இல்ல, இந்த ஒவ்வொரு வெண்டைக்காயும் ஒரு விவசாயியை வீட்டின் சோற்று பருக்கை, இங்கே விக்காட்டி அங்கே உலை இருக்காது"

பேசி கொண்டே இருக்கையில் இன்னொருவர் வர,

"கிறிஸ்துமஸ் கேரல்ஸ், பாடணும், கிளம்பு.."

"ஒரே நிமிஷம் இரு"

என்று சொல்லி கிட்டார், கீ போர்டு, மிருந்தங்கம் அனைத்தையும்  வண்டியில் ஏற்றுகையில்  ..

"எதுக்கு இத்தனை கருவிகள்..?"

"ஓவ்வொரு பாட்டுக்கும் வெவ்வேறு கருவி தேவை படும்!"

"இம்புட்டையும்  யாரு வாசிப்பா?"

"நான் தேன்" சிரித்தார்.

அம்மணியை அறியுமுன்பே இசையை மனசார காதலித்து வாழ்ந்தவர்.

எப்போதுமே யாருக்குமே எந்த தவறும் நினைக்காதவர். இல்லை என்று யாருக்குமே என்றுமே சொன்னது இல்லை.

இப்படி வாழ்ந்து வந்த என் ஒன்று விட்ட சகோதரன் (சித்தி மகன்) அன்டர்சன்  அமலன் குமார், கடந்த சனி கிழமை (டிசம்பர் 5, 2020 )திருச்சியில்    மாரடைப்பில் தனது 49 வது வயதில் இறைவனின் திருவடி சேர்ந்தார்.

மகனை, கணவனை , தகப்பனை, சகோதரனை, நண்பனை, ஆசிரியரை இழந்தோர்க்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.  


RIP Amalan, you ran a great race indeed. 

தீமோத்தேயு 4:7 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.



6 கருத்துகள்:

  1. விவசாயிகள் போராட்டம் நடக்கும்போது , ஒரு நல்ல விவசாயியையும் அவர்கள் மேல் அக்கறை காட்டும் ஒருவரையும் இழந்தது நாட்டுக்கே பெரும் இழப்பு .உடைத்த,வேண்டாமென்று உதறிய வெண்டைக்காய்களை வாங்கும் அளவுக்கு ஒரு மென்மையான மனிதனை நான் இதுவரை கேள்விப்பட்டதேயில்லை விசு. ஆண்டவரின் அரசாங்கத்திற்கு இவர் உடனடி தேவையோ என்னமோ சீக்கிரமாய் எடுத்துக்கொண்டார் .அவரது ஆன்மா இறைவனிடம் இளைப்பாறட்டும் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

    பதிலளிநீக்கு
  2. ஒரு நல்ல மனிதர் இளம் வயதிலே இறந்தார் என்று கேள்விபடும் போது மனதிற்கு வருத்தத்தை கொடுக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்

    பதிலளிநீக்கு
  3. நானெல்லாம் உடைத்து பார்த்து வெண்டைக்காகய் வாங்க மாட்டேன் அப்படியே அள்ளிப் போட்டுக் கொள்வேன். நல்லா சமைக்க தெரிந்தால் எல்லாம் காயும் சுவையாகத்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
  4. நல்லவர்களை இறைவன் சீக்கிரமே அழைத்துக் கொள்வான் போலும்.  ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  5. சீக்கிரமாப் போனால் கொஞ்சம் மரியாதையுடன் போகலாம்னு போயிட்டாரு போல. போயிட்டாரேனு மனைவி நண்பர்கள் குழந்தைகளை ஃபீல் பண்ண வச்சுட்டாரு.

    நீடூழி வாழ்ந்தால்.. எப்பப் போவான்னுதான் எல்லாரும் காத்திருப்பார்கள்மனு உலகம் அறிந்து வாழ்ந்து இருக்கிறார். அந்த வகையில் அமலன் சம்ர்த்துத்தான்.

    பரவாயில்ல இந்த அசிங்கமான உலகிலிருந்து தப்பிப்போயிட்டாரே அமலன்.., நம்மதான் இங்கே மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்னுதான் எனக்குத் உண்மையிலே தோணுது, விசு!

    --------

    Yday, TNF, a Good game for rams fans like you ! :) But it was boring to me! :(

    பதிலளிநீக்கு
  6. ஏன் நல்லவர்களுக்கு எல்லாம் இப்படி நடக்கிறது.மனம் மிகவும் வேதனை படுகிறது.karthik amma

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...