புதன், 30 மார்ச், 2016

பயணங்கள் முடிவதில்லை... ஆமாங்கோ...

டாடி.. சீக்கிரம் தூங்க போங்க.. நாளை காலை 4 மணிக்கு எழுனு ..

நாலு மணிக்கு நீ தானே எழுனும், அதுக்கு நான் ஏன் சீக்கிரம் தூங்க போகணும்?

என்று கேட்க பதிலோ அம்மணியிடம் இருந்து வந்தது.

யாராவது ஏதாவது சொன்னா அவங்க சொல்ல வந்தத ..

நான் முடிச்சிவைக்கிறேனா?

அதே தான்.. உங்களுக்கு கொஞ்சம்..

பொறுமை தேவையா?

ஏங்க.. நான் சொல்ல வந்ததே..

வேறயா?


ஐயோ... எனக்குன்னு வந்து...

வாச்சி இருக்கா?

என்று என் அம்மணி பேசி கொண்டே இருக்கையில்...

ஓய் டாடி.. ஒய் டூ யு கம்ப்ளீட் அதர் பீபெல்ஸ்...

செண்டன்ஸா..

கொஞ்சம் .. ஒரு நிமிஷம் அமைதியா...

இருக்கேன் .. சொல்லு..

நாளை காலையில் நாலு மணிக்கு எழுனும்.. சீக்கிரம் தூங்க போங்க..



எனக்கு வேலை 6 மணிக்கு மேலே தானே. ஏன் நாலு மணிக்கு..

டாடி.. கிண்டல் பண்ணாதிங்க.. நாளைக்கு நான் சீயாட்டில் (Seattle ) போறேன்..  மறந்துடிங்களா?

அது எப்படி மறப்பேன்..

நீங்க மறக்கலே...

இல்லையே..

சரி, நான் ஏன் போறேன் சொல்லுங்க..

பள்ளிகூட விஷயமா ..

அது சரி.. பள்ளிகூட விஷயமா .. எதுக்கு..

அது.. அது..

சுத்தமா மறந்துடிங்க...

வயசாச்சி மகள்.. கொஞ்சம் ஞாபகபடுத்து.

அம்மணி குறுக்கிட்டு.. இதையெல்லாம் மறந்துடுங்க.. மத்தவங்க பேசும் போது குறுக்க ...

குறுக்க பேசறனா?

ஐயோ.. நீங்க ஆச்சி உங்க பொண்ணு ஆச்சி..

என்று சொல்லிவிட்டு இடத்தை காலி பண்ண.

ஏன் மகள் .. Seattle ?

டாடி..எங்க பள்ளிகூடத்தில் இருந்து எங்களை பாட கூப்பிட்டு இருக்காங்க..

பள்ளிகூடத்தில் இருந்து பாட கூப்பிட்டாங்களா...

நினைவோ பல்லாயிர கணக்கான மைல் தாண்டி ஓடியது..

8வது வகுப்பு.. சீர்காழி..

விசு..நாளைக்கு காலையில் பாட்டு போட்டிக்கு தஞ்சாவூர் போகணும் நினைவு இருக்கு இல்ல..

கண்டிப்பா, ரிச்சர்ட்.. நினைவு இருக்கு.

சீக்கிரம் தூங்க போ..

டேய் .. தூங்குறது இருக்கட்டும்.. முதலில் வார்டனிடம் போய் ரயில் டிக்கட்டுக்கு காசு வாங்கி வரலாம் வா..

இருவரும் சென்று அவர் கொடுத்த 13 ருபாய் வாங்கி கொண்டு, ஒரு சிறு கணக்கை ஆரம்பித்தோம்..

போக ஆளுக்கு 2.50. வர 2.50. அதுலே 10 ருபாய் போயிடும். மீதி 3 ரூபாயில் எப்படி சமாளிக்கிறது ?

விசு.. அஞ்சும் மூனும் கூட்டினா எவ்வளவு..?

எட்டு.

அப்ப நம்ம கையில் எட்டு இருக்குனு வச்சிக்கோ. மீதிய நான் பாத்துக்குறேன்.

இரவு தூங்குகையில்.. 3 ருபாய் தானே மிச்சம் வரும். அது எப்படி எட்டு ஆச்சி..

என்று நினைத்து கொண்டே உறங்குகையில்...

விசு... நேரமாச்சி எழு..

அடித்து பிடித்து கிளம்பி ...அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்றோம்.

அங்கே .

ரிச்சர்ட்.. வா போய் டிக்கட் வாங்கின்னு வரலாம்.

நீ இங்கேயே இந்த பைய பத்திரமா பாத்துன்னு இரு.. நான் போய் டிக்கட் வாங்கி வரேன்.

சில நிமிடங்கள் கழித்து வந்தான்...

ரிச்சர்ட்.. அந்த 3 ருபாய் எப்படி 8 ருபாய் ஆச்சி..?

அது என் பிரச்சனை.. நீ ஏன் டென்சன் ஆகுற..

வண்டியும் வந்தது.. நிறைய கூட்டம் இல்லை..ஜன்னல் அருகே எதிர் எதிரில் அமர்ந்து போட்டியில் பாடபோகும் பாடலை பழகி பார்த்தோம்.

சமோசா... சமோசா.

ரிச்சர்ட்.. இந்த சமோசா சாப்பிட்டு தான் எவ்வளவு நாள் ஆச்சி.

எவ்வளவு அது.. ?

10 பைசா.. கவலைய விடு.

என்று சொல்லி ஆளுக்கு ஐந்து வாங்க..

டேய்.. மீதி இருந்த 3 ரூபாயில் ஒரு ருபாய் இங்கேயே காலி..

நீ என்ன கணக்கில் வீக்கா.. எட்டு ரூபாயில் ஒரு ருபாய் காலி...

அது எப்படி ரிச்சர்ட் 3 ருபாய் எட்டு ஆச்சி..

அது என் பிரச்சனை..ஒரு நிமிஷம் இரு, பாத்ரூம் போயிட்டு வரேன்..

ரயிலோ.. பிரகதீச்வரன் கோயிலை தாண்டி மாயவரத்தை நோக்கி ஓடி கொண்டு இருந்தது.

 அடுத்த சில நொடிகளில் ரிச்சர்ட் மூச்சு வாங்க  அடித்து பிடித்து ஓடி வந்தான்.

விசு,சீக்கிரம் கிளம்பி பாத்ரூமுக்கு ஓடு..

எனக்கு அவசரம் இல்ல..

அட பாவி.. TTR வராரு.. சீக்கிரம் ஓடு..

டேய் ..நம்ம தான் டிக்கட் வாங்கினோம் இல்ல.

நம்ம ஒரு டிக்கட் தான் வாங்கினோம்.

ஒரு டிக்கட்டா .. ஏன்?

ரொம்ப அவசியம்.. 3 ருபாய் எப்படி 8 ருபாய் ஆச்சின்னு கேட்ட இல்ல .. இப்படி தான்.

அட பாவி.. சரி, அந்த டிக்கட்ட என்னிடம் கொடுத்துட்டு நீ போய் ஒளிஞ்சிகோ..

பயப்படாத விசு.. இது ஒரு விஷயமே இல்ல.. என்னோட வா..

என்று தர தர  வென்று இழுத்து சென்றான்.

இருவரும் பாத்ரூம் உள்ளே சென்று கதவை அடைத்து, கொண்டு அமைதியாக இருக்கையில்..

கதவு தட்டும் சத்தம்..

டிக்கட்..

என்னை கதவின் பின்புறம் நிற்க கைகாட்டிவிட்டு.. ரிச்சர்ட்.. கால்சட்டையை முட்டி வரை இறக்கி விட்டு அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டே.. வலது கையில் அங்கே சங்கிலியில் கட்டி இருந்த சிறிய பிளாஸ்ட்டிக் டாப்பாவில் பாதி அளவு நீர் நிரப்பி கொண்டு , இடது கையில் டிக்கட்டை எடுத்து கொண்டு,  கதவை திறந்து...

இதோ..

 என்று டிக்கட்டை கொடுக்க..

அவரோ..சனியனே..அவுத்து போட்டு ஆய் போகும் போது அதே கையிலா கொடுப்ப.. கதவை மூடு, என்று சொல்லி விட்டு அங்கே இருந்து கிளம்பினார்.

ரிச்சர்டு.. MGR  படத்துள்ள வர வில்லன் பேரை போல  உங்க அப்பா உனக்கு சரியான பெயர் தான் வைச்சி இருக்காரு..

என்று பெறு  மூச்சு விட மாயவரம் வந்தது.. TTR எங்கள் பெட்டியை விட்டு இறங்குவதை ஜன்னல் வழியாக பார்த்து...

ரிச்சர்ட்.. தஞ்சாவூர் வரை இங்கேயே இருந்துடலாமா?

டென்சன் ஆகாத விசு.. இனிமேல் TTR நம்ம பெட்டிக்கு வரமாட்டார்..

என்று ஆறுதல் சொல்ல...

தோளின் மேல் யார் கையோ பட..

நான் இல்ல .. நான் இல்ல..

டாடி.. நான் தான்..  என்ன ஆச்சி உங்களுக்கு.. என்னமோ திருடின மாதிரி முழிக்கிறிங்க .. சீக்கிரம் தூங்க போங்க... நாளைக்கு காலை அஞ்சு மணிக்கெல்லாம் விமான நிலையத்தில் இருக்கணும்.

எத்தனை பேரு போறீங்க ராசாத்தி..

கிட்டத்தட்ட.. 40 பேரு..

40 பேருக்கும் டிக்கட் வாங்கிட்டிங்க தானே..?

ஆமா,அதுல என்ன சந்தேகம்.

இல்ல சும்மா கேட்டேன்.

சரி தூங்க போங்க..

ரிச்சர்டை மறந்துவிட்டு தூங்க போனேன். என்னதான் படிப்பில் கெட்டியாக இருந்தாலும்.. பாடல்களை இசையை கற்று பாடுவதில் தான் என்ன ஒரு சுகம். அடியேனுக்கு பாடுவது மிகவும் பிடிக்கும், அது என்னமோ விட்ட குறையோ தொட்ட குறையோ.. ராசாத்திகளுக்கும் பாடுவது மிகவும் பிடிக்கும். இங்கே இந்த பள்ளி கூடத்து மாணவர்கள் பாடுவது மிகவும் ரசிக்கும் படி இருக்கும்.. இவர்கள் பாடுவதை நினைத்து கொண்டே தூங்க சென்றேன்..

என்னங்க?

சொல்லு..

நாலு மணி ஆச்சி.. அவ  ரெடி .. சீக்கிரம் கிளம்புங்கோ..

எங்கே...?

ம்... ரைஸ் மில் போய் மிளகாய் பொடி அரைக்க..

இப்ப எல்லாம் தான் அரைச்ச பொடியே.. என்ன சொல்ற.. புரியல..

உங்களுக்கு வேண்டிய விஷயம்னா என்னை பாதியில்  நிறுத்திட்டு பேசுவிங்க.. வேண்டாத விஷயம்னா..

புரியாத மாதிரி நடிக்கிறானா?

அதே தான்.. சீக்கிரம் கிளம்பி அவளை விமான நிலையத்தில் விட்டுட்டு வாங்க..

ரொம்ப தூக்கம் வருது..

அதனால் என்ன போக சொல்றீங்களா..

அது எப்படி.. நான் சொல்ல வந்தத அப்படியே கரெக்டா சொல்ற?

18 வருஷம் குப்பை , அது தான்..

சரி.. கொஞ்சம் உதவி செய்யேன்.. ரொம்ப தூக்கம் வருது..

நீங்க என்னைக்கு மத்தவங்க பேசும் போது குறுக்க பேசாம இருப்பீங்களோ..

அன்னிக்கு தான் எனக்கு உதவியா?

அதே தான்.

அழுது கொண்டே வண்டியை எடுத்தேன்..

மகள்.. எப்ப திரும்பி வரீங்க..?

4 நாள் கழித்து.

திரும்பி வர 40 பேருக்கும் டிக்கட் எடுத்துடிங்களா ?

ஏன்.. டாடி.. இந்த டிக்கட்டை பத்தியே பேசுறிங்க.. எனி ப்ராப்ளம்?

தஞ்சாவூரில் இருந்து சீர்காழிக்கு திரும்ப வருகையில் ரயிலில் நடந்த அசம்பாவிதத்தை அவளிடம் சொல்லவா முடியும் ?

ராசாத்தியின் பள்ளிகூட பிள்ளைகள் பாடும் ஒரு பாடலை நீங்களே பாருங்களேன்..


பின் குறிப்பு :

திரும்ப வரும் போது என்ன ஆனது என்ற கேள்வி பின்னூட்டத்தில் வந்தது.. என்ன ஆனது என்பதை படிக்க இங்கே சொடுக்குங்கள்.'

ஆம்லெட்டும் அப்பளமும்...


10 கருத்துகள்:

  1. நல்ல பதிவு.. ராசாத்தி பாட்டுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க.. உங்க பாட்டை எப்போ கேக்கலாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடியேனின் பாடலை இந்த பதவில் கேட்கலாம்.
      ஒரே பாட்டு... வெவ்வேறு அர்த்தம்.. நடந்தது என்ன?
      http://vishcornelius.blogspot.com/2015/12/blog-post_8.html

      நீக்கு
  2. ராசாத்தி ஸ்கூலில் பாடிய போது வீடியோ எடுத்தது நீங்கள் தானா? ஆமாம் என்றால் அந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் லேட்டாக சென்று இருக்க வேண்டும் இல்லையென்றால் சிக்கிரம் போய்விட்டு குழந்தையை உள்ளே அனுப்பிவிட்டு லாபியில் எந்த ஆண்டிகூடவாவது கடலை போட்டு அதன் பின் நிகழ்ச்சியை பார்க்க உள்லே சென்று இருக்க வேண்டும் என்று தெரிகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுர ... பதிவ போட்டா ரசிக்கணும் ... ஆராய கூடாது.

      நீக்கு
  3. ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை மிக நகைச்சுவையுடன் எழுதியிருந்தது உண்மையிலே சிரிப்பை வர வழைத்தது...

    இந்த பகுதி மிகவும் சிரிக்க வைத்தது

    //என்னை கதவின் பின்புறம் நிற்க கைகாட்டிவிட்டு.. ரிச்சர்ட்.. கால்சட்டையை முட்டி வரை இறக்கி விட்டு அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டே.. கதவை திறந்து... இதோ என்று டிக்கட்டை கொடுக்க..

    அவரோ..சனியனே..அவுத்து போட்டு ஆய் போகும் போது அதே கையிலா கொடுப்ப.. கதவை மூடு, என்று சொல்லி விட்டு அங்கே இருந்து கிளம்பினார்.////

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வாக்கியத்தை உங்கள் பின்னூட்டத்தில் படிக்கையில் தான் ரிச்சர்ட் செய்த இன்னொரு காரியம் நினைவிற்கு வந்தது. அடஹியும் சேர்த்து தற்போது எழுதியுள்ளேன்.

      நீக்கு
  4. மொத்தத்தில் ராசத்தியின் பாட்டுடன் உங்கள் நகைச்சுவையும் மிக அருமை பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  5. வாவ்! விசு ராசாத்திக் குழுவினரின் பாட்டு அருமை! ரொம்ப நல்லா இருக்குது...

    //எத்தனை பேரு போறீங்க ராசாத்தி..

    கிட்டத்தட்ட.. 40 பேரு..

    40 பேருக்கும் டிக்கட் வாங்கிட்டிங்க தானே..?

    ஆமா,அதுல என்ன சந்தேகம்.

    இல்ல சும்மா கேட்டேன்.//

    ஹஹஹஹ் சீர்காழி நினைப்பு... ட்ரெய்னா என்ன பாத்ரூம்ல போய் ஒளிஞ்சுக்க....ஃப்ளைட்டு...

    சடி திரும்ப வரும்போது என்னாச்சு..அது தனிப்பதிவா??!!!

    ரசித்தேன் பதிவை..ரொம்பவே

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ராசாத்திகளுக்கு எங்கள் வாழ்த்தையும் தெரிவித்துவிடுங்கள்!

    பதிலளிநீக்கு
  7. ரயில் பயணங்களை நினைவுபடுத்தி விட்டீர்கள்..
    விசு அவர்களே..என்னதான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஞாபக அடுக்குகளில் என்னவோ இளமைக்கால நினைவுகள் தான் பெருத்துக்கிடக்கின்றன.

    எனக்கெல்லாம் நுப்பது(?)வருடத்துக்கு முன்னான என் வீடுதான் என் கனவுகளில் வருகிறது....

    வாழ்த்துகள் ராசாத்திக்கு..

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...