வெள்ளி, 27 ஜூன், 2014

நோ தங்கமணி நஞ்சாய்!



புதன் அதுவுமா காலையில்9;30 மணிக்கு அலுவலகத்தை விட்டு இவ்வளவு அவசரமா எங்க போறே? போகும் போதே கேட்டு விட்டான் கூட பணி புரியும் வெள்ளைகாரன்.  அவனுக்கு ஒரு சின்ன சந்தேகம். ஏதோ நான் ஆபீஸ்க்கு மட்டம் போட்டு கால்பந்து ஆட்டம் பார்க்க போகிறேன் என்று. ஒன்னும் இல்ல, என் மனைவியும் ரெண்டு ராசாத்திக்களும் இன்று கோடை விடுமுறைக்காக இந்தியா போகின்றார்கள்  என்றேன். சரி சரி... 405 தேசிய நெடுஞ்சாலையில்  ஏதோ பெரிய விபத்து என்று கேள்வி பட்டேன், தாமதம் பண்ணாமல் சீக்கிரம் போ என்றான் (இது  எல்லாமே ஆங்கிலத்தில் நடந்த உரையாடல் தான்.) அவனுக்கு ஒரு கும்பிடு போட்டு வெளிய வந்து காரை எடுத்த சில
நிமடங்களில் றீங்க் ...றீங்க் ...

விசு பேசறேன்

ஹலோ சித்தப்பு... நோ தங்கமணி என்சாயா?

அட பாவிங்கள, எப்படி என் வீடு நடப்பை எல்லாம் உள்ளங்கை நெல்லி போல தெரிஞ்சு வைச்சி இருக்கீங்க?

அத ஒன்னும் இல்ல சித்தப்பு. இந்த காலத்தில் ஆத்துக்காரி பிள்ளைகளை கூப்பிட்டு கொண்டு ஊருக்கு போவது குறுஞ்சி மலர் பூத்தாபல! 12 வருஷதிற்கு ஒரு முறை தான் நடக்கும் என்சாய்..

தேங்க்ஸ் மாப்பு.

அது சரி சித்தப்பு, சமையல் எல்லாம் என்ன பண்ணுவ?

சமையல் ஒரு பிரச்னை இல்ல மாப்பு, என்ன? 4 பேருக்கு சமைப்பேன், இப்ப அளவ கம்மி பண்ணி ஒருத்தனுக்கு சமைப்பேன் என்று நான் சத்தமாக சொன்னதை கேட்டு அவன் மனைவி அங்கே அவனுக்கு சங்கராபரணம் ஆரம்பித்ததை கேட்டு கொண்டே வண்டியை விட்டேன்.

உண்மையாக சொன்னால் போனால் சமையல் பிரச்னை இல்லை தான். என் வீடு அம்மா அடுத்த 3 வாரத்திற்கு தேவையான தோசை மாவு, புளிக்காய்ச்சல் மற்றும் பல விதங்களை செய்து வைத்து விட்டுதான் சென்றார்கள்.

சரியாக 11 மணிக்கு அவர்களை விமானநிலைத்தில் விட்டு விட்டு வரும் போது ஒரு தும்மல். இது சாதாரண தும்மல் அல்ல. திப்புசுல்தான் தும்மல் போல். அது வந்த உடனே மனதில் ஒரு பயம். அட பாவி. இன்னும் இவங்க கிளம்பவே இல்லையே, அதுக்குள்ள ஏதோ காய்ச்சல் வருவதை போல் ஒரு பீலிங். பயந்து கொண்டே ஆபீஸ்க்கு சென்று ரெண்டு மாத்திரைகளை வாங்கி போட்டுக்கொண்டேன்.

ஒரு ரெண்டு மணி போல் இருக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள் என் கதவை தட்டி நீ மிகவும் கடினமாக இருமுகிறாய், உடனே வீட்டிற்கு கிளம்பு, இல்லாவிடில் நாம் அனைவரும் நோய்வாய் படவேண்டி வரும் என்றார்கள். வண்டியை எடுத்து ஒட்டுகையில் கண்  இரண்டும் சொக்குவத்து போல் ஒரு தூக்கம். எப்படியோ வீட்டை அடைந்து என் மருந்து வைக்கும் இடத்திற்கு சென்று தெர்மாமீட்டர் எடுக்க போகையில் வழியில் இருந்த எடை பார்க்கும் எந்திரத்தை சரியாக கவனிக்க்காமல் தடுக்கி விழுந்தேன். எடுத்து பார்த்தால் 101.5. ஏதோ எனக்கு தெரிந்த இரண்டு தலைவலி மாத்திரையை போட்டுகொண்டு உறங்க போனேன்.

ரிங் ...ரிங்... என்னங்க நாங்க ஒரே வந்து சேர்ந்துட்டோம்.

சற்று சுதாரித்து (நான் கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருப்பதை காட்டி கொள்ள காட்டிக்கொள்ள கூடாது என்று நினைத்து குரலை சற்று கம்பீரமாக வைத்து கொண்டு) சந்தோசம். நல்ல என்ஜாய் பண்ணுங்கள் என்றேன்.

அதை கேட்டவுடனே அம்மணி...ஏன்னா உடம்பு சரியில்லையா?

அப்படி ஒன்னும் இல்ல, கொஞ்சம் இருமல் சளி அவ்வளவு தான்.,

உடனே தெர்மா மீட்டரை எடுத்து எவ்வளவு என்று பாருங்கோ.அது அந்த மருந்து வைக்கும் இடத்தில் உள்ளது அங்கே போகும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக போங்க. நான் அவசரத்தில் அந்த எடை பார்க்கும் எந்திரத்தை அங்கே வைத்தமாதிரி ஞாபகம்.

அது சரி என்று ஒரு இரண்டு நிமிடம் கழித்து 101.5 என்றேன்.

உடனே ரெண்டு மாத்திரையை போட்டு கீழே போய் நிறைய தண்ணீர் குடியுங்கள். என்னாங்க? நாங்க வந்து இன்னும் செருப்பை கூட கழட்டவில்லை, அதுக்குள்ள இப்படி ஆகிவிட்டீர்களே.. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க.

சரி..

ராத்திரி உணவு என்ன சாப்பிட போறீங்க?

தெரியவில்லை.

கீழ போய் ரெண்டு ரொட்டி டோஸ்ட் பண்ணி பாலில் வைத்து சாப்பிடுங்கள்.
சரி என்று ஒத்து கொண்டு ரெண்டு ரொட்டி டோஸ்ட் பண்ணி பாலும் சூடு பண்ணி எடுத்து வந்த முதல் வாய் வைக்கையில் ஒன்பதாவது படிக்கையில் ஒருமுறை மருத்துவமனையில் சாப்பிட்ட நினைவு வந்தது. நொந்து போய்
அதை சாப்பிடுகையில்.. திடீரென்று ஒரு நினைப்பு. ஒரு முக்கியமான கேள்வியை கேக்க மறந்துவிட்டேனே.

 ஹலோ.. நீங்கள் எல்லாரும் என்ன சாப்பிடீர்கள்?

அது ஒன்னும் இல்லங்க...சிம்பிளா,  மட்டன் பிரியாணி, கத்திரிக்காய், பாயாசம்..

அட பாவிங்கள...மனைவி இல்லாத இந்த நாள் நோ தங்கமணி என்சாய் இல்ல.. நோ தங்கமணி நஞ்சாய் போச்சே... (தொடரும்) 

6 கருத்துகள்:

  1. ஹா...ஹா...:))
    ஒரே நேரத்தில் ரெண்டு தலைவலி மாத்திரையா ?
    TAKE CARE அண்ணா! அண்ணி வேற வீட்டில் இல்லை :((

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப சிரமம் தான்...

    நல்ல சான்ஸ் மிஸ்ஸிங்...?! ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  3. இன்னும் எத்தனை நாள்னு தெரியவில்லை... தனபாலன்.

    பதிலளிநீக்கு
  4. அவங்களை நீங்களாவே லீவுக்கு அனுப்பிட்டு இப்பிடி புலம்பப்படாது விசு. :-)
    பத்திரமா இருங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'கெடுவான் கேடு நினைப்பான்" கதை போல் ஆச்சே இமா!

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...