வெள்ளி, 17 நவம்பர், 2017

தலீவர் தலீவர் தான்.. என்னமா ஒரு கவிதை !

இன்னாதான் சொல்லுங்க..

தலீவர் தலீவர் தான்.. என்னமா ஒரு கவிதை!


விளக்கை அணைத்து விட்டு வீட்டுக்குள் புகுந்த திருடன்
அகப்பட்டதை சுருட்டி கொண்டு அகப்படாமல் ஓடியதை போல்
அருப்புக்கோட்டை நெல்லை தொகுதிகளை வென்று விட்டான்...



இதற்கு தான் நான் முன்பே சொன்னேன்
இந்த இடிஅமீன் ஆட்சியிலே நமக்கு இடை தேர்தல் எண்ணம்
எள் முனையும் வேண்டாமென்று
இருந்தாலும் போர் காலத்தில் விழுப்புண் பெறுவதே பெருமை என்று
இனிய உடன்பிறப்புகள் எல்லோரும் இருக்கருத்துக்கிடமின்றி
எடுத்துரைத்த காரணத்தால் ..

பணநாயக படை எதிர்த்து நமது ஜநாயக படை மோதிற்று
மறைந்திருந்து மானமிகு வாலியை வீழ்த்திய மாண்புமிகு ராமச்சந்திரனை
மாவீரன் என்று போற்ற மஹாகவி கம்பனே தயங்கினான் என்றால்

மாண்டாலும் வெற்றி வாலிக்கு தானே..
ஆண்டாலும் அவன் தம்பி சுக்ரீவன் துரோகி தானே
எனவே விழுந்தாலும் விழுப்புண் பெற்றோர் தான் வீரர்களின் பட்டியலில் இடம் பெறுவார்

தாழ்ந்தாலும் தமிழன் தன்மானம் இழந்து தன் தலையை மட்டும் தாழ்த்த மாட்டான்.
தாய் தந்தையரை நன்றியுடன்  போற்றும்  தனி பணப்பாட்டை மறக்கமாட்டான்.

தாயாக தமிழர்க்கு அண்ணாவும்
தந்தையாக பெரியாரும் வாய்ததாலே
அவருக்கு சேயாக விளங்குகின்ற திமு கழகம்
செய்ந்நன்றி சிறிதளவும் மறவாமல் இன்று
தெருமுனையில் பட்டபுண்ணை சிரிப்பாலே  ஆற்றி
வருங்கால வெற்றிக்கு வழிவகுக்க கண்டீர்

இதயத்தை விட்ட (?) ஈரோட்டு பள்ளியையும்
என்றைக்கும் பசுமையான காஞ்சி கல்லூரியையும்
ஏக்க பெருமூச்சுடன் எண்ணி புரண்டவாரு
என் படுக்கையிலே நெளிந்திட்டேன் நேற்றிரவு

அப்போது...

பக்கமது நெருக்கமாக படுத்து கொண்டு
வெட்கமது ஒருசிறிதும் இல்லாமல்
என்னை ஒருத்தி ஓடி வந்து தழுவி கொண்டாள்
அவளை அள்ளி அணைப்பதற்கு நான் முயலவில்லை என்றாலும்
தள்ளி விட மனமில்லை தழுவட்டுமே என்றிருந்தேன்.
அதன் பின்னர் மற்றொருத்தி வந்தாள்
அவள் வானம்பாடி இசை கூட்டும் மாயக்காரி
என்ன இது இரு மங்கை ஒரு படுக்கை
என கேட்பீர் பொறுத்திடுக

முதலில் வந்தவள் பேர் தூக்கம் மற்றொருத்தி கனவு மங்கை
அந்த கனவினில் நான் கண்ட காட்சியெல்லாம்
தமிழ் காட்சி .. தமிழர் மாட்சி

அது என்ன கனவு?

மன்றம் ஒன்றில் இசைவாணன் கீதை மழை பொழிகின்றான்
மக்கள் எல்லாம் மதுகுடித்த வந்து போல் மயங்குகின்றார்
மங்களமாய் இசைநிகழ்ச்சி முடியும் போது
மக்கள் தரும் ஆர்வமுடன் மேலும் பத்து பாட்டு பாடு என்றான்.

மலைத்துவிட்ட இசைவாணன் கனைத்து கொண்டு
பாடுகின்றேன் மேற்கொண்டு என்ன தொகை தருவார் என்றான்
வெடுக்கென ஒரு புலவன் எழுந்து நின்று விடையளித்தான் எட்டு தொகை தருவதாக..

இசைவாணன் புரிந்து கொண்டு
இது என்ன நியாயம்?
எந்தன் பத்து பாட்டுக்கு எட்டு தொகையா?
அது எனக்கு குறுந்தொகை என்று சொன்னான்.

ஓ ஹோ ஐந்து நூறு வேண்டுமோ என்று கடித்தார் புலவர்
நூறு வேண்டேன் அதனை தீண்டேன்
நானூறு தருவீரோ புலவரே
அதுவும் அகத்தில் நானூறு புறத்தில் நானூறு
என்று வளைத்தனன் இசையில் வல்லவன்

புறத்தில் நானூறு அகத்தில் நானூறு
புரிந்து கொண்டார் புலவர் பெருமகன்
புறநானூறு காசோலையில் நானூறு
அகநானூறு கருப்பில் நானூறு
பொல்லா செயலாது பொல்லா செயலாது
வருமான வரிதனை ஏய்ப்போர் செயலது

அதனாலே பாட்டுக்கு தொகை கேட்க்கும் பேச்சுத்தனை விட்டொழிப்பீர்
பசும்பால் தருவோம் தொண்டைக்கு
தேவையெனில் முப்பாலை தருவோம் பாடிடுக என்று சொன்னான்

முப்பால் தருவதாக மொழிந்திட்ட புலவரையா
பொருட்பால் ஒன்றுக்கே இனி என் தொண்டை பேசுமென இசைவாணன் எழுந்துவிட்டான்

நீண்ட உயில் கலைந்தெழுந்தேன்
நெடுநல் வாடை பட்டதாலே ...



அவர் பாட கேட்க விரும்புவோர் இங்கே சொடுக்கவும்..



மீண்டும் சொல்கிறேன்..


When it comes to delivery... தலீவருக்கு இணை தலீவரே..

4 கருத்துகள்:


  1. இந்த கலைஞர் எங்கே சென்றார்......

    பதிலளிநீக்கு
  2. இந்த கவிதையை தலீவர் சொல்ல சொல்ல கிட்ட தட்ட ஒரு மணி நேரம் உக்காந்து அதை டைப் பண்ணி "யாம் பெற்ற இன்பம்னு " இங்கே போட்டா, பெயரில்லா ஒருத்தர் வந்து இன்னா தலீவரை கிண்டல் பண்றீயா.. போடாங்க (நடுவுலே மானே தேனே போட்டுக்குங்க) சொல்றாரு.

    இன்னாத்த சொல்வேன். பரவாயில்லை விடுங்க.. அவரும் நம்மை போல் தலீவரின் ரசிகன் தான் போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. அருமையா இருக்கு கவிதை!!! கலைஞரின் இளைய குரல்?!

    பதிலளிநீக்கு
  4. கலைஞரை மிஞ்சிட முடியாது இதற்கு!!!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...