சனி, 16 செப்டம்பர், 2017

துப்பறிவாளன் - இரண்டாம் பாகம்! ( அத்தியாயம் 1)

ஒரு நாய்க்குட்டியை சுட்டது யார் என்பதை துப்பறிக்க சென்று... ஒரு பெரிய கொள்ளை -  கொலைகார கும்பலை ...

இவ்வளவு துப்பறியும் திறன் இருந்தும்.. "உனக்கு வேண்டிய ஒருவரை சாகடிப்பேன்" என்ற மெசேஜ் வந்தும் அது மல்லிகாவாகவும் இருக்கலாம் என்று அறியாமல் இருந்தேனே...

தன்னை தானே ... வெறுத்து கொண்டான்..

அவ பாட்டுக்கு பிக்பாக்கெட் அடிச்சிட்டு வாழ்ந்து இருந்தா.. என்னை சந்தித்த ஒரே காரணத்தினால் .....

கதவு திறக்க பட.. மனோகர் நுழைந்தான்..

இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படியே வீட்டை விட்டு வெளியே வராம இருக்க போற?

தெரியல மனோ.. பெரிய தப்பு பன்னிட்டான்டா.. அவளிடம் ஒருமுறை கூட அன்பா இருந்தது இல்ல... ஒரு வார்த்தை நல்லா பேசினது இல்ல. நம்ம கூட இருந்த ஒரே காரணம்.. அந்த ஒரே காரணம் அவ இன்னைக்கு இல்லனு நினைக்கும் போது...

சரி .. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு...இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்க போற..

அவ சாகும் போது... என்ன மனோ நினைச்சு இருப்பா? ஏன்டா இங்கே வந்தோம்னு, இவனை ஏண்டா சந்திச்சோம்ன்னு...ஏன் மனோ.. ஒரு சின்ன பொண்ணு, அவ மனசை ஏன்டா நம்மனால புரிஞ்சிக்க முடியல..

நம்மனாலேன்னு சொல்லாத.. உன்னாலே.. மல்லிகா உன்னை பார்க்கும் போதே அவ பார்வை வைச்சே அவளுக்கு உன் மேல் கொள்ளை பிரியம்ன்னு எனக்கு தெரியும்.

ஏன்டா சொல்லல.. அது எப்படி உனக்கு தெரியும்?

கனி .. அவ கொடுத்த கிறீன் டீயை நீ கழுதை மூத்திரம்ன்னு திட்டி கொடுத்த இல்ல.. அதை கூட அவ மூணு நாளா வைச்சி குடிச்சின்னு இருந்தா..

ஏன்டா எனக்கு அப்பவே சொல்லல..

அது உன் மண்டைக்கு அது புரியாது.. சொன்னா உடனே அவளை வீட்டை விட்டு அனுப்பிடுவன்னு பயந்து தான் சொல்லல ...

எப்படி மனோ.. அந்த வயசு பொண்ணை கொலை பண்ண ஒருத்தனுக்கு மனசு வருது..

கனி.. நான் சொல்லி உனக்கு தெரியணும்னு அவசியம் இல்ல.. கொலை பண்றது ஒரு மன  வியாதி .....சரி, கிளம்பு வெளிய போய் சாப்பிட்டு வரலாம்.

வேணா விடு... எனக்கு பசி இல்லை..



எனக்கு பசி .. வா..

வண்டிய நீ ஒட்டு மனோ..

ஏன்..?

குடிச்சி இருக்கேன்..

இது உனக்கு தேவை இல்லாத பழக்கம் கனி... நம்ம பண்ற வேலைக்கு நம்ம எப்பவும் ஸ்டெடியா இருக்கணும்.

கரெக்ட்.. ஆனா நான் இனிமேல் இந்த வேலையை பண்றதா இல்ல.

ஏன்டா...

வேணாம் மனோ.. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து நீ ஒருத்தன் தான் என் பிரென்ட். 11  வயசுல ஒரு பணக்காரனிடம் பிக்பாக்கெட் அடிச்சி, அடிச்ச பணத்தை கோயில் எதிரில் இருந்த பிச்சைகாரர்களிடம் பங்கு பிரிச்சி கொடுக்கும் போது அவங்களுக்குள்ள நடந்த பங்காளி சண்டையில் என்னை போட்டு கொடுத்துட்டாங்க..

எவ்வளவு குடிச்ச..?

அதை விடு..பிடிச்ச போலீஸ் நேரா என்னை சிறுவர் சீர்திருத்த பள்ளியில்  சேர்த்து விட.. அங்கே தான் நம்ம முதல் முறையா சந்திச்சோம்.. உனக்கு நினைவு இருக்கா?

மறக்க முடியுமா? 11 வயசுல கிட்ட தட்ட ஆறடி உயரம்.. எப்படி மறக்க முடியும்?

மனோ.... கிட்ட தட்ட 20  வருசமா கேக்குறேன்.. நீ குழந்தை மாதிரி டா.. நீ எப்படி அந்த சீர்திருத்த பள்ளியில்? என்ன பண்ண? ப்ளீஸ்.. சொல்லேன்..

சொல்றேன்.. இப்ப இல்ல..

வண்டியை திருப்பி.... உணவகம் தேடி செல்ல...

மனோ... வண்டிய திருப்பி... அந்த கல்லறை பக்கம் விடு. மல்லிகாட்ட ஒரு மன்னிப்பு  கேட்டுனு வந்துடறேன்...

கனி.. இப்ப ராத்திரி 8  : 30 ... உள்ளே யாரையும் விட மாட்டாங்க..

நம்ம இந்த மாதிரி இடத்துக்கு எப்ப பெர்மிஷன் வங்கின்னு போனோம்.. வண்டிய  நேரா அங்கே விடு..

கனி, மல்லிகா போய்ட்டா.. இனிமேல் வரமாட்டா. தெரிஞ்சோ தெரியாமலோ அவ சாவுக்கு நம்மளும் காரணமாகிட்டோம்.. இப்ப அவளை நினைச்சி  உன் வாழ்க்கையை பாழாகிக்காத.. அதை அவளே ஒத்து கொண்டு இருக்கமாட்டாள். மீண்டும் நம்ம வேலைய ஆரம்பிக்கணும்..

வேணா மனோ.. இந்த விஷயத்துல ஐ அல்மோஸ்ட் லாஸ்ட் யு.. நீயும் செத்து இருந்து இருக்கணும்... மை குட் லுக்.. தப்பிச்சிட்ட ..

கனி.. எனக்கு சாவு ஒன்னும் பெரிய விஷயம் இல்ல.. அந்த சீர் திருத்த பள்ளிக்கு கூட்டின்னு போனாங்களே அன்னைக்கே செத்து இருக்கணும்.. என் பேட் லக் தப்பிச்சிட்டேன்...

வண்டி ... சுடுகாட்டின் பின்புறத்து மக்கள் நடமாட்டம் இல்லாத தெருவில் திரும்ப.. ..

மனோ.. ஹெட் லைட் ஆப் பண்ணு..

ஏன்..

ஆப் பண்ரா.. நம்ம செவுரு எகிறி குதிச்சி போறோம்... யாருக்கும்  தெரியவேனா..

விளக்கை அணைத்து.. தெருவும் பள்ளமாக இருந்ததால்.. வண்டியையும் அணைக்க.. அதுவும் சத்தம் இல்லாமல் உருண்டு சென்றது. வண்டி மெதுவாக நிற்க.. இருவரும் இறங்கி.. சுவரை நோக்கி நடக்க..

பேச்சு சத்தம்...

இருவரும் குனிந்து ஒதுங்கி ஒட்டு கேட்க..

அங்கே நால்வர் இருட்டில் ஒரு குழி  வெட்டி கொண்டு இருந்தனர். ஐந்தாவது ஆளோ தொலைபேசியில் ..

சொல்லுங்க சார்..

....

ரெண்டு குழி எதுக்கு.. ஒன்னுலே போட்டுடலாம்..

....
அங்க வச்சி ஒன்னும் செய்யாதீங்க..அப்படியே கட்டி தூக்கின்னு வாங்க..

....

புரியாம பேசாதீங்க சார்.. அங்கேயும் சரி.. வண்டியிலும் சரி.. எதுக்கு இரத்தம்  அது இதுன்னு.. குழியில் தள்ளிட்டு துப்பாக்கி முனையில் ஒரு உருளை கிழங்கை சொருகி ஆளுக்கொரு குண்டு.. அப்படியே மண்ணை போட்டு  மூடிடலாம்.. அப்படியே தூக்கினு வாங்க...

....

1  :30  யில் இருந்து ரெண்டு வரை வராதீங்க.. அந்த நேரத்தில் பக்கத்துல இருக்க நைட் ஷிப்ட் ஆளுங்க வந்துன்னும் போயினும் இருப்பாங்க.

....

அவரு ஏன் இங்க வரணும்... இப்ப எதுக்கு.. எங்க வேலை சுத்தம் சார்.. அவ்வளவு நம்பிக்கை இல்லையா...

....

எப்ப.. அரை மணிநேரத்துலையா..கதவு வழியாவே வாங்க.. வெட்டியான் வீட்டுல யாரும் இல்ல.. அவனுக்கு நல்லா ஊத்தி விட்டுட்டோம்.. தூங்கிட்டான்..

....

எப்ப வருவாரு...

....

கிளம்பி அரை மணி நேரமாச்சா.. சீக்கிரம் ... வேலை முடிஞ்சவுடனே கையோட நாங்க வெளியூருக்கு போயிடுவோம்.. அதுதான் சேப்.


மனோ.. நான் இங்கேயே இருக்கேன்.. நீ கொஞ்சம் தூரம் தள்ளி போய்  போலீசுக்கு போன் போட்டு   இங்கே வர சொல்.. அட்லீஸ்ட் 7 - 8  பேராவது வரணும்.. கோ..

கனி.. ஒன்னு சொல்லட்டா...

சொல்லு..உன்னாலே இந்த டிடெக்டிவ் வேலையை விடவே முடியாதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. இதை செய்ய மாட்டேன் அது இது எல்லாம் நீயே உனக்கு கொடுக்குற தண்டனை.. மல்லிகாவை தவற விட்டுட்டோமேன்னு..

இப்ப இதுதான் ரொம்ப அவசியம்.. போடா.. ஹே.. எப்படி தெரியும்...

அந்த சின்ன பையனுக்கு நாய் குட்டி  வாங்கி அனுப்பினியே.. அதுல கூட  உன் பேரோட  " டிடெக்ட்டிவ்" ன்னு போட்ட கார்ட் தானே அனுப்புன...

பேசி கொண்டே இருக்கும் போது.. அந்த ஐந்தாவது ஆளின் அலை பேசி அலற..

சொல்லுங்க சார்...

தப்பிச்சிட்டாங்களா?

இப்ப வெட்டின குழி..

முடியாது சார்.. காலையில் எழுந்தா வெட்டியான் கண்டு பிடிச்சுடுவான். மூடிடறேன்.. அப்புறம் திரும்பவும் வெட்டிக்கலாம்.

இன்னும் வரல.. எப்ப கிளம்புனாரு..?


என்று அவன் கிளம்பும் போதே .. ஒரு வெளிநாட்டு கார் விளக்கு இல்லாமல் சுடுகாட்டில் நுழைந்தது..

வண்டியின் பின் ஜன்னல் கீழே இறங்க..ஐந்தாவது ஆள் குழி வெட்டும் இடத்தை அவருக்கு  கை  நீட்டி காட்ட...

மறைந்து இருந்த கனியும் மனோவும்... அடுத்து என்ன என்று நினைக்கையில்...

கனி  அதிர்ந்து ..." ஓ மை காட்" !

என்ன ஆச்சி கனி?

வண்டியில் இருக்குறது யாருன்னு உனக்கு தெரியல?

அது.. எங்கேயோ .. எங்கேயோ..

மனோ.. அட பாவி..இது அந்த அம்பது லட்சம் கேஸ்..

பெத்த பொண்ணையே ... கனி, வி நீட் டு சேவ்  ஹேர்..

மல்லிகா வயசுதான் இருக்கும்ன்னு நினைக்கிறேன் மனோ.. அவளை தான் காப்பாத்த முடியல.. இவளையாவது காப்பாத்தலாம்.

போலீஸ்..

அவங்க தான் தப்பிச்சிட்டாங்க போல இருக்கு.. இப்ப நம்ம வேலையே அந்த பொண்ணும் பையனும் எங்கே இருக்காங்கன்னு கண்டு பிடிக்க வேண்டியது தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் .. குழியை மூடிவிட்டு அவர்கள் கிளம்ப..

இப்ப அந்த பொண்ணை எப்படி கண்டு பிடிக்கிறது?

அது ஈஸி... அவங்க அப்பனை பாலோ பண்ணா கண்டு பிடிச்சிடலாம்..

அவங்க அப்பனை எப்படி பாலோவ் பண்றது..? வண்டி நம்பர் ஏதாவது நோட் பண்ணியா..

வண்டி நம்பர் எதுக்கு மனோ... அவன் விலாசம் நம்மட்ட இருக்கே..?

அவன் விலாசம் .. நம்மட்ட.....!? எப்படி..?

அன்னைக்கு ரெண்டு மூணு செக் எழுதி கிழிச்சி போட்டானே.. அதுல தான் இருக்கு!

அந்த செக்.. இப்ப?

மனோ.. அது எல்லாம் பத்திரமா இருக்கு... பின்னாலே தேவைபடும்னு எடுத்து வைச்சேன்...

யு ஆர் எ  பார்ன் டிடெக்டிவ்.. சரி வா.. மல்லிகா கல்லறை போய் மன்னிப்பு கேக்கலாம்..

வேணாம்.. மன்னிப்புக்கான நேரம் இது இல்ல.. நிவர்த்தி செய்யவேண்டிய நேரம்..

என்று இருவரும் வண்டியில் ஏறும் போது...

மனோ.. வந்தது தான் வந்த.. சுவர் எகிறி குதி..

மல்லிகா கல்லறைக்கு தான் போகலையே .. இப்ப எதுக்கு..?

அந்த நாலு பேருல  ஒருத்தன் சட்டையை கழட்டி அந்த மரத்தில் தொங்க  விட்டு இருக்கான் பாரு.. அத எடுத்துக்கோ.. பின்னாலே உதவும்.

சட்டையை எடுத்து வண்டியின் பின்புறம் வைத்து.. இப்ப எங்க போறோம் கனி...?

நேரா அந்த அம்பது லட்சம் பார்ட்டி வீட்டுக்கு..

அவன் அட்றாஸ்.. அந்த செக் நம்ம வீட்டுல தானே இருக்கு..

செக் வீட்டுல தான் இருக்கு, ஆனா அதோட காபி தான் நம்ம செல் போனில் இருக்கே.. அன்னைக்கே போட்டோ எடுத்து சேவ் பண்ணிட்டேன்..

வாவ்...

சரி.. அந்த சட்டையில் காலரில் இருக்க டைலர் பேரு .. அப்புறம் அந்த டோபி போட்ட மார்க்கர் ஏதாவது இருந்தா ஒரு போட்டோ க்ளிக் பண்ணி சேவ்  பண்ணு.. பின்னாலே உதவும்..

அடுத்த சில நாட்களில் இந்த கேஸ் அவர்களின் வாழ்க்கையையே அதிரவைக்க போகின்றது என்று எப்படி தெரியும்?

இரண்டாம் அத்தியாயம் படிக்க இங்கே சொடுக்கவும்.. 

துப்பறிவாளன் - இரண்டாம் பாகம் ( அத்தியாயம் 2 )

பின் குறிப்பு : 

கிட்ட தட்ட 20  வருஷம் கழித்து ஒரு தமிழ் படம் பார்த்தேன். நண்பர்கள் பலர் நன்றாக உள்ளது என்று "துப்பறிவாளன்" என்ற படத்தை பற்றி கூறினார்கள். நன்றாக தான் இருந்தது. ரசித்தேன். பாடல்கள் மற்றும் நடனங்கள் இல்லாதது  பெரிய ஆறுதல்.

அதை பார்த்தவுடன்.. இந்த கதை அமைப்பு நல்ல சீக்குவல் எடுக்கும் படியான அமைப்பு போல் தெரிந்தது.. நமக்கு தெரிந்ததை எழுதி வைப்போமே..ஒரு வேளை.. அந்த இயக்குனர் படித்து.. முழு கதையும் தா என்று சொன்னால்.. போட்டு தாக்கிடுவோம்..

4 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...