வெள்ளி, 26 மே, 2017

கற்க கசடற..

இன்று மதியம் நண்பன் “கோ”விடம் சிறிது நேரம் தொலை பேசியில் பேசி கொண்டு இருந்தேன். எங்கள் இருவரையும் இன்று அட்லாண்டிக் கடல் பிரித்து வைத்து இருந்தாலும், அன்று பாலாறு ஊட்டி வளர்தததால் அடிக்கடி ஒருவரை ஒருவர் அழைத்து பேசி கொள்வோம்.


ஒரே பள்ளியில் தான் படித்தோம், ஆனாலும் பள்ளி நாட்களில் நட்பு என்று சொல்ல முடியாது..கல்லூரியின் இளங்கலையில் அவ்வபோது பேசி கொண்டாலும்.. அவர் வழி வேறு என் வழி வேறு என்பது போல் தான் இருந்தது… முதுகலையில் தான் எங்கள் நட்பு முற்றியது.


எங்கள் இருவரின் வாழ்க்கை பாணியே வெவ்வேறு .. கல்லூரி மாணவிகள் மத்தியில் நண்பர் “கோ” எப்போதுமே ஹீரோ .. நம்ம முக ராசி, நாம் எப்போதுமே ” வில்லன்” தான். அந்நாட்களில் வில்லங்கமான காரியம் அங்கே என்ன நடந்து இருந்தாலும் அனைவரின் சந்தேக பார்வையும் அடியேனின் பக்கம் தான்.

பள்ளியிலும் இளங்கலையிலும் பட்டும் படாமல் இருந்த நாங்கள் முதுகலையில் நெருங்கிய நண்பர்கள் ஆனதின் காரணமே தமிழ் என்னும் அமிழ்து தான் .

முது கலை ஆரம்பித்து முதல் வாரத்திலேயே … கல்லூரியில் ஓர் பட்டிமன்றம். “வியாபாரத்தை அதிகரிக்க அதிக முக்கியம் விளம்பரமே … வியாபார திறனே ..” வகுப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் பட்டிமன்றம் தமிழில் தானே செல்லும். நண்பன் “கோ”வின் தலைமையில் ஆனா “விளம்பரமே” அணியின் முதல் பேச்சாளனாக அடியேன் …எனக்கு தெரிந்த சில விடயங்களை கூறி அமர்ந்தேன். எதிர் அணியின் இருந்த நண்பர் (பெயர் மறந்து விட்டது) என் பேச்சை கிண்டல் அடித்து விட்டு பின்னர் அவர் கருத்துக்களை முன் வைத்தார்.

அந்த நேரத்தில் அவர் முதுகலை படிப்பு  இடம் வேண்டும் என்று வேண்டினாரோ என்னவோ .. அவர் தலையில் திருப்பதி மொட்டை. அவர் பேசி முடித்து அமர.. எங்கள் அணி தலைவன் “கோ” முன் வந்து..

“எதிர் அணியின் நண்பரின் தலையின் வெளியே தான் ஒன்றும் இல்லை என்று நினைத்தேன் .. ஆனால் அவர் பேசியவுடன் தான் தெரிந்தது … அவரின் தலையின் உள்ளேயும் ஒன்றும் இல்லை”

என்று ஆரம்பித்தார். அந்த ஆரம்பத்திற்கு அட்டகாசமான கைதட்டல் – ஆரவாரம் .அன்று தான் கற்று கொண்டேன்.. அடேடே.. மேடை பேச்சுக்கு போகும் போது முதல் 5-10 வினாடிகளுக்குள் அவையோரை நம் பக்கம் இழுக்க நகைச்சுவை மிகவும் முக்கியம் என்று. பட்டிமன்றம் முடிந்தது . வெற்றி நம் பக்கம் தான்.

அன்றில் இருந்து இன்று வரை .. நாங்கள் எங்கே பேசினாலும் அப்பேச்சு தமிழை சார்ந்தே இருக்கும்.. இன்று மதியம் பேசுகையில் இருவரும் திருவள்ளுவரின் அறிவு திறனை ஆராய்ந்தோம் .. எங்கேயோ பேச்சு ஆரம்பித்து …

“கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”

என்ன  ” கோ”? ஏழாயிரம் பக்கத்தில் எழுத வேண்டிய விஷயத்த நெத்தி அடி போல் ஏழேவார்த்தையில், இவ்வளவு அழகா .. எப்படி “கோ ”

சரியா சொன்ன விசு.. “கற்க”.. அடித்து சொல்றார் .. இது ஒரு கட்டளை … “கற்க …”

“கசடற”… அறிந்து படி .. ஒரு சந்தேகம் வந்தா அதை நிவர்த்தி செய்து படி .. ஒழுங்கா படி .. இதுவும் ஒரு கட்டளை போல் தான் இருக்கு ..

“கற்பவை ” .. சும்மா படிக்கிறேன் படிக்கிறேன்னு வருஷ கணக்கா விரயம் பண்ணாத.. சட்டு புட்டுன்னு முடி .. அதுதான் .. கற்பவை .. சும்மா கண்டதையும் படித்து நேரத்தை வீண்டடிக்காதே .. கற்க வேண்டியவைகளை மட்டும் கற்றுகொள் ….
“கற்றபின்”..முழுதாக கற்ற பின்.. பாதி படித்து முடித்து அடுத்தவனுக்கு அறிவுரை கொடுக்காதே. கற்றவை கற்ற பின்..

“நிற்க”.. “Stand by what you Studied” படித்த முட்டாளா இருக்காத. ஏட்டு சுரைக்காய் போல வீணாகிவிடாதே ..

அதற்கு … எதற்கு .. ? கற்க கசடற கற்றவை கற்ற பின் நிற்க ..

கோ.. புல்லரிக்குது கோ.. என்னமா சொல்லுறாரு..

“தக”.. …அதற்கு தக நிற்காவிடில் நீ கசடற கற்க வில்லை … என்று அர்த்தம்..

இதுல பாரு கோ .. இந்த குறளை…

கசடற கற்க நிற்க அதற்கு  தக
கற்பவை கற்ற பின் ..

அப்படியும் சொல்லலாம் ..

ஏன் விசு .. இப்படியும் சொல்லாமே …

கற்பவை கற்ற பின் நிற்க
அதற்கு கற்க கசடற …

பேச்சு தொடர்ந்தது…

5 கருத்துகள்:

  1. மாத்தி யோசிக்குறிங்களோ!

    பதிலளிநீக்கு
  2. இப்படி வரிகளை மாற்றிப் போட்டு
    வாசிக்க வரும் பொருள் குறித்த
    தங்கள் விளக்கம் அருமை

    அடுத்த பதிவை எதிர்பார்த்து ஆவலுடன்

    பதிலளிநீக்கு
  3. அருமை அண்ணா, உங்கள் எழுத்து வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...