செவ்வாய், 31 ஜனவரி, 2017

பக்கத்து வீட்டு.....

என்ன விசு... பாட்டை இவ்வளவு சத்தமா வச்சி இருக்கியே...பக்கத்து வீட்டில் கோப படமாட்டார்களா?

வா செந்தில் .. வா... பக்கத்து வீட்டில் யாரும் இல்லையே.. அடுத்த பக்கத்தில் வீடே இல்லை. அதனால் கவலையில்லை.

என்னாது பக்கத்து வீட்டில் யாருமே இல்லையா.. போன வாரம் கூட அந்த ஸ்டேட் பேங்க் மானேஜர் குடும்பத்தோடு இருந்தாரே.. என்ன ஆச்சி..

அவருக்கு ட்ரான்ஸ்பெர் .... வீடை காலி பண்ணிட்டு கிளம்பிட்டாரு.
சாவியை என்னிடம் தான் கொடுத்து இருக்கார். வாடகைக்கு நல்ல குடும்பமா வந்தா கொடுத்துட சொன்னார். மாசம் 150  ருபாய்.

உனக்கு எவ்வளவு..

நல்லா கேட்ட போ..அந்த ஆள் எச்சி கையில் காக்க ஓட்டுறத விடு  .. எச்சி கையில் ஜன்னலில் நீட்டி அதுல இருக்க சோத்து பருக்க காக்கா சாப்பிட வந்தா  அதை பிடிச்சி கொழம்பு வச்சி சாப்பிடுவான்.. அவனாவது எனக்கு ஏதாவது தரதாவது..

அப்புறம் ஏன் இந்த சாவியை வாங்கினே..

செந்திலு ..பக்கத்து வீடு நமக்கு அமையுறது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்.. அதை நாமே அமைச்சிக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு வந்தா அதை ஒழுங்கா யூஸ் பண்ணிக்கணும்.



பேசி கொண்டு இருக்கும் போதே...அழைப்பு மணி அடித்தது.

ஜன்னல் வழியாக எட்டி பார்த்த செந்தில்.. அலறினான்.. விசு, என்னாடா பண்ண.. வெளிய போலீஸ்...

போலீசா..ஒரு வேளை அந்த "மூன்று முகம்" மேட்டர் இது வரைக்கும் வந்துடுச்சா...

என்று பயந்து கொண்டே...

சார்.. உங்களுக்கு என்ன வேணும்?

விசு இருக்கானா?

விசு... இருந்தான்.. இப்ப தான் வெளியே போய் இருக்கான்..உங்களுக்கு என்ன வேணும்?

இல்ல .. ஸ்டேஷனுக்கு புதுசா DSP வந்து இருக்கார். அவருக்கு கோட்டர்ஸ்  கொடுத்து இருக்காங்க.. இருந்தாலும் அங்கே நிறைய ரிப்பேர் செய்ய வேண்டி இருக்கு.. ஒரு ஆறு மாசத்துக்கு ஒரு  வீடை  வாடகை எடுக்கலாம்னு விசாரிச்சோம், பக்கத்து தெரு ராதா கடையில் விசுவை பாருங்கன்னு சொல்லி அனுப்புனாங்க.. அதுதான்.

சார்... விசு இப்ப தான் இன்னொரு ஒருத்தருக்கு சாவியை கொடுத்தான். அவங்க அடுத்த வாரம் போல குடியேறுவங்க...

ராதா 150  தான் வாடகைன்னு சொன்னான் .. நாங்க வேணும்னா 175 கூட தரோம்.. விசுட்ட சொல்லு.

இல்ல சார்..  அந்த குடும்பத்திடம் விசு சாவிய கொடுத்துட்டான்..

நீ யார்..

நான் விசுவோட மச்சினன்.. சுவி...

சரி.. இங்கே வேற ஏதாவது வீடு வாடகைக்கு..

இந்த ஏரியா வேண்டாம் சரி.. கொஞ்சம் எசக்கு பிசக்கு...

டே.. சுவி.. வர போறது  போலீஸ்.. அந்த கவலைய விடு..

ஆமா இல்ல... இருந்தாலும் இங்கே எனக்கு தெரிஞ்சு வீடே இல்ல...

சரி..அந்த புது வாடகை ஆளுங்க மனம் மாறி வேற எங்கேயாவது போய்ட்டாங்கனா.. ஸ்டேஷன் வந்து சாவிய என்கிட்ட கொடு..

சரி சார்...

அவன் யார்.. சன்னல் வழியா அப்ப இருந்து எட்டி பார்த்துன்னே இருக்கான்..

அவனா.. அவன் பெயர் முருகன்.. பக்கத்து தெரு, விசுவோட படிக்கிறான்.

அவனை உடனே ஸ்டேஷனுக்கு அனுப்பி இந்த வீடு கிடைக்கலைன்னு  சொல்ல சொல்லு.. எனக்கு நிறைய வேலை இருக்கு.

சார், அவனுக்கு சைக்கிள் ஓட்ட வராது..

இம்புட்டு வளர்ந்து எருமை மாடு போல இருக்கான்.. சைக்கிள் ஓட்டவராதா? படிக்கிறது எல்லாம் அப்புறம் வைச்சிக்கலாம்.. முதலில் சைக்கிள் பழக சொல்லு..

சரி சார்..

சரி.. நீ ஸ்டேஷன் வரை போய் சொல்லிட்டு வா..

சார்... விசு வர வரைக்கும் நான் எங்கேயும் போக முடியாது.. வேணும்னா நீங்களே முருகனை கூப்பிட்டு நடந்தே போக சொல்லுங்க..

டே.. இங்க வா..

சொல்லுங்க சார்..

நேரா ஸ்டேஷன் போய் வீடு வாடகைக்கு கிடைக்கலன்னு சொல்லிட்டு வா...

சார்.. மூணு கிலோமீட்டர் சார்..இப்ப சைக்கிள் கூட வாடகைக்கு கிடைக்காது..

அப்படியே வாடகைக்கு கிடைச்சாலும் நீ என்ன தள்ளினேவா போ போற.. போடா.. பொடிநடையா போய் சொல்லு.. கிளம்பு..

என்று சொல்லி விட்டு அவர் கிளம்ப....

செந்திலோ..என்ன விசு ? கண்டவங்களிடமும் எனக்கு சைக்கிள் ஓட்டவராதுனு சொல்லிட்டு..

சரி விடு..

சரி.. இந்த புது குடித்தனக்காரங்க எப்ப வராங்க..?

இன்னும் யாருமே வந்து கேக்கலை..

அப்ப.. இவர்ட்ட ஏன் அப்படி சொன்ன?

டே.. செந்தில்... இந்த ஆள் யூனிபார்ம் போட்டுனு வந்து சும்மா பெல் அடிக்கும் போதே நம்ம ரெண்டு பேரும் எப்படி அலறினோம்..இவங்க டிபார்ட்மெண்டில் இருந்து பக்கத்து வீட்டுல வந்தாங்கன்னா.. நம்ம நிலைமை அம்போ...

நல்ல வேலை நல்ல வேளை பண்ண விசு...

சரி.. அப்ப எப்ப தான் அங்கே ஆளை வைக்க போற?

நமக்கு பிடிச்ச ஆளுங்க யாராவது.. வரணும்.. அப்ப தான்...

சரி .. நீ கிளம்பு...

விசு.. சைக்கிள் எடுத்துன்னு வாயேன்.. நான் வேனும்ம்னா பின் சீட்டில் உக்கார்ந்து மெதிக்கிறேன்...

இல்ல .. செந்தில்... நீ கிளம்பு.. இங்கே அந்த வீடை பார்க்க யாராவது வந்தா நான் இருக்கணும். இன்னும் ஒரு வாரத்தில் யாரையாவது வைக்கணும். இல்லாட்டி இந்த ராதா கடைக்காரன் திரும்பவும் போலீசை  அனுப்புவான்.

செந்தில் கிளம்ப.. பாடல் சத்தம் அதிகமாக.... சில நிமிடம் கழித்து.. அழைப்பு மணி அடித்தது..

விசு...

எதிரில்..அப்பா - அம்மா - மற்றும் ஒரே சாயலில் கல்லூரி செல்லும் வயதில் இரு பெண்கள்...

நீங்க...

இந்த வீடு வாடகைக்கு...

வாங்க... வாங்க... ரொம்ப நல்ல வீடு சார்.. இந்த மாதிரி வீடே எங்கேயும் கிடைக்காது...

வீடை சுற்றி காட்டிக்கொண்டு இருக்கும் போதே.. நாங்கள் ரெண்டு பேரும் அக்சிலியம் கல்லூரியில் BA படிக்கிறோம். வி ஆர் ட்வின்ஸ்

ரொம்ப சந்தோசம்.. நான் கூட அக்சிலியத்தில்  பிகாம் தான் படிக்கிறேன் ..சாரி.. வூரிஸ் கல்லூரியில் BCOM தான் படிக்கிறேன்.

நைஸ். வீட்டுல நல்ல ஆங்கில பாட்டு..Dire  Straits  உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்குமாவா... அவங்க பாட்ட போட்டா நமக்கு சோறு தண்ணி கூட வேண்டாங்க..

எங்களுக்கும் அதே தான். எங்க அப்பா தான் டேப் வாங்கி தரமாட்டுறார். நீங்க எப்ப போட்டாலும் கொஞ்சம் சத்தமா போடுங்க...உங்க பேரில் நாங்களும் கொஞ்சம் கேட்டுக்குறோம்.

உங்களுக்கு எப்ப டேப் வேணும்ன்னு சொல்லுங்க .. நான் சத்தமா போடுறேன்.

பேசி கொண்டே இருக்கையில்..

எல்லாம் நல்லா இருக்கு தம்பி... வாடகை தான் கொஞ்சம் அதிகம்.. அதுதான் யோசிக்கிறேன்.

அவரு 150  ருபாய் தான் கேக்குறார்..உங்களுக்கு எவ்வளவு முடியும் சொல்லுங்க..

125 ன்னா எங்களுக்கு ஓகே.

சார் இந்த வீட்டுக்கு 125  டூ மச்.. நீங்க 100  கொடுத்தா போதும்.. நான் அவரிடம் பேசிக்கிறேன்.

பின்குறிப்பு:

இந்த நிகழ்ச்சி ஏன் இன்னைக்கு நினைவுக்கு வருதா? பக்கத்து வீடு ரெண்டு மாசமா காலியா இருக்கு.. இன்னைக்கு சாயங்காலம்.. வீட்டுக்கு வந்தா அங்கே ஒரு வண்டி.. அப்பா   -  அம்மா மற்றும் அவங்களுடைய ஒரே பையன்...

என்னை நோக்கி சிரித்து கொண்டே வந்தார்கள்..

நாங்க தான் இந்த வீட்டுக்கு வரப்போறோம்.. வி ஆர் பிரம் ஸ்பெயின்.....திஸ் ஐஸ் மை சன் ... அலெக்ஸ்..

5 கருத்துகள்:

  1. நல்ல வேளை.. அவர் உங்க கிட்ட சாவி குடுக்கலை :-)

    பதிலளிநீக்கு
  2. ஆஹா!!! அப்போ ட்வின்ஸ், கேர்ல்ஸ்.... இப்ப ஒரே பையன்!!!! அலெக்ஸ்...விசு என்னவோ எட்டிப் பார்க்குதே!!! ஹஹஹ்...

    பதிலளிநீக்கு
  3. செய்வீங்கப்பா, செய்வீங்க..! வயசுப் பொண்ணுங்க குடிவந்தா வாடகையே இல்லாமக் கூட கொடுத்துடுவீங்க போலிருக்கே! கலிகாலம்னு சும்மாவா சொன்னாங்க?

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...