திங்கள், 30 ஜனவரி, 2017

நெல்லை கண்ணன் அவர்களுக்கு .....

அன்பு ஆசான் நெல்லை கண்ணனுக்கு,

பொதுவாகவே பொங்கல் மற்றும் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு இந்தியாவில் இருந்து சிறப்பு விருந்தினர்களை அழைத்து வருவதை அறவே
வெறுப்பவன்  நான்.

கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைவது போல் என்ற எண்ணம் தான் எனக்கு வரும்.

இந்த சிறப்பு விருந்தினரை நான் அறவே வெறுக்க காரணம்....

அமெரிக்க தமிழ் சங்கங்கள் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  தமிழை வளர்க்க.. திரைப்பட நடிகர் நடிகைகள் - இயக்குனர்கள் - தொலைக்காட்சி நடிகர்கள் என்று ஒரு பட்டாளமே வந்து செல்கின்றது.



தமிழ் பட்டிமன்றம் என்று ஒன்றை ஆரம்பித்து அதற்கு தலைமை தாங்க ஒரு திருக்குறள் கூட தெரியாமல்  தெரியாத நடுவர்!

1970  ல் இருந்து 2000  வரை ஆனந்த விகடனின் வந்த நகைச்சுவை துணுக்கை பூசி  மெழுகி பேசும் ஒருவர் ... இந்த நிகழ்ச்சிகளை பார்க்கவே சகிக்காது.

நான் என்னால் முடிந்தவரை அமெரிக்க தமிழ் சங்க நிர்வாகிகளிடம் உங்களின் மத்தியில் உள்ள நபர்களை தேர்ந்தெடுத்து பேச சொல்லுங்கள் என்று சொல்வேன்.

இருந்தாலும் இந்த சிறப்பு விருந்தினர்களுக்கு தான் ஒரு விதி விலக்கு

ஆசானே..

இந்த பொங்கலை எங்களுடன் கொண்டாட நீங்கள் வருகின்றீர்கள் என்றவுடன்.. அடே .. அடே... தமிழை கொண்டாட.. தமிழ் கடல் நீங்கள் வருகின்றீர்கள் என்று மகிழ்ச்சியுற்றேன்.

ஏன் என்றால்... தங்களின் தமிழ் அறிவு..தம் தமிழின் உச்சரிப்பும் .. கவிதை சொல்லும் விதமும் தம் நினைவு திறனும்...

யோசித்து பார்க்கையிலே ஆனந்தம் வந்தது.

சென்ற வார இறுதியில் தாம் சிகாகோ நகரில் "சமூக வலைத்தளம் வரமே - சாபமே " என்ற தலைப்பில் ஒரு பட்டிமன்றம் நடத்த போகின்றீர்கள் என்று அறிந்தவுடன்.. அடியேன் சிகாகோவில் இல்லையே என்றே சோகம் என்னையும் தாண்டி வந்தது.

சரி, இந்த நிகழ்ச்சி காணொளியில் கண்டு ரசிக்கலாம் என்று காத்து இருந்தேன். திங்கள் காலையில் காணொளியும் கிடைத்தது.

என்ன ஒரு அதிர்ச்சி.. தமக்கு என்ன நேர்ந்தது ஐய்யா? பட்டிமன்ற மேடையில் தாம் நடந்த விதம் ஒவ்வொன்றும் என்னை சோகமான வியப்பில் ஆழ்த்தியது.

முன்னுறை என்று தாம் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் பேசினாலும், அதில் தலைப்பு சுட்டி எதுவுமே அமையவில்லை. அதையும் தாண்டி பட்டிமன்ற பேச்சாளர்கள் பேச ஆரம்பித்தவுடன் தாம் நடந்த விதம் நாகரீகமாகவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

முதல் பேச்சாளர் ஒரு கவிநயத்தோடு ஆரம்பிக்க.. நீங்களோ.. குறுக்கிட்டு.. இது எப்போது எழுதியது தெரியுமா? யார் எழுதியது தெரியுமா? ஏன் எழுதியது தெரியுமா? எதற்கு எழுதியது தெரியுமா? என்று கூறியது மட்டும் அல்லாமல்.. அடுத்த வரி என்ன தெரியுமா.. கடந்த வரி என்ன தெரியுமா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு.. பேச்சாளரை திகைத்தடித்தீர்கள்.

அதன் பின்.. ஒரு கட்டத்தில்... எதிரே உள்ள பிள்ளைகளை சுட்டி காட்டி..
இந்த பிள்ளைகள் ஏன் இவ்வளவு சந்தோசமாக இருக்கின்றார்கள் தெரியுமா? "முட்டாள் பயல்கள் அனைவரும் மேடையில் உள்ளதால் " என்று நீங்கள் கூறியது ... காணொளியில் காணும் என்னையே முகம் சுழிக்க வைத்தது. பாவம் அந்த பேச்சாளர்கள்.

சமூக வலைத்தளத்தை பற்றி பேசிய அந்த பெண்மணியை.. வரம் என்றால் என்ன .. சொல்.. வரம் என்றால் என்ன சொல் என்று நீங்கள் வற்புறுத்த.. பாவம் அந்த அம்மணி..

அதன் பின்னர்.. தங்களின்.. "சைவப்பிள்ளை நகைச்சுவை" ..ஐயா.. இந்த விடயத்தை நூற்றுக்கும் மேலே சொல்லிவிட்டிர்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் இதையே சொல்வது.. எனக்கு என்னமோ .. நீங்கள் மக்களிடம் தங்கள் எந்த ஜாதி என்று சொல்லி காட்டுவதை போலவே புலப்பட்டது.

பல இடங்களில் தங்களின் பேச்சு சாதிகளை ஒற்றி அமைந்து இருந்ததை... தற்செயலாக நடந்தது என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. வேண்டாம் அய்யா.... வேண்டாம்...

 "கனி இருக்க காய்கவர்ந்தற்று"


அந்த ஆறு பேச்சாளர்களும் பல வருடங்களுக்கு முன் தாய்நாட்டை விட்டு  வெளியேறி வருட கணக்கில் ஆங்கிலம் என்ற மொழியிலே பேசி வந்தாலும்.. பொங்கல் தமிழ் திருவிழா என்றவுடன்.. அனைத்தையும் விட்டுவிட்டு ...

தமிழ் மேல் கொண்ட பாசத்தினால் மேடையேறி பேசவந்தவர்கள். அவர்களும் சரி, மற்றும் அடியேனை போன்ற மற்ற நகரங்களிலும் இருப்பவர்களும் சரி, ஓர் தேர்ந்த மேடை பேச்சாளர்கள் அல்ல. ஏன்..இன்னும் சொல்ல போனால் ... ஆடிக்கொரு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை பேசுபவர்கள்.

நாங்கள் பேசும்போது சற்று தடுமாறுவோம், உண்மைதான்.. அந்நேரத்தில் தங்களின் தகப்பன் ஸ்தானம் பொறுமை எங்களுக்கு தேவை படுகின்றது. தடுமாறும்  எங்களை தாங்கி பிடித்து நடத்துவதை மறந்து நீங்கள் எங்களை தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்தது போல் ஒரு எண்ணம் தான் எனக்கு வந்தது.

ஒரு தமிழ் ஆசானாகிய தாம், எங்களை முதுகில் தட்டி கொடுக்க வேண்டுமே தவிர.. .பிரம்பால் அடிக்கக்கூடாது.

நான் அமர்ந்த மேடையில் மட்டும் தாம் " முட்டாள் பயல்கள் மேடையில் இருக்கின்றார்கள்" என்று சொல்லி இருந்தீர்கள் என்றால், உடனே எழுந்து சபைக்கு ஒரு மன்னிப்பு கூறி விட்டு மேடையை விட்டு இறங்கி சென்றிருப்பேன். அந்த ஆறு பேச்சாளர்களும் மேன்மக்களே.

எங்களில் ஒருவரும் தங்களின் தமிழ் அறிவு கொண்டவர்கள் அல்ல. ஆனால் எங்கள் தமிழ் பற்று எந்த விதத்திலும் தங்களின் தமிழ் பற்றோடு குறைந்தது அல்ல.

தங்களின் தமிழ் கடலில் துள்ளி விளையாடலாம் என்று எண்ணி வந்த எங்களுக்கு தொண்டை வரை உப்பு நீரை குடித்து போன்ற ஒரு உணர்வு.

வேண்டாம் ஐயா.. எங்களை ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை,  ஊக்கால் சிதைத்து  குருதி வரசெய்யாதிரும்.

இன்னும் சொல்ல போனால்.. தங்களிடம் அநாகரிக பேச்சு வாங்குவதை விட அந்த தமிழ் அறியா  இயக்குநர்களையே அழைத்து.. "முருங்கை காய் - அல்லது வாகனம் பின்னாலே இடித்தாதா"? என்று பட்டிமன்றம் நடத்தி இருக்கலாமா என்ற எண்ணம் தான் வந்தது.

எங்கே கற்றாய்.. யார் சொன்னது.. இடம் சூட்டி   பொருள்விளக்கு என்று நீங்கள் கேட்பீர்கள், இருந்தாலும் சொல்லுகிறேன்...

நெற்றி கண் திறந்தாலும்.. குற்றம் குற்றமே...

பின் குறிப்பு :

வாசகர்கள் இந்த நிகழ்ச்சியை கீழே காணவும். அடியேன் கூறியதில் தவறு எதுவும் இருந்தால்.. பின்னூட்டத்தில் சுட்டி காட்டவும்.






23 கருத்துகள்:

  1. அவனெல்லாம் ஒரு ஆளுன்னு இம்புட்டு பெரிய பதிவு தேவையா விசு?
    payment எல்லாம் அட்வான்ஸா குடுத்தா தான் வருவேன்ன்ட்டு சொல்லியிருப்பானே... தமிழைக் காக்க வந்த தனயன் போல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பின்னூட்டம் அவரை ஒருமையில் குறிப்பிட்டு இருந்ததை அடியேன் ஏற்கவில்லை, இருந்தாலும்.. அவர் மேல் நம்மக்கு உள்ள வெறுப்பை காட்டுகின்றதல்லவா .. அதற்காக வெளியிடுகிறேன்.

      நீக்கு
  2. திருக்குறள் கூட தெரியாமல் இருந்தால் அவர் மனிதரே அல்ல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது தனபாலன், இதுபோன்ற ஆட்களை குறிப்பாக இயக்குனர்களை..நடுவில் வைத்து ஒரு பட்டிமன்றம்..

      சென்ற வருடம் மதுரை முத்துவை வைத்து ஒரு பட்டிமன்றம்.... எப்படி நடந்து இருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

      நீக்கு
  3. இங்கேயே திற்மை வாய்ந்த பலர் இருக்கும் போது இவர்களை அழைத்து வண்டு பேச சொல்வது தவறு அமெரிக்க தமிழ் சங்கங்களை பற்றி நான் ஒரு பதிவு போடாலம் என் நினைத்து இருந்தேன் பல நண்பர்கள் இந்த சங்கங்களில் இன்வால்வ் ஆகி இருப்பதால் அதை தவிர்த்து வந்தேன் பொறுத்தது போது அதை பற்றியும் எழுதிவிடலாம் என நினைக்கிறேன்


    மேடையில் இருப்பவர்கள் முட்டாள் என்று சொல்லும் போது நீங்கள் அங்கிருந்தால் வெளியேறி இருப்பிர்கள் என்று சொன்னதை பாராட்டி வாழ்த்தி வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் நண்பர்களிடம் எடுத்து சொல்லுங்கள் தமிழா.. பொறுத்தது போதும், பொங்கி எழுந்து ஒரு பதிவை போடு.

      நீக்கு
  4. இந்தாள் நொள்ள கண்ணன் youtube privé ன்னு வருது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த காணொளியை நான் இணைக்கும் போது பொது காணொளியாக தான் இருந்தது. ஏனோ அதை பிரைவேட் செய்து விட்டார்கள்.

      நீக்கு
  5. திரு.நெல்லை கண்ணன் , அவர்கள் பற்றிய தங்கள் கணிப்பு மிகையில்லை.
    ஏனோ அவர் இப்போது, சற்றுத் தளம்புகிறார். சாதி குறிப்பிடல் அவர் பேச்சில் தூக்கலே!
    இதைப் பலர் விமர்சித்துள்ளார்கள். ஒரு காணொளியில் "நடிகர் சந்திரபாபுவைக் குறிப்பிடும் போது, மீனவ சமூகத்துப் பையன் " எனக் குறிப்பிட்டார். அது அந்த இடத்தில் தேவையற்றது. ஆனால் இவர் அதை இளைய தலைமுறைக்குத் தெரியப்படுத்தினார்.
    நடிகர் சிவகுமார் 100 கம்பராமாயணப் பாடல்களை எடுத்து ஒரு உரையை நிகழ்த்துகிறார், அதைக் ஒலிநாடாவாக வெளியிட்டுள்ளார். அது இவருக்கு ஒவ்வவில்லைப் போலும், ஒரு மேடையில் பெரும் பிடி பிடித்தார். அந்த 100 பாடலுக்கும் சரியாக விளக்கம் கொடுத்தாரா? என்பதிலும் இவருக்கு இந்த ஆய்வு செய்ய என்ன? தகுதி என்பது போன்றதே, இவர் பொருமலாக இருந்தது.
    ஆனாலும் இவர் காணொளிகளைப் பார்க்கத் தவறேன்.
    சமீபத்தில் இவர் உடல் நலக்குறைவாக இருந்த போது, மிக வேதனையாக இருந்தது. அதில் மீண்டு வந்து பேசும் போது ,அவர் கலங்கினார். அப்போது மனம் மிக வேதனையாக இருந்தது.
    நெல்லையப்பர் கோவில் அம்மன் காந்திமதியை அவர் பேச்சில் குறிப்பிடுவார். அது மிக அர்பணிப்பாக இருக்கும்.
    அவர் ஞானம் பெரிது, சில சமயம் மின்னஞ்சலிலும் என் சந்தேகங்கள் கேட்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரபாபுவை பற்றி பேச எவ்வளவோ விடயம் இருக்கையில் அவர் ஒரு மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்று மேடையில் எடுத்து சொல்பவரிடம் கண்டிப்பாக உள்நோக்கம் உண்டு என்றுதான் சொல்லவேண்டும்.

      சாதிகளை பற்றி பேசிவருவதை இவர் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

      அடுத்த முறை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளும்போது கண்டிப்பாக அவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. நன்றி கும்மாச்சி.. கட்டாரிலும் இவரை அழைத்து வந்து நொந்தீர்களா?

      நீக்கு
  7. சில நேரங்களில் நாம் மதிப்பவர்கள் மதிப்பை சிதைக்கும் வகையில் நடந்து கொண்டு நம்மை சங்கடத்தில் ஆழ்த்துவார்கள்.பலமுறை இவர்களுக்காக வக்காலத்து வாங்கி இருப்போம். வைரமுத்து வைகோ இளையராஜா,பாரதிராஜா போன்றோர் அதில் அடங்குவர். நெல்லை கண்ணன் நல்ல தமிழ் அறிஞர்தான். அவரது பேச்சில் தற்பெருமை அதிகம் உண்டு. நான் அவ்வப்போது குறிப்பிடுவதுண்டு. வயது இதற்கு முக்கியக் காரணம். வயது ஆக ஆக தன்னிலை மறந்து கட்டுப் பாடின்றி பேசுவதை காண முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைகுனிந்து நின்றால் தானே முதிர்ந்த நெற்கதிருக்கு அழகு.. இவர் விடயத்தில் அது இல்லை என்பது சோகமே...

      நீக்கு
  8. As for as the language, he is really one of the top. But, the way he presents himself, he is really unfit!

    பதிலளிநீக்கு
  9. திரு நெல்லை கண்ணன் அவர்கள் பேச்சும் அதன் வீச்சும் பிடித்திருந்தாலும்,எத்தனை சிறியவரானாலும் வயதில் பெரியவரானாலும் , அவர் ஒருமையில் , அவன் இவன், வாடா, போடா, அடேய் போன்ற சொற்களை மேடையில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல.

    மேலும் வெளி நாட்டில் வாழும் நம்மவர்கள் பட்டிமன்றத்தில் பேச்சாளர்களாக வந்து பேசுவதே பெரிய விஷயம், அவர்களை ஊக்கப்படுத்தாமல் தமது புலமையை பறை சாற்றிக்கொள்வதும் மேடை பேச்சாளர்களை கீழ்த்தரமாக சித்தரிப்பதும் மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவர்களின் மத்தியில் ஒரு அருவெறுப்பும் சூழ்ந்திருக்கும் என நினைக்கின்றேன்.

    காணொளி காண முடியவில்லை இருந்தாலும் உங்களின் பதிவின் வாயிலாக சூழலை உணர முடிந்தது.

    சில பட்டிமன்ற நடுவர்களுக்கு திருகுறள்கள் தெரியாது என்பது ஒருபுறமிருக்க, இதுபோன்று நடப்பவர்களுக்கென்றே ஒரு "குறள்" உண்டு தெரியுமா அவருக்கு என எனக்கு தெரியவில்லை.

    குறள்:

    "குன்றனைய மதியுடையார் என்றே தம்மைநினைப்போர் -சபைமுன்னே
    என்றேனும் மிதி படுவார்".

    பொழிப்புரை:

    தாம் எல்லோரை காட்டியிலும் மிகுந்த அறிவு உடையவர் என்று நினைத்துக்கொண்டு மற்றவரின் அறியாமையை சபை முன் வெளிச்சம் போட்டு காட்ட நினைப்பவர்கள் , அவர்களை பரிகாசிப்பவர்கள் , அதே சபை முன்னால் என்றோ ஒருநாள் வெட்கி தலைகுனியும் தருணத்தை தாமே உண்டாக்கி கொள்கின்றனர்.

    பதிவில் உங்களின் நியாயமான ஆதங்கம் வழிமொழியப்படவேண்டிய ஒன்று.

    குறளும், பொழிப்புரையும் பிடித்திருந்தால் "குரல்" வழி பதிவு செய்யுங்கள்.


    நன்றி.

    கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோ... எங்க ஆளையே காணோமே. அருமையான குறள் .. தேடி தேடி பார்த்தேன்...எந்த அதிகாரம் என்று தான் சிக்கவில்லை.

      கடைசியில் கூகிள் உதவியோடு அறிந்து கொண்டேன்.. அது கோ வின் குறள் என்று..

      நீக்கு
    2. குன்றென மதியுடையார் என்றே இருமாந்தோர்
      என்றேனும் மிதிபடு வார்

      நீக்கு
  10. //.... விருந்தினர்களை அழைத்து வருவதை அறவே ஆமோதிப்பவன் நான்.//

    மாத்திச் சொல்லிட்டீங்களோ?

    இதைப் பற்றி முன்பே பேசியிருக்கிறோம்.

    மேடையில் இருப்பவர்கள் முட்டாள்கள் என்றால் முதல் முட்டாள் தலைமை தாங்குபவர் தானே…? ஒரு தன்னடக்கம் தான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறை திருத்தி விட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  11. இனிமேல் யாரைக்கூப்பிடுவது என்றாலும் கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும் .தமிழ் அறிவு என்பது மற்றவரை இழிப்பதும் பழிப்பதும் அல்ல .இந்த மாதிரி மன நோய் உள்ளவர்களை தயவு செய்து கூப்பிடாதீர்கள் .மீறி கூப்பிட்டால் கூப்பிட்ட அனைவருக்கும் அது பரவும் .

    பதிலளிநீக்கு
  12. உண்மைதான். நானும் இதைப் பலமுறை கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. ஐயாநெல்லை கண்ணன் அவர்கள் ஆற்றல் மிக்க பேச்சாளர். ஆனால் மேடைகளில் பேச்சாளர்களை அவமானப்படுத்துவது வருந்தத்தக்கது

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...