புதன், 25 ஜனவரி, 2017

கண்ணீரில் மிதக்க வைத்தான்..

சென்னையில் .. St.Gabriel  என்ற பள்ளிக்கூடத்தில் +2  படித்த காலம். எழில் என்ற ஒரு மாணவன் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவன் கூட படித்து வந்தான். அவனை போல் அன்பானவனை நான் அறிந்ததே இல்லை.

ஒரு நாள் மதிய  உணவு வேளையில்....

எப்படி எழில் .. உன்னாலே மட்டும் இவ்வளவு அன்பா  இருக்க முடியுது?

சுயநலம் தான்...

டேய்.. உன் அன்ப பத்தி கேக்குறேன்.. சுயநலம்ன்னு சொல்றீயே..

இல்ல விசு .. உண்மையாகவே சுயநலம் தான்..

அட பாவி,. நான் சீரியஸா கேக்குறேன்..எப்படி..?

அப்பா..சொல்லி கொடுத்தாரு.

என்ன சொல்லி கொடுத்தாரு?

என்று கேட்க்கும் போதே.. அவன் தன் மதிய உணவை திறந்து அனைவருக்கும் மீன் வகையறாக்களை பகிர்ந்து கொடுத்தான்,..

என்ன எழில்.. தினந்தோறும்.. மீன் தானா?

ஆமா.. வாரம் ஒரு முறை இல்லாட்டி ரெண்டு முறை காய் வகைகள்..



கறி ..?

அது, மாசத்துக்கு ஒருமுறை..

மீன் சரி.. அது எப்படி இதனை வகையறா? பொரியல் - குழம்பு - வறுவல்- புட்டுன்னு.. எப்படி எழில் உங்க அம்மாவிற்கு இவ்வளவு  செய்ய முடியுது.

ஐயோ விசு.. இது அத்தனையும் என் அம்மா செய்யல.. எங்க தெருவில் இருக்கிற எல்லார் வீட்டில் இருந்தும் வந்தது.. நாங்க எதை செஞ்சாலும்  ஒருத்தருக்கொருத்தர் கொடுத்து சாப்பிடுவோம்.

என்னாமோ  போ எழில்.. என்னதான் முயற்சி பண்ணாலும் உன்னை போல் அன்பா இருக்க முடியாது.. சரி..சொல்லு.. அப்பா அப்படி என்ன சொல்லி கொடுத்தாரு...

அது தான் சொன்னேனே .. சுயநலம்..

டேய்.. நீ வேணும்னா பொறுமை சாலியா இருக்கலாம் .. ஒரு நிமிஷம்.. அன்ப விடு.. உனக்கு எப்படி இவ்வளவு பொறுமை ?

பொறுமை.. அது எங்க அம்மாவை பாத்து கத்துக்குனேன்..

எப்படி..?

அப்பா கடலுக்கு போயிட்டு நேரத்துக்கு திரும்பாட்டி.. அவர் வரவரைக்கும் பொறுமையா காத்துன்னு இருப்பாங்க..

உன்ன பார்த்தா நிஜமாவே பொறாமையா  இருக்கு எழில்..

சரி விடு.. நேரமாச்சு.. பெல் அடிப்பான் கிளம்பு விசு..

சீக்கிரம் சொல்லு.. அப்பா எப்படி அன்பா இருக்க சொல்லி கொடுத்தாரு..

திரும்பவும் சொல்றேன் விசு.. அது என் சுயநலம் தான்..

சரி சுயநலம் தான், சொல்லி தொலை..

விசு .. ஒவ்வொரு முறை அப்பா கடலுக்கு போகும் போதும்.. எழிலு .. கடலுக்கு போறேன்.. திரும்புவனா இல்லையா தெரியாது.. எல்லாரிடமும் அன்பா இருடான்னு .. சொல்லுவாரு..

அட பாவி.. இதுல என்ன எழில் சுயநலம்..?

விசு..  ஒரு வேளை .. நான்  அன்பு காட்டாத நாளில் அப்பா வராம போயிட்டா? அவரு சொன்ன கடைசி வார்த்தையை நான் காப்பாத்தாம விட்டுடுவோமோனு ஒரு பயம்..  அது மட்டும் இல்ல...  ஒரு வேளை நான் அவர் எதிர்ப்பார்ப்பை காப்பாத்தலானா அவர் திரும்ப வரமாட்டாற்றுன்னு ஒரு பயம் .. அதான்..

அவன் சொன்னது தான் சொன்னான்..

என் கண்கள் குளமாகியது..

விசு.. நீ ஏண்டா அழுவுற..

அழுவுல.. உங்க பக்கத்து  வீட்டுல இருந்து வந்த மீன் குழம்பில் காரம் ஜாஸ்தி.. அதுதான்.. கண்ணுல தண்ணி..

பொய் சொல்லாத விசு...அழுவுறத நிறுத்து..

இல்ல எழிலு.. நீ இப்படியே இரு..கொஞ்சம் கூட மாறாத... அப்பா இல்லாமல் வாழறது  எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கு தான் தெரியும்..

அவன் கண்கள் குளமாகுவதை துடைத்து சொன்னான்...

ஆமா.. விசு.. பக்கத்து  வீட்டில இருந்து வந்த குழம்பில் காரம் ஜாஸ்தி தான்..


பின் குறிப்பு :

என்னமோ தெரியவில்லை.. இன்று எழிலை அதிகம் யோசித்தேன்.

11 கருத்துகள்:

  1. எழில் என்றால் அழகு..
    உங்களைப்போலவே..
    எனக்கும் கண்ணுல தண்ணீர் வந்தது..உண்மையாவேங்கோ..

    பதிலளிநீக்கு
  2. மீனவ நண்பன்
    மீன் அழும் கண்ணீர் எப்படித் தெரியும்?!

    பதிலளிநீக்கு
  3. மனதை கனக்க வைத்துவீட்டீர்கள் விசு

    பதிலளிநீக்கு
  4. சுயநலமும் நல்லதுதான். மனதை நெகிழ வைக்கிறது இந்த இடுகை.

    பதிலளிநீக்கு
  5. குப்பத்து மீனவர் குடிசைகளை காவல்துறையினர் தீவைத்துக் கொளுத்திய செய்தி சிலநாள் முன்பு வந்தது. எவ்வளவு 'அன்புகள்' பாதிக்கப்பட்டனரோ!... - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
  6. விசு மனது கனத்துவிட்டது! அதுவும் இதைப் பற்றி அக்காவிடமும் புத்தக வேலை நடந்த போது அதிலும் வாசித்ததில், பேசியதில் அறிந்தமையால், நாங்கள் இருவரும் இதைப் பற்றி பேசியதலும்... மீண்டும் மனது கனத்தது...உங்கள் பெற்றோர் இருவரின் குணநலன்களும், நீங்கள் எல்லோரும் உங்கள் அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டதும், இறை உணர்வும் உங்களின் அடுத்த தலைமுறைக்கும் வந்திருப்பதையும் அறிய நேர்ந்தது...அப்படியென்றால் அதற்கு உங்கள் தலைமுறைகள், உங்கள் உடன்பிறந்தோர் அனைவரும் நீங்கள் கற்றுக் கொண்ட பாடத்தை நல்ல விசயத்தைப் பாடமாகப் புகட்டாமல் உங்கள் செயல்களின் மூலம் அடுத்த தலைமுறைக்கும் கடத்தியிருக்கிறீர்கள் எனலாம் இல்லையா?

    பதிலளிநீக்கு
  7. எல்லோரிடமும் அன்பாயிரு எனும் கருத்தைத் தாங்கிய எழுத்துக்கள் நெஞ்சைத் தைத்தன! நன்றி விசு!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...