வியாழன், 1 செப்டம்பர், 2016

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம்

டாடி .... நம்ம என்ன ஜாதி ?

கேட்டு கொண்டே வாகனத்தில் ஏறினாள்  இளைய ராசாத்தி..

அலறியே விட்டேன் நான்...

என்ன கேட்ட?

வாட் ஐஸ் அவர் கேஸ்ட்... நம்ம என்ன ஜாதி?

அது இப்ப உனக்கு எதுக்கு?

இல்ல பள்ளிக்கூடத்தில் கேட்டாங்க.



அட, நான் பெத்த மகளே..இந்த மாதிரி ஜாதி மதம் லொட்டு லொசுக்கு எல்லாம் வேண்டாம்னு சொல்லித்தானே 9000 மைல் தாண்டி - ஏழு கடல் தாண்டி உன்னை இங்கே பெத்து பள்ளிக்கூடம் அனுப்புறேன்.. இந்த பள்ளிக்கூடத்தில் உன்னை ஜாதி ?  ஏன்..,?

ஐயோ.. டாடி.. எங்க  ஹிஸ்டரி வகுப்பில் இந்தியாவின் ஜாதி முறை பற்றி படிக்கிறோம் .. எங்க டீச்சருக்கு நான் இந்தியன்னு தெரியும் இல்ல.. அதுதான் என்னை எந்த ஜாதின்னு கேட்டுன்னு வர சொன்னாங்க.

ஓ...அதுவா, நான் இங்கேயும் ஜாதி முறை வந்துடிச்சானு பயந்துட்டேன்..

சரி சொல்லுங்க டாடி.. நம்ம என்ன சாதி? எங்க  டீச்சருக்கு நாளைக்கு சொல்லணும்.

மகள்.. எனக்கு இந்த ஜாதிமுறையெல்லாம் தெரியாது, அதுல நம்பிக்கையும் இல்ல... அதனால உங்க டீச்சரிடம் எங்களுக்கு ஜாதி முறையில் நம்பிக்கை இல்லேன்னு சொல்லிடு.

ஐயோ.. என்ன டாடி..குழப்புறீங்க? சரி.. ஜாதினா என்ன டாடி?

எனக்கு உண்மையா தெரியல மகளே...

சரி, எதை வச்சி ஜாதிய முடிவு பண்றீங்க?

அம்மாடி.. நான் எதை வைச்சும் முடிவு பண்ணல..

இல்ல எங்க டீச்சர் சொன்னாங்க .... ஒருத்தங்க செய்யுற தொழிலை வைச்சு தான் ஜாதி முடிவு செய்யப்படும்ன்னு ,,.அது உண்மையா?

சத்தியமா தெரியல...

இல்ல டாடி.. முடி அலங்காரம் செய்யுறவங்க ஒரு ஜாதியாம்.. அப்புறம் .. மேசை நாற்காலி செய்யுறவங்க ஒரு ஜாதியாம்.. அப்புறம் கடை பிசினஸ் செய்யுறவங்க ஒரு ஜாதியாம்.. இப்படி தான் ஜாதி பிரிப்பாங்களாம்.

தெரியல மகள்.. நீ அவர்களிடமே கேட்டுக்கோ.. ஆனா ஒன்னு.. இந்த ஜாதிய அடிப்படையா வச்சி மனுஷங்கள தரம் பிரிக்கிறது ரொம்ப மட்டமான செயல்.. அதையும் நான் சொன்னேன்னு அவங்களிடம் சொல்லிடு.

சரி, இப்ப நம்ம ஜாதி சொல்ல போறீங்களா இல்லையா?

நான் இந்த விளையாட்டுக்கே வரல.. நீ கிளம்பு..

அம்மாட்ட கேக்கட்டா?

வேண்டாம்.. அவங்க யாழ்பாணத்து தமிழருங்க.. திடு திப்புனு கோவம் வரும்.

யாழ்ப்பாண தமிழர் ... அது ஒரு ஜாதியா?

ஐயோ.. இல்ல மகள்.. அது ஒரு இனம்.

என்னை ரொம்ப குழப்புறீங்க?

அடுத்த நாள்...

வண்டியில் ஏறும் போது...

டாடி.. நாங்க இன்னிக்கு இந்திய ஜாதிய வச்சி ஒரு நாடகம் போட்டோம். ஒவ்வொரு பிள்ளைக்கும்  ஒவ்வொரு ஜாதி. எங்களையே ஆளுக்கொரு ஜாதி செலெக்ட் பண்ண சொன்னாங்க.

ஓ...

நான் என்ன ஜாதி சொல்லுங்க பார்ப்போம்.

ராசாத்தி.. விளையாட்டுக்கு  கூட நம்ம என்ன ஜாதின்னு சொல்ல கூடாது.

ஐயோ . இது ஒரு நாடகம் தான் டாடி.. இதுக்கு போய். நீங்க..

சரி.. இந்தியாவை பத்தி கத்துக்கொடுக்க வேறு எதுவுமே இல்லையா? இந்த ஜாதி தான் கிடைச்சதா?

ஐயோ டாடி.. எங்க வகுப்பில் இந்த நாடகத்துல எந்த ஜாதி செலெக்ட் பண்ணுறோம் என்பதில் பெரிய சண்டையே வந்துடிச்சி.

ஜாதினாலே சண்டை தான் மகள்..அப்படி என்ன சண்டை.?


டாடி.. இந்த நாடகத்தில் ஒரு ஜாதியுடைய பெயர்... Untouchables ( தீண்டத்தகாதவர்கள்). அந்த வேடம் போட நாலு ஆம்பிளை பசங்க தான் வேண்டும்.

சரி.. அதுக்கு யாரும் வர மாட்டேன்னு சொல்லிட்டாங்களா?

போ .. டாடி நீங்க வேற.. இருக்குற 40 பாய்ஸும் அவங்களுக்கு இந்த ஜாதிதான் வேண்டும்ன்னு ஒரே சண்டை,

என்னது.. Untouchable  வேடத்துக்கு சண்டை போட்டார்களா?  ஏன்?

They all want to be Untouchable Daddy.. Nobody can touch them, they are so unique  and strong, When one is Untouchable ... you dont want to mess with them.

மனதில் சிரிப்பு தான் வந்தது. Untouchable ... இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா...

பின் குறிப்பு :

ஏங்க....

சொல்லு...

சின்னவளிடம்.. நான் யாழ்ப்பாண தமிழர்னு சொன்னீங்களா?

சொன்னேன்.. நீ யாழ்ப்பாண தமிழர் தானே...

சொன்னீங்க சரி.. கூடவே திடு திப்புனு கோவம் வரும்னு சொன்னீங்களா?

அது .. வந்து.. நான்.. தமாசு....க்கு..

எனக்கு வர கோவத்துக்கு...

என்று அம்மணி சொல்லும் போது.. இளையவள் குறுக்கிட்டு..

டாடி இஸ் கரெக்ட் மம்மா .. உங்களுக்கு திடு திப்புன்னு தான் கோவம் வருது.

10 கருத்துகள்:

  1. எனக்கு கோபமே வரவில்லை விசு சார்..
    அழுகைதான் வந்தது...
    9000 மைல் தாண்டி இந்த சாதிச்சனியன் தானா இந்தியா என்றதும் நினைவுக்கு வரவேண்டும்..
    ஆனாலும் ராசாத்திக்கு சாதிபற்றிச் சொல்லிக்கொடுங்கள்...அவர்கள் தலிமுறையிலேனும் அற்றுப்போகட்டும் அது...
    மற்றபடி உங்கள் எழுத்து...
    Untouchable...ununbeatable...very strong..

    பதிலளிநீக்கு
  2. Untouchable ... இதுக்கு இப்படி ஒரு நல்ல அர்த்தம் இருப்பதை தெரிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  3. உங்க பொண்ணு ஸ்கூலில் சாதியைப்பற்றி கேட்டார்கள் என் பொண்ணு ஸ்கூலில் மதத்தை பற்றி கேட்டார்கள் யார் எந்த மதம் என்று கேட்டு கைதூக்க சொல்லி இருக்கிறார்கள் எங்க விட்டு பொண்ணோ எல்லா மதத்திற்கும் கை தூக்கி டீச்சரையே குழப்ப் விட்டு வந்திருக்கு

    பதிலளிநீக்கு
  4. "முடி அலங்காரம் செய்யுறவங்க ஒரு ஜாதியாம்.. அப்புறம் .. மேசை நாற்காலி செய்யுறவங்க ஒரு ஜாதியாம்.. அப்புறம் கடை பிசினஸ் செய்யுறவங்க ஒரு ஜாதியாம்.. இப்படி தான் ஜாதி பிரிப்பாங்களாம்" - சாதின்னாலே குழப்பம் தான். தொழிலை வைத்துப் பிரித்தாலும் அடிப்படையில் பிறப்பில் தொற்றிவரும் நோய்தான். “இந்தியாவில் சாதி” அம்பேத்கரின் பிரமாதமான ஆய்வு நூல். கொஞ்சம் கொஞ்சமாக இது இலங்ககைத் தமிழரிடையிலும் தொற்றியதும் பெரிய சோகம்தான். இந்தத் தலைமுறையில் கி.பி.2000+இல் பிறந்த குழந்தைகளிடம் இதுபற்றிய விழிப்புணர்வு வருகிறது. உலகமயத்தில் கிடைத்த ஒரே நன்மை. ஆனாலும்...பெரியார் சொன்ன லண்டன் பேர்வைத்த கதைதான் நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  5. சாதிகள் உள்ளதடி பாப்பா
    குல தாழ்ச்சி உயர்ச்சி சொலல் சகஜம்
    நீதி உயர்ந்த மதி கல்வி
    இந்த நிலையை மாற்றவில்லை பாப்பா

    என்றுதான் பாடவேண்டும் போலிருக்கிறது

    பதிலளிநீக்கு
  6. இத்தனை தொலைவு சென்ற பிறகும் சாதி....

    இந்தியா என்றாலே சாதி தான் என்று அந்த பள்ளி ஆசிரியர் நினைக்கும் அளவிற்குத் தான் நம் நாடு இன்னமும் இருக்கிறது பற்றி என்ன சொல்வது. வேதனையான விஷயம்.

    பதிலளிநீக்கு
  7. அன் டச்சபிளுக்கு இப்படி ஒரு விளக்கம் அருமை! உண்மையும் கூட! அங்கேயும் ஜாதி பத்தி சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா?

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...