வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

சபாஷ் சரியான போட்டி....

மூன்று மாதத்திற்கு முன் ஒரு நாள்....

அலை பேசி அலறியது...

வாத்தியாரே .. என்ன பண்ற?

என்ன பண்ணுவேன்.. செவ்வாயும்  அதுவுமா, மதியம் சாப்பிட உக்காந்தேன். நான் நிம்மதியா சாப்பிட்டா உனக்கு பிடிக்காதே.. சொல்லு...

இல்ல, நீ கொட்டிக்கோ.. அப்புறம் பேசலாம்.

தமாஸ் பண்ணேன் பாணி.. சொல்லு..

வாத்தியாரே... ஆகஸ்ட் மாசம் ரெண்டாம் வாரம் என்ன பிளான் ?

டேய்...இந்த கிண்டல் தானே வேண்டாங்கிறது..

உன் பிளான் எல்லாம் அம்மணி தான் முடிவு பண்ணுவாங்கன்னு எனக்கும் தெரியும். காலெண்டரை பார்த்து சொல்லு..

அதுக்கு முன்னாடி ஆகஸ்ட் மாசம் ரெண்டாம் வாரம்நீ, என்ன பிளான் வைச்சின்னு இருக்க சொல்லு.

இல்ல, வாத்தியாரே.. இங்க எங்க ஆபிசில் சுற்றுலா கப்பலில் ரெண்டு குடும்பம் போற டிக்கட் கிடச்சி   இருக்கு. மொத்தம் எட்டு பேருக்கு .நாங்க  நாலு பேர் .. நீங்க நாலு பேர்...வா வாத்தியரே போலாம்..

தண்டம்.. காலெண்டரை பார்த்தேன்..அந்த வாரம் ஒரு முக்கியமான விஷயம் இருக்கு..அது நடக்குமா நடக்காதான்னு தெரியாது... அதனால என்னால கண்டிப்பா சொல்ல முடியாது.வேணும்னா.. இப்படி செய்யலாமே..

எப்படி..?

என் குடும்பமே வருவதா வச்சிக்கோ.. கடைசியில் வர முடியாம போனா வேற யாருக்காவது கொடுத்துடு..

வாத்தியாரே.. இந்த பயணம் ... இங்கே இருந்து மெக்சிகோ வரை. சர்வதேச எல்லையை கடக்கணும். அதனாலே முந்தியே பெயரை தரனும். கடைசி நேரத்தில் மாத்த முடியாது.

அப்படி என்ன விசேஷம்..?

ஆகஸ்ட் 15 ம் தேதி சொல்றேன்...

இந்த வாய்ப்பை எப்படி நீ வேணான்னு சொல்ற? அப்படி என்ன விசேஷம் ....


இளைய ராசாத்தி நடுநிலை பள்ளியை முடித்து விட்டு உயர் நிலை பள்ளிக்கு செல்கின்றாள். இவள் போக போகும் பள்ளியில் தான் மூத்த ராசாத்தி இந்த வருடம் இறுதி ஆண்டு படிக்கிறாள்.

இவர்கள் செல்லும் இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 3000 பிள்ளைகள். அதில் 1600க்கும்  மேலானோர் பெண் பிள்ளைகள்.  இந்த பள்ளி விளையாட்டு துறையில் பெயர் பெற்ற பள்ளி.  குறிப்பாக கோல்ப் மிகவும் பிரபலம்.

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் திறமைகேற்ப Varsity - Junior Varsity - Freshman  என்ற மூன்று அணிகள் உள்ளது. விளையாட்டு துறையில் இருக்கும் ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் 9 ம்  வகுப்பில் பள்ளியில் சேர்ந்தவுடன்  Varsity  அணியில் சேர வேண்டும் என்பதே குறிக்கோள்.

மூத்த ராசாத்தி தான் 9 ம்  வகுப்பில் சேரும் போது கடின உழைப்பினாலும் ஆண்டவனின் அருளினாலும் இந்த அணிக்கு தகுதி பெற்றாள். இந்த வருடம் அவள் தான் இந்த அணிக்கு தலைவி.

சென்ற வருடத்தின் அணி.....

இந்த Varsity  அணிக்கு மொத்தம் 9 பேர் இருப்பார்கள். இந்த வருடம் ஏற்கனவே (இந்த வருடம் 10,11,12 படிக்கும் மாணவிகள் ) 7 மாணவிகள் இருக்க, இரண்டு இடம் காலியாக உள்ளது. இந்த இரண்டு இடத்திற்கு கிட்ட தட்ட 60 மாணவிகள் போட்டி இடுகின்றனர். இதற்கான தகுதி போட்டி ஆகஸ்ட் ரெண்டாம் வாரம் நடக்க இருக்கின்றது. இதில் போட்டியிட இளைய ராசாத்தி தயாராகி கொண்டு இருக்கின்றாள்.

கடந்த 5 வருடமாக ... ஒவ்வொரு முறை கோல்ப் ஆடும் போதும் பயிற்சி பெரும் போதும் இந்த ஒன்றையே குறிக்கோளாக வைத்து தயாராகி வருகின்றாள்.

இரண்டே இடம்.. 60 மாணவிகள் போட்டி.. அவள் என்னமோ, சிரித்து கொண்டு தான் இருக்கின்றாள். எனக்கு என்னமோ வயிற்றில் நெருப்பு கட்டியதை போல் ஒரு உணர்வு.

இவள் கூட போட்டி போட போகும் மற்ற மாணவியர்கள் சிலரின் ஆட்டத்தை  நோட்டமிட்டேன்.. அருமையான ஆட்டம். அடுத்த வாரம் "சபாஷ் சரியான போட்டி" என்று தான் நினைக்கின்றேன்.

இந்த போட்டியை பெற்றோர்கள் காண அனுமதிக்க படுவார்கள். அதனால் அடுத்த வாரம். வேலையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு இதற்காக தயாராகி கொண்டு இருக்கின்றேன்..

இந்த நேரத்தில்.. தண்டபாணியின் அன்பு தொல்லை வேறு....

நேற்று மூத்த ராசாத்தியிடம்....

அம்மாடி.. நீ தான் கேப்டன் ஆச்சே...ரெண்டே இடம் அதுக்கு 60 பேர் போட்டியா ?

யு காட் இட் வ்ராங் டாடி..

எப்படி...?

ஒரே இடம்.. 59 பேர் போட்டி...

இல்லையே.. ரெண்டு இடம் 60 பேருன்னு தான் உங்க கோச் சொன்னாரே...

அவர் சொன்னது என்னமோ சரிதான்..ரெண்டு இடம் 60 பேரு தான்.. ஆனா அதுல  உங்க ரெண்டாவது பொண்ணுக்கு ஒரு இடம் கண்டிப்பா இருக்கு.. மீதி இருக்க ஒரு இடத்துக்கு  59 பேர் போட்டி.... ரிலாக்ஸ்....

ஐந்து வருடத்திற்கு முன் .... கனவோடு....

அட பாவி மகளே.. உன் தங்கச்சி மேலே இவ்வளவு பெரிய நம்பிக்கை வைச்சி இருக்கியே ...இது எனக்கு இல்லாம போச்சே...

என்று நினைத்து கொண்டு, இன்னும் டென்ஷனோடு இருக்கின்றேன்....

பின் குறிப்பு :

தண்டம்.. மூணு மாசத்துக்கு முன்னால ஆகஸ்ட் ரெண்டாம் வாரம் என்னமோ கப்பலில் மெக்ஸிகோ போறேன்னு சொன்னீயே.. எல்லாம் தயாரா?

நல்லா சொன்ன போ.....

என்ன ஆச்சி..

வாத்தியாரே.. அடுத்த வாரம் இவளுக்கு பள்ளியில் டென்னிஸ் தேர்வு போட்டியாம்... இவ இப்ப தானே 9 வது போறா.... எப்படியாவது கஷ்டப்பட்டு  Varsity  அணியில் சேரணும்ன்னு வருஷ கணக்கில் சொல்லினு இருக்கா...அதனால் எல்லாம் கான்செல்ட்

கண்டிப்பா Varsity  அணியில் சேருவா.... கவலை படாதே...

இல்ல வாத்தியாரே.. 3 இடத்துக்கு 75 பேர் போட்டி போடுறாங்களாம்..

தப்பு... 2 இடத்துக்கு 74 பேர் ...

இல்ல வாத்தியாரே... நான் கோச்சிடம் பேசினேன்... 3 இடம் 75 பேர்...

தண்டம்.. கோச் சொன்னது சரிதான்.. அந்த மூணு இடத்தில தான் உன் ராசாத்திக்கு ஒரு இடம் கண்டிப்பா இருக்கு இல்ல.. அதனால தான் அது 2 இடம் 74 பேர் ஆச்சி...

சூப்பர் வாத்தியாரே..... சோக்கா சொன்ன ...எங்கே இருந்து தான் இப்படி பேச கத்துக்குரியோ..

4 கருத்துகள்:

  1. இரண்டாம் ராசாத்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள் விசு! நிச்சயமாக வெற்றிபெறுவார்.

    தண்டத்தின் சாரி தண்டபாணியின் மகளிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    //சூப்பர் வாத்தியாரே..... சோக்கா சொன்ன ...எங்கே இருந்து தான் இப்படி பேச கத்துக்குரியோ..//

    பாணி! இந்த ரகசியம் எல்லாம் உனக்குத் தெரியாது/வேண்டாம்...இங்க என் எழுத்த வாசிக்க்றவங்களுக்கு நல்லாவே தெரியும் இதெல்லாம்...

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்வாய் இருக்கிறது
    ராஜாத்தி தொடும் அனைத்திலும்
    சிகரம் தொட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. இருவரும் பள்ளி அணியில் இடம்பிடிக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள்... இரு தங்க மகள்களுக்கும் தத்தம் அணியில் சேர...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...