ஞாயிறு, 5 ஜூன், 2016

போதும் என்ற மனமே...

ஞாயிறும் அதுவுமாய் காலை எழுந்து  கோயில் சென்று எல்லாம் வல்ல இறைவனிடம் குடும்பத்தோடு தஞ்சம் அடைந்தேன். இறை நம்பிக்கை உள்ள அனைத்து  வாசகர்களுக்கும் நான் சொல்வது...

முடிந்தவரை கோயிலுக்கு செல்லும் போது குடும்ப சகிதம் செல்லுங்கள். அதில் உள்ள சுகமே தனி. வாரம் முழுவதும் அன்றாட வேலைகளில் அலுத்து போய் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமலும் .. அப்படியே  பார்த்தாலும் ஒருவரிடம் ஒருவர் அன்பாகவும் நிதானமாகவும் பேச முடியாவிட்டாலும் .... இந்த கோயிலுக்கு செல்லும் நேரத்தில் -  வழியில் "தகப்பன் - பிள்ளை... கணவன் - மனைவி , அம்மா - பிள்ளை" என்று  இருக்கலாம்.

ஆங்கிலத்தில் ஒரு திருவாசகம் உண்டு.

 "A Family that Prays together, Stay together"

இது உண்மை. இதை கண்ணால் பார்த்து வளர்ந்தவன் நான். ஆன்மிகத்தில்  ஈடுபாடு கொள்ளாத நாத்திகர்கள் என்ன செய்வார்கள் என்று தொலை தூரத்தில் இருந்து ஒரு சிம்ம  குரல் கேட்கின்றது. நீங்கள் தான் பகுத்தறிவாளர்கள் ஆயிற்றே. உங்களுக்கு நான் என்ன சொல்வது?

இன்று எங்கள் ஆலயத்தில் ... கற்றது.. (சிறு வயதில் இருந்தே கற்று வந்தாலும்... இன்னும் நாம் செயல்படுத்த முடியாமல் தடுமாறும் ஒன்று ).

இயேசு பிரான் கூறிய உவமை..

செல்வந்தன் ஒருவன் தன்னிடம் உள்ள  பொக்கிஷங்களை பற்றி நினைத்து கொண்டே தூக்கத்தை இழந்து கொண்டு இருக்கின்றான். பிறகு, இவற்றையெல்லாம்  பதுக்கி வைத்து அதை பார்த்து  மகிழ்ச்சி அடைகிறான்.

அன்றே இறைவன் அவனுக்கு தோன்றி .....

முட்டாளே.. இன்று இரவு நீ மரணமடைந்தால் இவையினால்  என்ன பலன்?


அருமையான கேள்வி.

சொத்து சொத்து சொத்து.. ஒரு மனிதனுக்கு எவ்வளவு தான் தேவை?

பணமே அழிவுக்கு காரணம் என்பது தவறனா கூற்றூ. பணத்தின் மேல் உள்ள ஆசையே அழிவின்  காரணம் தான் உண்மை.

உலகில் பல நாடுகளில் வாழ்ந்து வசித்து வந்ததில் நான் நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். அதில் ஒன்று. இந்தியர்களின் சேமிக்கும் பழக்கம்.

பெரும்பாலான இந்தியர்களின் முதல் குறிக்கோள்...

நான் பட்ட கஷ்டத்தை என் பிள்ளைகள் பெற கூடாது.இந்த ஒன்றையே தாரக மந்திரமாக கொண்டு ...பலர் தம் வாயை கட்டி வயிரை கட்டி  ஒவ்வொரு  பைசாவையும்  பிள்ளைகளுக்காக சேர்த்து வைப்பார்கள். இது அவர்கள் நேர்மையாக சேர்த்த செல்வம். இதில் என்ன தவறு உள்ளது? தவறே இல்லை. இருந்தாலும், சேமிப்பு  சேமிப்பு என்று கொண்டு நாம் நம் வாழ்க்கையை வாழ்வதை அனுபவித்து ருசித்து வாழ்வதை  வாழ்வதை  இழந்து விடகூடாது.

கிட்ட தட்ட 25 வருடங்களுக்கு முன் வளைகுடா பகுதியில் அடியேன் வேலைக்கு சேர்ந்த முதல் மாதம், சம்பளம் வாங்கியவுடன், நேர்த்திகடனை செலுத்திவிட்டு...நேராக அருகில் இருந்த "கோல்ப் க்ளப்"  சென்று
உறுப்பினர் ஆவதற்கு தேவையான விண்ணப்பத்தை வாங்கி அதை நிரப்பி கொண்டு இருக்கையில் கேரளா நாட்டில் இருந்து வந்த சக பணியாளர் ஒருவர் அருகில் வந்து என் காதை கடித்தார்...

விசு.. இது உனக்கு தேவையா? வளைகுடா வந்தா சம்பளத்த அப்படியே  ஊருக்கு அனுப்பிடணும். நீ கணக்கு பிள்ளை தானே.. இங்கே அங்கே வரும் சில்லறையில் காலத்தை ஒட்டிகொள்ளவேண்டும்.

இதை கேட்டு அதிர்ந்தே விட்டேன்.

அட பாவி.. இப்படி வாழ்வதற்கு  பதிலாக "நாக்குல தூக்கு போட்டுன்னு  தொங்கலாமே" என்று சொல்ல வந்த நாக்கை கட்டுபடுத்தி..

தங்கள் அறிவுரைக்கு நன்றி... நீங்கள் அப்படியே இருங்கள்.. நான் இப்படியே வாழுகிறேன் என்றேன்.

இப்போது அவருக்கு 63 வயது. பெங்களூரில் மட்டும்  4 வீடுகள் உள்ளதாம். ஒவ்வொரு  வீடும் 6 மற்றும் 7 படுக்கையறை கொண்டதாம் அவர் பெற்றதோ ஒரே ராசாத்தி. அந்த நாலு வீட்டையும் வாடகைக்கு  விட்டு விட்டு இவர் மனைவி, ராசாத்தி குடும்பம் அனைத்தும் ஒரு 2 படுக்கை அபார்ட்மெண்டில்  வாடகைக்கு  இருகின்றார்களாம்.

இவர்கள் இருகின்றார்கள் .. ஆனால் வாழவில்லை.

விஷயத்திற்கு வருவோம்..இந்த நாலு வீடுகளின் வாடகை மட்டும் மாதத்திற்கு 2 லட்சத்திற்கும்  மேல் வருமாம். சென்ற மாதம் அவரிடம் பேசுகையில்.... எப்படி உள்ளீர்கள்.. வங்கியில் தான் நிறைய பணம் உள்ளதே.. கொஞ்சம் எடுத்து கொண்டு ... ஒரு விடுமுறைக்கு இந்த பக்கம் வாருங்கள் என்றேன்.

விடுமுறையா? அது எனக்கு ஏது? இந்த நாலு வீடு விஷயத்த கவனிக்கவே நேரம் இல்லை என்றார்.

நாலு வீட்டுக்கு ஒன்னும் ஆகாதுங்க... நீங்க கொஞ்சம் சந்தோசமா இருங்க என்று சொல்லி வைத்தேன்.

நேற்று ஒரு செய்தி. இந்த நண்பர்... மாரடைப்பில் இறந்து விட்டாராம். வங்கி சென்று அங்கே அந்த மாத வாடகையை டெபாசிட் செய்ய காத்து கொண்டு இருந்தாராம். அங்கேயே மாரடைப்பு வந்து இறந்து விட்டாராம்.

நல்ல மனிதன் தான். பணமே வாழ்க்கை என்று தன் பயணத்தை முடித்து கொண்டார்.

அவர் ராசாத்தியிடம் பேசினேன்....

விஷயத்த கேள்வி பட்டேன்.. ரொம்ப வருத்தமா இருக்கு.

அழைச்சதுக்கு  நன்றி சேட்டன். எனக்கு இப்ப என்ன பண்றதுனே தெரியல..

சொல்லுங்க.. என்னால் செய்ய முடிஞ்சா செயுறேன்.

இல்ல.. வங்கிக்கு அப்பா டெபொசிட்  செய்யத்தான்  போனார்.  கிட்ட தட்ட ரெண்டு லட்சம், அது வங்கி கணக்குலயும் இல்ல.. அவர் கையிலயும் இல்ல.. இப்ப என்ன பண்றதுனே தெரியலே..

ஹலோ.. நீங்க .. சரியா.. கேக்கல..

என்று நானே அலைபேசியை அணைத்தேன். அப்பாவிற்கு தப்பாம பிறந்த ராசாத்தி..

சேமிப்பவர்களின் அடுத்த ரகம்.. அடுத்தவர் வயிற்றில் அடித்து சேமிப்பது...

இதில் நம்ம ஊர் அரசியலாதிகள் அதிகாரிகள் அடங்குவார்கள்.
கைக்கு மேலே தேவைக்கும் அதிகமா சம்பளம்.அதை வைத்து கொண்டு நிம்மதியா வாழாம...?

ஏழைகளின் வயிற்றில் அடித்து வரி பணத்தில்.. பல லட்சம் கோடிகளை கருப்பு பணமாக்கி.. தாங்களும் அனுபவிக்காமல் .. மற்றவர்களுக்கும் அளிக்காமல்.. வெளி நாட்டு  வங்கியில்  போட்டு..

பள்ளிகள் சிறந்து விளங்க.. சாலைகள் தரமாக இருக்க.. குடி நீர் சுத்தமாக இருக்க. எல்லாருக்கும் இலவச மருத்துவத்திற்க்காக செலவு செய்ய வேண்டிய இந்த வரிப்பணம்... இந்த சனியன்கள் இறந்த பின்பு.. அந்த வெளி நாட்டு வங்கியின்..

இதர வருமானத்தில் சேர்க்க படும்.

இவர்களிடம்  நான் கேட்கும் ஒரே  கேள்வி..உங்களின் இந்த அநியாய செயலினால் நம் நாட்டில் கிட்ட தட்ட 50% மக்கள் இரவு உணவு இல்லாமல் உறங்க செல்கின்றார்களே.. இதை தெரிந்த உங்களுக்கு  எப்படி தான் தூக்கம் வருகின்றது?

அடுத்த வகை...

ஆன்மிக குருக்கள்..

சுவாமிகளும் .. போதகர்களும்.. மதத்தில் உள்ள எல்லா நற்குணங்களையும் நமக்கு போதித்து விட்டு.. எளிமையாக  போதுமான மனதோடு வாழ் என்று சொல்லி விட்டு.. இவர்கள்.. ஐந்து நட்சத்திர விடுதி போல் உள்ள இல்லத்தை  கட்டி கொண்டு வாழ்கின்றார்கள்.

இவர்களுக்கு  ஐயோ..

சரி இவ்வளவு பேசுகின்றாயே.. நீ சேர்த்து வைக்க வில்லையா?

சேர்த்தேன்.. சேமிப்பேன். தவறே இல்லை. என் அம்மணியும் நானும் உழைத்ததில்..ஓய்வு பெற்ற பின் யாருக்கும் உபத்திரவம் இல்லாமல் இருக்கும் படி போதிய பணம்.. மற்றும் கடைசி வரை வாழ ஒரு இல்லம்..

பிள்ளைகளுக்கு?

கல்வி செல்வம்.. எவ்வளவு வேண்டுமானாலும் படியுங்கள்.. நாங்கள் இருக்கின்றோம்.. இசை அறிவு .. எவ்வளவு வேண்டுமானாலும் பயிலுங்கள்.. நாங்கள் இருக்கின்றோம்.. விளையாட்டு.. விளையாடி கொண்டே  இருங்கள் நாங்கள் இருக்கின்றோம்..

எல்லாவற்றிர்க்கும் மேல்.. இறைவன் மீதான நம்பிக்கை. போதும் என்ற மனது...

என் ராசாத்திக்களுக்கு நான் இதை செய்தால் போதும்.. மற்றவை தானாக அமைந்துவிடும்..

போதும் என்ற மனது....அது இருந்தால் போதும்



11 கருத்துகள்:

  1. அருமை அருமை
    நகைச்சுவையாக மட்டும்தான் விசுவினால்
    சிறப்பாக எழுத முடியும் என
    நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு
    இப்பதிவு ஒரு பிரமிப்பை நிச்சயம் கொடுக்கும்
    அற்புதமான அவசியமான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. விசு,

    என் மனதிலும் இதே எண்ணங்கள் உண்டு. கை குடுங்க. அருமையான பதிவு. Some people survive. Some live and some only exist.

    பதிலளிநீக்கு
  3. அருமையான சொன்னீர்கள்! அளவான சேமிப்பே சிறந்தது! பணம் பணம் என்று ஓடும் வாழ்க்கை கொடுமை!

    பதிலளிநீக்கு
  4. ///கோயிலுக்கு செல்லும் போது குடும்ப சகிதம் செல்லுங்கள்.//

    என் மனைவி ஞாயிறு அன்று சர்சுக்கு செல்வாள் நான் திங்கள் காலை சர்ச்சிற்கு செல்வேன் நேரம் கிடைக்கும் போது.... என் மனைவி கூட போகததற்கு காரணம் ப்ரெயர் பண்ணும் போது அழுதுவிடுவாள் பார்குறவங்க நான் என்னமோ கொடுமை படுத்துகிறேனோ என்று கருதிவிடுவார்களே என்பதால் செல்லுவதில்லை அது மட்டுமல்ல கூட்டம் எனக்கு அதிகம் பிடிக்காது திங்கள் கிழமை காலை என்றால் மொத்தம் 40 பேர்கள்தான் நிம்மதியாக பிரார்த்தனை செய்துவிட்டு வரலாம்

    பதிலளிநீக்கு
  5. நான் இறைவனிடம் வேண்டுவது இதுதான் அன்றுறென்று வேண்டிய ஆகாரத்தை எங்களுக்கு இன்றுதாரும் என்றுதான் அதற்கு மே அதிகம் ஆசைப்பட்டு ஏதும் கேட்கமாட்டேன் நான் வாழும் வரை கடைசிநாள் வரை வேலைக்கு சென்று உழைத்து வாழ எனக்கு உடல் பலததை மட்டும்தாரும் என்று சேர்த்து கேட்பேன் அவ்வளவுதாங்க்

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு. பணம் தேவைதான். அது நமக்கு எஜமானாகாதவரை நல்லது.

    பதிலளிநீக்கு
  7. போதும் என்ற மனம்.... அது மட்டும் இருந்தால் வாழ்க்கை சுகம்....

    பதிலளிநீக்கு
  8. வெர் சேம் விசு சேம்!!! இதே தாட் ப்ராஸஸ் தான். இருவருக்குமே. டிட்டோ. வாழ்க்கையை வாழாமல் ஏதோ நாமும் இருக்கின்றோம் என்று இருப்பதில் என்ன அர்த்தம்...அருமையான பதிவு விசு...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...