செவ்வாய், 14 ஜூன், 2016

ஆசைக்கு ரெண்டு... ஆஸ்த்திக்கும் அதே ரெண்டு!

டாடி.... அலாரம் மறக்காமா வைச்சிட்டீங்களா?

வைச்சிடேனே ...

என்று சொல்லி விட்டு ..... இளையவள் என் அறையுள் வருமுன் அலாரம் வைத்தேன்.

உள்ளே நுழைந்தவள்...

எத்தனை மணிக்கு வைச்சீங்க?

காலையில் 2.50 க்கு.

ஐயோ... 3 மணிக்கு எல்லாம் ஸ்கூலில் இருக்கணும். 2,50 க்கு வைச்சி இருக்கீங்களே..

எனக்கு 10 நிமிஷம் போதும். உன்னை அனுப்பிவிட்டு உடனே வந்து திரும்பவும் தூங்கிடுவேன்.

உங்களுக்கு 10 நிமிஷம் போதும். எனக்கு..? நான் எழுந்து ரெடியாக வேண்டாமா?

சரி எத்தனை மணிக்கு வைக்கட்டும்?

2க்கு ஒன்னு. 2.15க்கு ஒன்னு.

ஏன் ரெண்டு முறை?

 2 மணிக்கு என்னை எழுப்புங்க, நான் இன்னும் 10 நிமிஷம்னு சொல்லுவேன்...அப்புறம் 2.15க்கு எழுப்புங்க..

2 மணியில் இருந்து 10 நிமிஷம் கூட்டினா ...2.10 தானே.. 2.15 சொல்ற...

ரொம்ப அவசியம்... குட் நைட் ...

என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்...
எனக்கு ஒன்னும் இல்ல.. உம்பாடு பெரும்பாடு..
பிள்ளை வளர்ந்து விட்டாள்.. இந்த மாதம் கடைசியில் 14 வயதை எட்டி உயர்நிலை பள்ளிக்கு போக போகிறாள். இன்று பள்ளிக்கூடம் ஒழுங்கு செய்த சுற்றுலா பயணத்திற்கு போகிறாள்.

எங்கே இருந்து...எங்கே..?

மேற்கு கோடியில் இருக்கும் கலிபோர்னியாவில் இருந்து கிழக்கு கோடியில் இருக்கும் வாஷிங்டன் நகரத்திற்கு.

இங்கு, நடுநிலை  பள்ளி மாணவ மாணவியர்கள் உயர் நிலை பள்ளிக்கு செல்லும் முன் வரும் கோடை விடுமுறையில் வாஷிங்டன் சுற்றுலா போவது வழக்கம்.அனேக இடங்களை பார்த்தாலும் அவர்கள் மிகவும் எதிர்பார்த்து ரசித்து பார்க்கும் இடம்.. "வைட் ஹவுஸ்" என்று அனைவராலும் அழைக்க படும் அமெரிக்க ஜனாதிபதி வாழும் வெள்ளை மாளிகை.



பள்ளி மாணவ மாணவியர் அனைவரும் தாமும் இந்த பதவியை அடையலாம் என்ற எண்ணம் வரவேண்டும் என்று பல வருடங்களுக்கு முன் ஆரம்பித்த வழக்கம் தான் இது. இவர்கள் செல்லும் இந்த நாட்களில் ஜனாதிபதி அங்கே ஊரில் இருந்தால் அவரை சந்திக்கும் வாய்ப்பும் மற்றும் அவரோடு பேசும் வாய்ப்பும் கிட்டும். நல்லதோர் சந்தர்ப்பம்.

குட் நைட் என்று சொல்லியவள் மீண்டும் எங்கள் அறைக்கு வந்து..

மம்மா.. காலையில் நீங்கள் எழுந்து வர வேண்டாம்..அப்பா வந்தால் போதும் என்றாள்..

நானோ ஆச்சரியத்தோடு...

ஏண்டியம்மா... அம்மா வரட்டுமே..

டாடி... போன முறை நான் சாக்ரமெண்டோக்கு (Sacramento) சுற்றுலா போகும் போது வழி அனுப்ப வந்து ...விமான நிலையத்தில் எல்லாருக்கும் முன்னாலே .. ஒரே அழை.. அது ரெண்டு நாள் தான்.. அதுக்கே அவ்வளவு அழுதாங்க .. இது ஒரு வாரம் ... அங்கே வந்து ரொம்ப  அழுவாங்க...அதனால தான்.

ஒ... சரி விடு... நான் அவங்கள் அழ வேண்டாம்னு சொல்றேன்..

என்று ... சரி பார்த்து விடு... அம்மணியிடம்...

இடம் பொருள் ஏவலுக்கு ஏத்த மாதிரி நடக்கணும்ன்னு ஒரு சிறு (இந்த மாதிரி சந்தர்ப்பம் என்றைக்காவது ஒரு நாள் தான் கிடைக்கும்) அறிவுரை கொடுத்து....தூங்க சென்றேன்...

எப்போது தூங்க சென்றேன் என்று தெரியாது...

டாடி... 2.30 ஆச்சி எழுங்க...

அடே டே .. 2.30... ஆச்சா?  அலாரம் அடிக்கலையே...

என்னாது அடிக்கலையா? காது கிழியிர    மாதிரி  அடிச்சிச்சே , உங்களுக்கு கேக்கல?

ஒரு அஞ்சு நிமிஷம் கொடு...ப்ளீஸ்.. என்று சொல்லி மீண்டும் போர்வையுள் நுழைய...

டாடி... எழுங்க.....இப்ப தெரியுதா ஏன் ரெண்டு முறை அலாரம் வைக்க சொன்னேன்னு..

எழுந்தோம்..எங்கள் இல்லத்தில் இருந்து பள்ளி 5 நிமிடம் .. அங்கு ஒரு சொகுசு பேருந்தில் எல்லா பிள்ளைகளும் ஏறி....

45 நிமிடத்தில் லாஸ் அன்ஜெலஸ் விமான நிலையம். அங்கு இருந்து விமானத்தை பிடித்து ... நேராக வாஷிங்டன் நகரம். இங்கு இருந்து 3000 மைல் தொலைவு.. அவர்களுக்கும் எங்களுக்கும் மூன்று மணி நேர வித்தியாசம். இங்கே காலை ஆறு என்றால் அங்கே ஒன்பது.

மூன்று மணிக்கு பள்ளியை அடைந்தோம். பேருந்து காத்து கொண்டு இருக்க ஒவ்வொரு பிள்ளையும் தம் தம் பெற்றோரிடம் விடை பெற்று கொண்டு இருந்தனர்...

அம்மணியை மீண்டும் ஒரு முறை அழகூடாது என்று எச்சரித்து விட்டு...மூவரும் பேருந்தை அடைந்தோம். பெயர் மற்றும் பை .... அடையாள அட்டையை சரிபார்த்த பின்னர்.. இருவரிடம் வந்து கட்டி தழுவி...

நான் ஊரில் இல்லைன்னு ... ஓவரா ஆட்டம் போட  கூடாது...

என்று சொல்லிவிட்டு ஓடினாள்..
கிளம்பிய பேருந்து எங்கள் இல்லத்தை தாண்டி தான் போகவேண்டும். அதை தொடர்ந்து பின்சென்று....போகையில்......

மனமோ.. பல வருடங்களுக்கு முன் சென்றது..

அம்மணிக்கு பிரசவ வலி தொடங்கிவிட்டடது என்று தொலை பேசி வர.. அலுவலகத்தில் இருந்த நான்.. இதோ கிளம்பிட்டேன் என்று சொல்கையில்...
நீங்க வர வரைக்கும் இங்கே இருக்க முடியாது நீங்க  நேராக மருத்துவமனைக்கு வந்துடுங்க...என்று அம்மணியின் சகோதரி சொல்ல.. மருத்துவமனை ஓடினேன். அங்கே...பகல் முழுவதும் காத்து இருந்து... பிறகு இரவும் காத்து இருந்து... அடுத்த நாள் 10 மணி வரை இளையவள் உலகிற்கு வர மறுத்ததால்.. அங்கே இருந்த மருத்துவச்சி...

நீங்க கிட்டத்தட்ட 24 மணி நேரம் இங்கேயே தூங்காம இருக்கீங்க... கிளம்பி வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க...என்று சொல்ல.. வேண்டா விருப்பாய்....இல்லத்திற்கு சென்றேன்.... வண்டியை ஓட்டுகையில் தூக்கமோ கண்ணை அடைத்தது...

எப்படியோ இல்லத்தை அடைந்து உள்ளே செல்லும் போதே தொலை பேசி அலற...

ஹலோ..

வாழ்த்துக்கள்.. உங்களுக்கு பெண் குழந்தை...

நன்றி... இதோ வருகிறேன்...

பிரசவத்திற்காக அங்கே செல்லும் போதே அம்மணியிடம்....

அம்மா.. தாயே... மூத்தவள எப்படி சிங்க குட்டி ராசாத்தி மாதிரி பெத்து கொடுத்தியோ... அதே மாதிரி இப்பவும் ஒரு ராசாத்திய பெத்து கொடும்மா..

ஏங்க ... பையன் வேண்டாமா?

பையன் வேண்டாம்..

ஏன்..
என்னை மாதிரியே இன்னொருத்தன் நம்ம வீட்டில வந்தா எங்க ரெண்டு பேரையும் உன்னால சமாளிக்க முடியாது.. அதனால பொண்ணாவே பெத்து கொடு..

ஒரு வேளை பையன் பிறந்தா..

எனக்கு ஒன்னும் இல்ல.. உம்பாடு திண்டாட்டம்...

யோசித்து கொண்டே மருத்துவமனையை அடைந்தேன்... சோர்வு மற்றும் தூக்க கலக்கத்தில் அம்மணி .. அருகில்... இளையவள்... அவளை பார்த்தவுடன்.. இவளை எங்கேயோ பார்த்து இருக்கோமே என்ற நினைப்பு வர... அட பாவி.. அவங்க ஆத்தாவ அப்படியே உரிச்சினு வந்து இருக்காளே... உச்சி முகர்ந்தேன்... அந்த வாசனை இன்னும் எனக்குள் இருக்கின்றது.

சரி.. நீங்க ரொம்ப நேரம் தூங்கவே இல்லை... கொஞ்சம் நேரம் வீட்டுக்கு போய் தூங்கிட்டு வாங்க...

என்று அனைவரும் சொல்ல... கிளம்பினேன்...

வாகனத்தில் ஏறியவுடன்.. தூக்கம் சொக்கியது...

இவ்வளவு தூக்கத்தோடு... வண்டியை ஒட்டவே முடியாது என்று நினைத்து... இருக்கையை பின் புறம் தள்ளி படுக்கை போல் மாற்றி... நித்திரையில் ஆழ்ந்தேன்.

எவ்வளவு நேரம் தூங்கி இருப்பேன் தெரியாது...கார் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.விழித்து பார்க்கையில் ... நமக்கு  அறிந்த ஒரு 60வயது பெண்மணி...அவர்களை சுற்றி நமக்கு தெரிந்த சில நண்பர்கள்....

என்ன வீட்டுக்கு போகலையா?

இல்ல, தூக்கம் ரொம்ப அதனால் தான் இங்கேயே தூங்கிட்டேன்..

என்று சொல்லி கொண்டே நேரத்தை பார்த்தால் கிட்ட தட்ட ஐந்து மணி நேரம் தூங்கி இருக்கின்றேன்.

சரி.. விடு.. சில நேரத்தில்.. ஆண்டவன் செயல நம்மால புரிஞ்சிக்க முடியாது...

என்று அவர்கள் சொல்ல... நானோ அலறிவிட்டேன்..

என்ன ஆச்சி .... நான் பார்க்கும் போது அம்மாவும் குழந்தையும் நல்லா இருந்தாங்களே...

அவங்க ரெண்டு பேரும் நல்லாத்தான் இருக்காங்க.. நீ தான் இந்த சோகத்தில் இருந்து வெளிய வரணும்..

என்ன சோகம்..?

இரண்டாவதும் பெண் பிள்ளைன்னு தெரிஞ்சதும்.. நீ வீட்டுக்கு கூட திரும்பி போகாம ஆளே காணாம போயிட்டேன்னு எல்லாரும் தேடுறாங்க...

அட பாவிகளா.... கேட்டு வாங்கி பெத்து வைச்சு இருக்கேன்... போங்கடா நீங்களும் உங்க சோகமும்...

பின் குறிப்பு :

வாத்யாரே..

சொல்லு தண்டம்..

உனக்கு முதல் குழந்தை பெண் குழந்தைன்னு கேள்வி பட்டதும் நான் என்ன சொன்னேன் .. நினைவு இருக்கா?

எப்படி மறக்க முடியும்?

எங்கே இடம் சூட்டி  பொருள் விளக்கு பார்ப்போம்?

வயசான காலத்தில் எனக்கு சாப்பாடு பிரச்சனை இருக்காது.. அவ பாத்துப்பான்னு சொன்ன...

நீ ரொம்ப கொடுத்து வைச்சவன் வாத்தியாரே..

ஏன்டா..

வயசானவுடன் சாப்பாடு மட்டும் இல்ல வாத்தியாரே.. உனக்கு மருந்து மாத்திரைக்கும் பிரச்சனை இல்ல...

ஏன்..

இவ பார்த்துப்பா...

மனதிலோ...

இந்த ராசாத்திக்களும் இல்லாமல் எப்படி என் வாழ்வின் முதல்  33 வருடத்தை களித்தேன்..கழித்தேன் .. என்ற ஒரே கேள்வி....

ஏங்க .. வீடு வந்தாச்சி.. விட்டா.. விமானத்தையும்   தொடர்ந்து போய் அவளுக்கும் முன்னால நீங்க "வைட் ஹவுஸ்" போய்  நிப்பிங்க போல இருக்கே..

"வைட் ஹௌஸ" விடு .. இவள் இல்லாமல் இன்னும் ஒரு வாரம்  இது "குயைட் ஹௌசா" இருக்க போது..!

பேருந்து எங்கள் கண்களில் இருந்து மறைந்தது..


7 கருத்துகள்:

  1. நான் இந்த பதிவிற்கு கொடுக்க வேண்டிய பின்னூட்டம் தவறுதலாக உங்கள் முந்தைய பதிவில் கொடுத்துவிட்டேன். சுவையாக எழுதுகிறீர்கள். தொடரட்டும்.
    விஜயன்

    பதிலளிநீக்கு
  2. அருமையா இருக்கு! உங்களின் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்!

    பதிலளிநீக்கு
  3. வாழ்க்கைப் பயணத்தை ஒப்புநோக்கியவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. //2 மணியில் இருந்து 10 நிமிஷம் கூட்டினா ...2.10 தானே.. 2.15 சொல்ற.//

    கணக்குபுள்ளை என்பதை நிருபித்துவிட்டீர்களே

    பதிலளிநீக்கு
  5. உங்க ஊர்ல மீடில் ஸ்கூல இந்த மாதிரி டிரிப் கூட்டிட்டு போறாங்கள் எங்க ஊர்ல் ஹை ஸ்கூல் டைம்லதான் இப்படி கூட்டிட்டு போவாங்க எலிமெண்ட்டிரி ஸ்கூல் படிக்கும் போது அதாவது ஐந்தாம் கிரேடு படிக்கும் போது மூன்று நாள் கேம்பிங்க் டிரிப் உண்டு இங்கே ஆனால் மிடில் ஸ்கூலில் ஒன்றும் கிடையாது

    பதிலளிநீக்கு
  6. அருமை விசு...பதிவு ரொம்பவே ரசித்தோம்....

    கீதா: மகன் அங்கிருந்த போது 7 ஆம் வகுப்பில் ஒரு நாள் ட்ரிப் அழைத்துக் கொண்டு போனார்கள். அவன் கற்ற கராத்தே வகுப்பிலும் இரண்டு நாள் ட்ரிப், மற்றும் ஒரு ஸ்லீப் ஓவர் நைட். மிகவும் எஞ்சாய் செய்தான். அதாவது குழந்தைகள் எப்படி வீட்டை விட்டு வெளியில் போகும் போது அட்ஜஸ்ட் செய்வது, வீட்டில் அம்மா அப்பாவிற்கு எப்படி எல்லாம் உதவ முடியும் உதவ வேண்டும் என்றெல்லாம் கராத்தே வகுப்பு ட்ரிப்பில் சொல்லிக் கொடுத்துள்ளார்கள். அதெ போன்று பள்ளியிலும். கென்னடி மிடில் ஸ்கூல், க்யூப்பர்டினோ மற்றும் கராத்தே மாஸ்டர்/வகுப்பு என் மகனின் கல்வி வாழ்வில் ஒரு திருப்பு முனை அதாவது கற்கும் திறனில் குறைபாடிருந்த அவனுக்குத் தன்னம்பிக்கை எழச் செய்தது என்றால் அது மிகையல்ல. உண்மை.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...