வியாழன், 17 மார்ச், 2016

ஸ்கூல் பர்ஸ்ட்! எல்லா பாடத்திலேயும் பர்ஸ்ட்!

வா தண்டம் ... என்ன வாயெல்லாம் பல்லு ...?
ஒன்னும் இல்ல வாத்தியாரே..
பாணி... விஷயத்த சொல்லு ...விஷயம் ரொம்ப நல்ல விஷயம் போல இருக்கே.. சொல்லு..
unnamedஎன் தங்கச்சி பையன் SSLC யில் 492 மார்க் எடுத்து இருக்கான்.. அந்த சந்தோசம் தான்.
அடேங்கப்பா.. 492 ... மாநிலத்தில் முதலா?
அட நீ ஒன்னு... நம்ம பிள்ளை அண்ணன் பையன் கூட 496 எடுத்து இருக்கான் அவன் முதல் 100 இடத்திலகூட இல்ல..
அட பாவி... நம்ம நாட்களில் எல்லாம் 490-498 போல ஒரு அஞ்சு பேர் எடுப்பாங்க .. அவங்க தான் மாநிலத்தில் முதல் இப்ப அப்படி இல்லையா..
இல்லை விசு.. இப்ப எல்லாம் சில பேர் 500-500 எடுக்குறாங்க.. இந்த வருஷம் மட்டும் மாநிலத்தில் முதலாவதாக 41 பேர் வந்து இருக்காங்க ..
சரி, நம்ம பசங்க எதோ நல்லா இருந்தா சரி தான்.
இப்படி பேசி கொண்டு இருக்கும் போது ... பேச்சு பல வருடங்களுக்கு முன்னால் நடந்த எங்கள் SSLC பரீட்சை மற்றும் மார்க்கிற்கு சென்றது...
தண்டம் தான் இந்த பேச்சை ஆரம்பித்தான்...
பிள்ளை ... நீ எவ்வளவு எடுத்த...?
386 ...
400க்கா ?
இல்ல .. 500க்கு தான் ..

அட பாவி .. 386 எடுத்து உனக்கு எவன் மத்ஸ் குரூப் கொடுத்தான் ..?
அந்த காலத்தில் 386 கம்மி மார்க் இல்ல தண்டம் .. கிட்ட தட்ட 80%. அது போதும். சரி நீ எவ்வளவு எடுத்த, தண்டம்..
465... ஸ்கூல் செகண்ட் ...
அட பாவி.. தண்டம் .. நீ அவ்வளவு நல்லா படிப்பியா.. கலக்கிட்ட தண்டம்..
சாரதி.. நீ..
சரியா நினைவில் இல்ல.. ஆனால் 400க்கு மேல் தான்..
டேய்.. 400க்கு மேலானா அந்த காலத்தில் அறிவாளியாச்சே... ரொம்ப சமத்துடா நீங்க எல்லாம்..
சரி.. சுந்தரி.. நீ எவ்வளவு..
அய்யோ... அதை ஏன்னா கேக்குறிங்க .. நானும் இவரும் ஒரே கிளாஸ்.. போட்டி போட்டு படிப்போம் ..எப்படியாவது இவரோட ஒரு மார்காவது நிறைய எடுக்க வேண்டும் என்பதே வாழ்க்கையின் குறிக்கோள் .என் போதாத காலம் .. பரீட்சை நேரத்தில் மஞ்சகாமாலை ... 410 தன் எடுத்தேன்..
இந்த மஞ்ச காமாலை எல்லாம் ரிசல்ட் வந்தவுடன் வந்தது வாத்தியாரே.. பரிட்சை நேரத்தில் நல்லா தான் இருந்தா.
பிரேமா .. நீ...
320 கிட்ட தான் அண்ணே.. என்ன தான் மார்க் எடுத்தாலும் அத்தை பையன் சாரதியதான் கட்டணும்ன்னு சொல்லிடாங்க.. இவருக்கு 300 சொச்சம் இருந்தா போதும்னு படிக்கிறத நிறுத்திட்டேன்..
வாத்தியாரே.. நீ நல்ல பெரிய தனியார் பள்ளி கூடம் போய் இருப்பியே.. .அதுவும் இல்லாம இப்ப கணக்கு பிள்ளை வேறே.. எவ்வளவு எடுத்த ?
அதை விடு தண்டம்..
சொல்லு சித்தப்ப்பூ.,.. நாங்க எல்லாம் வெக்க படமாட்டோம்..
அதை விடு சாரதி..
சொல்லுங்க அண்ணா.. நிறைய ஊரில் படிச்சீங்க இல்ல . SSLC யில் எவ்வளவு மார்க்..
எவ்வளவு எடுத்தேன்ன்னு நினைவு இல்ல.. ஆனால் ஸ்கூல் பர்ஸ்ட் வந்தேன்னு மட்டும் நல்லா நினைவு இருக்கு ..
வாழ்த்துக்கள் வாத்தியாரே.. நீ கணக்கு பிள்ளை ஆச்சே.. நல்லாத்தான் படிச்சி இருப்பே... கணக்குல 100க்கு 100ரா ?
நினைவு இல்ல.. அனால் எல்லா பாடத்திலேயும் ஸ்கூல் பர்ஸ்ட்...
அப்ப 490ரை தண்டி இருப்ப..
மார்க் சரியா ஞாபகம் இல்ல... ஆனா ஸ்கூல் பர்ஸ்ட் நல்ல நினைவில் இருக்கு ..
ஸ்கூல் பர்ஸ்ட் மட்டும் இல்ல.. வாத்தியாரே.. எல்லா பாடத்திலேயும் பர்ஸ்ட் ... சூப்பர் பார்ட்டி வாத்தியாரே ....உன்னை நண்பன் என்று சொல்றதுக்கே நான் கொடுத்து வைச்சவன்...
இருக்கட்டும்..இருக்கட்டும்.. அப்புறம் பார்க்கலாம்..
பின்குறிப்பு..
நாள் :SSLC தேர்வு முடிவு நாள்..
இடம் : அரசு உயர் நிலை பள்ளி , பர்கூர்
என்ன விசு...முகத்தில் ஒரு சந்தோசமே கானோ.. நீ ஸ்கூல் பர்ஸ்ட் விசு.. கொஞ்சம் சிரி..
டேய்.. கூட எழுதுன அத்தனை பெரும் பைல்... விசனமா இருக்குடா.
அட போ விசு.. போன வருஷம் ஒருத்தன் கூட தேரல ..அட்லீஸ்ட் இந்த வருஷம் நீ ஒருத்தனாவது பாஸ் ..மொத்த பள்ளிக்கூடமும் ரொம்ப சந்தோசமா இருக்கு..
என்னமோ போ... இப்ப வீட்டுக்கு எப்படி போக போறேன்னு தெரியல..
ஏன்...
இந்த மார்க் தான்..
நீ தான் எல்லா பாடத்திலேயும் பர்ஸ்ட் ஆச்சே.. எங்கே காட்டு மார்க்..
தமிழ் 52
ஆங்கிலம் 64
கணக்கு 36
அறிவியல் 37
வரலாறு பூகோளம் 44
மொத்தம் ..: 233.
நண்பர்களே... இது முழுவதும் உண்மை. உண்மையை தவிர வேறு இல்லை. என்னடா .. இதை போய் இவ்வளவு பெருமையா எழுதி இருக்காரே என்று பார்கின்றீர்களா...
SSLC மார்க்ஸ் ஒன்றும் வாழ்வை நிச்சயக்கும் மார்க் அல்ல.. உண்மையாக சொல்கிறேன்.. அந்த மார்க்ஸ் நான் எடுக்கும் போதே எனக்குள் நான் சொல்லி கொண்டது.. "இது முடிவு அல்ல ஆரம்பம் . இந்த தற்காலிக பின்னடைவு என்னை-என் வாழ்க்கையை நிர்ணயிக்காது-நிர்ணயிக்ககூடாது ..." இந்த மதிப்பெண்ணை SSLC யில் எடுத்த நான் எப்படி கணிகவியலில் இளங்கலை மற்றும் முதுகலை பின்னர் அமெரிக்காவில் வந்து CA (CPA) படிக்க முடிந்தது?
எல்லாம் ஒரு பிடிவாதம் தான். எப்படியாவது படிக்க வேண்டும் என்ற பிடிவாதம் ...மற்றும் பல நல்ல மனம் கொண்டோரின் உற்சாகமும் ஊக்கவிப்பும் உதவியும் தான்..
இந்த பதிவை நான் எழுதியதே.. SSLC யில் குறைதான் மதிப்பெண் எடுத்த மாணவ செல்வங்களுக்காகதான்.. குறைந்த மதிப்பெண் பெற்றீர்களா ? கவலையே வேண்டாம். இன்றில் இருந்து பிடிவாதமாய் இருங்கள் ...
சக பதிவர்களே.. தங்களால் முடிந்தால் இந்த பதிவை பகிருங்கள்...

20 கருத்துகள்:

  1. விசு!
    மறுபடியும் உங்க SSLC மார்க்குகளைப் பாருங்கள்; நீங்க SSLC படித்த காலத்தில் தமிழில் மொத்த மார்க் 200; நூறு இல்லை! அப்ப SSLC-ல் மொத்த மார்க்குகள் 600---Break up; தமிழ் 200, ஆங்கிலம் 100, கணக்கு 100, ஜெனரல் சயின்ஸ்100, சமூகவியல் 100.

    தமிழ் இளங்கோவும் முத்து நிலவனும் SSLC தான்; இதற்கு பதில் சொல்லலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்யாரே நீங்க SSLC + PUC கோஷ்டி
      நாங்க SSLC +2

      நீக்கு
    2. விசு 50 வயசு. 1978லிருந்து +1 வந்தது. விசு 3வது பேட்ச் என்று நினைக்கிறேன். (வயசைக் கண்டுபிடிச்சிட்டேன்னு விசு நினைக்க வேண்டாம். உங்க போட்டோவைவிட வயசு குறைவுதான்...)

      நீக்கு
  2. இல்ல நம்பிள்கி .. 500 தான். எனக்கு நல்லா தெரியும். அந்த 233 என் வாழ்க்கையிலே மறக்க முடியாது.

    ஐந்து பாடங்கள்.. மொத்த மதிப்பெண் .. 500.

    நீங்க சொல்வது SSLC 11ம் வகுப்பு. என்னுடையது 10 வகுப்பு.

    பதிலளிநீக்கு
  3. தவறான தகவலுக்கு மன்னிக்கவும்! நீங்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்!

    நான் சொல்லும் SSLC படிக்கும் போது, PUC ஒரு வருடம் படித்துசென்று அப்புறம் மருத்துவமோ அல்லது எஞ்சினீரிங் படிக்கவேணும்!

    எம்ஜீயார் தான் பிளஸ் டூ கொண்டுவந்தார். அப்ப SSLC மொத்த மதிப்பெண் 500 ஆக இருக்கலாம்! SSLC+plus2 அப்புறம் மருத்துவமோ அல்லது எஞ்சினீரிங்கோ!

    பதிலளிநீக்கு
  4. மாணவர்களுக்குத் தைரியம் கொடுக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
  5. நல்ல வேளை இப்படி பதிவு போட்டதோடு விசு நிறுத்திட்டார் அது இல்லாமல் இது ஒரு தொடர் பதிவு என்று சொல்லி எல்லோரும் உங்கள் மார்க்கை போடுங்கள் என்று சொல்லி இருந்தால் என் மானம் கப்பல் ஏறி இருக்கும்( அட யார் அது உனக்கு மானமெல்லாம் இருக்குது என்று கேட்பது உஷ்.....)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மார்க் யாருக்கு வேணும்? ஸ்கூல் பர்ஸ்ட் வந்திங்களா .. இல்லையா? அதுதான் முக்கியம்.

      நீக்கு
    2. தினமும் ஸ்கூலுக்கு லேட்டாகம பர்ஸ்ட்டாக வந்துடுவேன் படிக்க அல்ல விளையாடதான்

      நீக்கு
    3. எனது வகுப்பில் 40 பேருக்கு படித்தோம் அதில் 5 பிராமணப் பையன்கள் மட்டும் பாஸ் மீதி அனைத்து பேரும் நான் உள்பட எல்லோரும் பெயில் ஆனால் பெயிலான எல்லோரும் சந்தோஷமாக இருந்தோம் ஆனால் பாஸானவர்கள் 5 பேர் மட்டும் சோகமாக இருந்தார்கள் மார்க் சீட் வாங்க வரும் போது அது அந்த காலம்....ஹீஹீ

      அய்யோ உங்ககிட்ட ரகசியமாக சொல்லுகிறேன் என்று நினைத்டு இப்போது நான் பொதுவில் சொல்லிவிட்டேனே இனிம யாரு என்னை காதலிப்பா அல்லது பொண்ணுதான் தருவா....ஹும் எல்லாம் போச்சு போயே போச்சு

      நீக்கு
    4. இனிமேல் உமக்கு பொண்ணு தந்தா என்ன .. தராட்டி என்ன? அதுசரி.... அப்புறம் எப்ப தான் பாஸ் ஆனேன்க? பாஸ் ஆனீங்கதானெ?

      நீக்கு
    5. "பாஸ்" நான் ஆகிறதா அது எல்லாம் நடக்காத காரியம் எங்கவீட்டுல "பாஸ்' எல்லாம் என் மனைவிதான்

      நீக்கு
    6. பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்பதால் நான் SSLC & SSLC + படித்தேன். அதென்ன SSLC + என்று கேட்கிறீங்களா அதுதானங்க பெயிலாகி இன்னொரு முறை படிப்பதைதான் அப்படி சொல்லுவோம் இரண்டாவது முறை பரிட்சை பேப்பரை திருத்தியவருக்கு நான் ரொம்ப நல்லா எழுதி இருக்கிறேன் என்று பாஸ் மார்க் போட்டிருக்க மாட்டார் நான் நல்லவன் என்று மனதில் பட்டு இருக்கவேண்டும் அதனால் அவர் என்னை பாஸாக்கி இருப்பார் என நினைக்கிறேன்

      நீக்கு
    7. ஹஹ்ஹஹஹ்ஹ் அதான் தமிழா நல்ல காலம் தொடர் பதிவாக்கலை...அப்புறம் எல்லாரும் என்ன சொல்லுவாங்க...அதுவும் நிறைய ஆசிரியர்கள் பதிவர்கள் இருக்கிறார்கள்.

      நீக்கு
  6. ஏட்டு கறிவேப்பிலை கூட கறிக்கு உதவாது என்பதை உணர்த்தும் பகிர்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக உண்மை..... தமிழகத்தில் நான் சேல்ஸ் வேலையில் இரூக்கும் போது எனது முக்கிய க்ளையண்ட் பள்ளிக்கூடம் எட்டிபார்க்காதவர்கள் ஆனால் அவர்கள் பிஸ்னஸில் கொடிக்கட்டி பறந்தார்கள்

      நீக்கு
    2. அவர்களுக்குத் தான் கல்வி இல்லையே! அப்புறம் எப்படி கல்யாணம் செய்து கொண்டார்கள்? அப்ப ஜாதிக்கட்சிகள் என்ன செய்து கொண்டு இருந்தன?

      நீக்கு
  7. நல்ல பதிவு விசு!! மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் பதிவு.

    ஐயோ இப்படிச் சொன்னா இதைப் பார்க்கும் பெற்றொர்கள்..அடப் பாவிங்களா உங்க மார்க் எல்லாம், எல்லாரும் இப்படி எழுதி பிள்ளைங்களைக் கெடுக்கிறீங்களேனு சொல்லிடாம இருக்கணும்..ஹஹஹ்

    பதிலளிநீக்கு
  8. விசுவின் மைண்ட் வாய்ஸ்....என்னது இது இந்தப் பதிவ நல்ல பதிவுனு சொல்லுறாங்க நம்ம மார்க்க வெளியிட்டது தப்பா போச்சோ இவங்க எல்லாம் நம்மள வைச்சுக் காமெடி பண்ணுறாங்களோ நல்ல பதிவுனு சொல்லி ..ஹஹஹஹ்

    விசு சும்மா தமாஷ்தான் இது...நிஜமாகவே கடைசியில் நீங்கள் சொல்லியது அருமை..

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...