புதன், 27 ஜனவரி, 2016

"அஞ்சோ பத்தோ சேரும் - பிள்ளைகளுக்கு சேர்த்து வையுங்கள்"

இரவில் சில வேளைகளில் தூங்கிகொண்டு இருக்கையில் விழிப்பு வர, இது நம்மை அறியாமல் நடக்கும் நிகழ்ச்சி அல்ல, ஏதோ ஒரு உந்துதல் என்று நினைத்து வெளியே சன்னல் வழியாக எட்டி பார்த்து விட்டு, பின்பு இல்லத்தை ஒரு சுற்று சுற்று விட்டு வரும்போது.. தான் தெரியும்.

முன் கதவை அடைக்கவில்லையே...

பிரிட்ஜ் கதவு சரியாக மூடப்படவில்லை.

யாரும் இல்லாத அறையில் மின்விசிறி ஓடி கொண்டு உள்ளது.


சமையலறையில் குழாய் இருக்கமாய் மூடபடாததால்  நீர் வலிந்து கொண்டே உள்ளது.

இப்படி, ஏதாவது ஒன்று கண்ணில் அகப்படும். ஒ, இதற்காகத்தான் நம்மை அறியாமலே நாம் எழுந்து விடுகின்றோம் என்று நினைத்து கொண்டே மீண்டும் தூங்க போகும் முன்பு கடைசியாக செய்யும் காரியம்.

ராசாதிக்களின் அறை..

மணி இரவு ஒன்றோ - இரண்டோ - மூன்றோ..

இவர்கள் இருவரும் தம் தம் அறையில் தூங்கி கொண்டு இருப்பதை பார்க்கையில் அவர்கள் முகத்தில் ஒரு நிம்மதி.

எனக்கு என்ன? எங்க அப்பா அம்மா இருக்காங்க.. என்ற ஒரு நிம்மதி, ஒரு தைரியம். பெருமை, மற்றும் திருப்தி.

இவை அனைத்தும் தெரியும் அந்த முகங்களை பார்த்துவிட்டு, மீண்டும் கண்கள் தூங்க போகையில் ..

இவர்களின் எதிர்காலம் தான் நினைவில் வரும். பெரியவள் என்னை போல் கணக்கு துறையிலும் சிறியவள் தாயை போல் மருத்துவ துறையிலும் வர வேண்டும் என்று ஆசை படுகின்றார்கள்.

இந்த ஆசையை நிறைவேற்ற நம்மால் முடிந்ததை கடைசி திராணி உள்ளவரை செய்ய வேண்டும் என்று நினைப்பு தான் வரும்.

நேற்று அப்படிதான், தூக்கத்தில் இருந்து எழுந்து சன்னலை பார்த்தல் வெளியே சாரல், அப்போது தான் தெரிந்தது, மூத்தவளின் வாகனத்தில் முன் சன்னல் சற்று திறந்து உள்ளது. மணி காலை 3 போல் இருக்கும். ஓடி சென்று அதை மூடிவிட்டு .. மற்ற அறைகளையும் பார்த்து விட்டு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு  தூங்க முயன்றால், தூக்கம் வரவில்லை. சாரலில் நனைந்ததின் விளைவு.

"கழுதை கெட்டால் குட்டிசுவர்.." சரி, என்று கண்ணினை தட்டினேன்.. அதிர்ந்தே விட்டேன். முதல் செய்தி...

தமிழ் நாட்டில் மூன்று மாணவிகள் தற்கொலை.

ஐயகோ.. யார் பெத்த ராசாதிக்களோ ... "பாவி பொண்ணுங்க" அவசர பட்டுடாங்களே ..

இந்த சிறிய வயதில், கல்லூரி வயதில்.. ஐயகோ .. என்ன பாடு பட்டு இருக்கும் அந்த இளம்பிஞ்சுகளின் மனதில் .. என்ன பாடு பட்டுகொண்டு இருக்கும் இந்த ராசாதிக்களின் பெற்றோர்கள் மனம்.

என்னதான் ஆனது என்று சற்று விசாரிக்கையில்.. என் வருத்தம் கோபமாக மாற ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து தவறுகள். இந்த மூவரின் இறப்பை நான் தற்கொலை என்றே சொல்லமாட்டேன்.

இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து லஞ்சம் - ஊழல் - சுயநலம் என்ற விஷ ஆயுதங்களை வைத்து இந்த  மூன்று மாணவியரை கொலை செய்துள்ளனர்.

நடுத்தரவர்க்கம் மற்றும் கீழ்தரவர்க்கத்தை சார்ந்த குடும்பகள். கொத்தடிமைகளாகவும், கூலிகளாகவும் நாம் வாழ்ந்தது போதும், நம் பிள்ளைகளாவது படித்து நன்றாக இருக்கட்டும் என்று குருவி போல் சேர்த்து வைத்த பணத்தோடு கூடவே கடனும் வாங்கி  பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்ப முயன்றார்களே.. அது தவறா.

கல்லூரி என்பது ஒரு வாழ்க்கையின் மிகவும் முக்கியமான வயதை தன்னுள் வாங்கி கொள்ளும். பொதுவாக 18 முதல் 25 ஒருவனோ ஒருத்தியோ இங்கே தான் தன் காலத்தை கடத்துவார்கள்.

இந்த பருவம் எவ்வளவு முக்கிய பருவம். பதினெட்டு வயது வளர்த்து பராமரித்து படிக்க வைத்து விட்டு மேல் படிப்பிற்காக கல்லூரிக்கு செல்லும் நிலையில்..

கவுன்சிலர்கள்  ..

கல்லூரியை பற்றி தவறான தகவல் தர, படித்தால் போதும் என்று பெற்றோர்கள் நினைத்து .. உள்ளதை எல்லாம் அள்ளி போய் அவர்களிடம் கொடுக்க., முதல் வருடம் முடிவதற்குள் புலி வால் பிடித்த கதை.

இந்த மாணவிகள் இறந்த கல்லூரியில் அடிப்படை வசதி எதுவுமே இல்லை. வகுப்பு இல்லை, வாத்தியார்கள் இல்ல, நிர்வாகம் இல்லை, கல்லூரி என்று சொல்லுவதை விட ஒரு தெரு ஓரத்தில் இருக்கும் கழிப்பறை என்று ஒல்லும் அளவிற்கு மோசம்.

இதில் படிப்பவர்கள், எல்லாவிதத்திலும் -  எல்லாரிடமும் தங்களுக்கு நேர்ந்த தவறை பற்றி பேசி உள்ளார்கள். பலர் ஏற்கனவே எலி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்று இருகின்றார்கள்.

எத்தனையோ முறை கலெக்டர் அலுவலகம் சென்று முறையிட்டு உள்ளார்கள்.

யாருமே இவர்களை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.

இந்த கல்லூரியை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் இதில் படித்த படிக்கும் மாணவர்களை - பெற்றோர்களை காணொளியில் கண்டேன்.  அவர்கள் சொல்லுவதை பார்க்கும் போது..

இதன் உரிமையாளர்கள், இந்த கல்லூரியை 100 சதவீதம் லஞ்சம் - ஊழல் - மோசடி என்ற வழியில் தான் அழைத்து வந்துள்ளார்கள்.

மருத்துவம் படிக்க போன ராசாதிக்களின் பிரேதம் மருத்துவ சோதனையில்.

இந்த கேவலத்தை வளர்த்து விட்டது நாமே. இலவசம், இலவசம்  என்ற ஒரு தரித்திரத்தை வளர்த்து விட்டு .. நாடு எக்கேடு கேட்டு போனால் எனக்கு என்ன?

யார் என்ன மோசம் போனால் எனக்கு என்ன? இதில் எனக்கு என்ன லாபம் உள்ளது என்று வாழ பழகி கொண்டோம்.

ஒன்றா .. இரண்டா.. மூன்று மாணவிகள். இறக்கும் முன் இவர்கள் அந்த கடிதத்தை எழுதும் போது அவர்களின் மனநிலையை யோசித்து பார்த்தாலே நெஞ்சு பதறுகின்றது. யார் பெற்ற பிள்ளைகளோ .. என்று நினைக்க முடியவில்லை.

தங்கள் பெற்றோர்கள் இனிமேலும் நமக்காக எந்த ஒரு நட்டமும் அடையக்கூடாது என்று .. ஐயகோ...வயிறே எரிகின்றது!

இந்த லஞ்சத்தினால் மற்றவர்களின் உயிரை குடிக்கும் அரசியல்வாதிகளுக்கும் - அதிகாரிகளுக்கும் ஐயோ..
இந்த மூன்று மாணவிகளும் இந்த சனியன்ங்களின் இல்லத்திலே தூக்கு போட்டு தொங்கினாலும் இவர்கள், பிணத்திற்கு எவ்வவளவு தருவீர்கள் என்று கேட்டு கூறு போட்டு பகிர்ந்து கொள்வார்கள்.

நாசமாய் போகுதையா இந்த நாடு..

"கற்கை நன்றே .. கற்கை நன்றே.. பிச்சை புகினும் கற்கை நன்றே.."

இந்த உயர்ந்த கல்வியை .. ஒரு பொறுப்பான நாடு என்றால் அரசாங்கம் அல்லவா நடத்த வேண்டும்.

குடியை கெடுக்கும் குடியை விநியோகம் செய்யும் இந்த மானங்கெட்ட அரசிற்கு கல்வியை கையில் எடுக்க முடியாதா?

மொத்தம் உள்ள கல்லூரியில் 90 சதவீதம் .. இந்த அரசியல்வாதிகளின் பினாமி கையில். கல்வி அறிவே இல்லாத இந்த சனியன்களுக்கு மாணவர்களின் வாழ்வை பற்றி எப்படி அக்கறை வரும்.

நம் தலைவர்களை நாம் திருத்தாவிட்டால், இந்த மாணவிகளுக்கு நடந்த  இந்த சோக நிகழ்வு தொடரும். இந்த சோகம் நம் வீட்டில் நடக்கு கூடாது என்று நினைப்பதை விட, யாருக்கும் வரகூடாது என்று நினைக்க வேண்டும்.

நமக்கு நாமே என்று காலில் விழுந்து கிடப்பவர்கள் .. செய்வீங்களா.. நீங்க செய்வீங்களா என்று கேட்டு வருவார்கள். கிடைக்கும் இலவசத்தை பிச்சை போல் பெற்று கொண்டு கேவலமான வாழ்வை தொடருவோமேயானால்.. .. இழவு அதிக தொலைவில் இல்லை.

மூன்று ராசாதிக்கள் ஐயா.. மூன்று.. மொட்டிலே சிதைந்ததே.. நமக்கு விடிவுகாலமே இல்லையா?


பின்குறிப்பு :

அடுத்த தேர்தலுக்கு இலவசம் பொருட்கள் எடுத்துக்கொண்டு எங்களை பார்க்க வருகையில், இந்த செருப்புகளையும் எடுத்து வாருங்கள். வரிசையில் நிறுக்கும் எங்கள் அனைவரையும் அதாலே ஒரு முறை அறைந்து விட்டு பின்னர் ரெண்டு கிலோ அரிசி தாருங்கள். நாங்களும் சிரித்து கொண்டே வாங்கி கொள்வோம்.

மேலும், அருகில் உள்ள பைகளை விட்டுவிடாதீர்கள். அதை விற்றால் அஞ்சோ பத்தோ சேரும் .அதையும் எடுத்து கொண்டு போய் உங்க பிள்ளைகளுக்கு சேர்த்து வையுங்கள்...

நெஞ்சு பொறுக்குதில்லையே..

ஒ.. சொல்லவே மறந்துட்டேன்..

Happy Republic Day Everybody....

4 கருத்துகள்:

  1. ஏன்...ஏன்...இத்தனை ஆவேசம்...
    ராசாத்திகளில் ஆரம்பிக்கும் பதிவு...விஸ்வரூபக்கோபத்தில் பயணிக்கிறது...உண்மைதான்.
    எத்தனை கொடுமை?
    மூன்றுபேர் ஒன்றாக மரணிக்கும் அளவுக்கு மரத்துப்போயிருக்கிறார்கள்.அய்யோ சின்ன சளிப்பிடித்தால் பதறும் நாம்.கிணற்றில் மிதந்திருக்கிறார்கள் அவர்கள்.அந்த செருப்புகளின் பொறுப்பை நீங்கள் சரியாக எழுதியிருக்கின்றீர்கள்..நான் படித்தவரை இதனை இப்படி பதிவு செய்தது நீங்கள் மட்டுமே...அப்படியே இருக்கட்டும் இந்த சூடு..

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக இந்த நிலைமை யாருக்குமே வரக்கூடாது...

    பதிலளிநீக்கு
  3. மூன்று மாணவிகள் இறந்தது பரிதாபகரமான விஷயம்! இது போன்ற தரம் கெட்ட கல்லூரிகள் மூலைக்கு மூலை பரவிவிட்டன. பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம்! நல்ல பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. விசு இதற்கும் நான் இதற்கு முந்தைய தங்கள் பதிவில் சொல்லியபடிதான். முதலில் அதிகாரிகள் அதிகார அமைப்பு ஒழுங்காகச் சட்டத்திற்கு உட்பட்டு, நேர்மையாகச் செயல்படவேண்டும். அடுத்து இது போன்ற காளான்கள் போன்ற கல்லூரிகள் எல்லா துறையிலும் வளர்ந்து விட்டது மட்டுமல்ல அவை தொடங்கப்பட, தொடங்கப்பட்டக் கல்லூரிகள் சட்டத்திற்கு உட்பட்டு, கல்வித் துறையின்/மருத்துவ கவுன்சிலின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தொடங்கப்படுவதே இல்லை அரசியல் ஒரு புறம், பினாமிகள், அதிகாரிகள் என்று ஊழல்.

    சரி இது பற்றி நான் ஒரு பதிவு எழுதுவதாக இருப்பதால் இங்கு சொன்னால் அது பதிவு போன்று நீண்டுவிடும் என்பதால் இங்கு நிறுத்திக் கொள்கின்றேன். மகன் வந்துவிட்டதால் அவனுன் நிறைய நேரம் செலவழிப்பதால் இணையப்பக்கம் வர இயலவில்லை. இன்று பெரும்பாலும் பதிவு இருக்கும் இதைக் குறித்து.

    நல்ல பதிவு விசு

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...