சனி, 23 ஜனவரி, 2016

இதுதானே தம்பி நாம் கற்கும் பள்ளி....

ஏங்க.. நீங்க இன்னைக்கு பத்து மணிக்கு உயர்நிலை பள்ளிக்கூடம் போகணும், தெரியும் இல்ல..

அது எப்படி மறப்பேன்..?

இல்ல, ஆபிசில் பிசி   கிசின்னு மறந்துடாதீங்க..

ச்சே ச்சே ... போன மாசமே காலண்டரில் குறிச்சி வைச்சு இருக்கேன்.

போன மாசமா? இது போன வாரம் தானே நமக்கே சொன்னாங்க.

போன மாசம்ன்னா உனக்கு கேட்டுச்சி. போன வாரம் தான் சொன்னேன்.

சரி, என்ன மீடிங்க்னும் தெரியும் இல்ல.

தெரியும் .. அத எப்படி மறப்பேன்?


எல்லா பேப்பரையும் மறக்காமல் எடுத்துன்னு போங்க ..

சரி...

மீட்டிங் முடிஞ்சதும், எனக்கு என்ன ஆச்சுன்னு போன் பண்ணி சொல்லுங்க.

சரி.

அம்மணி அந்த இடத்தை விட்டு நகர, நானோ..

என்ன மீட்டிங்? சுத்தமா நினைவில் இல்லையே... நல்ல வேலை அம்மணியே நினைவு படுத்தினாங்க என்று யோசித்து கொண்டே...

மூத்த ராசாத்தியிடம்..

அம்மாடி.. இன்னைக்கு பள்ளிகூடத்தில் என்ன விசேஷம் ?

ஒன்னும் இல்ல.

நல்ல யோசித்து பாரு ?

ஒண்ணுமில்ல...

உன் காலெண்டரில் பாரு...

ஒன்னும் இல்ல டாடி...

என்று அவள் எகிற...

இளையவள் அங்கு வர.. இன்னைக்கு உயர் நிலை பள்ளியில் என்ன விசேஷம்?

நான் இப்ப தான் எட்டாவது . அடுத்த வருடம் தான் உயர் நிலை பள்ளி ... எனக்கு ஒன்னும் தெரியாது.

என்று அவளும் எகிற...

கன்புயுசன்..

என்னவாய் இருக்கும் ? சரி , பத்து மணிக்கு  சரியா அங்கே போய் என்னனு தெரிஞ்சிக்கலாம்.. என்று நினைக்கும் போது.. எதோ பேப்பர் வேற எடுத்துன்னு போக சொன்னாங்களே...என்று தடுமாறி கொண்டே அலுவலகம் சென்றேன்..

அங்கே..

9 மணி போல் ...என் அலுவலகத்தின் உரிமையாளர், பண்பான மனிதர், உழைப்பால் முன்னேறி கோட்டீஸ்வரனாக இருக்கும் இந்நாட்டு மனிதர்..

விஷ்.. ஒரு அவசர மீட்டிங் உடனே என் ஆபிசுக்கு வா என்று அழைக்க, அங்கே சென்று...

சொல்லுங்க ,

என்றவுடன் அடுத்த 45 நிமிடம் அவர் ஔர் விஷயத்தை பற்றி விவரிக்க..மணி 9:45.

விஷ்.. எனக்கு ஒரு மணி நேரம் வெளியே வேலை இருக்கு, நான் போயிட்டு திரும்பி வந்தவுடன் இந்த விஷயத்தை பத்தி தொடர்ந்து பேசலாம்.

ஓகே .. பாஸ்...என்று சொல்லி எதோ என் நல்ல காலம்..

ரொம்ப தூரம் போறீங்களா?

இல்லை .. பக்கத்துல உயர்நிலை பள்ளிக்கு தான்..

ஓகே ..சரி... அப்புற...அட பாவி.... பத்து மணிக்கு அங்கே இருக்க
சொன்னாங்களே.. ஆண்டவனே என்று அவரிடம்,

நானும் அங்கே பத்து மணிக்கு இருக்க வேண்டும்..

என்னது? உன் ரெண்டாவது பிள்ளையும் அடுத்த வருடம் உயர்நிலை பள்ளியா? நாட்கள் தான் எவ்வளவு சீக்கிரம் ஓடுது ...

என்று அவர் சொல்லும் போது தான் நினைவு வந்தது.

இளைய ராசாத்தி அடுத்த வருடம் உயர்நிலை பள்ளியில் சேர வேண்டும்,  அதற்கான அறிமுக மீட்டிங்.

பாஸ், எதோ பேப்பர் எடுத்துன்னு வர சொன்னாங்களே.. மறந்துடாதிங்க?

இதோ..கையிலே இருக்கு..

ஒரு நிமிஷம் கொடுங்க.. நான் ஒரு காப்பி எடுத்துக்குறேன்..

என்று கடன் வாங்கி கொண்டு ... காரில் அமர..அலை பேசி அலறியது.

ஏங்க 9:50.. பள்ளிக்கூடம்..

இதோ அங்கேதான் போயின்னு இருக்கேன்..

அந்த பேப்பெர்ஸ் எல்லாம்..

பத்திரமா கையில் தான் இருக்கு.

முடிஞ்சவுடன் கூப்பிடுங்க.. சரி..

பள்ளிக்கூடம் அடைந்தேன்.. அங்கே இருந்த அலுவலகத்தில்,
அடுத்த வருடம் புதிதாக வர இருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கான மீட்டிங் ?

ரூம் நம்பர் 219.

ஓடினேன்.. மணி சரியாக பத்து..

அறையில் எனக்கு முன்பே என் பாஸ். அவர் அருகே, எனக்கும் கீழ் பணி புரியும் ஒரு அம்மணி, அடுத்து எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பலர், அவர்களின் அருகில் அறிந்த ஒரு மருத்துவர், அடுத்து எங்கள் அலுவலகத்தை சுத்தம் செய்யும் அம்மணி.. இப்படி பலர்.. நானும் அமர்ந்தேன்.

மனதில், இங்கே உள்ளவர்களில் பாதி பேர் நமக்கு அறிமுகமானவர்கள். சமூதாயத்தில் படிப்பில் செல்வாக்கில் தொழில் முறையில் வெவ்வேறு நிலையில் இருப்பவர்கள். இங்கே ஒருவருகொருவரின் அருகில் அமர்ந்து .. எங்கள் அனைவரின் பிள்ளைகளும், பெற்றோர்களின் அந்தஸ்த்தால் வேறுபடுத்த படாமல் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் . அடேங்கப்பா இது அல்லவா .. சமசீர் கல்வி, மனது சந்தோஷத்தில் துள்ளியது.

பள்ளியில் சேருவதை பற்றி ஒரு விளக்கம்.. இங்கு 90% மக்கள் அரசாங்க பள்ளிக்கூடம் தான் செல்வார்கள். ஒவ்வொருவர் வாழும் பகுதிக்கும் இது தான் பள்ளி என்ற ஒரு விதி இருக்கும். பிள்ளைகளை அங்கே தான் சேர்க்க முடியும். சில நேரங்களில் சில பள்ளிகளில் "திறந்த அனுமதி Open  Admission"  என்று வாய்ப்பு தருவார்கள். அதில்  தமக்காக குறிக்க பட்ட பள்ளியை விட வேறொரு பள்ளி பெற்றோர்களின் அலுவலகத்திற்கு அருகில், மற்றும் அந்த பள்ளியில் எனக்கு தேவையான பாடங்கள் இல்லை என்று ஒரு காரணம் காட்டி  சேரலாம்.

இங்கே எந்த ஒரு அரசாங்க பள்ளியையும் இலவசம் என்று கருத மாட்டார்கள். உங்கள் வரி பணம் வேலை செய்கின்றது  (Your Tax Dollars at Work)  என்ற ஒரு கருத்து தான் நிலவும் .

இங்கே என் ராசாத்திக்கள் படிக்கும் பள்ளியில் மொத்தம் 3,000 மாணவ மாணவியர்கள் உள்ளனர். இந்த பள்ளியில்  எனக்கு பிடித்ததே இங்கே பணி புரியும் ஆசிரியர்களில் 80% இதே பள்ளியில் படித்தவர்கள். அப்படி ஒரு பண்பாடு.

இது ஒரு அரசாங்க பள்ளி தான், இருந்தாலும் வசதிகளை பாருங்களேன்.

பள்ளிக்கூடம் ,வாகனங்கள் நிறுத்துமிடம், மற்றும் பள்ளி விளையாட்டு மைதானம் 


உலகத்தரத்தில் அமைந்துள்ள ஆடுகளம் ( காமன் வெல்த் கல்மாடியினால் கூட இப்படி போட முடியாது)
 ஆட்டத்தில் பள்ளி வீரர்கள் உற்ச்சாகபடுத்தும் பெற்றோர்கள் 
 பள்ளியின் உள்ளே நீச்சல் குளம் 

 வேதியியல் பரிசோதனை சாலை 
 பாடகர் குழுவும் அரங்கமும் 

இன் டோர் (In Door)  கூடைபந்து மைதானம் 

இம்மாதிரியான பள்ளியில், ஒரு ஏழை பணக்காரன் பாகுபாடு இல்லாமல் அனைவரின் பிள்ளைகளும் ஒன்றாக படிப்பது நம் நாட்டிலும் வர வேண்டும்.

இரண்டு கிலோ அரிசியையும் ஸ்டிக்கர்ஸ் ஒட்டிய கரும்பையும் குப்பையில் எரிந்துவிட்டு நம் வரி பணத்தில் நமக்காக நம் பிள்ளைகளுக்காக இப்படி ஒரு பள்ளிக்கு நாம் போராடும் நாளும் வருமா ?

வருமா? இப்படி ஒரு நாள் வருமா?

பின் குறிப்பு :

ஏங்க , மீட்டிங் போனீங்களா?

போனேன்..

அந்த பேப்பெர்ஸ் ?

எடுத்துன்னு தான் போனேன்.

எடுத்துன்னு போனீங்களா ?இங்க என் காரில் இருக்கு.

ஒ.. அதுவா?

என் காரில் இருக்கே..

அது., நான் தான் ஒரு எக்ஸ்ட்ரா காபி எடுத்து இருக்கட்டும்னு எடுத்து வைச்சேன்.

கல்யாணம் ஆனதில் இருந்து நீங்க ரொம்ப சமத்து ஆயிட்டிங்க...

நன்றி.

10 கருத்துகள்:

  1. எப்படியோ சமாளிச்சுட்டீங்க! இந்த மாதிரி ஒரு பள்ளி அதுவும் அரசாங்க பள்ளியை இங்கு கனவில் கூட காண முடியாது.

    பதிலளிநீக்கு
  2. கல்வி, மருத்துவம், விவசாயம் என எல்லாத்தையும் தாரைவார்த்து குடுத்துட்டானுங்க..., அடுத்தடுத்து வர்ற ஒவ்வொருத்தனும் மேலும் மேலும் அள்ளிக் குடுத்துட்டுதான் இருக்கான்...
    இதோ இப்போ சுப.உதயகுமாரன் "பச்சைத் தமிழகம்" என கட்சி ஆரம்பித்திருக்கிறார். அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என எதுவும் சொல்லவில்லை; நாட்டை மீட்டெடுப்போம் என்கிறார்; கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோவில் தொகுதிகளில் ஒன்றில் கூட அவரால் வெற்றிபெற இயலாது.
    ஏன்னா நம்ம டிசைன் அப்படி...
    இதற்கு முன் எம்.எஸ்.உதயமூர்த்தியும் இளஞர்களை முன்னிலைப் படுத்தி கட்சி ஆரம்பித்தார். காணாமல் போய் விட்டார்...
    இலவசங்களை சொரணையின்றி வாங்கித் தின்னும் இந்த மானங் கேட்ட ஈத்தரப் பயலுகளுக்கு கற்காலத்திலிருந்து மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கணும்...

    பதிலளிநீக்கு
  3. இந்தியாவில் மன்னர் ஆட்சியா நடக்கிறது....?

    மக்களின் மேல் குறையை வைத்துக்கொண்டு
    அரசாங்கத்தைக் குறை சொல்வானேன்...

    பதிலளிநீக்கு
  4. Result of the true democracy,india long way to go to achive this

    பதிலளிநீக்கு
  5. When the citizens are irresponsible, the elected govt would be the same. We should blame ourselves.

    பதிலளிநீக்கு
  6. மக்கள் அறியாமை இப்படிப்பட்ட உயர்வான நிலை அடைய முடியாமல் தடுக்கிறது. கடவுள் தத்துவம், அந்த கடவுளே சொன்னதாக ஆன சாதி, அதை புளுகி சமுதாயத்தில் அத்தனை நன்மைகளையும் அடைந்து வரும் பார்ப்பனீயம் இது ஒழிந்தால் நிச்சயம் மக்கள் நலம் பெறுவார். கடவுள் தத்துவமே ஒரு ஏமாற்று வேலை. எனக்கு மட்டுமே கொடு என்று கேட்கும் அவலம். சக மனிதன் எக்கேடு அடைந்தாலும் சரி. இப்படி ஒரு சுயநலமிக்க வெட்ககேடான தத்துவம். படிக்கச் கூடாது. படித்தாலும் திறமை இல்லை என்று இழிவு செய்வது. என்ன தகுதி இருந்தாலும் பூணுல் ஒன்றே தகுதியாக அனைத்து பதவிகளிலும் சொல்லபடாத ஒரே விதி. எங்கு பணம் அதிகமோ அங்கு இது மிக வெறித்தனமாக அமல் படுத்தப்படும். ஒரு குறைந்த பட்ச அடிப்படை திட்டதிற்கு கூட இங்கு மெத்த படித்த மக்கள் ஏற்று கொள்வதில்லை. மேல் நாடுகளிலும் கடவுள் உள்ளது ஆயினும் அடிப்படை திட்டத்திற்கு கடவுளை காரணம் காட்டி எதிர்பதில்லை.அதை தம் சொந்த விசயத்தில் மட்டும் வைத்து கொள்கின்றனர். எதிலும் சுய தம்பட்டம். அதுவே இன்று போனால் போதும் என்ற எண்ணம். எந்த பதவியில் இருப்பவருக்கும் தனக்கு கொடுக்க பட்ட கடமைகள் தெரியாது. பேராசை ,அவசரம்,இரவு வந்ததும் பூ, வாழ்க்கை முடிந்தது. சுத்தம், அடிப்படை தேவைகள், எதுவும் தெரியாது. எப்படிப்பட்ட குற்றம் செய்தாலும் தண்டனை இல்லை. பணமும் இனமும் எல்லா இடங்களிலும் வேலை செய்யும். எவ்வளவோ படித்தும் இன்றும் வெளிப்படையாக பார்பான் கற்பித்த சாதி பெருமை பேசும் இழி பிறவிகள் மிக மிக அதிகம். வெளிப்படையாக பேசாவிட்டாலும் உள்ளுக்குள் வைத்து அதை பெருமையாக நினைக்கும் அவலம். இதெல்லாம் ஒழியுமா. நிச்சயம் இல்லை. ஆக அமெரிக்கா சென்றோர் இதில் இருந்து தப்பியவர். என்ன மனம் இங்கு நடப்பதை நினைத்து பதைத்து பரி தவிக்கும். எப்படியாவது பார்பான் அமெரிக்கா சென்று அவனுக்கும் தன்னுடைய திறமையை காட்டினால் பரவாயில்லை. நிறைய பேர் போகிறார்களாம்,இந்தியா பிழைத்து கொள்ளும்.

    பதிலளிநீக்கு
  7. தமிழர்களுக்கு, குறைகளைத் தன்னிடமும், தன் வீட்டிலும் வைத்துக்கொண்டு, அடுத்தவர்களிடம் குறை கண்டுபிடிக்கும் குணம் அதிகம். அவர்களுக்கு நல்லவர்களை அடையாளம் காணத் தெரியாது. தலைவன், தன்னிடமிருந்தே வருகிறான் என்பது இன்னமும் அவனுக்குத் தெரியாது. அப்புறம் எப்படி தமிழகம் முன்னேறும்?

    அமெரிக்கா is amazing. People have said great things about Canada also. உங்கள் குழந்தை ஊனமாகிவிட்டாலோ அல்லது, ஏதேனும் காயத்தால் நடக்க முடியாமல் சக்கர வாகனத்தில் வரும் நிலை இருந்தாலோ, பள்ளி வண்டியை (ஸ்கூல் பஸ்), அந்தக் குழந்தை ஏறும்படியாக மாற்றுவார்கள் என்று சொல்கிறார்கள். தமிழகத்துல, பஸ் தளத்தையே அட்டையை ஒட்டி, ஆளைக்கொல்லும்படிச் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  8. விசு அழகான பதிவு. என் நினைவுகளை மீட்டெடுத்த பதிவு எனலாம். என் மகன் அங்கு 7 ஆம் வகுப்பு (மட்டும்) க்யூப்பர்டினோவில் கென்னடி மிடிள் ஸ்கூலில்தான் படித்தான். அங்கு அரசுப் பள்ளிகள்தான் பெரும்பான்மையானவை மட்டுமல்ல நல்ல வசதிகளுடன். நான் அப்போது பிரமித்துப் போனேன். நூலகம் முதற்கொண்டு அத்தனை வசதி. ஆசிரியர்கள் எந்த ஏற்றத் தாழ்வும் இல்லாத அருமையான பள்ளிக். என் மகன் இப்போதும் சொல்லிக் கொண்டிருப்பான்...அங்கு படிக்க இயலாமல் போய்விட்டதே என்று. ஆசிரியர்கள் அனைவரும் அத்தனை உற்சாகத்துடன், பொறுமையாக விளக்கிச் சொல்லுவார்கள் சந்தேகம் கேட்டாலும். தங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் அடுத்த நாள் சொல்லுவதாகச் சொல்லிவிட்டு அதை அடுத்த நாள் முதலில் சொல்லி விளக்கிவிட்டுத்தான் அடுத்த பாடம். இப்படிப் பல நல்ல அனுபவங்கள். செலவும் கிடையாது. ...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இங்கு நமது கல்விமுறையை நினைத்து ஆதங்கம் எழத்தான் செய்கின்றது.

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...