செவ்வாய், 26 ஜனவரி, 2016

16 வயதினிலே .. காலம் தான் மாறிவிட்டது!

16வது வயது...+2 முதல் வருடம் என்று நினைக்கின்றேன். ரெண்டும் கெட்டான் வயது என்று சொல்வார்கள்.

காலையில் யாரோ எழுப்பிவிட, 9 மணி பள்ளிகூடத்திற்கு 8 மணிக்கு எல்லாம் எழுப்புகின்றார்களே என்று நொந்து கொண்டே எழுந்தேன்.

எழும்பி தயாராகி  கிளம்பும் போது, "வெறும் வயிற்றில் போகாதே கொஞ்சம் கொட்டிக்கொண்டு போ "என்று சொல்லி ஒரு சிற்றுண்டி கொடுத்தார்கள். அதை உண்டு விட்டு, மறக்காமல் மதிய உணவிற்கான டிபன் பெட்டியை எடுத்து கொண்டு போ என்று யாரோ சொல்ல...
ஐயகோ, நேற்று பள்ளியில் என் எழுது கோலை எங்கேயோ தவறவிட்டேனே. அதை இப்போதே சொல்லிவிடலாமா ? அல்லது பிறகு நல்ல நேரம் பார்த்து அவர்கள் சந்தோசமாக இருக்கும் போது சொல்லலாமா?

பள்ளி ஆண்டு ஆரம்பித்து ரெண்டே மாதத்தில் எழுதுகோல் துலைந்து விட்டதே,வீட்டில் இன்னொன்று வாங்கி தர முடியாவிட்டால் அடுத்த ஒன்பது மாதத்தை எப்படி தள்ளுவது.. என்ற கேள்வி மனதில் வந்தது.

பையை தூக்கி தோளின் மேல் போட்டு கொண்டு பள்ளியை நோக்கி நடந்தேன். சில நிமிடங்களில் கழித்து.. நண்பன் சோமு அழைத்தான்.

விசு.. வீட்டுல சொன்னியா?

எதை?

எழுது கோல் காணாமல் போனதை.

இல்ல , சோமு.. அப்புறமா சொல்லலாம்னு , சரி நீ "எக்ஸ்ட்ரா" பேனா ஒன்னு இருக்குன்னு சொன்னீயே , எடுத்துன்னு வந்தியா?

இதோ.. ஆனால் ஒரு பிரச்சனை . இதுல "இங்க்" இல்ல. போற வழியில் போட்டுக்க .

சோமு.. திடு திப்புன்னு இப்படி சொன்னா? அதுக்கு அஞ்சி காசு  இல்லையே..

சரி, திற என் பேனால இருந்து கொஞ்சம் ஊத்துரன்.

இரண்டு பேனாவையும் திறந்து அவன் பேனாவில் இருந்து இதில் ஊற்ற முயற்பட அவன் பேனாவில் "இங்க்" மிகவும் குறைவாக இருந்தது.

ஒரு நிமிஷம் இரு! என்று அருகில் இருந்த சிற்றுண்டியில் குடிக்க கொஞ்சம் நீர் வாங்கி அதை அவன் பேனாவில் ஊற்றி அதை நன்றாக குலுக்கி இருவர் பேனாவிலும் சரிபாதியாக நிரப்பி எழுத முயல்கையில்,

சோமுவின் பேனா தூரத்தில் பார்த்த கடல் நிறத்தில் வந்தது.

சாரி, சோமு, ரொம்ப லைட்டா  எழுதுது, என்னால தான் உனக்கு பிரச்சனை.

பரவாயில்லை விடு.

எனக்கு கிடைத்த பேனாவை எழுத முயன்றேன். எழுதவில்லை.

சோமு, இது எழுதலியே.

ஒ.. சொல்ல மறந்துட்டேன். அதன் "நிப்" கொஞ்சம் வளைஞ்சி இருக்கு,பஜாஜ் ஸ்கூட்டர் ஸ்டார்ட் பண்ண சாச்சி வைச்சு உதைப்பாங்களே, அந்தமாதிரி சாச்சி வச்சி எழுது.

எழுதினேன், மிகவும் லைட்டாக எழுதியது.

எடுத்து கொண்டு பள்ளியில் அடைந்தோம்.

எல்லாரும் அடுத்தவாரம் பிக்னிக் போக அஞ்சு ரூபாய் எடுத்துன்னு வந்தீங்களா..

ஐயோ.. கேட்க  மறந்துட்டேன்.. சார், நாளைக்கு எடுத்துன்னு வரேன்.

மதிய உணவு நேரத்தில் எடுத்து வந்து இருந்த புளி சோறு ஊறுகாயை உண்டுவிட்டு, மீண்டும் இல்லம் வந்து சேர்ந்தேன்.

பையை வைத்து விட்டு, வெளியே ஓடி சென்று அடுத்த இரண்டு மணி நேரம் விளையாட்டு.

நேரம்போனதே தெரியவில்லை.

டேய்.. போய் கை கால கழுவிட்டு படிக்க உட்கார்.

படிக்க உட்கார்ந்ததும் என்ன படிக்கின்றாய்.. எப்படி படிக்கின்றாய் என்ற கேள்வி வேறு.

இப்படி போனது என் 16 வயது..

சரி, எப்படி மாறியது..

இப்போது அடியேனின் மூத்த ராசாத்திக்கு 16வயது.. 11வது வகுப்பு படிக்கின்றாள்.

இன்றைய நிலைமைக்கு  வருவோம்.

காலை 5:45. அனைவருக்கும் முன்பே அம்மணி சமையல் எல்லாவற்றையும் முடித்து விட்டு வேலைக்கு சென்று விட்டார்கள்.

டாடி.. பை..

டைம் என்ன ஆச்சி.

5:45. ஐ நீட் டு ரன். பை.

6:20க்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு அவளே கிளம்பி விட்டாள். இது குளிர் காலம் வேறு அல்லவா. வெளியே சற்று இருட்டு வேறு, என்று

ஒரே நிமிடம் இரு..

இட்ஸ் கெட்டிங் லேட்டாடி..என்ன விஷயம்?

என்று அவள் கேட்க..

ஏதாவது சாப்பிட்டியா?

இல்ல டாடி, பேக் பண்ணி கொண்டேன் . போற வழியில் சாப்பிட்டுகிறேன்.

அட்லீஸ்ட் ஏதாவது குடிச்சிட்டு போயேன்.

லேட் ஆகிடிச்சு, போற வழியில் "ஸ்டார்பக்ஸ்" கடையில் வாங்கிகிறேன்.

சரி, டிரைவ் சேப்..

என்று சொல்லி அவள் வாகனம் கண்ணை விட்டு மறையும் வரை காத்து  இருந்து உள்ளே வந்தேன்.

வாழ்வின் தரம் தான் எப்படி மாறி விட்டது. 16வயதில் நம்மை நம்பி வாடகை சைக்கிள் கூட தர மாட்டாங்களே .. இங்கே பிள்ளைகளின் மேல் தான் எவ்வளவு நம்பிக்கை .. வளர்ச்சி..

என்று யோசிக்கும் போதே..

ஐயகோ.. மதிய உணவை பிரிட்ஜில் மறந்து வைத்து விட்டு போய் விட்டாளே.. என்று அலைபேசியை போட்டு..

ராசாத்தி..

சொல்லுங்க..

ஸ்பீக்கர் போட்டு பேசு, கையில் வைச்சு பேசாத.

ஸ்பீக்கர் தான் சொல்லுங்க.

மதிய சாப்பாடு...

ஒ.. அதுவா, அதை எல்லாம் "பேக்" பண்ணவுடன் தான் ஞாபகம் வந்ததது, இன்றைக்கு பள்ளி கூடம் முடிந்ததும் நேரா வேலைக்கு போறேன்.

வேலை சரி.. சாப்பாடு..

டாடி, எனக்கு  தான் வேலையில் சாப்பாடு தருவாங்களே, மறந்துட்டீங்களா ..?

ஒ .. சரி.. டிரைவ் சேப்.. ஸ்கூல் போய் சேர்ந்தவுடன் ஒரு "டெக்ஸ்ட்" அனுப்பு.

ஐயோ.. நான் இங்கே வந்து சேர்ந்து அஞ்சி நிமிஷம் ஆச்சி.

அட  பாவி மகளே. எவ்வளவு வேகமா ஓட்டுன? ஜாக்கிரதை மகள். எத்தனை மணிக்கு வருவ?

தெரியில டாடி.. வேலை ஒரு ஆறு மணிக்கு முடியும் .. அப்புறம் அங்கே இருந்து நேரா டியூஷன் போகலாம்ன்னு..

டியூஷன் புத்தகம் எல்லாம்..

எல்லாம் வண்டியில் இருக்கு.. ஐ வில் சி யு லேட்டர்.

ராசாத்தி.. பத்திரம். காசு இருக்கா?

ஏன் , உங்களுக்கு செலவிற்கு ஏதாவது வேணுமா?

இல்ல உனக்கு..

டாடி.. இப்ப நான் சம்பாதிக்கிறேன்.. ரிமம்பர்.. ?

ஓகே.. ஹவ் அ கிரேட் டே ..

யு டு ....பை..

என்று அவள் அலைபேசியை துண்டிக்க.. மணி 6:40 போலானது.

டாடி..

என்று அலறினாள்.. இளையவள்..

சொல்லு..

டைம் என்னா ஆச்சி..

6:40.

ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சி எழுப்புங்க.

அடியே நான் பெத்த மகாராசி.. அந்த ரெண்டு நிமிஷத்தில் அப்படி என்ன தூக்கம்..?

டோன்ட் டிஸ்டர்ப் மீ..

சில நிமிடங்கள் கழித்து எழுந்தாள். அவளையும் பள்ளியில் விட்டு விட்டு வேலையை நோக்கி வண்டியை விட்டேன். எட்டாவது படிக்கின்றாள். 13 வயது. இன்னும் மூன்று வருடம் தான். அதன் பின்னர் இவளும்..

டாடி ..பை என்று கிளம்பி விடுவாள்..

16 வயதினிலே.. காலம் தான் மாறிவிட்டது.


11 கருத்துகள்:

  1. விசு..இது வருத்தமா..சந்தோசமா? எனக்கும் தெரியவில்லை...சின்ன ரோஜாப்பூவைப்போல் தாதி நம் கையில் கொடுத்த மகள்கள்..இதோ வளர்ந்து..நம்மை விசாரிக்கிறார்கள்..என்னையெல்லாம் கண்டிக்கவே செய்கிறார்கள்.. வானத்து நிலவையெல்லாம் பிடித்துக்கொடுப்பான் அப்பா என நினைத்து நெஞ்சின் மீது படுத்து கதைகேட்ட மகள்கள்....போப்பா உனக்கு இது தெரியாது எனச்சொல்லி அவர்களுக்குள் சிரித்துக்கொள்கிறார்கள்...கவனமாய் இரு என்றால்..பார்த்துக்கொள்கிறேன் என்கிறாள்.. காலம் நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறது நண்பரே...இதோ கண்முன்னே நம் பெயர் சொல்ல நம் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள்...நாம் தான் மீண்டும் குழந்தைகளாகிறோம்..

    பிள்ளைகள் பற்றிய அப்பாக்களின் உணர்வை இதுவரை யாரும் மிகத்துல்லியமாக சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்..சொல்லிவிடவும் முடியாது..

    உங்கள் பேனா மையின் நிறம் போல் இருக்கும்.. பிள்ளைகள் மீதான பிரியக்கடலை எதைக்கொண்டு எழுத..

    நானெல்லாம் அந்த விசயத்தில் நாய்போல் தான் இருக்கிறேன்...அன்பு ஆறுபோல் ஓடும்போது முழுக்க அதை குடிக்கமுடியாமல் நக்கிக்குடித்து தீர்க்கிறேன் தாகம்..

    இந்த இனிய காலையில்(எனக்கு) நல்ல உணர்வினைத்தீண்டிய உங்கள் வரிகளுக்கு என் வந்தனங்கள்...

    பதிலளிநீக்கு
  2. இங்க நம்ம பெரிய ராசாத்திக்கும் 16 ஆச்சு.., +1 படிக்கிறா, கூடவே frenchம் Japaneseம்
    அப்பா, +2 க்கு அப்புறம் யுரோப்ல தான், preferably Swissல படிக்க போறேன்.., கெட் ரெடி பொர் தட்...
    UG மட்டும் முடிச்சிட்டு ஹையர் ஸ்டடீஸ் போலாமே..!!
    நோ வே, நோ லுக்கிங் பேக்.., படிக்கணும், படிச்சுட்டே சம்பாதிக்கணும், உலகம் பூரா சுத்தணும்...
    சின்ன ராசாத்திக்கு 8 வயசு..., என்ன ஆனாலும் நைட் 8:30க்கு தூங்கிட்டு காலையில டான்னு 5:30க்கு நம்மள எழுப்பி விட்ருவா!! 16ல இவ என்ன சொல்லப் போறாளோ!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடே அடே .. அடே.. உங்கள் பின்னூட்டம் படிக்கும் போதே.. ஒரு மகிழ்ச்சி. நோ லூகிங் பேக். சரியாதான் சொல்லி இருக்கு உங்க ராசாத்தி. படிக்கட்டும், நல்லா படிக்கட்டும். போன வருஷம் ஜூலை மாசத்தில் நாங்க விடுமுறைக்கு ச்விச்ஸ்போனோம். சின்னவ.. திடு திப்புன்னு இந்த ஊரில் வந்து ரெண்டு வருஷம் படிச்சா நல்லா இருக்குமே சொல்லிட்டா...

      ரெண்டு ராசாதிக்களை பெற்ற மகராசன் ஐயா நீர். வயதான காலத்தில் சாபடிர்க்கும் மருந்திற்கும் கவலை இல்லை . வாழ்த்துக்கள்.

      நீக்கு
    2. ha ha ha
      வஞ்சப்புகழ்சியா, இரட்டுறமொழிதலா தெரியல...
      ஆனா, ஒரு ஆம்பளையோட மனசு இன்னொரு ஆம்பளைக்கு தான் தெரியும்ன்றது மட்டும் தெரியுது...

      நீக்கு
    3. வஞ்சக புகழ்ச்சி இல்லை நண்பரே.. மகளை பெற்றவன் பாக்கியவான்.

      எக்ஸ்குயூஸ் மீ. மூத்த ராசாத்தி 16 வயது.. இளையவ 8.. எங்க கணக்கு வாத்தியார் சொல்லி கொடுத்த வாய்ப்பாடை வைச்சு பார்த்தா... இந்த வருஷ இறுதியில் மூன்றாவது ராசாத்தி வரணுமே...?

      நீக்கு
  3. பேனாவின் இங்க் பள்ளி நினைவுகளை கிளறி விட்டது

    பதிலளிநீக்கு
  4. காலம் மாறியதை அழகாக காட்சி படுத்தியவிதம் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. வாவ் !! சூப்பர்ப் ..எங்க மகளும் work experience போகணும் இந்த வருஷம் .அதுக்கு நாளைக்கு இண்டர்வியூ ..கணவர் சொல்ற்ரர் நானா கூட்டிட்டு போகணுமாம் ..பொண்ணு அப்பாவை முறைச்சி சொல்றா /நான் குழந்தையில்லை நானே போவேன் //

    பெருமையாதான் இருக்கு நம்மை மாதிரி இல்லை இக்கால பிள்ளைங்க .
    A லெவல்ஸ் முடிச்சதும் அங்கே உங்க ஊரில்தான் மேற்படிப்பாம் மேடம் சொல்லிட்டாங்க இப்பவே :)

    பதிலளிநீக்கு
  6. //ராசாத்தி.. பத்திரம். காசு இருக்கா?

    ஏன் , உங்களுக்கு செலவிற்கு ஏதாவது வேணுமா?//

    ஹா ஹா :) செம கலக்கல் போங்க ..குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  7. யெஸ் விசு பிள்ளைகள் நாம் பராமரித்து வளர்ந்து இப்போது நாம் அவர்களுக்குக் குழந்தைகள் போல நம்மையும் திருத்தி வாழக்கற்றுக் கொடுக்கின்றார்கள். இங்கு அங்கு (மேலை நாடுகளைப்) போல் குழந்தைகள் வேலைக்குச் செல்ல முடிவதில்லை. பெரும்பாலும் செல்வதில்லை வறுமைக்குடும்பத்தில் உள்ளவர்களைத் தவிர. இங்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது ஏனென்றால் கல்வி அப்படி ஆகிவிட்டது இங்கு. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெற்றோரும் டென்ஷன் ஆகும் நிலைமை. அங்கு போல் வந்தால் இங்கும் குழந்தைகளுக்கு நிறைய பொறுப்புணர்வு வரும்.

    கீதா: மேலே சொல்லப்பட்டக் கருத்துடன்....மகனும் தனது மேற்படிப்பைப் பற்றியும், தான் சாதிக்க நினைப்பதைப் பற்றியும் மிகவும் தெளிவாகத்தான் இருக்கின்றான். நடக்க வேண்டும் அவ்வளவே. ஆனால், மற்ற விஷயங்களில் நாங்கள் சொல்லுவதையும் செவிமடுப்பான். தன்னைத் திருத்திக் கொள்வான். அவன் சொல்லுவதையும் நாங்கள் கேட்போம்..எங்களைத் திருத்திக் கொள்வோம்... நல்ல ஒரு நட்பு ரீதியிலான பந்தம். மகன் பெற்றோர் என்றில்லாமல்..குறிப்பாக என்னுடன் ஒரு தோழி தோழன் போலத்தான்...

    தங்கள் பெரிய ராசாத்தியின் பதில் செம ஹஹஹ ...//"ஏன் உங்களுக்குச் செலவிற்கு ஏதாவது வேணுமா?//

    ம்ம் சின்ன ராசாத்தியும் ஒரு படி மேலாகத்தான் இருப்பாள் இருவருக்குமே எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...