வெள்ளி, 4 டிசம்பர், 2015

பொங்கல் நிகழ்ச்சிக்கு அமெரிக்கா வரும் தமிழ் சான்றோருக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.

வணக்கம்.2015 தீபாவளி முடிந்தது. வெளிநாட்டு பிரயாணம் எல்லாம் முடிந்து வாங்கிய டாலரை 66ல் பெருக்கி வங்கியில் போட்டு அமர்ந்து க்னோடு இருப்பீர்கள். தவறே இல்லை. உங்கள் தமிழ், உங்கள் அறிவு, உங்கள் பேச்சு திறன், உங்கள் பெயர்.


இன்னும் நான்கு வாரத்தில் அமெரிக்காவில் உள்ள அணைத்து தமிழ் சங்கத்தில் இருந்தும் தங்களுக்கு அழைப்பு வரும். ஒன்றும் இல்லை .. பொங்கலை உங்களோடு சேர்ந்து பொங்க தான். அதுவும் தவறு இல்லை.
பல்லாயிரம் கணக்கான மைல் தாண்டி வந்தாலும் நாம் தமிழர்கள் ஆயிற்றே. பிரபலத்தை காண திரளாக ஓடி வருவோம்.

இந்த பொங்கலுக்கு வரும் உங்களுக்கு ஒரு விண்ணப்பம். கண்டிப்பாக திரண்டு வாருங்கள். உங்களை காண - உங்களை கேட்க நாங்களும் திரண்டு வருகின்றோம். ஆனால் ஒன்று.

இந்த ஒரு முறை மட்டும் தமிழை பரப்ப வரும் நீங்கள் உங்கள் சொந்த செலவிலே வந்த செல்லுங்கள். உங்களுக்கு தங்குவதற்கான வசதிகளை நாங்கள் கண்டிப்பாக செய்து தருகிறோம். அது மட்டும் அல்ல.. ஆயிர கணக்கில் வாங்கும் டாலர்களையும் இம்முறை கேட்காதீர்கள்.

அப்படி பார்க்காதீர்கள். நாங்கள் திடீரென்று கஞ்சன் ஆகவில்லை. உங்களை பார்க்க - கேட்க இரண்டு மூன்று  மடங்கு கூட கொடுத்து வருகின்றோம்.

அந்நாள் இந்த பொங்கல் அன்று வரும் வருமானம் அனைத்தையும், அனைத்தையும்  இழந்து நிற்கும் சென்னை தமிழர்களுக்கு உங்கள் பெயரிலேயே அனுப்பி வைக்கின்றோம்.

தமிழை வைத்து எவ்வளவோ சம்பாரித்து விட்டோம். அதனால் இந்த ஒரு முறை .. மட்டும்..

அடுத்த தீபாவளிக்கு மீண்டும் உங்களுக்கு முதல் வகுப்பு பயணம், தங்கள் மனைவிக்கும் ஒரு முதல் வகுப்பு பயணம். பல ஆயிரம் டாலர்கள் - பரிசுகள் எல்லாம் கண்டிப்பாக தருகின்றோம்.

இந்த ஒரு பொங்கலுக்கு மட்டும் ... கொஞ்சம் உதவி செய்யுங்கள்.

அனைவரும் புறப்பட்டு வாருங்கள். தங்களை வரவேற்க நிறைய தமிழ் சங்கங்கள் காத்து கொண்டு இருக்கின்றன.

விசு

பின் குறிப்பு :

அமெரிக்க நாட்டை சேர்ந்த தமிழ் சங்க நிர்வாகிகளுக்கு, இந்த கடிதத்தை படித்த பின் தமிழ் பிரமுகர்கள் தமிழுக்காக கண்டிப்பாக வருவார்கள். அப்படி வராவிடில், பரவாயில்லை. இந்த ஒரு முறை மட்டும் இவர்களை வர வைக்க பல்லாயிர கணக்கில் செலவு செய்யாதீர்கள். தங்கள் சங்கத்தில் இருக்கும் சிறு குழந்தைகளை வைத்தே ஏதாவது நிகழ்ச்சி செய்யுங்கள். வரும் பணம் எல்லாம் சென்னை வெள்ள   நிவாரண நிதிக்கே என்று அறிவியுங்கள்.  கண்டிப்பாக நிறைய பேர் வருவார்கள், ஆதரவு தருவார்கள்.

தமிழ் பிரமுகங்களுக்கு கொடுக்கும் பணமும் செலவும் மிச்சம். வந்தவர்கள் கொடுக்கும் தானமும் மிச்சம்.

என்ன நான் சொல்வது சரிதானே.

6 கருத்துகள்:

  1. உண்மைதான்.நமது மக்களை நாங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. ஆமாம்.. ஏன் நடிகர்களை மட்டும் கேட்கிறோம். மதுரைத் தமிழன் சொன்னது போல் இவர்களிடமும் கேக்கலாமே தப்பில்லை. மக்கள் நேசிப்பவர்கள் யாரென்று இப்போது தெரிந்து விடும்.
    நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  3. அய்யா சாமி,,இது வேறயா...வேண்டாம் இவர்கள் தமிழ் பரப்பத்தான் அங்கு வருவதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?
    உங்கள் யோசனையை செய்து பாருங்கள்...
    யாரும் வர மாட்டார்கள்.
    யாரேனும் வந்தாலும் பணம் வர வேறு வழிகள் வைத்திருப்பார்கள்..

    பதிலளிநீக்கு
  4. மிகவும் சரியாகச் சொன்னீர்கள் விசு! அதுசரி இப்படி முடிவெடுக்கின்றீர்கள் என்று வையுங்கள் (அங்குள்ள தமிழ்சங்கங்கள்) நம்மவர்கள் வருவார்கள் என்று நினைக்கின்றீர்களா? அவர்களாகவே? ஏதேனும் ஒரு செலவையேனும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாக? !!!

    பதிலளிநீக்கு
  5. தம்பி விசுவிற்கு ஒரு செய்தி,

    தமிழ் இனி மெல்ல சாகும் நீங்கள் இதுபோன்ற தமிழ் அறிஞர்களை அவமதித்தால்....?????...., இவர்களின் ஜென்ம பிறப்பின் நோக்கமே தமிழை வளர்ப்பது மட்டுமே, பணம் இல்லை.

    "தண்ணி" ஒருவனுக்கு "உணவில்லை" என்றால் இந்த ஜெகத்தினை அழிக்ககூட தலைப்படும் "ரோஷமுள்ள", "பாசமுள்ள" "அக்கரையில்" இருந்துகொண்டு, "எக்கரைக்கும்" போய் தஞ்சம் புக வழி இல்லாமல் தவிக்கும் தமிழக மக்கள் மீது "அக்கறை" உள்ள, "மானமுள்ள", இந்த தமிழ் அறிஞர்கள் சாபத்திற்கு ஆளாகாதீர்கள் என எச்சரிக்க விரும்புகின்றேன்.

    அப்படியே அவர்கள் வந்தாலும் "அரைத்த மாவைதான் அரைப்பார்கள்" என தெரிந்தும் இதுபோன்ற தாய் மொழி "பற்றாளர்களை" காண்பதும் அவர்களின் மழை என "பெய்யும்" "பொய்யா" மொழியை கேட்பதும் நாம் பிறந்த பயனை நாம் அடைவதற்கு பெரிதும் உதவும் என்பதாலும் இனி இவர்களை இதுபோன்று "குறைத்து" மதிப்பிடுவதை கொஞ்சம் குறைத்துகொள்ளுங்கள்.

    எத்தனை நாட்களுக்குத்தான் பிரபலங்கலையே சரணடைவது, ஏன் நம்மவர்களை பிரபலபடுத்தகூடாது? என்பதையும் கூடவே சிந்தித்துபார்பதும் நல்லதுதான்.

    உங்கள் கருத்திற்கு நான் மாறுபடவில்லை என்பதை தெரிவித்து சாபம் வந்தாலும் அதை சரியாய் பகிர்ந்துகொள்வோம் எனும் உத்திரவாதமும் கொடுப்பீர்கள் என நம்புகின்றேன்.

    கோ

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...