புதன், 18 நவம்பர், 2015

மீண்டும் "ரத்த கண்ணீர்"

சென்ற வாரம் தீபாவளி.. இந்தியா போல் விடுமுறை இல்லாவிடிலும், அதுவும் இந்த முறை செவ்வாய் அன்று வந்ததாலும் நண்பர்கள் யாரோடும் சேர்ந்து கொண்டாட முடியாமல் போனது.

இருந்தாலும் வார இறுதியில் தீபாவளியை கொண்டாட வருமாறு தென் கலிபோர்னியா சங்கத்தில் இருந்தும் மற்றும் நண்பர் ஒருவர் இல்லத்தில் இருந்தும் விண்ணப்பம் வர, இரண்டும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இருக்க, முதலில் அழைத்த ஒரே காரணத்தினால் நண்பர் இல்லத்திற்கு சென்றேன்.

உள்ளே நுழைந்தவுடன், பழகிய முகங்கள் பல. நண்பனின் மனைவி வாயெல்லாம் பல்லோடு..

என்ன விசு. அக்கா எங்கே?


முதலில் வந்து இருக்கும் என்னை நலம் விசாரியுங்க.. அதற்கு பின்னால் அக்காவை பற்றி சொல்றேன்.

சும்மா இருங்க..அக்கா காலையில் கூட வரேன்னு சொன்னாங்களே, நீங்க ஏன் விட்டுட்டு வந்தீங்க..

ஏம்மா.. விட்டுட்டு வர அவங்க என்ன ஆட்டு குட்டியா?

சரி எங்க, அவங்க?

கொஞ்சம் வேலையா வீட்டில் இருக்காங்க.

என்று சொல்லும் போதே மதியம் சுட சுட செய்த பகோடா சில்லென்று வந்தது.

சும்மா , சொல்ல கூடாது, பகோடா தூளா இருக்கே. உங்க புருஷனே வீட்டில் செய்தாரா ?

கிழிச்சார். வீட்டில் செய்தது தான், ஆனா அவர் இல்ல, நான் தான்.

விசு, சும்மா இருக்க வாயே மெல்லவே இவளுக்கு நேரம் பத்தாது, இதுல நீ ஏன் "பபிள்கம்" போடுற.. வந்தோமா, சாப்பிட்டோமா.. கிளம்பினோமான்னு இரு.

சும்மா தமாஸ் பண்ணேன். ஏங்க.. பகோடா சூப்பர்.. கொஞ்சம்"தூள் பகோடா" போட்டு எடுத்துனு வாங்க.

"பகோடா தூள்"ன்னு  கேள்வி பட்டு இருக்கேன்.. இது என்ன "தூள் பகோடா"?

ஐயோ .. அந்த காலத்தில் மதராசில் இந்த மாதிரி பகோடா கடைக்கு போனால் "தூள் பகோடா" தான் கேட்டு வாங்குவோம். பெரிய பெரிய பகோடாவை விட இது பொடியா நல்லா இருக்கும்.

ஒ.. பொடி பொடியா? ஒரு நிமிஷம் இருங்க, வரேன்.

என்று போனவர்கள் .. சில நிமிடம் கழித்து வந்தார்கள்.

இந்தா விசு.. "தூள் பகோடா"

இது என்ன வித்தியாசமா இருக்கு?

இல்ல, நீங்க கேட்டீங்கலேன்னு கொஞ்சம் பகோடாவ மிக்சியில் போட்டு பொடிசா அறைச்சேன். சாப்பிடுங்க.

அட பாவிங்களே.. ஐம்பதை தாண்டியவுடன் விசுவுக்கு பகோடா கூட கடிக்க முடியாதுன்னு முடிவு பண்ணிட்டிங்களே.. என்று நொந்து  கொண்டே,

சரி.. நேரம் ஆகுது இல்ல.. வாங்க சாப்பிடலாம் என்று நான் சொல்ல..அருகில் இருந்த இன்னொரு விருந்தினர்.

ஐயா.. அதை  அவங்க, அதுதான், இந்த வீட்டு காரங்க சொல்லணும். நீங்களும் நானும் சொல்ல கூடாது.. என்று சொல்ல.. கடிகாரத்தை பார்க்கையில்..
வாங்க, விசு சாப்பிடலாம்.

அருமையான சாப்பாடு.. பாரதியார் பாட்டு போல் "நிற்பன, நடப்பன பறப்பன" எல்லாம் இருந்தது. முடித்து விட்டு அம்மணிக்கும் அவர்கள் போட்டு கொடுத்ததை வாங்கி கொண்டு வீடு வந்து சேரும் போது மணி 10க்கும் மேல்.

வீட்டில் அனைவரும் உறங்கி கொண்டு இருக்க, மனதிலோ, அந்தகாலத்தில் தீபாவளி விடுமுறையில் வந்த படங்கள் எல்லாம் ரெண்டே நாளில் பார்த்து முடிக்கும் நினைவுகள் வந்தன.

இப்போது வாழ்வின் முறையே மாறி விட்டதே என்று யோசிக்கையில் தூக்கம் வர மறுக்க.. சரி. கணினி சென்று ஒரு படம் பார்க்கலாம் என்று யோசிக்கையில், மனதில் வந்த முதல் படம் "ரத்த கண்ணீர்".

சரி அதையே பார்க்கலாம் என்று தட்டிவிட்டு அமர... மனமோ பல வருடங்களை தாண்டி மாயவரம் அருகில் உள்ள வடகரைக்கு சென்றது.

தீபாவளி விடுமுறைக்கு விடுதியில் இருந்து எங்கள் மாமா வீட்டிற்க்கு சென்று இருந்தேன். மதிய உணவை முடித்து விட்டு ஒரு பூனை தூக்கம் போட்டு கொண்டு இருந்த என்னை என் அத்தை மகன் ரமேஷ் எழுப்பினான்.


நேரம் ஆச்சி கிளம்பு விசு.

எங்க போறோம்?

சினிமா தான்.

காசு..?

இந்த சினிமாக்கு காசெல்லாம் வேண்டாம்.

என்ன சொல்ற..?

விசு .. TV கேள்வி பட்டு இருக்கியா? டிவி.

இருக்கேன்.. அது நமக்கு எப்படி.. ?

விசு.. மாயவரம் பகுதியிலே நம்ம ஊரில் இருக்கிற சிங்கப்பூர் பாய் வீட்டில் மட்டும் தான் இருக்கு. இன்றைக்கு அதுல சினிமா, வா போகலாம்.

டேய் .. அது பெரிய இடமாச்சே.. நம்மள உள்ளே விடுவாங்களா ?

உள்ளே எல்லாம் விட மாட்டாங்க.. பாய் ரொம்ப நல்லவர். டிவி ய ஜன்னல் பக்கம் தான் வச்சி இருப்பார். வெளியே இருந்து பார்க்கலாம் வா..

என்று சொல்ல, இருவரும் ஆளுக்கு ஒரு சைக்கிள் ... பொறுமை .. சைக்கிள் டையரை தள்ளி கொண்டே ஓடினோம்.

சிங்கப்பூர் பாயின் வீடு மிக பெரிய வீடு. ரமேஷ் சொன்னது போலவே டிவி ஜன்னல் பக்கத்தில் தான் இருந்தது. சில விளம்பரம் முடிய இன்றைக்கான சிறப்பு நிகழ்ச்சி என்று ஒரு அறிவிப்பு வர.. அதை தொடர்ந்து " ரத்த கண்ணீர்" திரைபடம் என்று வந்தது.

அதற்கு முன் நான் டிவியை பார்த்ததே இல்லை. இதை முதல் முதலாக பார்த்தவுடன், எனக்குள்ளே ஒரு ஆச்சரியம். அடே .. டே. வண்டிய பூட்டி கொண்டு வெளியே போய் சினிமா பார்கின்ற காலம் போய் இப்ப வீட்டுக்குளே இருந்து சினிமா பார்க்க முடியுதே.. மனிதனுக்கு தான் என்ன மூளை என்று வியந்தேன்.

பாதி படத்தில்..ரமேஷ்..

ரொம்ப பசிக்குது.. காசு ஏதாவது இருக்கா? பக்கத்து கடையில் வடை நல்லா இருக்கும்.

இல்ல ரமேஸ் .

நீ இங்கேயே இரு.. நான் ஓடி போய் வீட்டில் இருந்து அம்மாவிடம் வாங்கி வரேன் என்று அவன் கிளம்பியவுடன்.

அதே வேகத்தில் நான் அருகில் இருந்த கடைக்கு சென்று.. அண்ணே.. சீக்கிரமா ரெண்டு வடை கொடுங்க என்று வாங்கி கொண்டு .. ரமேஷ் மீண்டும் வருவதற்குள் சாப்பிட்டு முடித்தேன்.

வடை வாசனை  வெளியே தெரிய கூடாதல்லவா.. அருகில் இருந்த கொய்யா மரத்து இலைகளை கசக்கி கை காலில் தடவி கொண்டு நின்று கொண்டு இருக்கையில், ரமேஷ்..

விசு, அம்மாவிடம் காசு இல்லை. இருந்தாலும், நீ விருந்தினர் அல்லவா.. உனக்கு மட்டும் வாங்கிக்க சொல்லி 10 பைசா கொடுத்தாங்க.

ரமேசு, எனக்கு வேண்டாம்.

டேய்.. நான் நாளைக்கு சாப்டிறேன். இந்தா போய் வடை வாங்கி சாப்பிடு.

வேணா ரமேஸ்.

நீ சொன்னா கேக்க மாட்ட.. ஒரு நிமிஷம் இரு.. என்று சொல்லி போனவன்.. ஒரு வடையோடு வந்தான்.

இந்தா விசு...

வேணாம் ரமேஸ்..

டேய்.. நீ சாப்பிடாட்டி அம்மா என்னை திட்டுவாங்க. இந்தா, வேண்டாம்னு சொல்லாத..

என்று வற்புறுத்த..

வடையை வாங்கி கடித்தேன், என்னையே அறியாமல் கண்ணில் கண்ணீர்.

சில நொடிகளில்.. ரமேஷ்..

என்ன விசு? அழுற.... இது படம் தான், இவர் பண்ண தப்புக்கு கஷ்டம் படனும் .. இதுக்கு போய் அழுவுறியே..

அதுக்கு இல்ல ரமேஸ்...

பின்ன ஏன் அழுவுற ?

ஒன்னும் இல்ல " மிளகாயை கடிச்சிட்டேன்" அது தான். என்று நான் ஒரு பொய் சொல்ல..

நடிகவேள் அவர்களோ "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொண்டது ஏது" என்று பாடி கொண்டு இருந்தார்.

பின் குறிப்பு : என்னதான் ,வீட்டில் அமர்ந்து கொண்டு சொகுசா இன்றைக்கு பார்த்தாலும், அங்கே வடகரையில் பாய் வீட்டின் எதிரில் நின்று பார்த்த ஒரு சுகம் "இஸ் கண்டிப்பாக மிஸ்ஸிங்".

8 கருத்துகள்:

  1. நண்பர் ரமேஸ் இன்று இதைக் கண்டு, மிளகாய் பகோடா உங்களுக்கு அனுப்புவதாக கேள்விப்பட்டேன்... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  2. ஆஹா இப்படி ஒரு தூள் பக்கோடாவ கேள்விப்பட்டதே இல்லையே....டிவி அதிசயம் தான் அப்போதெல்லாம் என் தோழி வீட்டி என்னைப்பார்க்க கூப்பிடுவாங்க சங்கடப்பட்டுக்கிட்டே போவேன்,....பக்கத்து வீட்ட்டுக்காரங்க அவங்கள கூப்பிடலன்னு என்னை நக்கலடிப்பாங்க....வீட்டுக்கு டிவி வந்தநாளை மறக்கவே முடியாது...ஆனா அந்த ஆனந்த வியப்பெல்லாம் இக்காலக்குழந்தைகட்கு தராம டிவியே அழிச்சிட்டு...

    பதிலளிநீக்கு
  3. கண்டிப்பா விசு உங்கள் வயது தெரிந்துதான் அவர்கள் மிக்சியில் பொடித்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது..ஹாஹ்ஹஹ..... கூல் ஜோக் அபார்ட்...

    இது நகைச்சுவையாக எழுதப்பட்டாலும் ஒரு நல்ல கருத்து உள்ளது என்பதை மறுக்க முடியாது. உங்கள் கண்ணில் வந்தக் கண்ணீரும் ரத்தக் கண்ணீராகத்தான் இருந்திருக்கும் உங்கள் மனதிற்கு இல்லையா ....

    நல்ல பதிவு ...

    பதிலளிநீக்கு
  4. பகோடாவில் ஆரம்பித்துத் தீபாவளி கொண்டாடி பாய் வீட்டில் சினிமாவிற்கு, கடை வடை.. :))

    பதிலளிநீக்கு
  5. மலரும் நினைவுகள்....ஆனந்தக்கண்ணீர்....

    பதிலளிநீக்கு
  6. தீபாவளியில் எண்ண தேய்ச்சு குளிக்குறோமோ இல்லையோ, தியேட்டருக்குப் போய் புதுப்படம் கண்டிப்பா பார்க்கனும். நீங்க என்னடான்னா டி.வியில படம் பார்த்திட்டு, நரகாசுரனை கொன்றதுக்கு ஒரு அர்தமே இல்லாம பண்ணிட்டீங்க.
    பக்கோடா மேட்டர் ''தூள்''

    பதிலளிநீக்கு
  7. சில நண்பர்கள் நம்மை அழவைத்துவிடுகிறார்கள்! ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...