திங்கள், 21 செப்டம்பர், 2015

ஐந்தில் இருந்து ஐம்பது வரை..

எப்போதும் இல்லாத அளவு வெயில். என்னடா இது , கோடை விடுமுறைக்கு மெட்ராஸ் ( நமக்கு எப்பவுமே மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் தாங்க.. இந்த சென்னை வெண்ணை எல்லாம் வேலைக்கு ஆகாது)  போன மாதிரி இருக்கே.. என்று நினைத்து கொண்டு இருக்கையில், இளைய ராசாத்தி அருகில் வந்து...

டாடி ..ரொம்ப வெயில் இல்ல ..

அதுக்கு என்ன இப்ப.. ஐஸ் கிரீம் வாங்க வழி பண்றியா...

ஐஸ் கிரீம் எங்களோடு உங்களுக்கு தானே டாடி பிடிக்கும், வாங்க போய்
ஆளுக்கு ஒன்னு வாங்கி சில்லுன்னு சாப்பிடலாம்.

ஐஸ் கிரீம் என்றவுடன் தான் என் மனது வீட்டை கூட எழுதி கொடுக்குமே
உடனே கிளம்புங்கள் என்று மூவரும் (அடியேன், மூத்தவள், இளையவள், அம்மணி வேலையில் இருந்தார்கள்).

டாடி ... அந்த சூப்பர்  மார்கட் வேண்டாம், இந்த பக்கம் வண்டிய விடுங்க.

எல்லா ஐஸ் கிரீம் ஒன்னு தானே, இங்கேயே வாங்கிக்கலாம் .. நமக்கு தான் ஐஸ் கிரீம் என்றால் பொறுமை இல்லையே..

இல்ல டாடி, இந்த பக்கம் விடுங்க, இந்த கடையில் ரொம்ப நல்லா இருக்கும் அது மட்டும் இல்லாமல் இங்கே ஒரு விசேஷமும் இருக்கு.

என்ன விசேஷம் என்று நொந்து கொண்டே வண்டியை விட்டேன்.. போகும் வழியில் ராசாதிக்கள் எதோ பாட்டு ஒன்றை கேட்டு கொண்டு வர என் மனமோ ... சிறு வயதில் வாழ்ந்து வந்த கிராமத்திற்கு சென்றது..

டேய் விசு, ஏதுடா உனக்கு முழுசா இருபது பைசா? அதுவும் வட்டமா, வெங்கலத்தில்?

நரசிம்மா, இது ஏது என்பது முக்கியமா? இல்ல இதை வச்சி என்ன பண்றோம் என்பது முக்கியமா?

எதுவா இருந்தா என்ன ? என்ன பண்ண போறோம் அதை சொல்லு .

டேய், இந்த வெயிலுக்கும் அதுக்கும் ஒரு ஆளுக்கொரு குச்சி ஐஸ்

சூப்பர் ஐடியா விசு..

இருபது காசுக்கு நாலு கிடைக்குமே.. ஆளுக்கு ரெண்டு வா..

என்ன விசு... ஒரு சின்ன ஐஸ் கிரீம் விஷயத்தில கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் நாளையும்  பிச்சி   பிச்சி  போட்டுட்டியே .. எதிர் காலத்தில் நீ கணக்கு பிள்ளையா தான் வருவே..

டேய்.. அஞ்சாவது தேறுவதே உன்னை புடி என்னை புடி.. இதுல எதிர்காலத்தில் கணக்கு பிள்ளை.. நினைப்பு தான் பிழைப்ப கெடுதிச்சான், கிளம்பு.

அங்கே எங்கள் இல்லத்தில் இருந்து ஐஸ் கிரீம் கடை கட்ட தட்ட இரண்டு கிலோ மீட்டர் தூரம்.  சரியான வெயில். இருவரும் பாதி ஓட்டமும் நடையுமாக அரும் மணிநேரத்தில் அந்த கடைக்கு வந்து சேர்ந்தோம்,

அண்ணே ரெண்டு குச்சி ஐஸ்.. எனக்கு சிவப்பு நரசிமன்னுக்கு பச்சை.

விசு, போன முறையும் நான் பச்சை த்தான் சாப்பிட்டேன். எனக்கு ஆரஞ்சு  கலர் சொல்லு,

தம்பி,  இரண்டு மணி நேரமா கரண்ட் இல்ல. ஐஸ் எல்லாம் பாதி தண்ணி  ஆகிடிச்சி. போயிட்டு ஒருமணி நேரம் கழித்து வாங்க.

என்ற சொன்னவுடன் நரசிம்மன் கிளம்ப ஆரம்பித்து விட்டான்.

டேய் நரசிம்மா .. எங்க போற..?

அவர் தான் ஒரு மணி நேரம் ஆகும்னு சொல்றாரு இல்ல.

அதுக்கு.

வீட்டுக்கு போக அரை மணி நேரம் தானே ஆககும். வா போயிட்டு வரலாம்.

டேய், மீண்டும் வர இன்னொரு அரை மணிநேரம் ஆகுமே.. மொத்தம் ஒரு மணி நேரம் ஆச்சே..

அதுக்கு..

வெயிலில் அலைவதை விட, இங்கேயே இருந்து வாங்கினு போகலாம் வா..
எப்படி விசு.. நான் முந்தியே சொன்ன மாதிரி நீ கண்டிப்பா கணக்கு பிள்ளை தான்.

அரை மணி நேரம் கழித்து..

அண்ணே தண்ணி ஐஸ் ஆச்சா , கொஞ்சம் பாருங்களேன்.

டேய், எங்க தாத்தா காலத்தில் இருந்து இந்த தொழில்.. கண்டிப்பா
ஆயிருக்காது. இன்னும் அரை மணிநேரம் ஆகும்,

என்று அவர் சொல்லும் போது, எங்கள் வகுப்பில் எங்களோடு படிக்கும் பெரிய வீட்டு செல்ல பிள்ளைகள் யோகராணியும் ரமாவும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.

என்ன..விசு.. இங்கே என்ன பண்றீங்க?

ஐஸ் கிரீம் வாங்க வந்தோம், நீங்க..

நாங்களும் தான். நேத்து கூட நீ ஐஸ் கிரீம் வாங்கினத பார்த்தேன்.. இந்த வாரம் இரண்டு முறையா ? ஏது காசு...?

என்று யோகா கேட்க்கையில்.. ரமா அவளின் காதில் கடித்தாள்.

அய்யய்யோ.. என்னாடி... கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க கூடாதா?

என்று சொல்லி கொண்டே அழாத குறையாக வந்த வழியில் எதையோ தேடி கொண்டே அவர்கள் செல்ல..கடை காரரோ...

விசு, வா ஐஸ் கிரீம் தயார்.

யோகா.. எங்க போறீங்க..

 ரமா  காசை எங்கேயோ துலைசிட்டா..

அடே டே .. ஜாக்கிரதையா இருக்க கூடாதா?

சரி வாங்க, நான் வாங்கி தரேன்..

அண்ணே, ஆளுக்கு ஒன்னு.. இவங்க ரெண்டு பேருக்கும் கூட சிவப்பு கலர் கொடுங்க..

விசு.. நான் சொன்ன நம்ப மாட்ட.. நீ கண்டிப்பாக கணக்கு பிள்ளை தான், வேற வழியே இல்லை.

விடுறா.. விடுறா...

ஆளுக்கு ஒன்று வாங்கி கொண்டு அவர்கள் இருவரும் கிளம்ப..

நரசிம்மனோ..

என்ன விசு.. நமக்கு தலைக்கு ரெண்டுன்னு ஆசை காட்டிட்டு.. மோசம் பண்ணிட்டியே..

நரசிம்மா .. எந்த காரியம் பண்ணாலும் நியாயமா பண்ணனும்..

இதுல என்ன நியாயம். இதே காரியத்தை அவளுக ரெண்டு பேரும் பண்ணி  இருப்பாங்களா ?

என்ன பண்ணி இருப்பாங்களா.. ?இந்த குச்சி ஐஸ் கிரீம் நமக்கு வாங்கி கொடுத்ததே அவங்க தானே..

அவங்களா.. ?  அப்ப இந்த வெண்கல இருபது காசு...

அதை தான் சொல்றேன்...இந்தா ஆரஞ்சு உனக்கு ..

டாடி. என்ன சும்மா ஆரஞ்சு - ஆப்பிள் ன்னு , என்ன ஆச்சி உங்களுக்கு..

ஒ... சாரி.. சரி ஐஸ் கிரீம் கடைஎங்க ..?

இதோ இங்க தான்

வண்டியை நிறுத்தி உள்ளே சென்ற நான் பேய் அறைந்தவன் போல் ஆனேன் (பேய்  அறைந்த கதையை கண்டிப்பாக இன்னொரு நாள் சொல்கிறேன்). அந்த கடையில் ஐஸ் கிரீம் ஒன்றுமே இல்லை.

ராசாத்தி ஐஸ் கிரீம்..?

கொஞ்சம் பொறுமையா இருங்க டாடி..

இது என்ன தண்ணி போல் இருக்கு .. கரண்ட் ஏதாவது போயிடிச்சா?

அப்படினா?

கரண்ட் கட்.. அதை விடு.. இது ஐஸ்கிரீம் ஆக கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஆகுமே ராசாத்தி.. அந்த சூப்பர் மார்கேட்டே போய் இருக்கலாம்..

டாடி.. உங்களுக்கு கொஞ்சம்  கூட பொறுமை இல்ல.. நீங்க எல்லாம் எப்படி கணக்கு பிள்ளையா இருக்கீங்க...?

என்று சொல்லும்போதே அந்த பெண் எதையோ ஒன்றை தட்டிவிட.. அந்த இடமே மணிரத்தினம் படத்தில் வரும் க்ளைமாக்ஸ் காட்சி போல் மாறியது.
அடுத்த இரண்டு நிமிடத்தில் என் கையில் ஐஸ் கிரீம்கொடுத்தாள்


அப்படி என்ன மந்திரம் செய்தாள், அந்த பெண்.. நீங்களே பாருங்களேன்..

நைட்ரஜன் புகைமண்டலத்தில் ஐஸ் கிரீம்.. 

ஆளுக்கொன்று வாங்கி கொண்டு வண்டியில் ஏற... அருமை ராசாத்தியோ.. டாடி..1790ல் யார் இங்கே ஜனாதிபதி என்று கேட்க்க.. நானோ பேய் அறைந்தவன் போல் முழிக்க ( கண்டிப்பாக இன்னொரு நாள் சொல்கிறேன்) , அவளே வாஷிங்டன் என்று சொல்ல.. அது சரி மகள்.. இப்ப என்ன திடீரென்று பொது அறிவு கேள்வி என்று அடியேன் கேட்க்க..


அந்த ஐஸ்  கிரீம் கப்பில் இருக்குது டாடி..

பொது அறிவு பாடம்..

பின் குறிப்பு : அந்த வெண்கல இருபது காசும் .. அந்த கண்மணிகளும் அது என்ன விஷயம் என்று அறிய விரும்புவோர் இங்கே சொடுக்கவும் !

ஐஸ் ப்ரூட்.. ஐஸ் ப்ரூட்…

4 கருத்துகள்:

  1. நீங்க ஒரு பெரிய தீர்கதரிசி நண்பரே...!!! :)
    இது ஒரு மீள் பதிவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா.. நான் தீர்க்கதரிசி இல்லை, நண்பன் நரசிம்மன் தான் தீர்க்கதரிசி . இது புது பதிவு தான். ஆனால் இந்த பதிவின் இறுதியில் உள்ள ஐஸ் ப்ருட்ஐஸ் ப்ருட் .. சில மாதங்களுக்கு முன் எழுதியது. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. எச்சில் ஊறுது குச்சி ஐஷ்கிரீம் காலத்தை நினைச்சு.

    பதிலளிநீக்கு
  3. குச்சி ஐஸ்! அட ! இப்படித்தான் பல சமயங்களில் உருகி விடும். அதற்காகவே அந்தக் கடைக்கு முன் காத்திருந்து சாப்பிட்ட மலரும் நினைவுகள். அதுவும் பால் ஐஸ்...கோலா ஐஸ்....அது வேறு ஒண்ணும் இல்லை காளிமார்க் அப்போது கலர் விற்பார்களே அதை ஐஸாக்கி கோலா ஐஸ்...இப்போது அந்தக் கலர் பொவொன்டோ.....

    இந்த லோக்கல் காளிமார்க்கின் பொவென்டோ, இன்டெர்னாஷனல் கோக், பெப்சிக்களைச் சிறிது ஆட்டம் காண வைத்துள்ளது.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...