புதன், 22 ஜூலை, 2015

பொத்திக்கிட்டு ஊத்துதடி ....

நேற்றைய பதிவு முடிக்கையில் ஏரியை பார்த்ததும் பேய் அறைந்ததை போல் ஆனேன் என்று முடித்து ..... தொடரும் என்று எழுதினேன். அந்த கதையை பிறகு எழுதுகிறேன். இன்றைய நிகழ்ச்சிக்கு இப்போது போகலாம்.

காலை 7 போல் எழுந்து காபியை தேடி சமையல் அறைக்கு செல்ல அங்கே எங்க வீட்டு அம்மணியும் அந்த வீட்டு அம்மணியும் "கதைத்து" கொண்டு இருந்தார்கள்.


நீங்க ... காபிக்கு சீனி பாவிப்பீர்களா?

என்ன ?

காபிக்கு சீனி பாவிப்பீர்களா?

என்ன...?

உங்க காதுல... சக்கரை போடணுமான்னு கேக்குறாங்க..

கொஞ்சம் போடுங்க...

ஒரு கரண்டி காணுமா ?

என்னாது கரண்டி காணோமா ?

இல்ல, சீனி ஒரு கரண்டி காணுமா ?

உண்மையா நான் எடுக்கல ..

உங்க காதுல... ஒரு கரண்டி சக்கரை போதுமான்னு கேக்குறாங்க ..

போதும்.

அந்த வீட்டு அம்மணி நம் ஊரில் இட்லி ஊத்துவதை போல் ஒரு பெரிய தட்டில் மாவால் ஆனா ஒன்றை அடுக்கி வைத்து கொண்டு இருந்தார்கள்.

அது என்ன ?

ஒ.. இது எங்கள் ஊரில் மிகவும் புகழ் வாய்ந்த உணவு .. Croissant  என்று பெயர் .ஒரு பத்து நிமிடம் பொறுங்கள்.. தயாராகிவிடும் .

வெளியே தோட்டத்தில் கணினியில் அமர ...

உக்காத்துடிங்களா? எல்லாருக்கும் தட்டை எடுத்து வையுங்க..

தட்டினை எடுத்து வைக்க அனைவரும் வந்து அமர  காலை உணவு பரிமாறப்பட்டது.


Home Made Croissant
இன்றைக்கு எங்கே போகிறோம் ...?

ஜூரிச் (Zurich ) நகரின் அருகில் உள்ள ஒரு (Rhinefall) நீர்வீழ்ச்சிக்கு போகிறோம்.

எவ்வளவு தூரம்.

கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் ..

இரண்டு வண்டியை கிளப்பி கொண்டு பிள்ளையும் குட்டியுமாக கிளம்பினோம். போகின்ற வழியில் மதிய உணவை முடித்து கொண்டு  அங்கே போய் சேரும் போது மணி இரண்டு,

வண்டிகளை  ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் விட்டு விட்டு அந்த நீர்வீழ்ச்சியை
நோக்கி நடந்தோம்.

இந்த நீர்வீழ்ச்சியின் பெயர் என்ன ?

"ரெயின் பால்ஸ் "

எவ்வளவு பெரிய நீர்வீழ்ச்சி ?

வந்து பாருங்க ...

சில நிமிடங்கள் கழித்து அந்த நீர்வீழ்ச்சியை வந்து அடைந்தோம்.
அந்த நீர்வீழ்ச்சியை பார்த்தவுடன் பேய் அறைந்ததை போல் ஆனேன். (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக இன்னொரு நாள் சொல்கிறேன்)



பால் பொங்கி வழிவது போல் ஒரு காட்சி 

எதோ ஒரு பெரிய பாத்திரத்தில் இருந்து  பால் கொதித்து நிரம்பி வழிகின்றது போல் ஒரு காட்சி. பார்க்கும் இடத்தில இருந்து எல்லாம் தண்ணீர் கொட்டி கொண்டு இருந்தது.

எவ்வளவு தண்ணீர்... எங்கேயும் தண்ணீர். சுத்தமான தண்ணீர். பல ஆறுகள் சேர்ந்து வந்து கலக்கும் இடம் இந்த இடம். இந்த வீழ்ச்சியில் வரும் தண்ணீர் பல ஏரிகளை சேர்ந்து அடைகின்றது. இங்கே சுவிஸ் நாட்டில் கடல் எதுவும் இல்லாததால், இந்த தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்த படுகின்றது.

அந்த நீர்வீழ்ச்சி கொட்டும் இடத்தில் சில படகுகள் சுற்றுலா பிரயாணிகளை  சுமந்து செல்வதை பார்த்து..

வாங்க நாமும் ஒரு படகில் சென்று அருகில் இருந்து பார்க்கலாம். போகின்ற வழியில் நான் பெற்ற பெட்டைகள் (இங்கே ராசாதிக்கள் என்று அழைப்பது இல்லை) பசி, தாகம் என்று கூவ.. அருகில் இருந்த கடையில் சென்று ..

கொஞ்சம் தண்ணீர்...

ஒரு பாட்டல் 2 பொற்காசுகள் .

என்னடா இது .. Water  Water  Everywhere  ஆனால் பாட்டலுக்கு 2 பொற்காசா ? சரி கொடுங்க ..

Water Water Everywhere..
டாடி...சாப்பிட ஏதாவது..

அந்த Pretzel  எவ்வளவு ..?

ஒன்று 4 பொற் காசுகள் ...

மனதில் ( ஆளுக்கு ஒன்று என்றாலும் 4 பேருக்கு என்றால் 16 .. 16ரை 60ல் பெருக்கினால் கிட்டத்தட்ட 1000 ருபாய்.)

இது இங்கே நல்லா இருக்காது... வேறு ஏதாவது வாங்கி தருகிறேன் ..

மொத்தம் 8 பேர், 90 பொற்காசுகளை கட்டி விட்டு படகில் ஏற தயாராகையில் அந்த நீரை எட்டி பார்த்தேன். பெரிய பெரிய மீன்கள் . அடே டே கையில் ஒரு தூண்டில் கிடைத்தால் இன்று அருமையான மீன் குழம்பு தாயார் என்று நினைத்து கொண்டே படகில் ஏறினோம்.

நேத்து வைச்ச மீன் குழம்பு....
 ஒரு மணிநேர பயணம். இரண்டு புறமும் பச்சை பசேல் என்ற காட்சி நடுவில் ஆறு .என் வாழ்வின் சில சிறந்த நிமிடங்கள்..

ஆற்றின் நடுவே படகை ஒட்டி கொண்டு இருந்தவர் அந்த படகை லாகவமாக திருப்பி நீர் கொட்டும் இடத்திற்கு வந்தார். அந்த பால் பொங்கி விழும் இடத்தில் இருந்து சில அடிகள் தள்ளி படகு நிற்க ...

வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தருணம். என்ன ஒரு வீழ்ச்சி என்ன ஒரு ஆறு.. என்ன ஒரு நாடு. என்ன ஒரு பராமரிப்பு ...

அருமை அருமை.

எல்லாம் முடித்து மீண்டும் திரும்புகையில்..

டாடி.. எதோ சாப்பிட வாங்கி தரேன்னு சொன்னீங்க .. ஆனால்..

வாங்க அதே கடைக்கு போவோம்.

அந்த கடையின் எதிரில் வந்து அமர ....அந்த கடையில் வேலை செய்யும் அம்மணி கடை மூடுவதற்கு தாயாராகி அங்கே இருந்த நான்கு Pretzel  (அதுதாங்க ஒன்னு நாலு பொற்காசு,, மொத்தம் 1000 ருபாய்.. )

கடையை மூடுகிறோம் ... இது உனக்கு இலவசமா வேண்டுமா?

என்ன கேள்வி அம்மணி... அதுவும் ஒரு தமிழனை பார்த்து... இலவசதிர்க்காக இடை தேர்தலுக்கு வேண்டுதல் செய்யும் ஆட்கள் அல்லவா நாங்கள் என்று மனதில் சொல்லி கொண்டு ...

நன்றி

என்று பெற்று கொண்டேன்.

மனதில் ஒரு நிம்மதி ... கட்டு கட்டாக இங்கே உள்ள இந்திய கருப்பு பணத்தில் இருந்து ஆயிரம் ரூபாயை மீட்டு விட்டேன் . பிரதமர்  மோடி அவர்கள் இல்லத்திற்கு 15 லட்சம் அனுப்பு போது எனக்கு இந்த ஆயிரத்தை கழித்து கொண்டு 14லட்சம் 999 ஆயிரம் மட்டும் அனுப்பினால் போதும்.

இந்த பணத்தையும் நான் இங்கே இருக்கும் போதே அனுப்பி வைத்தால் அதையும் இங்கேயே பதுக்கி வைத்து விட்டு கிளம்ப வசதியாக இருக்கும் .

www.visuawesome.com




17 கருத்துகள்:

  1. வணக்கம்
    இனிமையான அனுபவம்.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன்.. வருகைக்கு நன்றி. உண்மையாகவே ஒரு நல்ல பயணம் தான். மிகவும் ரசித்து கொண்டு தான் இருக்கின்றேன் .

      நீக்கு
  2. அருவி அழகாய் இருக்கிறதே!!

    பேய் அறைந்த கதையை நீங்கள் சொல்ல வேண்டாம் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருவியை விடுங்க... பேய் கதையை ஏன் வேண்டாம் என்று சொல்லி விட்டீர்கள் .

      நீக்கு
  3. அருமை நண்பரே.. உங்கள் நகைச்சுவை எழுத்து அபாரம்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பா ... தங்கள் வார்த்தைகள் எப்போதும் நம்மை உற்சாக படுத்துகின்றது .

      நீக்கு
  4. வணக்கம் சார்,
    தங்கள் பயணம் அருமையாக இருக்கு,
    வாழ்த்துக்கள்.
    நன்றி,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மகேஷ்.. தொடர்ந்து படிப்பதற்கு நன்றி..

      நீக்கு
  5. அது சரி.. 'பொத்திக்கிட்டு ஊத்துதா..' இல்ல 'பொத்துக்கிட்டு ஊத்துதா..?'

    உங்களது நகைச்சுவை உணர்வை ரசித்தேன்.

    ஆமாம்.. கேட்காத காதுக்கு எதுக்கு சர்க்கரை.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொத்துகிட்டா. ..இல்ல பொத்திக்கிட்டா.. தெரியலையே ...சர்க்கரை காதுக்கு இல்ல... காபிக்கு ...வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. அருமையான நதி! அழகான அருவி! என அமர்க்களமாக இருக்கிறது போல சுவிஸ்! அங்கேயும் இலவசமா கொடுக்கிறாங்களா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்னமோ தெரியல தளிர் . தமிழனுக்கு இலவசம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று உலகம் முழுவதும் தெரியும் போல் இருக்கு.

      நீக்கு
  7. "இந்த பணத்தையும் நான் இங்கே இருக்கும் போதே அனுப்பி வைத்தால் அதையும் இங்கேயே பதுக்கி வைத்து விட்டு கிளம்ப வசதியாக இருக்கும்" - ரகளையான இடம். இடையிடையே நல்ல நகைச்சுவையோடு எழுதியிருக்கிறீர்கள். 'பெட்டை என்பது இங்கு' என்று ஏன் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்பது புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் இல்லத்தில் என் மகள்களை றாசாதிக்கள் என்று தான் அழைப்போம். ஆனால் இங்கே என் மனைவியின் உறவினர்கள் (எல்லாரும் சுத்தமான நெய்யினால் செய்யப்பட்ட ஈழ தமிழர்கள்) தம் தம் மகள்களை பெட்டைகள் என்று தான் அழைக்கின்றார்கள். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  8. நல்லா படம் எடுக்கிறவங்களைப் படம் எடுக்கச் சொல்லி அதைப் போட்டிருந்தால் நல்லா இருந்திருக்குமே...............

    பதிலளிநீக்கு
  9. ஹஹஹ அழகான அருவியைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வரும் வேளையில் இடையில் நகைச்சுவை நீரோட்டம்...அருவையை ரசித்தது போல் இறுதியில் சொன்ன கறுப்பை வெள்ளையக்கிச் சிரித்தோம்(னம்ம பல்லு வெள்ளைதானே அதைத்தான் சொன்னோம்...)

    அழகான ஈழத் தமிழ், இடையில்...பதிவிற்கு இடையில் க்ராய்சன்ட் போல சுவை சேர்த்தது...(கீதா: வீட்டில் க்ராய்சென்ட் செய்வதுண்டு....)

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...