செவ்வாய், 21 ஜூலை, 2015

பயணங்கள் முடிவதில்லை...

சுவிஸ் நாட்டில் இன்னொரு தினம்.

சுவிஸ் நாட்டில் இரண்டாவது நாள். நேற்று இரவு தூங்கும் போதே காலை 7 மணி போல் கிளம்பி சில இடங்களை பார்க்கலாம் என்ற ஒரு திட்டம். அதன் படியே எழுந்து கிளம்ப நினைக்கையில் வெளியே வெயில் கொளுத்திதள்ளியது. ஒரு நிமிடம் நாம் சுவிசில் இருகின்றோமா அல்ல வேலூர் நகரில் இருகின்றோமா என்ற ஒரு சந்தேகம் வந்து விட்டது.

சரி, வெளியே எங்கேயும் போக இயலாது என்று வீட்டிலேயே இருந்து உறவினரோடு உறவாட ஆரம்பித்தோம்.  நான் அவர்களிடம் "பேச" அவர்கள் என்னிடம் "கதைக்க" நேரம் போனதே தெரியவில்லை.


சிறிது நேரம் கழித்து, மாலை நான்கு மணிக்கு மேல் தான் வெளியே செல்ல முடியும் என்று முடிவானபின், மதியம் என்ன சமைக்கலாம் என்ற யோசனை வர, நான் என் மனைவி நன்றாக புரியாணி (பிரியாணி தான், ஆனால் மனைவியின் உறவினர்கள் இதை புரியாணி என்று தான் அழைக்கின்றார்கள்) . சமைப்பார்கள் என்று சொல்ல.. சரி அதற்கு தேவையானவற்றவைகளை  வாங்கி வர கிளம்பினோம்.

அங்கே ஒரு பெரிய இந்திய பல் பொருள் அங்காடி.  நமக்கு தேவையான அதனை பொருள்களும் கிடைக்கின்றது. தேவையானவற்றவைகளை வாங்கி கொண்டு வந்து வீட்டை அடைந்தோம்.

நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா என்று கேட்க்காமல் சில நாட்களாக படிக்க முடியாத செய்திகளையும் பதிவுகளையும்  படிக்கலாம் என்று தோட்டத்து பக்கம் சென்றேன்.

கணினியின் எதிரில் என்னை கண்ட அம்மணி... இங்கே வந்தும் இதுதானா ? என்று கேட்டு..
உள்ளே வந்து "உள்ளி" உரித்து ஒரு உபயோகமாய் இருங்கள் என்று உளற ... அது என்ன "உள்ளி" என்று "சொல்லி"கொண்டே போனேன்.  யாழ்ப்பான தமிழில் வெள்ளை பூண்டிருக்கு உள்ளி என்ற பெயராம். இனிமேல்  இல்லத்தில் கூட .. "கார்லிக் சிக்கன்" என்று கேட்க்காமல் .. "சில்லி சிக்கன்" என்பது போல் .." உள்ளி சிக்கன்" என்று தான் அழைக்க போகின்றேன்.
உள்ளியை உரித்து விட்டு வந்து அமருகையில் ..

அருகில் இருந்த செடியில் இருந்த பூக்கள் கவனத்தை ஈர்த்தது. அடே டேஇது நம்ம ஊர் செம்பருத்தி அல்லவா என்று அருகில் சென்று பார்த்தேன். ஆம் செம்பருத்தி தான் ... இந்த பூவை பார்த்து தான் எவ்வளவு நாட்கள் ஆகி விட்டது என்று கூலிங் கிளாஸ் கழட்டி பார்த்த நான் பேய் அறைந்ததை (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக   இன்னொரு நாள் சொல்கிறேன் )  ஆனேன். இந்த செம்பருத்தி சிவப்பு நிறம் இல்லாமல் ஊதா நிறத்தில் இருந்தது. பார்க்க வித்தியாசமாய் இருந்தாலும் அதில் ஒரு அழகு.
ஊதா நிறத்தில் செம்பருத்தி 
மதிய உணவை முடித்து கொண்டு வெளியே கிளம்புகையில் மொத்தம் எட்டு பேர் இருக்க ... இரண்டு வண்டியை எடுக்க வேண்டிய நிலைமை. நீங்கள்  ஓர் வண்டி எடுகின்றீர்களா என்று அங்கே கேட்க்க .. நானும் சரி என்று சொல்ல ஒரு புதிய" Mercedez Benz" எதிரில் வந்து நின்றது . ( மதுரை தமிழா... இந்த வண்டியும் என்னுடையது அல்ல .. உறவினருடையது.. உடனே என்னை சுனாமி - பினாமி என்று அழைக்க வேண்டாம் .. இங்கே எனக்கு பண்ணையும் இல்லை ஒன்றும் இல்லை).

அந்த வண்டியை பார்த்தவுடன்.. எனக்கு நானே .. "மாதவா உனக்கு இன்று யோகம் தான் - சுவிஸ் நாட்டில் Mercedez benz  ஓட்டும் வாய்ப்பு .. என்சாய் ..." என்று சொல்லி கொண்டு வண்டியை விட்டேன் .

சிறிது தூரம் கழித்து பெட்ரோல் நிலையத்தில் வண்டியை நிறுத்து என்று அலை பேசி வர .. அங்கே நிறுத்தினேன். நண்பர் அங்கே வந்து நேராக பெட்ரோல் போட ஆரம்பித்தார். போட்டு முடித்து அவர் நேராக கடையின் உள் சென்று காசு கொடுப்பதை பார்த்து ..

என்ன ... முதலில்   போட்டு விட்டு பிறகு காசு கொடுகின்றீர்களே . ஒரு வேளை காசை மறந்து வீட்டில் வைத்து இருந்தால்...

அவரிடம் சொல்லிவிட்டு அடுத்த முறை கொடுத்து விடுவேன்..

தெரிந்த கடைகாரா?

இல்லை. இங்கே தெரிய வேண்டிய அவசியம் இல்லை..

ஒரு வேளை ஏமாற்றிவிட்டால் ..

அப்படி யாரும் நினைக்க மாட்டார்கள்..சில கடை கார்கள்  நமது விலாசம் அல்லது வேறு ஏதாவது வாங்கி வைத்து கொள்வார்கள் .. மற்ற படி .. இது ஒரு பெரிய விஷயம் இல்லை...

இதை கேட்டதும் சற்று வியந்தேன். நல்ல விஷயம். இவ்வளவு நல்ல நாடு.. ஆனால் ஏன் நம் நாட்டின் ஆட்கள் கருப்பு  பணத்தை இங்கே பதுக்கும் போது மட்டும்... இது அநியாயம் .. இங்கே நாங்கள் இதை உங்களுக்காக பாதுகாக்க மாட்டோம் என்று சொல்லவில்லை என்ற கேள்வி குறியோடு ..வண்டியை "லவ்சன்" என்ற ஊருக்கு விட்டோம் .இந்த ஊரில் அமைந்துள்ள  ஒரு ஏறி மிகவும் புகழ் வாய்ந்ததாம் .. அரை மணி நேரம் கழித்து அந்த இடத்தை அடைந்தோம்..
அந்த ஏரியை பார்த்தவுடன் நான் மீண்டும் பேய் அறைந்தவனை போல் ஆனேன்...
பயணங்கள் முடிவதில்லை... தொடரும்..

WWW.VISUAWESOME.COM

20 கருத்துகள்:

  1. அருமையாக இருக்கு பயணம் இன்னும் நான் சுவீஸ் போனதில்லை! தொடருங்கள் தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் அமைந்தால் கண்டிப்பாக சுவிஸ் செல்லுங்கள் .அருமையான ஒரு நாடு.

      நீக்கு
  2. பிரியாணி / புரியாணி
    சில்லி சிக்கன் / உள்ளி சிக்கன்
    சிலைடைப் புலவர் நீங்கள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கார்த்திக். இந்த உள்ளி என்ற வார்த்தையை நேற்று தான் அறிந்தேன் ...

      நீக்கு
  3. சுவாரஸ்யமான இடத்தில் - தொடரும்... ரைட்டு...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    பயண அனுபவத்தை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி தொடருங்கள்.... த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. இலங்கையில் உள்ளி என்பது போல்கேரளத்திலும் பூண்டை வெளுத்த உள்ளி என்றும் வெங்காயத்தை உள்ளி/சிவத்த உள்ளி என்றும் சொல்லுவார்கள்...

    அது சரி எரியில் என்ன தண்ணீரே இல்லையோ? அதான் பேய் அறைன்ச மாதிரியா? ஹஹ்ஹ அது சரி ஸ்விஸ்ஸில் வெயிலா? ஆச்சரியமாக இருக்கிறதே....

    அருமையான நாடு..ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  6. எஞ்சாய்! நண்பரே! எஞ்சாய்..மலைத்தொடர் ஏதேனும் பார்த்தீர்களா அங்கு பனிச்சறுக்கு விளையாட்டுகள் புகழ்பெற்றதாயிற்றே...

    பதிலளிநீக்கு
  7. செம்பருத்தி பூ நம்ம ஊரிலும் கலர் கலராக இப்போது கிடைக்கிறது! வெள்ளை ரோஸ், மஞ்சள், ஆரஞ்ச் என்று, ஆனால் ஊதா நிறம் நானும் பார்த்தது இல்லை! பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் அப்புறம் கொடுக்கலாமா? வித்தியாசமாகத்தான் இருக்கிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. சாப்பிட்டவுடன் இது என்ன தக்காளி சாதமா, சாம்பார் சாதமா, குச்காவா, இல்லை பிரியாணியா என்று கேட்கத் தோன்றினால் அது புரியாணி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாக சொன்னீர்கள் .. என்று முழிக்கும் போது அது "புரியா"ணி ஆகின்றது.

      நீக்கு
  9. வாவ் அருமையான பதிவு விசு..சுவிஸ் பார்க்கக் கிளம்பிட்டேன் :-) நன்றி

    //ஒரு புதிய" Mercedez Benz" எதிரில் வந்து நின்றது // காதில் புகை வருகிறது :-)

    பதிலளிநீக்கு
  10. / ஒரு புதிய" Mercedez Benz" எதிரில் வந்து நின்றது . ( மதுரை தமிழா... இந்த வண்டியும் என்னுடையது அல்ல .. உறவினருடையது.. உடனே என்னை சுனாமி - பினாமி என்று அழைக்க வேண்டாம் ..////

    Mercedez Benz" எல்லாம் உங்கள் தகுதிக்கு சீப்பானது அதுனாலதான் பண்ணைவீடு ஹெலிகாப்டர் என்று முந்தைய பதிவில் பதிவிட்டிருந்தேன்.......இப்பா பாத்தீங்களா Mercedez Benz" என்னுடையது இல்லை என்று சொல்வதன் மூலம் நீங்கள் மிகப் பெரிய ஆளாக இருப்பதை ஆட்டோமேடிக்காக ஒத்துக் கொண்டது மாதிரியல்லா ஆகிவிட்டது.. ஹீஹீ... என்னாட இந்த மதுரைதமிழங்கிட்ட போய் மாட்டிகிடோம் என்று முழிக்கிறீர்களா?


    வெங்காயத்தை உள்ளி என்று எங்கள் சொந்த ஊர்பக்கம்(செங்கோட்டை ) அழைப்பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களிடம் பேசி வெற்றி பெற முடியுமா. ?

      நீக்கு
    2. அட தமிழா திருநெல்வேலி...நம்மூரு....

      கீதா...

      நீக்கு
  11. பூ படம் போட்ட நீங்கள் சுவிட்சர்லாந்தில் நீங்கள் பார்த்த பூவையர்கள் படத்தை மட்டும் எடிட் பண்ணி போட்டுவிட்டது நியாயமா?

    பதிலளிநீக்கு
  12. பூண்டு-உள்ளி வெங்காயம்-ஈருள்ளி இப்படித்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ஏரிக்கு பல படிகள் ஏறிப் போகணுமோ? அதனால்தான் அதை ஏறி என்று குறிப்பிட்டிருக்கிறீர்களோ!

    பெட்-ரோல் போடுவதற்கு முன்னால் எப்படிக் காசு கொடுக்க முடியும்? தமிழ்னாட்டுலதான், 500 ரூக்கு போடு, 200 ரூக்கு பெட்-ரோல் போடு என்பார்கள். இங்கு 'ஃபுல் டாங்க்' என்றால், பெட்-ரோல் போட்டபின்-தான் எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று தெரியும். (உங்கள் வயித்தெரிச்சலுக்காகச் சொல்கிறேன். நான் இருக்கும் இடத்தில் 1 லிட்டர் பெட்-ரோல் சுமார் 14-17 ரூபாய்தான்)

    பதிலளிநீக்கு
  13. நண்பா,

    எங்கள் ஊரிலும் பெட்ரோல் போட்டு முடிந்தபிறகுதான் காசு கொடுப்போம்.

    பெட்ரோல் நிலைய வளாகத்தில் நுழைந்ததுமே நமது காரின் ஜாதகம் புகைப்படத்துடன் உள்ளிருக்கும் சிஸ்டத்தில் பதிவாகிவிடும் அப்புறம் பணம் கட்டாமல் எங்கே ஓடமுடியும் அல்லது காரை ஓட்டமுடியும்.

    அருமையாக நகர்கிறது உங்கள் பயண விவரம்.

    கோ

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்,
    அருமையான பதிவு பல காரணங்களால் உடன் படிக்க முடியவில்லை, ஆனாலும் அனைத்தையும் படித்துவிட்டேன்,
    நன்றி.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...