வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

நீ கணக்கு எழுத தான் லாயிக்கு!


கோடை விடுமுறை முடிய போகிறது. என் மூத்த ராசாத்தி 9 வகுப்பு முடித்து 10ம் வகுப்பு செல்ல தயார். இங்கே பள்ளி கூட்டத்தில் 9, 10,11, 12ம் வகுப்பே என்று யாரும் சொல்லமாட்டார்கள். இவர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு பெயர் :

9ம் வகுப்பு : Freshman
10ம் வகுப்பு : Sophmore
11ம் வகுப்பு : Junior
12ம் வகுப்பு : Senior



இந்த வருடம் என் மகள் "Sophomore".  பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் முன்னரே அங்கே பள்ளியில் உள்ள அறிவுரையாளர் (Counselor) அலுவலகத்திற்கு சென்று வந்தோம். அங்கே அந்த அதிகாரியும் என் பிள்ளையும் பேசிய பேச்சு என்னை என் 10ம் வகுப்பு நாட்களுக்கு அனுப்பியது.

1ம் வகுப்பில் இருந்து 10வரை எப்படி படித்தேன் என்றே தெரியாது. எந்த அறிவுரையாளரும் இல்லை,எந்த அறிவுரையும் இல்லை. வெந்ததை தின்றுவிட்டு, புத்தகத்தை எடுத்துக்கொண்டு படித்த நாட்கள் அவை.

வருடத்தில் ஒருமுறை ஏதாவது ஆசிரியர் நீ பிற்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்று ஆசை படுகிறாய் என்று கேட்ப்பார்கள்? அதற்கு டாகடர், எஞ்சினீயர், டீச்சர் அவை மூன்று தான் பதிலாக வரும். மற்ற வேலைகள் -தொழில்கள் இருந்ததே தெரியாது.

10 ம் வகுப்பு முடிந்தது, செய்தி தாளில் என் தேர்வு எண்ணும் தேர்ச்சி பெற்றவர்கள் வரிசையில் இருந்தது, மதிப்பெண்கள் வர சில நாட்கள் ஆகும். . மதிப்பெண்கள் வந்தது. வெளியே சொல்ல முடியாத மதிப்பே இல்லாத மதிப்பெண்கள். என்ன செய்வது? வீட்டில் நான் கடைசி பிள்ளை. எனக்கும்  மூத்தவர்கள் என் மதிப்பெண்ணை பார்த்து ஒப்பாரியே வைத்து விட்டனர்.
இப்போது என்ன செய்வது? சரி, இவனை சென்னைக்கு அனுப்பி அங்கே ஏதாவது ஒரு பள்ளியில் "கை-கால்" பிடித்து +2 அறிவியல் க்ரூபில் சேர்த்து விடலாம் என்று சொல்லி என்னை அழைத்து கொண்டு கிளம்பி விட்டனர்.

முதல் முதலாக சென்னை போகிறேன். ரயிலில் ஏறியவுடன் ஜன்னல் பக்கம் சீட் கிடைக்க வில்லையே என்று ஒரு வருத்தம். பிறகு, ஒவ்வொரு நிலையமாக ஆட்கள் இறங்க, நானும் ஜன்னலை நோக்கி நகர்ந்தேன். ஜன்னல்க்கும் எனக்கும் நடுவே இப்போது ஒரே ஒரு நபர். அவரும் அடுத்த நிலையத்தில் இறங்கிவிட்டால், அதன் பின் நான் ஜன்னல் அருகே உட்காரலாமே என்று நினைத்து ஒரு பிரார்த்தனையே பண்ணி விட்டேன். என் பிரார்த்தனை முடிந்த சில நொடிகளிலே அந்த நபர் இறங்க தயார் ஆனார். அவர் இருக்கையில் இருந்து எழுந்தவுடன், வேறு யாரும் வருவதற்கு முன் கண் சிமிட்டும் நேரத்தில் அங்கே அமர்ந்த என்னை, " சரி , சரி, கிளம்பு, சென்னை வந்து விட்டது" என்றார்கள்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்த எனக்கு ஒரே அதிர்ச்சி. எங்கு பார்த்தாலும் சினிமா போஸ்டர்கள். அவ்வளவு பெரிய போஸ்டர்களை நான் பார்த்ததே கிடையாது.  ஆட்டோ பிடித்து போக வேண்டிய இடத்திற்கு போய்சேர்ந்து அடுத்த நாள் காலையில் தூய. கப்ரியல் பள்ளி தலைமை ஆசிரியரின் அலுவலகத்தில்.  அவர் அன்று கூறிய வார்த்தைகள் என் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்து விட்டது.

"நீங்கள் சொல்லுரிங்க, பையன் நல்லா படிப்பான் என்று, ஆனால் மார்க் ரொம்ப கம்மியா இருக்கே. இந்த மார்க்குக்கு அறிவியல் க்ரூப் கொடுத்தா, என் வேலையே போய்டும். உங்க பையன் மேல நீங்க வச்சி இருக்கிற நம்பிக்கையை நான் பாராட்டுறேன். நீங்க இப்படி யோசித்து பாருங்க. நீங்க சொல்லுற மாதிரி இவன் ஒழுங்கா படிக்கிரவனா இருந்தா, வணிகவியல் படிக்கட்டும், பின்னாளில் தணிகையாளன் ஆகட்டும்"

என் மனதின் உள்ளே, "சரின்னு சொல்லிட்டி கிளம்புங்க. இங்கே சுத்தி முத்தி இருக்க எல்லாரும் என்னை கேவலமா பாக்குராங்கோ"!
அவர்களும் அழுது, அலுத்து கொண்டே சரி என்று சொல்ல, எனக்கு வணிகவியல் தான் கதி என்று கிளம்பினேன். யார் செய்த புண்ணியமோ, அந்த தலைமை ஆசிரியர் சொன்னது போல, சில வருடங்கள் கழித்து தணிக்கையாளரும் ஆகி விட்டேன்.

சரி இப்போது என் ராசாத்தி விவரத்திற்கு வரலாம்.

பிற்காலத்தில் நீ என்னவாக வர வேண்டும் என்று ஆசை படுகிறாய்?

சிறு வயதில் இருந்தே நான் ஒரு தணிக்கையாளராக வரவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

ஏன் அப்படி? உனக்கு கணக்கு  என்றால் பிடிக்குமா? (அது என்னவோ தெரியவில்லை, இந்தியாவிலும் சரி, இங்கே  அமெரிக்காவிலும் சரி, CA என்று சொன்ன உடனேயே, நீ கணக்கில் கெட்டி என்று தவறான ஒரு அபிப்ராயம். 10ம் வகுப்பிற்கு பிறகு நான் கணக்கே படிக்கவில்லை என்று சொன்னால் ஒருவரும் நம்ப மறுக்கின்றார்கள்).

கண்டிப்பாக கணக்கு பிடிக்கும்!

வேறு ஏதாவது காரணம்?

முக்கியமாக எதுவும் இல்லை, ஆனால், என் தகப்பன் போல் வர வேண்டும் என்று ஒரு ஆசை. (ஆஹா.. என்னை போல் வர வேண்டும் என்றும் இந்த உலகத்தில் ஒருவர் ஆசை படுகிறார்களே, தற்பெருமை தலைக்கு ஏறியது). அது மட்டும் இல்லாமால், பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்பு வளர்ச்சியினால் அடுத்த 20-30 வருடங்கள் கணக்கியல் நிருபர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உண்டு என்பதை "கூகிள்" சென்று படித்து அறிந்தேன்.

ஆல் தி பெஸ்ட்.

சொல்லி எங்களை அனுப்பி வைத்தார்கள் அந்த அறிவுரையாளர். 

வரும் வழியில்.. அடடே, நேற்று தான் கை குழந்தை போல் இருந்தாள், இன்று எதிர் காலத்தை பற்றி பேசுகிறாளே என்று நினைத்து கொண்டே வண்டியை விட்டேன்.

மகளே, நீ ஏன் தணிக்கையாளர் ஆக விரும்புகிறாய் என்று எனக்கு தெரியும்.

அதை தான் அந்த அதிகாரியிடம் உங்கள் எதிரிலேயே, சொன்னேனே அப்பா... பின்னே எப்படி உங்களுக்கு தெரியாமல் இருக்கும்?

நீ சொன்ன காரியங்கள் சரி தான், ஆனால் அதை விட முக்கிய காரணம் ஒன்று உண்டு.

என் மகளின் முகத்தில், ஒரு ஆச்சரியம் கலந்த சிரிப்பு!

அப்படி ஒன்றும் இல்லை, அப்பா.

இல்லடா, ராசாத்தி, கண்டிப்பாக வேறு ஒரு காரணம் இருக்கு, எனக்கு நல்லா தெரியும்.

எங்கே, அப்ப அதை சொல்லுங்க பார்க்கலாம்?

இவரே பாஸ் ஆகி விட்டாரே, இது ஈசியானா படிப்பாதான் இருக்கும்னு  நீ முடிவு பண்ணிட்ட!... அதனால் தான் நீ இதை படிக்க வேண்டும் என்று ஆசை படுகிறாய்.

இவ்வளவு நாட்க்களாக நான் அப்படி யோசிக்க வில்லை அப்பா. ஆனால், "யு ஆர் கரக்ட்"! இப்ப இருந்து அதுவும் ஒரு காரணம் தான்.

http://www.visuawesome.com/

12 கருத்துகள்:

  1. வணக்கம்
    தங்களின் இலட்சியம் போல பிள்ளையின் எதிர்கால இலட்சியம் பற்றிய அலசல் நன்றாக உள்ளது பகிர்வுக்குநன்றி
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாக்குக்கும் நன்றி, ரூபன் அவர்களே.

      நீக்கு
  2. ////இவரே பாஸ் ஆகி விட்டாரே, இது ஈசியானா படிப்பாதான் இருக்கும்னு நீ முடிவு பண்ணிட்ட!... அதனால் தான் நீ இதை படிக்க வேண்டும் என்று ஆசை படுகிறாய்.////

    பெருகிப்போன இன்றைய பொழுது போக்கு சமாச்சாரங்களான டிவி, கம்ப்யூட்டர், இன்டர்நெட் போன்றவற்றுக்கு மத்தியில் நம் குழந்தைகள் நன்றாக படிப்பதே பெரிய விஷயம் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாது.. வருகைக்கு நன்றி. பிள்ளைகளை வளர்ப்பதற்கு ஆண்டவனின் அருள் தேவை. அதோடு சேர்ந்து பொறுமை. எம்பெருமானின் அருளால் வளர்த்து வருகிறேன். என்னதான் சொல்லுங்கள், அவர்களாகவே படிகின்றேன் என்று சொல்லும் போது.. "தேன் வந்து பாயுது காதினிலே' என்ற ஓர் உணர்ச்சி. அழகான "அண்ணாத்தே' என்ற வார்த்தை இருக்கும் போது ஆங்கிலேயனின் "சார்" எதற்கு?

      நீக்கு
  3. பத்தாம் வகுப்புல நான் எடுத்த இருநூத்தம்பது மார்க்குக்கே எனக்கு சைன்ஸ் குருப் தர்றதா சொன்னாங்க! நான் தான் வணிகவியல் வேணும்னு அடம்பிடிச்சு வாங்கினேன்! ஆனா அதுலேயும் உருப்படியா சாதிக்கலை! உங்கள் மகள் எதிர்காலத்தில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 250 எடுத்து இருந்தாதான் நான் எங்கேயோ போயிருப்பேனே...சுரேஷ். அதைவிட ரொம்ப கம்மி. நான் தான் சொன்னேன் இல்ல, மதிப்பே இல்லாத மதிப்பெண் என்று.ஏன் ஒன்னும் சாதிக்கவில்லை என்று நொந்து கொள்கிறீர்கள். நல்லாதானே இருக்கீங்க. பிள்ளையின் எதிர்காலா வாழ்க்கையின் வாழ்த்திற்கு நன்றி.

      நீக்கு
  4. பெரும்பாலான பெற்றோரும் குழந்தைகளும் வணிகவியல் பிரிவு ஈஸி என நினைப்பது உண்மைதான் ஐயா!! ஆனால் இப்போது மார்க் அதிகம் எடுப்பவர்களும் அந்த பிரிவை எடுக்க ஆரம்பித்துள்ளனர். நல்ல விசயம் தான் ! வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேலை நான் படிக்கும் காலத்தில் அதிக மார்க் எடுக்காதவர்கள் தான் வணிகவியல் எடுப்பார்கள். நன்றாக மதிப்பெண் எடுப்பவர்களும் அதில் சேர்ந்து இருந்தால், என் பாடு என்ன ஆகி இருக்கும்? யோசித்து பார்க்கவே பயமாக உள்ளது. வருகைக்கு நன்றி ஜெயசீலன்.

      நீக்கு
  5. நண்பர் ஜெயசீலன் சொல்வது உண்மைதான்,இப்பொழுது அதிக மதிப்பெண் பெற்றவர்கள் வணிகவியல் துறையைத்தான் தேர்ந்து எடுக்கின்றனர்
    நண்பரே, ஒரு சிந்தனை, தங்களுக்கு அறிவியல் க்ரூப் கிடைத்திருந்தால்,
    இன்றைய உங்கள் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்திருக்கிறீகளா?

    பதிலளிநீக்கு
  6. என்னது கணக்குப்படிக்காமையே தணிக்கையாளன் ஆயிரலாமா ?
    அட இந்த உண்மை எனக்கு தெரியாம போயிருச்சே ?
    நானும் தம்பி விசு மாறி பெரிய ஆளாய் ஆயிருப்பேனே ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது? தம்ப்ப்ரி விசு பெரிய ஆளா? இது எப்ப இருந்து?

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...